Monday, 2 September 2024

திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

 


திருத்தந்தையின் திருப்பயணம் மதநல்லிணக்கத்தைப் பேணும்!

பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூரை உள்ளடக்கிய திருத்தந்தையின் நான்கு நாடுகளுக்கான திருப்பயணத்தின் முதல் சந்திப்பு இந்தோனேசியாவில் அமைகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இந்தோனேசியாவிற்கான தனது திருப்பயணத்தின்போது இஸ்திக்லால் மசூதிக்கு வருகை தரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, மதநல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முயற்சிகளுக்கு ஓர் அங்கீகாரத்தையும் மற்றும் ஊக்கத்தையும் தருகிறது என்று ஜகார்த்தாவின் பேராயர் கர்தினால் இக்னேஷியஸ் சுஹாரியோ ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் கூறியதாக, யூக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மசூதியின் மதநல்லிணக்க வரலாற்றைப் புரிந்து கொண்ட பின்னரே, இத்தகையதொரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள் இணையதள செய்தியில் தெரிவித்திருப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் மதங்களுக்கிடையேயான மத நல்லிணக்கத்தைத் திருப்பீடம் உண்மையிலேயே பாராட்டுகிறது என்றும், மேலும் இங்குள்ள இஸ்லாமியத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அந்நாட்டின் ஆயர் பேரவையின்போது கர்தினால் ஹார்ட்ஜோட்மோட்ஜோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்தோனேசியாவின் முதல் அரசுத் தலைவர் சுகர்னோ அவர்கள், அதன் முதல் பிரதமர் முகமது ஹட்டா பரிந்துரைத்த மற்றொரு இடத்திற்குப் பதிலாக ஜகார்த்தா பேராலயத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் மசூதியைக் கட்டத் தேர்வு செய்தது ஒரு தற்செயலான நிகழ்வல்ல, இது ஒரு இணக்கமான வாழ்வை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் அடைந்துள்ளார் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

மேலும் நாட்டில் தற்போதுள்ள மத நல்லிணக்கணம் மற்றும் ஒன்றிப்புக் காரணமாக, இந்தோனேசியாவின் இஸ்லாமியத் தலைவர்கள் வத்திக்கானுக்கு அடிக்கடி அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ அவர்கள், அந்நாட்டின் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாம் பற்றி பேசவே அவர்கள் அழைக்கப்படுவதாகவும், இது பாகிஸ்தான் அல்லது மத்திய கிழக்கு போன்ற பிற நாடுகளிலிருந்து வேறுபட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தோனேசியாவில் நிறுவப்பட்டுள்ள மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் நல்லுறவுகள் தொடர்ந்து பேணப்பட்டு பலப்படுத்தப்படும் என்று எதிபார்க்கப்படுவதாகவும், உடன்பிறந்த உறவையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியேற்றுயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் ஹார்ட்ஜோட்மோட்ஜோ.

தூய விண்ணேற்பு அன்னை பேராலயத்திலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது திருப்பயணத்தின்போது செப்டம்பர் 5-ஆம் தேதி, வியாழனன்று, வருகைதருகிறார்.


மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

 

மகிழ்ச்சி, உற்சாகத்துடன் காத்திருக்கும் பாப்புவா நியுகினியா

வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் - அருள்பணியாளார் மிகுவேல்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாப்புவா நியு கினியா மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள் என்றும், இசை வழியாக நற்செய்தியை அறிவித்து கடவுளின் தூய அழகு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் மிகுவேல் தெலா காலே.

செப்டம்பர் 2 திங்கள்கிழமை திருத்தந்தையின் 45 ஆவது திருத்த்தூதுப் பயணத்தை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறியுள்ளார் பாப்புவா நியுனினியாவில் உள்ள வார்த்தை மனுவுருவானார் துறவு சபையின் அருள்பணியாளர் Miguel de la Calle.

வார்த்தை மனுவுருவானவர் மறைப்பணியாளர்களின் நற்செய்திப்பணி, திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கும் மக்களின் உணர்வு, செப்டம்பர் 8 அன்னை மரியின் பிறப்பு பெருவிழா, பாரடைஸ் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், வரலாறாக மாற இருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் வரலாற்று நிகழ்விற்காக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 3 மணி நேரம் திருத்தந்தை தங்களுடன் இருப்பதாக எடுத்துரைத்த அருள்பணியாளர் மிகுவேல் அவர்கள், அதற்கான தயாரிப்பான மைதானத்தை சுத்தம் செய்தல், பூக்களால் அலங்கரித்தல் போன்ற செயல்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றார்கள் என்றும், மாலையில் ஒப்புரவு மற்ரும் செப வழிபாடுகளில் பங்கேற்று தங்களையேத் தயாரித்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு முதல் அதாவது ஏறக்குறைய 27 ஆண்டுகளாக பாப்புவா நியூ கினியாவில் வார்த்தை மனுவுருவானவர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மிகுவேல் அவர்கள், மறைப்பணியாளர்களின் கடுமையான உழைப்பினால் தமத்திரித்துவ மனிதநேயப்பள்ளியானது செயல்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.      

தென்மேற்கு பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமைந்துள்ள பாப்புவா நியூ கினியா, உலகின் மிகக் குறைந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடுகளில் ஒன்று என்றும், 70 இலட்சத்திற்கும் அதிகமான வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட பேச்சுவழக்குகள் இம்மக்கள் மத்தியில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.

🔴 LIVE முதல் நன்றித் திருப்பலி | அருட்பணி. அமித் ஷாஜன் | புனித அலங்கார அ...

Indonesia prepares to host Pope Francis on his most challenging trip to ...

Pope Francis Goes to Southeast Asia!

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...