Thursday, 3 September 2026

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

 

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை



அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை, எண்ணிமத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் பொது நன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"எண்ணிமத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் பொது நன்மை பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் "மனிதகுலம் தன் சொந்த கண்டுபிடிப்புகளுக்கே இரையாகும் ஆபத்து உள்ளது" என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 28, வெள்ளியன்று, அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, "மனித குலத்தின் நலம்" ஒருபோதும் தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்குப் பொது அதிகார அமைப்புகள் பதிலளிக்க உதவுவதற்காகப் பணியாற்றி வரும் இந்த அமைப்பில் திருப்பீடமும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து தனது ‘மகத்தான மானுடம்’ (Magnifica humanitas) என்ற திருத்தூது மடலில் வெளிப்படுத்திய கவலைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, எண்ணிமத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சரியான சமநிலையைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் அதிநவீன இயந்திரங்களை மனிதகுலத்தால் எப்போதும் கட்டுப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன் குறிப்பாக, மனித வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகள் இயந்திரங்களிடம் ஒப்படைக்கப்படுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

மனித நுண்ணறிவின் தவிர்க்க முடியாத பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை வரவேற்ற திருத்தந்தை, மனிதகுலத்தின் நலனுக்குச் சேவை செய்யும் முடிவுகளை எடுக்குமாறு பொது அதிகார அமைப்புகளை கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆற்றல் மிக்க பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் கைகளில் குவியும்போது, அதனை நெறிப்படுத்தக்கூடிய ஒரு அறநெறி சார்ந்த கட்டமைப்பு வேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

எண்ணிமத் தொழில்நுட்பங்கள் வாழ்க்கைக்கும் அமைதிக்கும் சேவை செய்வதை உறுதிசெய்ய தனது ஆராய்ச்சியைத் தொடருமாறு அந்த நிறுவனத்தைத் ஊக்குவித்த திருத்தந்தை, அதன் உறுப்பினர்களுக்குத் தனது இறைவேண்டலையும் ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.

 

சீனாவில் புதிய ஆயர்: பாவ்லோ லியு ஹோங்காங் அருள்பொழிவு

 

சீனாவில் புதிய ஆயர்: பாவ்லோ லியு ஹோங்காங் அருள்பொழிவு


திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட பாவ்லோ லியு ஹோங்காங் அவர்கள், ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஆயராக அருள்பொழிவு பெற்று, ஷான்சி மாநிலத்திலுள்ள டத்தோங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றார். 1996ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2005ஆம் ஆண்டு முதல் டத்தோங் மறைமாவட்ட நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பாவ்லோ லியு ஹோங்காங் அவர்கள் ஆகஸ்ட் 31, திங்கள்கிழமை சீனாவில் ஆயராக அருள்பொழிவு பெற்றதைத் தொடர்ந்து, ஷான்சி மாநிலத்தில் அமைந்துள்ள டத்தோங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றார்.

திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட அவரது நியமனத்திற்கான ஒப்புதலைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாவ்லோ லியு ஹோங்காங் அவர்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று டத்தோங் மறைமாவட்ட ஆயராக நியமித்தார்.

ஆயர் லியு ஹோங்காங் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் நாள் தைவானுக்கு அருகிலுள்ள வுஃபுயிங்கில் பிறந்தார். இவர் 1988 முதல் 1992 வரை ஃபென்யாங் குருத்துவக் கல்லூரியில் பயின்றார், பின்னர் பெய்ஜிங்கில் உள்ள தேசிய குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1996 நவம்பர் 24 அன்று டத்தோங் மறைமாவட்டத்திற்கான அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், தொடர்ந்து ஜாங்குவான்துன், சுபாவ் மற்றும் சிஹேஹே உள்ளிட்ட பல பங்குத்தளங்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல், அவர் டத்தோங் மறைமாவட்ட நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.

அவரது இந்த ஆயர் அருள்பொழிவு, டத்தோங் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி மற்றும் தலைமைத்துவத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஆயர்கள் நியமனம் தொடர்பாக திருப்பீடத்திற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இவரது நியமனம் அமைந்துள்ளது.


நேபாள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உட்பட 65,000 பேர் பாதிப்பு – யுனிசெஃப்

 

நேபாள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உட்பட 65,000 பேர் பாதிப்பு – யுனிசெஃப்



நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா மற்றும் தனஹுன் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா மற்றும் தனஹுன் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 22,100 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில், ஐந்து வயதிற்குட்பட்ட ஏறத்தாழ 2,600 குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை தேவைப்படுகிறது. ஏறத்தாழ 10,500 கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவு தேவைப்படுவதோடு, ஏறத்தாழ 28,317 இளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் தேவைப்படுகின்றன.

இந்த வெள்ளம் அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இதனால் ஆறு நலவாழ்வு மையங்களும், குறைந்தது 19 பள்ளிகளும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன; இதனால் குழந்தைகள் நலவாழ்வு, பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் பாதுகாப்புச் சேவைகளைப் பெறுவது தடைபட்டுள்ளது.

பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன; இவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக மற்ற குடும்பங்களுடன் தங்கியுள்ளனர், மற்றவர்கள் அரசு நடத்தும் நிவாரண மையங்களுக்குச் சென்றுள்ளனர்.

அத்தியாவசியச் சேவைகளைப் பராமரிக்கவும், மீள்தன்மையை வலுப்படுத்தவும் உள்ளூர் மற்றும் தேசிய அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், யுனிசெஃப் அமைப்பு குடிநீர், நலவாழ்வு மற்றும் தூய்மைப் பணிகள், மருத்துவம், ஊட்டச்சத்து, குழந்தை பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 19,000 மக்களுக்குத் துப்புரவு உபகரணங்கள், சோப்பு, தண்ணீர் கொள்கலன்கள் மற்றும் நீர் சுத்திகரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யுனிசெஃப் ஏற்கனவே வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் யுனிசெஃபிற்கு அவசரமாக 17.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது.


ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை வேண்டாம் – ஐஸ்லாந்து மக்கள் தீர்ப்பு

 

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை வேண்டாம் – ஐஸ்லாந்து மக்கள் தீர்ப்பு



ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 82 விழுக்காடு வாக்குப்பதிவு இடம்பெற்ற நிலையில், 52 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பேச்சுவார்த்தையை நிராகரித்தனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தன்னை இணைத்துக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகஸ்ட் 29 அன்று இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 82 விழுக்காடு மக்கள் வாக்களித்த நிலையில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளனர்.

இந்தப் பொது வாக்கெடுப்பு, ஐஸ்லாந்தின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் தலைநகர் ரெய்க்யாவிக்கிற்கும் இடையிலான தெளிவான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டாம் என்ற “வேண்டாம்” என்ற நிலைப்பாட்டுக்கு பெருமளவில் ஆதரவளித்தனர். அதேவேளையில், தலைநகர் ரெய்க்யாவிக் மக்கள் பெரும்பாலும் “வேண்டும்” என்ற நிலைப்பாட்டை ஆதரித்தனர்.

இந்த முடிவு, ஐஸ்லாந்தின் தேசிய இறையாண்மை மற்றும் குறிப்பாக அதன் முக்கியமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்பது தொடர்பான நீண்டகாலக் கவலைகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மீன்பிடித் தொழில் ஐஸ்லாந்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 விழுக்காடு பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது மற்ற உறுப்பு நாடுகளின் கப்பல்கள் ஐஸ்லாந்து கடல் எல்லைக்குள் நுழைய வழிவகுக்கும் என்றும், இதனால் தங்கள் நாட்டின் மீன்பிடித் துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்றும் பல மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

ஐஸ்லாந்து முன்னர் 2009 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் சேர்க்கைக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியது, பின்னர் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. ஐரோப்பிய ஒற்றைச் சந்தை மற்றும் ஷெங்கன் பகுதியில் அது ஏற்கனவே பங்கேற்றுள்ளதால், மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது ஒப்பீட்டளவில் எளிதான ஒன்றாகவே இருந்திருக்கும்.

இந்த வாக்கெடுப்பை ஒரு ஜனநாயக வெற்றியாக வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் அவர்கள், மேலும் 2028-ல் தனது பதவிக்காலம் முடிவது வரை இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்லாந்து தங்களுக்கு ஒரு முக்கியமான தோழமை நாடாகவே தொடர்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்நாட்டு மக்களின் இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு இயக்கங்கள் வரவேற்றுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் மற்றும் புதிதாக உருவாகி வரும் கடல்சார் வழிகளுக்காக அமெரிக்கா, இரஷ்யா மற்றும் சீனா ஆகியவை தீவிரமாகப் போட்டியிட்டு வரும் ஆர்க்டிக் பகுதியில், தனது செல்வாக்கை வலுப்படுத்த நினைத்த பிரஸ்ஸல்ஸுக்கு இந்த வாக்குப்பதிவு ஒரு பின்னடைவைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...