ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை வேண்டாம் – ஐஸ்லாந்து மக்கள் தீர்ப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தன்னை இணைத்துக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகஸ்ட் 29 அன்று இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 82 விழுக்காடு மக்கள் வாக்களித்த நிலையில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளனர்.
இந்தப் பொது வாக்கெடுப்பு, ஐஸ்லாந்தின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் தலைநகர் ரெய்க்யாவிக்கிற்கும் இடையிலான தெளிவான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டாம் என்ற “வேண்டாம்” என்ற நிலைப்பாட்டுக்கு பெருமளவில் ஆதரவளித்தனர். அதேவேளையில், தலைநகர் ரெய்க்யாவிக் மக்கள் பெரும்பாலும் “வேண்டும்” என்ற நிலைப்பாட்டை ஆதரித்தனர்.
இந்த முடிவு, ஐஸ்லாந்தின் தேசிய இறையாண்மை மற்றும் குறிப்பாக அதன் முக்கியமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்பது தொடர்பான நீண்டகாலக் கவலைகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மீன்பிடித் தொழில் ஐஸ்லாந்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 விழுக்காடு பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது மற்ற உறுப்பு நாடுகளின் கப்பல்கள் ஐஸ்லாந்து கடல் எல்லைக்குள் நுழைய வழிவகுக்கும் என்றும், இதனால் தங்கள் நாட்டின் மீன்பிடித் துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்றும் பல மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
ஐஸ்லாந்து முன்னர் 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் சேர்க்கைக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியது, பின்னர் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. ஐரோப்பிய ஒற்றைச் சந்தை மற்றும் ஷெங்கன் பகுதியில் அது ஏற்கனவே பங்கேற்றுள்ளதால், மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது ஒப்பீட்டளவில் எளிதான ஒன்றாகவே இருந்திருக்கும்.
இந்த வாக்கெடுப்பை ஒரு ஜனநாயக வெற்றியாக வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் அவர்கள், மேலும் 2028-ல் தனது பதவிக்காலம் முடிவது வரை இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்து தங்களுக்கு ஒரு முக்கியமான தோழமை நாடாகவே தொடர்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்நாட்டு மக்களின் இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு இயக்கங்கள் வரவேற்றுள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் மற்றும் புதிதாக உருவாகி வரும் கடல்சார் வழிகளுக்காக அமெரிக்கா, இரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தீவிரமாகப் போட்டியிட்டு வரும் ஆர்க்டிக் பகுதியில், தனது செல்வாக்கை வலுப்படுத்த நினைத்த பிரஸ்ஸல்ஸுக்கு இந்த வாக்குப்பதிவு ஒரு பின்னடைவைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment