Saturday, 4 July 2020

நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

தெனாலிராமன்

எந்த நேரத்திலும், அறிவைப் பயன்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்


மேரி தெரேசா: வத்திக்கான்
ஒரு சமயம் விஜயநகர பேரரசில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை தவறிவிட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டன. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டார் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டார் அவர்.  உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "நம் நாட்டில் பருவமழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்துள்ளது. பஞ்ச காலம் முடியும்வரை நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எனவே வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டுவிடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும், மீண்டும் கிணற்றிலிருந்து அதை எடுத்துக் கொள்ளலாம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும்வண்ணம் உரத்த குரலில் சொன்னார். அதேநேரம், திருடர்கள் ஒளிந்திருப்பதை, தெனாலிராமன் தன் மனைவியிடம், மெதுவாகக் கூறி, ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் போட்டு மூடினார். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிவந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டார் அவர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த திருடர்களும், பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடர்கள், ஒருவர் மாற்றி ஒருவர், ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சிறிதுநேரத்திற்குப்பின், வேறு வழியாகத் தோட்டத்திற்குச் சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்குப் பாயுமாறு கால்வாயைத் திருப்பிவிட்டார். இப்படியே பொழுதும் விடிந்ததுவிட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. நாளைக்கு வரலாம் என்று திருடர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட தெனாலிராமன், அங்கு வந்து, நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று நாள்களுக்குப் போதும். எனவே மூன்று நாள்களுக்குப் பிறகு வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே என்று கூறினார். இதைக் கேட்டதும் திருடர்களுக்கு மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்த திருடர்கள், அங்கே இருந்தால் அகப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர். ஆம். எந்த நேரத்திலும், அறிவைப் பயன்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  

2019ல் மட்டும் ஐ.நா.நிறுவனம் 77 பணியாளர்களை இழந்துள்ளது

அந்தோனியோ கூட்டேரஸ்.

நெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றியவர்களை, நினைவுகூர்ந்து, பாராட்டிய ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் கூட்டேரஸ்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
போரின் கொடுமைகளிலிருந்து வருங்காலத் தலைமுறைகளைக் காப்பாற்றவும், சுதந்திரமான சூழலில், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொடுக்கவும் பணியாற்றிய நேரங்களில் உயிரிழந்த ஐ.நா. நிறுவனத்தின் வீரம்நிறைந்த பணியாளர்களுக்கு தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார், அந்நிறுவனத்தின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்.
ஐ.நா. நிறுவனம் தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில், நெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்களை, ஜூன் 30, இச்செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில் நினைவுகூர்ந்து, பாராட்டினார் கூட்டேரஸ்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் தன் பணியாளர்களைக் காப்பாற்றவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும் தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதி கூறினார்.
மேலும், ஐ.நா. பணியாளர்கள், போர் மற்றும், பேரிடர்கள் இடம்பெறும் இடங்களில், மக்களைக் காப்பாற்றுவதற்கு உழைத்துவரும்வேளை, 2019ம் ஆண்டில் மட்டும்  ஐ.நா. நிறுவனம், தன் பணியாளர்களில் 77 பேரை இழந்துள்ளது எனவும், இந்த இழப்பு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது எனவும், இந்நிகழ்வில் கூறினார், ஐ.நா. அதிகாரி Patricia Nemeth,
தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த தன் வீரர்களை இந்த நாளில் நினைவுகூர்வது என்ற புனிதமான கடமையை, ஐ.நா. நிறுவனம் கொண்டுள்ளது என்றும், இந்நிகழ்வில் உரையாற்றினார், Nemeth. (UN)

சிறுமிகளுக்கு எதிரான கொடூரமான பழக்கவழக்கங்கள் நிறுத்தப்பட...

குழந்தைத் திருமணத்திற்கெதிராய் சிறார்

ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறுமிகள், கட்டாயத் திருமணத்திற்கு உள்ளாகின்றனர், அதிலும், குறிப்பாக, அச்சிறுமிகள், தங்களைவிட வயது வேறுபாடு அதிகம் உள்ள ஆண்களுக்கு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் – ஐ.நா.
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் குழந்தைத் திருமணம், பெண் உறுப்புகள் முடமாக்கப்படல், மற்றும், ஏனைய உரிமை மீறல்கள் போன்றவை நிறுத்தப்படுவதற்கு, உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், இச்செவ்வாயன்று கூறியுள்ளது.
UNFPA எனப்படும், ஐ.நா.வின் பாலியல் மற்றும், மனிதரின் ஒருங்கிணைந்த நலவாழ்வு அமைப்பு, 2020ம் ஆண்டின் உலக மக்கள் தொகையின் நிலவரம் குறித்து, ஜூன் 30, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் கொடூரமான பழக்கவழக்கங்கள், அவர்கள் தங்களின் முழு ஆளுமையில் வளர்வதற்குத் தேவையான உரிமையைத் திருடுகின்றன என்று கூறியுள்ளது.  
ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான சிறுமிகள், தங்கள் குடும்பங்களின் முழு அனுமதியோடு, உடலளவிலும், உணர்வளவிலும், தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், கன்னிமை பரிசோதிக்கப்படுவது உட்பட, குறைந்தது 19 வகையான சடங்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், UNFPA அமைப்பின் இயக்குனர் டாக்டர் Natalia Kanem அவர்கள் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும், சிறுமிகளின் உரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும் எனவும், Kanem அவர்கள் உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சடங்குமுறைகள், மனித உரிமை மீறல்களாகும் என்று, செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த Kanem அவர்கள், பெண் உறுப்புகள் முடமாக்கப்படல், குழந்தைத் திருமணம், மகன்களுக்கு ஆதரவாக, மகள்கள் மிகுந்த பாரபட்சத்துடன் நடத்தப்படுவது ஆகிய மூன்று விவகாரங்களே, UNFPA அமைப்பின் அறிக்கையில் மையப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 41 இலட்சம் சிறுமிகள், தங்களின் பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் நிலைக்கும், 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறுமிகள், கட்டாயத் திருமணத்திற்கும் உள்ளாகின்றனர் என்று கூறும் அந்த அறிக்கை, அச்சிறுமிகள், பெரும்பாலும்,  தங்களைவிட வயதில் அதிகம் மூத்த ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. (UN)

கடவுளின் தூதர்களாக மாற...

காவல்பணியிலுள்ள இந்திய இராணுவம்

உண்மை மற்றும் கருணையின் பாதையில் நாம் நடந்துசெல்கையில், ஒவ்வொருவரும் யாருக்காவது கடவுளின் செய்தியைக் கொண்டுசெல்லும் தூதராகச் செயல்படமுடியும்
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்று, வயது முதிர்ந்த ஒருவர், அந்த சாலைக்கு எதிர்ப்பக்கம் இருந்த கடையில், தனக்கும் தனது மனைவிக்கும் காலை உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்து வந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில், வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சட்டென்று பிரேக் போட்டு நின்றது. அந்த வாகனத்தில் வந்த இளம்பெண் கோபத்தோடு முகம் சிவக்க, கடுமையான வார்த்தைகளால் அந்தப் பெரியவரை வாய்க்குவந்தபடி திட்டிவிட்டுச் சென்றார். அந்த அதிர்ச்சியில் அந்தப் பெரியவர் வாங்கிவந்த காலை உணவை கீழே கொட்டிவிட்டார். முகத்தில் கவலையோடு அதைக் குனிந்து எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்துசென்றார் அவர். அந்நேரத்தில் அதே சாலையைக் கடந்துவந்துகொண்டிருந்த வைரவன் என்பவர், அடுத்த நாள், அந்த வயதான பெரியவரிடம் பழங்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஏனெனில் அந்த முதியவரும், அவரது மனைவியும், தர்பூசணி பழங்களைக் கூறுபோட்டு தள்ளுவண்டியில் வைத்து விற்பவர்கள். காலத்திற்கேற்ப, மற்ற பழங்களையும் விற்பவர்கள் அவர்கள். அன்று வைரவன் அவர்கள், பழங்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, அந்த முதியவர் சாலையையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தார். யாரையோ அவர் எதிர்பார்ப்பதுபோல் இருந்தது. திடீரென அவர் வைரவனிடம், சார் கொஞ்சநேரம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு, சாலைக்குச் சென்று, இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை கையசைத்து நிற்க வைத்தார். அந்தப் பெண் நேற்றைய கோபத்தையே மீண்டும் முகத்தில் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெரியவரோ, தாயி, நேற்று நீ போன அவசரத்தில் இதை தவறவிட்டுவிட்டுப் போய்விட்டாய் என்று சொல்லி, தன் மடியில் பாதுகாப்பாக வைத்திருந்த விலையுயர்ந்த கைபேசியை எடுத்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்தார். உடனே அந்த இளம்பெண் வண்டியை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஐயா பெரியவரே, இதை தொலைத்ததிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லை, நான் வங்கியில் வேலை செய்கிறேன் முக்கியமான தொடர்பு எண்கள் எல்லாம் இதில் உள்ளன, மிக்க நன்றி என்று கூறிவிட்டு கண்கலங்கினார். ஐயா, நேற்று தங்களை நான் அவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கக் கூடாது, வேலையில் கடுமையான நெருக்கடி, அதனால் என்ன பேசுகிறேன் என்றே புரியாமல் சுடுசொற்களால் தங்களை அவமானப்படுத்திவிட்டேன், மன்னியுங்கள் என்று சொன்னார். அதற்கு அந்தப் பெரியவர், அட விடு தாயி, கோபம் யாருக்குத்தான் வராது, இதைப்போயி பெரிசுபடுத்துறா, ஜாக்கிரதையாய் போ தாயி என்று பரிவோடு சொல்லி அனுப்பினார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வைரவன், அந்தப் பெரியவரிடம், என்னங்க, நேற்று அப்படித் திட்டின அந்தப் பொண்ணை நாலுவார்த்தை நறுக்கென கேட்டிருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், சார், அந்தப் பொண்ணு கல்யாணம் குழந்தைகள்... இப்படி இன்னும் எவ்வளவோ விடயங்களைப் பார்க்கவேண்டியிருக்கு, வயதாகி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். அந்தப் பொண்ணு, எனக்குப் பேத்தி வயது, என் பேத்தியாக இருந்தா, சத்தம் போடுவேனா, நல்லா இருக்கட்டும் சார், நம்மைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாருமே மனுஷங்கதான் சார், இருக்கிறவரைக்கும் அன்பா, பாசமா இருந்துட்டு போவோமே என்று சொன்னார். அந்த ஏழைப் பெரியவரைப் பாராட்ட வார்த்தையில்லாமல், நல்லதொரு வாழ்வியல் கல்வியைக் கற்ற திருப்தியோடு அங்கிருந்து சென்றதாக, வைரவன் அவர்கள், (vairalaakum video) காணொளி ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.
நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாருமே மனிதர்கள்தான். இந்த உலகில் நாம் உயிரோடு வாழ்கின்றவரைக்கும் அன்பாக, பாசமாக இருக்கவேண்டும். இந்த வரிகள், அந்த வயது முதிர்ந்த தள்ளுவண்டி பழக்கடைக்காரர் உதிர்த்த முத்துக்கள்.
காணாமல் போன நாய்
எனது செல்ல நாய் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும். இவ்வாறு, காணாமல் போன நாய் என்று, தடித்த எழுத்துக்களில், உள்ளூர் தினத்தாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார் ஒருவர். இந்த விளம்பரத்தை வாசித்த மற்றொருவர் சார், உங்களது செல்ல நாயை நான் கண்டுபிடித்துவிட்டேன். அது, வயது முதிர்ந்தோர் இல்லத்திலுள்ள உங்களது தாயைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறது என்று, அந்த மனிதருக்கு பதில் அனுப்பியிருந்தார். இந்த பதிவை வாசித்தபோது, தவறு எங்கே இருக்கிறது என்று சிந்திக்க வைத்தது. அனுபவ வாழ்வியல் பாடங்களை அடுத்த தலைமுறைகளுக்குக் கற்றுத்தரும் பாட்டி தாத்தாக்கள் காட்டிய அன்பை செல்லப் பிராணிகள் புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட, சீராட்டி தாலாட்டி வளர்த்து சமுதாயத்தில் உயர்ந்து நிற்க உதவிய பெற்றோருக்கு பிள்ளைகள் வழங்குவதில்லையே. இந்த கோவிட்-19 நெருக்கடியில் வயதில் மூத்தவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைதரும் உண்மை.
உறுதியான கடவுள் நம்பிக்கை
சில ஆண்டுகளுக்குமுன், 15 படைவீரர்கள் தங்கள் தளபதியுடன் இமாலயப் பகுதியில் மூன்று மாதங்கள் காவல்பணியை ஆற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்தனர். அது கடுங்குளிர் காலம். பனிமழை பெய்துகொண்டிருந்தது. கடுமையான இந்தப் பயணத்தில் களைத்திருந்த படைவீரர்கள், வழியில் யாராவது சூடாக ஒரு கிண்ணம் தேனீர் கொடுப்பார்களா? என்ற ஏக்கத்தோடு நடந்துகொண்டிருந்தனர். ஒரு மணிநேரம் நடந்து சென்றபின், அவர்கள் ஒரு பழைய தேனீர் கடை ஒன்றைப் பார்த்தனர். ஆனால் அந்தக் கடை பூட்டப்பட்டிருந்தது. அப்போது தளபதி, கடையில் யாரும் இல்லை, என்ன செய்வது, இருந்தாலும் சிலமணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்வோம் என்று சொன்னார். அப்போது படைவீரர்களில் ஒருவர், நாம்தான் 15 பேர் இருக்கிறோமே, நாமே தேனீர் தயாரிப்போம் என்று கூறினார். மக்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே, பூட்டை உடைத்து தேனீர் தயாரிப்பதா, இது இராணுவத்தின் ஒழுக்கநெறி கட்டுப்பாட்டுக்கே முரணானது என்று சிந்தித்தார் தளபதி. இருந்தபோதிலும், வீரர்களின் நிலையை உணர்ந்த அவர், அதற்கு அனுமதி அளித்தார். வீரர்களும் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் அங்கே தேனீர் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அதோடு பிஸ்கட் பாக்கெட்டுகளும் அங்கு இருந்தன. அவர்களும் தேனீர் தயாரித்து குடித்தனர். பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டனர். அப்போது தளபதி, சில ஆயிரம் ரூபாய்களை எடுத்து அந்தக் கடையின் சர்க்கரை டப்பாவுக்குக் கீழ் வைத்துவிட்டு கடையைப் பூட்டினார். அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இமாலயாவில் 3,4 மாதங்கள் கடுமையான காவல்பணியில் ஈடுபட்ட பின்னர், அந்த 15 பேரும், தளபதியுடன் அதே வழியில் திரும்பிவந்தனர். அந்த தேனீர் கடை திறந்திருப்பதையும், அதன் உரிமையாளர் அங்கு இருப்பதையும் அவர்கள் கண்டனர். அவர்,  வயது முதிர்ந்தவராய், பார்ப்பதற்கு ஏழையாகத் தெரிந்தார். அது மாலை நேரம். அந்த முதியவரும், 15 பேரை ஒன்றாகப் பார்த்தவுடன், இன்று நமக்கு நல்ல வருமானம் என்ற மகிழ்வோடு சூடாகத் தேனீர் தயாரித்து கொடுத்தார். பிஸ்கட்களும் கொடுத்தார். அப்போது படைவீரர்கள் அவரிடம், ஆள்கள் அவ்வளவாக நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் கடை வைத்து நடத்துவது பற்றிய அந்த முதியவரின் அனுபவம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். அந்த முதியவரும் பல கதைகள் சொன்னார். தனது கடவுள் நம்பிக்கை பற்றியும் சொன்னார். அப்போது படைவீரர்களில் ஒருவர், பாபுஜி, கடவுள் இருந்தால், ஏன் உங்களை இவ்வளவு ஏழ்மையில் வைத்திருக்கிறார் என்று கேட்டார். அதற்கு அவர், அப்படிச் சொல்லாதே தம்பி, கடவுள் உண்மையிலேயே இருக்கிறார். அதற்குச் சான்றுகூட உள்ளது. மூன்று மாதங்களுக்குமுன் பயங்கரவாதிகள் இங்கு வந்து எனது மகனிடம் ஒரு தகவலைக் கேட்டனர். தனக்கு அது தெரியவே தெரியாது என்று அவன் சொன்னான். ஆனாலும் அவர்கள், என் மகனை நம்பாமல் அவனைக் கடுமையாய் அடித்து குற்றுயிராய் விட்டுச்சென்றனர் நான் உடனே கடையை மூடிவிட்டு, அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். சில மருந்துகள் வாங்கவேண்டிய நெருக்கடிநிலை. என்னிடம் 20 ரூபாய் மட்டுமே இருந்தது. பயங்கரவாதிகளுக்குப் பயந்து யாரும் எனக்குப் பணம் தரவும் முன்வரவில்லை. அந்நேரம் எப்படி மகனைக் காப்பாற்றுவது என்று கலங்கினேன். உதவிக்காக கடவுளிடம் மன்றாடினேன். நீங்கள் நம்பமாட்டீர்கள், அன்று கடவுள் எனது கடைக்கு வந்துள்ளார். அன்று நான் கடைக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஐயோ எல்லாம் முடிந்துவிட்டது என்ற பதற்றத்துடன் கடைக்குள் சென்றேன். ஆச்சரியம், சர்க்கரை டப்பாவுக்குக் கீழ் சில ஆயிரம் ரூபாய்கள் இருந்தன. அந்தப் பணம் எனது ஒரே மகனின் வாழ்வையே காப்பாற்றியது. தம்பிகளா, கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று சொன்னார். அப்போது அந்த முதியவரின் கண்களில் உறுதியான கடவுள் நம்பிக்கை சுடர்விட்டதை படைவீரர்கள் பார்க்கத் தவறவில்லை. 15 படைவீரர்களும் கண்ணீருடன் தளபதியை நோக்கினர். தளபதியின் கண்களும் குளமாகியிருந்தன. அன்று தளபதியின் கண்களில் கண்ணீரைப் பார்ப்பது அவர்களுக்கு அரிதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், பனிகள் படர்ந்த குப்வாரா (Kupwara) பகுதியில் நடந்த உண்மையான நிகழ்வு இது என்று, பேராசிரியர் பரத் மேக்ரா (Bharat J.Mehra) அவர்கள், ஒரு கிண்ணம் தேனீர் (A Cup of Tea) என்ற தலைப்பில், இவ்வாறு ஒரு காணொளியைப் பதிவு செய்துள்ளார்.
உண்மை மற்றும் கருணையின் பாதையில் நாம் நடந்துசெல்கையில், ஒவ்வொருவரும் யாருக்காவது கடவுளின் செய்தியைக் கொண்டுசெல்லும் தூதராகச் செயல்படமுடியும். இன்று உலகில், குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமி காலத்தில், எல்லாருக்குமே இத்தகைய கடவுளின் தூதர்கள் தேவைப்படுகின்றனர். எனவே உண்மை மற்றும், இரக்கத்தின் பாதையில் நடந்து நம்மைச் சுற்றி வாழ்பவர்க்கு, கடவுளின் தூதர்களாக மாறுவோம். கடவுள் இருக்கிறார் என்பதை எல்லாருமே உணரச் செய்வோம். மூத்த குடிமக்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய வாழ்வியல் பாடங்கள் பல என்பதை உணருவோம்.

அன்பு, அறுக்கப்படாத சங்கிலியாக இருந்தால்…

கத்தரிக்கோலும், ஊசியும்

கத்தரிக்கோல் பிரிக்கும், வெட்டும், ஊசி கிழிந்ததைப் பழுதுபார்க்கும், பிரிந்த தை இணைக்கும். இணைப்பதற்கு, இணைந்து நிற்கத் தேவைப்படுவது அன்பு.
மேரி தெரேசா: வத்திக்கான்
முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள், இந்தியாவின் 75 விழுக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்த காலக்கட்டத்தில், மிகப் புகழ்பெற்ற, ஃபரீதி என்ற சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். மிக எளிமையாக, ஓலைக்குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த இவர் மீது, அக்பர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அக்பர் அவர்களும், அவ்வப்போது ஞானியிடம் சென்று,  தன்னில் எழுகின்ற கேள்விகளுக்கு விடை கண்டு, ஆன்மீக நலம் பெற்றுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு ஒருநாள் திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் ஞானியைச் சென்று சந்தித்தபோதெல்லாம், அதிகம் பெறுகிறவனாகவே திரும்புகிறேன், இதுவரைக்கும் ஒன்றைக்கூட அந்த ஞானிக்குத் தருகின்ற மனிதனாக இல்லையே, ஏதாவது ஒன்றை அவருக்குத் தரவேண்டும், பெறுவதும் கொடுப்பதும்தானே வாழ்க்கை என்று அக்பர் சிந்தித்தார். உடனே அமைச்சரிடம், அரண்மனையின் கருவூலத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் ஒன்றைக் கொண்டுவாருங்கள் என்று கட்டளையிட்டார். அமைச்சரும், கருவூல அதிகாரிக்கு கட்டளையிட்டார். அந்த அதிகாரியும், நிறைய நேரம் சென்று, ஒரு கத்தரிக்கோலைக் கொண்டுவந்து அமைச்சரிடம் கொடுத்தார். அதை உற்றுப்பார்த்த அமைச்சர், இதுதான் விலைமதிப்பற்ற பொருளா? என்று கேட்டார். இல்லை அமைச்சரே, அதை நன்றாக உற்றுப்பாருங்கள், அப்போது புரியும் என்றார் கருவூல அதிகாரி. அமைச்சரும் அதை உற்றுப்பார்த்தார், புரிந்துகொண்டார். அதை அக்பரிடம் கொண்டுவந்து கொடுத்தார் அமைச்சர். அந்தப் பொருளை பார்த்தவுடனேயே, அக்பருக்கு எல்லையற்ற கோபம் வந்தது. அப்போது அமைச்சர், அக்பரிடம், பேரரசே, நானும்கூட அப்படித்தான் நினைத்தேன். அதை உற்றுப்பாருங்கள். அதன் உடம்பு முழுவதும் கோமேதகம், வைரம், புஷ்பராகம், பவளம், இப்படி பல விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு விலையே கிடையாது என்று சொன்னார். அக்பரும் ஞானியிடம் சென்று, ஐயா, தங்களிடமிருந்து எப்போதும் பெற்றுக்கொண்டே செல்கிறேன், பெறுவதும் தருவதும் அல்லவா வாழ்வு, எனவே நான் இதை தங்களுக்கு அளிக்கிறேன் என்று அந்த கத்தரிக்கோலைக் கொடுத்தார். அதை இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு, அதை திரும்பவும் அக்பரிடமே கொடுத்துவிட்டார் ஞானி. அக்பரின் முகம் வாடிவிட்டது. அப்போது ஞானி, மன்னா, நீ கொடுக்க, நான் வாங்கவேண்டும் அவ்வளவுதானே, அப்படியென்றால் ஓர் ஊசி இருந்தால் கொடு. மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறேன் என்றார். விலைமதிப்பற்ற கத்தரிக்கோலை பெறாமல், ஒற்றைக்காசு பெறாத ஊசியைக் கேட்கிறீர்களே என்று திகைப்புடன் ஞானியைப் பார்த்தார் அக்பர். அதற்கு ஞானி, மன்னா நீ கொடுத்த கத்தரிக்கோல் ஒன்றை இரண்டாக வெட்டிப் பிரிக்கும். ஒற்றைக் காசு மதிப்புப் பெறாத ஊசி, பிரிந்துகிடக்கின்ற இரண்டை ஒன்றாக இணைக்கும் என்று பதில் சொன்னார்.
சிந்தனைக்கு
கத்தரிக்கோல் பிரிக்கும், வெட்டும், ஊசியோ கிழிந்ததைப் பழுதுபார்க்கும், பிரிந்ததை இணைக்கும். இணைப்பதற்கும், இணைந்து நிற்கவும் தேவைப்படுவது அன்பு. அன்பு என்பது, அறுக்கப்படாத சங்கிலியாக இருந்தால், இந்த சமுதாயத்தில் குற்றம் விளையாது.

ஆனந்த அதிர்ச்சி தரும் ஆண்டவன்

நோயுற்றிருப்பவருக்காக செபிக்கும் அருள்பணியாளர்

படுத்த படுக்கையாய் இருந்த அப்பெண், மலர்ந்த முகத்துடன், "சாமி, ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். நான் பூரண குணமடைந்ததைப் போல் உணர்கிறேன்" என்று சொன்னார்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
இளம் அருள்பணியாளர் ஒருவர், புதிதாக, ஒரு பங்கில் பணிபுரியச் சென்றார். அந்தப் பங்கைச் சேர்ந்த மிக வயதான ஒரு பெண்மணி, உடல்நிலை மிகவும் நலிந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், அவரைக் காண்பதற்கு இளம் அருள்பணியாளர், மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் அப்பெண்ணை சந்தித்து, இருவரும், பத்து நிமிடங்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அருள்பணியாளர் புறப்படும் வேளையில், தனக்காகச் செபிக்கும்படி, அப்பெண்மணி கேட்டுக்கொண்டார். அருள்பணியாளர் அவரிடம், "என்ன கருத்துக்காக நாம் செபிக்கலாம்?" என்று பொதுப்படையாகக் கேட்டபோது, அப்பெண்மணி, "இது என்ன கேள்வி, சாமி? நான் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று செபியுங்கள்" என்று கூறினார்.
அவரது உடல்நிலையைப்பற்றி நன்கு அறிந்திருந்த அந்த இளம் அருள்பணியாளர், என்ன சொல்லி செபிப்பதென்று புரியாமல், மிகுந்த தயக்கத்துடன், நம்பிக்கையற்ற ஒரு தொனியில், அப்பெண்மணியின் தலைமீது கரங்களை வைத்து, அவர் பூரண குணமடையவேண்டும் என்று செபித்தார். அவர் அந்த செபத்தை முடிக்கும் வேளையில், அப்பெண், 'ஆமென்' என்று உரக்கச் சொன்னார். அதுவரை, படுத்த படுக்கையாய் இருந்த அப்பெண், மலர்ந்த முகத்துடன், "சாமி, ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். நான் பூரண குணமடைந்ததைப் போல் உணர்கிறேன்" என்று சொன்னார்.
அது மட்டுமல்ல. அவர் படுக்கையைவிட்டு எழுந்து, அருகிலிருந்த அறைகளுக்குச் சென்று, "நான் குணமடைந்துவிட்டேன்" என்று அனைவரிடமும் கூறினார். அந்த இளம் அருள்பணியாளர், தன் கண்முன்னே நிகழ்வனவற்றை நம்பமுடியாமல், ஒருவித மயக்க நிலையில், மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். பின்னர், வானத்தைப் பார்த்து, "இறைவா, இப்படி ஓர் அதிர்ச்சியை இனிமேல் தராதீர்!" என்று ஆண்டவனுக்குக் கட்டளையிட்டார்.
அதிர்ச்சி தருவது, குறிப்பாக, ஆனந்த அதிர்ச்சி தருவது, ஆண்டவனின் அழகு.

Thursday, 2 July 2020

India: Christian organizations demand probe into killing of 2 men in police custody

The coffins of  P. Jayaraj and his son who were allegedly tortured and killed by police officers in Thoothukudi district, Tamil Nadu state.

Christian groups in India are demanding an independent inquiry into the death of a father and his son after having been taken into police custody in the Indian state of Tamil Nadu.
By Vatican News
Several Christian organizations in India are raising their concern and demanding action be taken in the wake of the deaths of a father and son who were brutalized while in police custody in the country’s southern state of Tamil Nadu.
P. Jeyaraj and his son Fenix were arrested on 19 June for allegedly keeping their stores open past permitted hours in the state that is still observing a lockdown to curb the spread of Covid-19.  
Both men were kept in police custody overnight and died within hours of each other two days later. Relatives claim they were subjected to brutal torture.

Christian groups asking for clarity and justice

Amongst those seeking to shine a light on the killings is the All India Catholic Union (AICU) that is demanding a probe by a High Court Judge, the Indian Christian Women’s Movement that calls for a team of human rights activists and lawyers to conduct the investigation, the Evangelical Fellowship of India that appeals to “competent authorities” to ensure justice in the case.
Abraham Mathai, a prominent voice for the rights of Christians and other minorities, says the custodial deaths are part of ongoing persecution of Christians in the area.
He claims that the police officers accused of the murders “are believed to have also been involved in religious persecution and human rights violations earlier this year.”
His accusations are backed by AICU, which is the largest body of Catholic laypeople in the nation. It alleges that the accused police officers “have been complicit in other custodial deaths in recent months, apart from fomenting caste clashes.”
Observing that the two victims “had been beaten, brutally tortured, sodomized with rods,” an AICU statement on June 29 points out that the “police brutalization” has shocked the nation “which is still to come to terms with police atrocities in other states which have gone unchecked under the cover of the Covid curfew.”

Demands for respect of Constitutional Rights

The chorus of voices is demanding that the deaths not be dismissed as “mere negligent acts” and highlights the fact that the guilty policemen have not been arrested and charged with murder.
It also requests an inquiry into the conduct of the local magistrate and government doctors who handled the case.
The killings have also triggered demands that the government act on police brutality by educating police officers to respect the “human rights guaranteed to all people under the Constitution of India” and to help them appreciate “the diversity of communities that exist in the country.”
Catholic Sr Cynthia Mathew, who is engaged in advocacy for women, Dalits and Adivasis at the UN, points out that over 1,700 people died in police custody in India in 2019. 

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...