Wednesday, 28 October 2015

செய்திகள் - 27.10.15

செய்திகள் - 27.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. Pastor Bonus விதிமுறைகள் திருப்பீடத் தலைமையகத்தில் அமலில் இருக்கும்

2. பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது பெற்றோருக்கு மிக முக்கியம்

3. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம்

4. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபம்

5. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் உதவி

6. காலநிலையில் உண்மையான மாற்றம் கொணர ஆயர்கள் வேண்டுகோள்

7. செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு

8. உலக ஆயர்கள் மாமன்றம் இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும்

9. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற கடிதத்தின் 50ம் ஆண்டு நிறைவு

10. 2015ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. Pastor Bonus விதிமுறைகள் திருப்பீடத் தலைமையகத்தில் அமலில் இருக்கும்

அக்.27,2015. திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்த நடைமுறைகள் முழுமையடையும்வரை, திருப்பீடத் தலைமையகத்திற்காக வெளியிடப்பட்டுள்ள Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
Pastor Bonus அப்போஸ்தலிக்க ஏட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்தி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு திருத்தந்தை எழுதியுள்ள கடிதம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
சீர்திருத்தத்தை நோக்கிய தற்போதைய காலத்தில், திருப்பீடத் தலைமையகத்தில் இடங்கள் சட்ட முறைப்படி காலியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை
திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது குறித்து எழுந்துள்ள சில பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவைகளுக்குத் தாமதமின்றி தீர்வு காண திருத்தந்தை விரும்புவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பீடத் தலைமையகத்திலும், பிற வத்திக்கான் மற்றும் திருப்பீட நிறுவனங்களிலும் பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது, தற்போதைய பணியாளர் அளவிலிருந்து மாற்றம் செய்யாமல் இடம்பெறவேண்டும், அதேநேரம், பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது திருப்பீடச் செயலகத்தின் அனுமதியோடும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வத்திக்கானின் ஊதிய நிர்ணயப்படியும்  நடைபெறவேண்டும் என்றும் அக்கடிதம் கூறுகிறது.
இவ்விவகாரத்தை வத்திக்கானின் அனைத்துத் துறைகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும், Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் முழுமையாய் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கர்தினால் பரோலின் அவர்களைக் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது பெற்றோருக்கு மிக முக்கியம்

அக்.27,2015. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை வீணாக்குவது எப்படி என அறிந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்றுஎன்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சுலோவாக்கிய கர்தினால் Ján Chryzostom Korec அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு, அந்நாட்டின் Bratislava பேராயர் Stanislav Zvolenský அவர்களுக்கு தனது இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆர்வமுள்ள மற்றும் மனத்தாராளம் நிறைந்த மேய்ப்பரான கர்தினால் Korec அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள நீண்டகால மேய்ப்புப் பணியில் நற்செய்திக்கு அச்சமின்றி சான்று பகர்ந்தவர் என்றும், மனித உரிமைகளையும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் பாதுகாப்பதில் துணிச்சலுடன் செயல்பட்டவர் என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சுலோவாக்கிய குடியரசு, முன்னாள் செக்கோஸ்லாவாக்கியாவின் ஓர் அங்கமாக  இருந்த சமயம், சோவியத் கம்யூனிச ஆட்சியில் கர்தினால் Korec அவர்கள் சிறையில் இருந்தவர் என்றும், இவர் பல ஆண்டுகள் தனது ஆயர் பணியை ஆற்ற இயலாமல் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், இறைபராமரிப்புக்கும், திருத்தந்தைக்கும் விசுவாசமாக இருந்ததில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தார் என்றும் திருத்தந்தையின் தந்திச் செய்தி கூறுகிறது.
சுலோவாக்கிய நாட்டின் Nitraவில் இம்மாதம் 24ம் தேதி மாலை இறந்த, 91 வயது நிரம்பிய இயேசு சபை கர்தினால் Korec அவர்கள், Nitra மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயராவார். இவர், முன்னாள் சோவியத் கம்யூனிச ஆட்சியின்போது, மறைவாக, ஏறக்குறைய 120 அருள்பணியாளர்களுக்கு அருள்பொழிவு செய்துள்ளார். இவரின் அடக்கச்சடங்கு அக்டோபர் 31, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம்

அக்.27,2015. இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழகத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக, கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ள கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்கு நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சோஃபியா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பிளாரன்ஸ் கர்தினால் ஜூசப்பே பெத்தோரி அவர்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என் அன்புக்குரிய சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களுக்கு இந்தக் கவரவப் பட்டம் வழங்குவதில் தான் மிகவும் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் கவுரவ முனைவர் பட்டம், சரியான ஒரு நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும், நம் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிப்பை நோக்கி பொதுவான பயணம் மேற்கொள்வதற்கு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், மிகுந்த அர்ப்பணம் மற்றும் விடா உறுதியுடன் முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கத்தை ஆரம்பித்த கியாரா லூபிச் அவர்களின் தூண்டுதலால் இத்தாலியின் சோஃபியா பல்கலைக்கழக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிறுவனத்தில் ஒன்றிப்புக் கலாச்சாரத்திற்காக வழங்கப்படும் முதல் கவுரவ முனைவர் பட்டம் இதுவேயாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செபம்

அக்.27,2015. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மக்களுக்குத் தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பாகிஸ்தான் திருப்பீடத் தூதர் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் தந்திச் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் தனது செபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இத்திங்களன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள படாக்ஷான் மாநிலம், ஜுர்ம் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூமிக்குக் கீழே 213.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் உதவி

அக்.27,2015. பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது கவலைகொண்டுள்ள அதேவேளை, இக்குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உடனடி உதவிகளைச் செய்வதற்கு தலத்திருஅவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் அறிவித்தார்.
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தானில் குறைந்தது 230 பேரும், ஆப்கானிஸ்தானில் 300க்கும் மேற்பட்டவர்களும்  இறந்துள்ளனர் மற்றும் 1,500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும்வேளை, இவ்வெண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பிலிருந்து இரு அவசரகாலப் பணிக் குழுக்கள்  பேஷ்வார், இஸ்லாமாபாத் உட்பட நிலநடுக்கப் பாதிப்புப் பகுதிகளுக்குச் ஏற்கனவே சென்றுள்ளதாகவும் கூறினார் காரித்தாஸ் இயக்குனர் Amjad Gulzar.
வட இந்தியாவின் சில பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்க அதிர்வை உணர்ந்தனர் என்றும், இந்தியா காரித்தாஸ் நிறுவனம், இவ்வாரத்தில் பேரிடர் கால விழிப்புணர்வு மற்றும் பேரிடர் கால முன்தயாரிப்புப் பயிற்சிகளை வழங்கியது என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

6. காலநிலையில் உண்மையான மாற்றம் கொணர ஆயர்கள் வேண்டுகோள்

அக்.27,2015. இவ்வாண்டில் பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில், நியாயமான, சட்டமுறைப்படி இயங்கவைக்கும் மற்றும் உண்மையான மாற்றம் ஏற்படும் ஒப்பந்தங்கள் கொண்டுவரப்படுமாறு, கர்தினால்கள், முதுபெரும் தந்தையர் மற்றும் ஆயர்கள் இணைந்து உலக அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா, அமெரிக்கா என அனைத்துக் கண்டங்களின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் இணைந்து உலக அரசுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்திங்களன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டு இதனை வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து பேசிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருமடலுக்குப் பதில் அளிப்பதாகவும், உலகின் அனைத்து மக்கள் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்த அறிக்கை உள்ளது என்று கூறினார்.
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை கவனத்துடனும், விவேகத்துடனும் நாம் பராமரிக்காவிட்டால், நாம் எல்லாரும் ஒரு பேரிடரை நோக்கிச் செல்ல நேரிடும்  என்றும் எச்சரித்தார் கர்தினால் கிரேசியஸ்.    
மேலும், இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, ஓசியானிய ஆயர் பேரவை  கூட்டமைப்பின் தலைவரான பாப்புவா நியு கினி பேராயர் John Ribat அவர்கள், தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வு அச்சுறுத்தலில் உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு

அக்.27,2015. பிலிப்பைன்ஸ் நாட்டின் செபுவில், வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது உலக திருநற்கருணை மாநாடு குறித்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர் திருஅவைத் தலைவர்கள்.
செபு பேராயர் ஹோசோ பால்மா, உலக திருநற்கருணை மாநாடுகள் பணிக்குழுத் தலைவர் பேராயர் பியெரோ மரினி, இப்பணிக்குழுவின் செயலர் அருள்பணி வித்தோரே பொக்கார்தி ஆகிய மூவரும் 51வது உலக திருநற்கருணை மாநாடு பற்றி விளக்கினர்.
பிலிப்பைன்சில், குறிப்பாக, செபு உயர்மறைமாவட்டத்தில் ஒரு வாரம் கொண்டாடப்படும் திருக்குழந்தை விழாவின் முடிவிலும், பிலிப்பைன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவுக்குத் தயாரிப்பாகவும் திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்தார் செபு பேராயர் பால்மா.
பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஆசியக் கண்டம் அண்மை ஆண்டுகளில் உலகின் பெரிய கருவிகளில் ஒன்றாக இருந்து வருகிறது, அதேசமயம், அக்கண்டத்தில் இன்னும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார் பேராயர் பால்மா.
பிலிப்பைன்சில் இம்மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே, மகிமையின் நம்பிக்கை”(கொலோ.1:27) என்ற இம்மாநாட்டின் தலைப்பு பற்றியும் விளக்கினார் பேராயர் பால்மா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உலக ஆயர்கள் மாமன்றம் இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும்

அக்.27,2015. கத்தோலிக்கத் திருஅவையில் அண்மையில் நடந்து முடிந்த குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம், இந்தியத் திருஅவைக்குப் புத்துயிர் அளிக்கும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Baselios Cleemis அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவடைந்த உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி கருத்து தெரிவித்த கர்தினால் Cleemis அவர்கள், மாமன்றத் தந்தையரால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிவரவிருக்கும் அப்போஸ்தலிக்க அறிவுரையின்படி(Apostolic Exhortation) இந்தியத் திருஅவை குடும்பங்களை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.
14வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவடைந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கர்தினால் Cleemis அவர்கள், ஏற்கனவே பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் குடும்பங்களை, கருணை மற்றும் பரிவன்புடன் அணுகுவதற்கு இம்மாமன்றத்தில் திறந்த மனது இருந்தது என்று கூறினார்.
இந்தியத் திருஅவையிலிருந்து மூன்று கர்தினால்கள், எட்டு ஆயர்கள் மற்றும் மூன்று பொதுநிலையினர்  14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொண்டனர். மேலும், இம்மாமன்றத்தில் 55 பொதுநிலையினரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : New Indian Express / வத்திக்கான் வானொலி

9. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற கடிதத்தின் 50ம் ஆண்டு நிறைவு

அக்.27,2015. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற தலைப்பில் போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை, போலந்து ஆயர் பேரவை இத்திங்களன்று உரோம் நகரில் சிறப்பித்தது.
2ம் வத்திக்கான் பொதுச் சங்கச் சூழலில், 1965ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தின் வரலாற்று மற்றும் இறையியல் கருத்துகள் குறித்த சிந்தனைகள், ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு உரோம் நகரில் திருப்பலி நிறைவேற்றிய, போலந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Stanisław Gądecki அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட போலந்து ஆயர்கள் பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகளுக்கு 56 கடிதங்கள் எழுதினர் என்று கூறினார்.
போலந்தில் கத்தோலிக்கம் வேரூன்றியதன் ஆயிரமாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை அக்கடிதங்களில் அறிவித்து, போலந்திற்காகச் செபிக்குமாறு ஆயர்கள் கேட்டிருந்தனர் என்றும் கூறினார் பேராயர் Gądecki.
போலந்தின் மில்லேன்யத்தைக் கருத்தில் கொண்டு, போலந்து மற்றும் ஜெர்மன் மக்களுக்கிடையே ஒப்புரவை உருவாக்கும் நோக்கத்தில் கர்தினால்கள் Stefan Wyszyński Boleslaw Kominek ஆகியோரின் முயற்சியால் இக்கடிதம் எழுதப்பட்டது என்றும் கூறினார் பேராயர் Gądecki.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10. 2015ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம்

அக்.27,2015. இப்பூமி, இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம் நிறைந்ததாய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக WMO என்ற ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளாவிய காலநிலை குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட WMO வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த 136 ஆண்டுகளில், கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் மிக அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளது.
கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் 0.90 டிகிரி செல்சியுசாக இருந்தது என்றும், தென் அமெரிக்கா முழுவதிலும், இன்னும், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளின் சில இடங்களிலும் இந்தக் கடும் வெப்பம் உணரப்பட்டது என்றும் WMO நிறுவனம் கூறியுள்ளது.
பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்ச மாநாட்டையொட்டி வருகிற நவம்பரில் உலகளாவிய காலநிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் WMO நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

I am back ON LINE...

I am back ON LINE...

Dear Friends,
For four months I could not be in touch with you all. 

I am in Chemparuthivilai Parish of Kuzhithurai Diocese, Tamil Nadu,India..

This Parish is yet to provide me a computer with internet access, and a telephone....

With some alternative arrangements, I am back ON LINE.....

Tuesday, 27 October 2015

India keen on inviting Pope: media report

India keen on inviting Pope: media report

The Pope is expected to convene a council of cardinals in February to announce the date and venue of the canonisation of the Blessed Teresa.

 The India government is keen to invite Pope Francis to India in connection with possible canonization of Mother Teresa next year, said a report in the mass circulation the Indian Express daily.

The government and the Catholic Church on behalf of the Missionaries of Charity (MC), founded by Mother Teresa, had been at loggerheads over the new adoption laws being enforced by the Centre to enable single parents to adopt.

The MC, with the full-fledged support of the Catholic Church, had been opposing it saying that the rules laid down by the Mother does not allow them to let single parents adopt children and they stopped adoptions centres.

But the confrontational mood between the Church and the government has changed to a conciliatory one following the Vatican’s decision to hasten the canonisation of Mother Teresa as a saint, the report said.

Canonisation is a big event for Catholics the world over and is keenly watched by the international community for its religious and political messages. The religious ceremony would be led by the Pope himself and the international media’s presence is ensured. The Pope is expected to convene a council of cardinals in February to announce the date and venue of the canonisation of the Blessed Teresa.

“The Pope, especially the current Pope, brings the whole world’s attention with him. If the Pope agrees to come to India, it will be a good opportunity for the government to send out positive signals to the world,” said a government official, who is acting as an interlocutor between the Centre and the Church for quite some time.

Pope Francis is the most popular Pope in recent years who has caught the imagination of both Catholics and the rest of the world. His views are quite in tune with the times, whether it is on divorce or live-in relationships. Equally important are his views on conversion.

He has famously questioned the whole issue of proselytism by saying: “Do you need to convince the other to become Catholic? No, no, no! Go out and meet him, he is your brother. This is enough…’’

The official said the chances of Pope visiting India depend on many issues, including the political and religious climate in the country and also the joint efforts on the part of government and the Church.

The report said the Church, on its part, is desperate to have the Pope come to India as it is in need of a morale booster. While it is not getting a free hand as was the case during the UPA rule, ever since the BJP has come to power, it is also fraught with internal tussles.

“It is not for nothing that the Church leaders in India have requested the Pope last week to fast-track the remaining canonization proceedings,” said a Church source.

Catholic apex body members Cardinal Mar Baselios Cleemis Catholicos and Cardinal Oswald Gracias have already requested the Pope to visit India. John Paul-II was the last one to visit India, in 1986. The previous government tried to bring the Pope, but the visit did not work out

Source: New Indian Express

செய்திகள் 26.10.15

செய்திகள்
26.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை  : மத்திய கிழக்கில் பகைமையின் கொடூரங்கள் தூவப்படுகின்றன

2. இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

3. திருத்தந்தை : பிறரின் பாரம்பரியங்களை மதிப்பதன்வழி,  அமைதியில் வாழ முடியும்

4. ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

5. திருத்தந்தை - திருஅவையில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன

6. 94 தீர்மனங்களுடன் மாமன்ற இறுதி ஏடு திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை  : மத்திய கிழக்கில் பகைமையின் கொடூரங்கள் தூவப்படுகின்றன

அக்.,26,2015. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் மற்றும் சிரியா மக்களுக்கு, இறை இரக்கத்தின் சிறப்பு ஆண்டில், ஆறுதலும், இரக்கமும் கிட்டும் என்ற நம்பிக்கையுடன், ஆறுதல் மற்றும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வார்த்தைகளைத் தெரிவிப்பதாக கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்தேய ரீதி திருஅவையின் ஆயர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் தூவப்படும் பகைமையின் கொடூரங்கள், அப்பகுதி கிறிஸ்தவர்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.
ஆபிரகாமின் பயணத்தையும் இறைவாக்கினர்களின் குரலையும் அனுபவித்துள்ள இப்பூமியில், கிறிஸ்தவ மறையின் துவக்கக் காலத்திலிருந்தே இருந்து வரும் கிறிஸ்தவர்கள், தற்போது, சித்ரவதைகளையும், மறைசாட்சிய மரணங்களையும் அனுபவித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பல நூறு ஆண்டுகளாக அமைதியில் ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும், அதே உணர்வுடன் தொடர்ந்து வாழ உதவும் நோக்கில், ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கலைஞர்களாக கிறிஸ்தவ சபைகள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்தேய ரீதி அருள்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கம், விசுவாசிகளுக்கு வழங்க வேண்டிய சகோதர அரவணைப்பு, போன்றவை குறித்தும் கல்தேய ரீதி ஆயர்களிடம் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

அக்.26,2015. போர்களால் உருவாகும் வேதனைகளைக் குறைப்பதை மனதில் கொண்டு பணியாற்றும் இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்கள், தங்களுக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்து, ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இராணுவ வீரர்களிடையே பணியாற்றும் கத்தோலிக்க ஆன்மீக அருள்பணியாளர்களின் பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதைத் தடுத்து, மனித மாண்பை பாதுகாக்கும் சவால்களை அனைவரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.
போர்க்களத்தில் வாழ்ந்து, அதன்வழியே ஆன்மீகக் காயங்களைப் பெற்றுள்ள இராணுவ வீரர்களை எவ்விதம் குணமாக்குவது என்பது முக்கியம் என்று அருள்பணியாளர்களிடம் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்புக் கவனத்துடன் மேய்ப்புப்பணி ஆற்றவேண்டியது அவசியம் என்று எடுத்துரைத்தார்.
அப்பாவி பொதுமக்கள், சுற்றுச்சூழல், கலாச்சாரப் பாரம்பரியத் தலங்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் மனிதாபிமானமுள்ள சட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
திருப்பீட நீதி அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமிற்கு, திருப்பீடத்தின் ஆயர் பேராயம், மற்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஆகியவை இணைந்து ஆதரவு வழங்கியுள்ளன.

3. திருத்தந்தை : பிறரின் பாரம்பரியங்களை மதிப்பதன்வழிஅமைதியில் வாழ முடியும்

அக்.,26,2015. நாடோடி இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அன்புகூரும், மதிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் ஒருவர் இங்கிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் வார்த்தைகளுடன் இத்திங்களன்று, நாடோடி இன மக்களை திருப்பீடத்தில் வரவேற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய மற்றும் உரோம் மறைமாவட்ட குடிபெயர்ந்தோர் அவைகளும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்து, இந்திய உதய்பூர் ஆயர் தேவ்பிரசாத் ஜான் கனாவாவும் கலந்து கொண்ட, நாடோடி இன மக்களுடன் ஆன சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடோடி இன மக்களுடன் திருஅவை, பெரும் அர்ப்பணத்துடன் செயலாற்றும் அதேவேளை, அவர்களும் திருஅவையில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்றார்.
நாடோடி இன மக்களிடையே தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டத் திருத்தந்தை, வேலை வாய்ப்புகள், கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை இன்றி நாடோடி இன மக்கள் துன்புறுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
ஒருவர் மற்றவரிடையே முரண்பாடின்றி ஒவ்வொருவரும் தங்கள் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் தக்க வைத்துக்கொள்ள அனுமதித்து, மதிப்பதன்வழி, அமைதியில் அனைவரும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

அக்.26,2015. கடவுளின் காக்கும் கருணையில் மக்களை இணைக்கும் பணிக்கென இயேசுவின் சீடர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை மறையுரையாற்றினார்.
அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானில் நிறைவுக்கு வந்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிகழ்த்தியத் திருப்பலியில், கருணையின் பணியை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வை அளித்த இயேசுவின் புதுமையைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, துயரங்களும், போராட்டங்களும் இறைவனின் கருணையை வெளிப்படுத்தும் தருணங்கள் என்று கூறினார்.
உலகின் எதார்த்தங்களைக் கண்டும் காணாமல் செல்வது, மற்றும், வரையறுக்கப்பட்ட வழிகளை மட்டுமே பின்பற்றுவது போன்ற சோதனைகளுக்கு, இயேசுவின் சீடர்கள் இடம் தரக்கூடாது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
பார்வையற்ற ஒருவருக்கு முன் நின்று, "உமக்கு நான் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று இயேசு கேட்பது, அர்த்தமற்ற கேள்வியாகத் தெரியலாம் எனினும், நமது தேவைகளை நாம் வெளிப்படையாகக் கேட்பதை இயேசு விரும்புகிறார் என்பதை நாம் இந்நிகழ்ச்சியில் உணர்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
'துணிவுடன் எழுந்துவாரும்' என்று இயேசுவின் சீடர்கள் பர்த்திமேயுவிடம் சொல்வது, இயேசுவின் ஊக்கமூட்டும் எண்ணங்களை எதிரொலிக்கும் வார்த்தைகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
பார்வையற்றவர் எழுப்பும் குரலைக் கேளாமல் நடந்துசெல்லும் சீடர்களைப் போல, இயேசுவைப் பின்தொடரும் நாமும் மக்களின் துன்பக் குரலைக் கேட்காமல் கடந்து  செல்லும் ஆபத்து உள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை - திருஅவையில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன

அக்.26,2015. மாமன்றம் என்ற பொருள்தரும் 'சினட்' (Synod) என்ற வார்த்தைக்கு, 'இணைந்து நடப்பது' என்று பொருள்; திருப்பயணியான திருஅவை என்ற அனுபவத்தையே நாம் ஆயர்கள் பொது மாமன்றத்தின்போது மேற்கொண்டோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கடந்த மூன்று வாரங்களாக, வத்திக்கானில் நடைபெற்ற 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய  நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வுலகில் பயணிக்கும் திருஅவை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருப்பயணியான திருஅவையில், உலகெங்கும் சிதறுண்டிருக்கும் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், பல சவால்களுக்கு இடையே, கடினமாக உழைத்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த மாமன்றத்தை, தூய ஆவியார் வழி நடத்தியதற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
"மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும், பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெருங்கூட்டமாய் அவர்கள் இங்கு திரும்பி வருவர்" என்று இறைவாக்கினர் எரேமியா கூறிய வார்த்தைகளை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இறைமக்கள் என்ற சமுதாயத்திலிருந்து யாரும் விலக்கிவைக்கப் படுவதில்லை என்ற கருத்தை வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளின் சாலைகளில் துன்புறும் புலம்பெயர்ந்தோரை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மக்களை, திருஅவை திக்கற்றவர்களாய் விடாது என்பதையும், நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. 94 தீர்மனங்களுடன் மாமன்ற இறுதி ஏடு திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

அக்.,26,2015. இம்மாதம் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை இடம்பெற்ற உலக ஆயர் மாமன்றத்தின் 94 தீர்மானங்கள் அடங்கிய ஏடு, பெரும்பான்மை அங்கத்தினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, திருத்தந்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த இம்மாமன்றத்தின் முடிவுகளை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவற்றை உன்னிப்பாக வாசித்த பின்னர், தன் கருத்துக்களை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் மகிழ்வையும், நம்பிக்கைகளையும், சோகங்களையும், எதிர்பார்ப்புகளையும் மனதில்கொண்டு, இரக்கத்தின் உண்மை அர்த்தத்தைக் காண்பித்த இயேசுவின் பாதையில் இந்த 94 தீர்மானங்களையும் எடுத்ததாக, திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏட்டின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கு உதவ விரும்பும் திருஅவை, சில நேரங்களில் குடும்பங்களின் அருகே மௌனமாக நின்று செவிமடுப்பதாகவும், வேறு சில நேரங்களில் குடும்பங்களின் முன்னே சென்று வழி காட்டுவதாகவும், ஏனைய வேளைகளில் அவற்றின் பின் நின்று ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என அவ்வேடு வலியுறுத்துகின்றது.
திருஅவையின் அனுமதியின்றி மணமுறிவு பெற்று, மறுமணம் புரிந்தவர்களை, திருஅவை, தாய்க்குரிய பண்புடன் புரிந்துகொண்டு வழிநடத்தவேண்டியது குறித்து இவ்வேட்டில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...