சீனாவில் புதிய ஆயர்: பாவ்லோ லியு ஹோங்காங் அருள்பொழிவு
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட பாவ்லோ லியு ஹோங்காங் அவர்கள், ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஆயராக அருள்பொழிவு பெற்று, ஷான்சி மாநிலத்திலுள்ள டத்தோங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றார். 1996ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2005ஆம் ஆண்டு முதல் டத்தோங் மறைமாவட்ட நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
பாவ்லோ லியு ஹோங்காங் அவர்கள் ஆகஸ்ட் 31, திங்கள்கிழமை சீனாவில் ஆயராக அருள்பொழிவு பெற்றதைத் தொடர்ந்து, ஷான்சி மாநிலத்தில் அமைந்துள்ள டத்தோங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றார்.
திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட அவரது நியமனத்திற்கான ஒப்புதலைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாவ்லோ லியு ஹோங்காங் அவர்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று டத்தோங் மறைமாவட்ட ஆயராக நியமித்தார்.
ஆயர் லியு ஹோங்காங் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் நாள் தைவானுக்கு அருகிலுள்ள வுஃபுயிங்கில் பிறந்தார். இவர் 1988 முதல் 1992 வரை ஃபென்யாங் குருத்துவக் கல்லூரியில் பயின்றார், பின்னர் பெய்ஜிங்கில் உள்ள தேசிய குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1996 நவம்பர் 24 அன்று டத்தோங் மறைமாவட்டத்திற்கான அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், தொடர்ந்து ஜாங்குவான்துன், சுபாவ் மற்றும் சிஹேஹே உள்ளிட்ட பல பங்குத்தளங்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல், அவர் டத்தோங் மறைமாவட்ட நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார்.
அவரது இந்த ஆயர் அருள்பொழிவு, டத்தோங் மறைமாவட்டத்தின் மேய்ப்புப் பணி மற்றும் தலைமைத்துவத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஆயர்கள் நியமனம் தொடர்பாக திருப்பீடத்திற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இவரது நியமனம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment