Tuesday 27 October 2015

செய்திகள் 26.10.15

செய்திகள்
26.10.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை  : மத்திய கிழக்கில் பகைமையின் கொடூரங்கள் தூவப்படுகின்றன

2. இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

3. திருத்தந்தை : பிறரின் பாரம்பரியங்களை மதிப்பதன்வழி,  அமைதியில் வாழ முடியும்

4. ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

5. திருத்தந்தை - திருஅவையில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன

6. 94 தீர்மனங்களுடன் மாமன்ற இறுதி ஏடு திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை  : மத்திய கிழக்கில் பகைமையின் கொடூரங்கள் தூவப்படுகின்றன

அக்.,26,2015. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் மற்றும் சிரியா மக்களுக்கு, இறை இரக்கத்தின் சிறப்பு ஆண்டில், ஆறுதலும், இரக்கமும் கிட்டும் என்ற நம்பிக்கையுடன், ஆறுதல் மற்றும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வார்த்தைகளைத் தெரிவிப்பதாக கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்தேய ரீதி திருஅவையின் ஆயர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் தூவப்படும் பகைமையின் கொடூரங்கள், அப்பகுதி கிறிஸ்தவர்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.
ஆபிரகாமின் பயணத்தையும் இறைவாக்கினர்களின் குரலையும் அனுபவித்துள்ள இப்பூமியில், கிறிஸ்தவ மறையின் துவக்கக் காலத்திலிருந்தே இருந்து வரும் கிறிஸ்தவர்கள், தற்போது, சித்ரவதைகளையும், மறைசாட்சிய மரணங்களையும் அனுபவித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பல நூறு ஆண்டுகளாக அமைதியில் ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும், அதே உணர்வுடன் தொடர்ந்து வாழ உதவும் நோக்கில், ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கலைஞர்களாக கிறிஸ்தவ சபைகள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கல்தேய ரீதி அருள்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கம், விசுவாசிகளுக்கு வழங்க வேண்டிய சகோதர அரவணைப்பு, போன்றவை குறித்தும் கல்தேய ரீதி ஆயர்களிடம் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் உரை

அக்.26,2015. போர்களால் உருவாகும் வேதனைகளைக் குறைப்பதை மனதில் கொண்டு பணியாற்றும் இராணுவ ஆன்மீக அருள்பணியாளர்கள், தங்களுக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்து, ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இராணுவ வீரர்களிடையே பணியாற்றும் கத்தோலிக்க ஆன்மீக அருள்பணியாளர்களின் பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதைத் தடுத்து, மனித மாண்பை பாதுகாக்கும் சவால்களை அனைவரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.
போர்க்களத்தில் வாழ்ந்து, அதன்வழியே ஆன்மீகக் காயங்களைப் பெற்றுள்ள இராணுவ வீரர்களை எவ்விதம் குணமாக்குவது என்பது முக்கியம் என்று அருள்பணியாளர்களிடம் தெரிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சிறப்புக் கவனத்துடன் மேய்ப்புப்பணி ஆற்றவேண்டியது அவசியம் என்று எடுத்துரைத்தார்.
அப்பாவி பொதுமக்கள், சுற்றுச்சூழல், கலாச்சாரப் பாரம்பரியத் தலங்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் மனிதாபிமானமுள்ள சட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
திருப்பீட நீதி அமைதி அவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமிற்கு, திருப்பீடத்தின் ஆயர் பேராயம், மற்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஆகியவை இணைந்து ஆதரவு வழங்கியுள்ளன.

3. திருத்தந்தை : பிறரின் பாரம்பரியங்களை மதிப்பதன்வழிஅமைதியில் வாழ முடியும்

அக்.,26,2015. நாடோடி இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அன்புகூரும், மதிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் ஒருவர் இங்கிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் வார்த்தைகளுடன் இத்திங்களன்று, நாடோடி இன மக்களை திருப்பீடத்தில் வரவேற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய மற்றும் உரோம் மறைமாவட்ட குடிபெயர்ந்தோர் அவைகளும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்து, இந்திய உதய்பூர் ஆயர் தேவ்பிரசாத் ஜான் கனாவாவும் கலந்து கொண்ட, நாடோடி இன மக்களுடன் ஆன சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடோடி இன மக்களுடன் திருஅவை, பெரும் அர்ப்பணத்துடன் செயலாற்றும் அதேவேளை, அவர்களும் திருஅவையில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்றார்.
நாடோடி இன மக்களிடையே தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டத் திருத்தந்தை, வேலை வாய்ப்புகள், கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை இன்றி நாடோடி இன மக்கள் துன்புறுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
ஒருவர் மற்றவரிடையே முரண்பாடின்றி ஒவ்வொருவரும் தங்கள் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் தக்க வைத்துக்கொள்ள அனுமதித்து, மதிப்பதன்வழி, அமைதியில் அனைவரும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

அக்.26,2015. கடவுளின் காக்கும் கருணையில் மக்களை இணைக்கும் பணிக்கென இயேசுவின் சீடர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை மறையுரையாற்றினார்.
அக்டோபர் 25, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானில் நிறைவுக்கு வந்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிகழ்த்தியத் திருப்பலியில், கருணையின் பணியை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வை அளித்த இயேசுவின் புதுமையைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, துயரங்களும், போராட்டங்களும் இறைவனின் கருணையை வெளிப்படுத்தும் தருணங்கள் என்று கூறினார்.
உலகின் எதார்த்தங்களைக் கண்டும் காணாமல் செல்வது, மற்றும், வரையறுக்கப்பட்ட வழிகளை மட்டுமே பின்பற்றுவது போன்ற சோதனைகளுக்கு, இயேசுவின் சீடர்கள் இடம் தரக்கூடாது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
பார்வையற்ற ஒருவருக்கு முன் நின்று, "உமக்கு நான் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்?" என்று இயேசு கேட்பது, அர்த்தமற்ற கேள்வியாகத் தெரியலாம் எனினும், நமது தேவைகளை நாம் வெளிப்படையாகக் கேட்பதை இயேசு விரும்புகிறார் என்பதை நாம் இந்நிகழ்ச்சியில் உணர்கிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
'துணிவுடன் எழுந்துவாரும்' என்று இயேசுவின் சீடர்கள் பர்த்திமேயுவிடம் சொல்வது, இயேசுவின் ஊக்கமூட்டும் எண்ணங்களை எதிரொலிக்கும் வார்த்தைகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
பார்வையற்றவர் எழுப்பும் குரலைக் கேளாமல் நடந்துசெல்லும் சீடர்களைப் போல, இயேசுவைப் பின்தொடரும் நாமும் மக்களின் துன்பக் குரலைக் கேட்காமல் கடந்து  செல்லும் ஆபத்து உள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை - திருஅவையில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன

அக்.26,2015. மாமன்றம் என்ற பொருள்தரும் 'சினட்' (Synod) என்ற வார்த்தைக்கு, 'இணைந்து நடப்பது' என்று பொருள்; திருப்பயணியான திருஅவை என்ற அனுபவத்தையே நாம் ஆயர்கள் பொது மாமன்றத்தின்போது மேற்கொண்டோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கடந்த மூன்று வாரங்களாக, வத்திக்கானில் நடைபெற்ற 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய  நண்பகல் மூவேளை செப உரையில், இவ்வுலகில் பயணிக்கும் திருஅவை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருப்பயணியான திருஅவையில், உலகெங்கும் சிதறுண்டிருக்கும் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றம், பல சவால்களுக்கு இடையே, கடினமாக உழைத்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த மாமன்றத்தை, தூய ஆவியார் வழி நடத்தியதற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
"மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும், பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெருங்கூட்டமாய் அவர்கள் இங்கு திரும்பி வருவர்" என்று இறைவாக்கினர் எரேமியா கூறிய வார்த்தைகளை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இறைமக்கள் என்ற சமுதாயத்திலிருந்து யாரும் விலக்கிவைக்கப் படுவதில்லை என்ற கருத்தை வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளின் சாலைகளில் துன்புறும் புலம்பெயர்ந்தோரை சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை, இம்மக்களை, திருஅவை திக்கற்றவர்களாய் விடாது என்பதையும், நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. 94 தீர்மனங்களுடன் மாமன்ற இறுதி ஏடு திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பு

அக்.,26,2015. இம்மாதம் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை இடம்பெற்ற உலக ஆயர் மாமன்றத்தின் 94 தீர்மானங்கள் அடங்கிய ஏடு, பெரும்பான்மை அங்கத்தினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, திருத்தந்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடும்பம் குறித்த இம்மாமன்றத்தின் முடிவுகளை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவற்றை உன்னிப்பாக வாசித்த பின்னர், தன் கருத்துக்களை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் மகிழ்வையும், நம்பிக்கைகளையும், சோகங்களையும், எதிர்பார்ப்புகளையும் மனதில்கொண்டு, இரக்கத்தின் உண்மை அர்த்தத்தைக் காண்பித்த இயேசுவின் பாதையில் இந்த 94 தீர்மானங்களையும் எடுத்ததாக, திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏட்டின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கு உதவ விரும்பும் திருஅவை, சில நேரங்களில் குடும்பங்களின் அருகே மௌனமாக நின்று செவிமடுப்பதாகவும், வேறு சில நேரங்களில் குடும்பங்களின் முன்னே சென்று வழி காட்டுவதாகவும், ஏனைய வேளைகளில் அவற்றின் பின் நின்று ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும் என அவ்வேடு வலியுறுத்துகின்றது.
திருஅவையின் அனுமதியின்றி மணமுறிவு பெற்று, மறுமணம் புரிந்தவர்களை, திருஅவை, தாய்க்குரிய பண்புடன் புரிந்துகொண்டு வழிநடத்தவேண்டியது குறித்து இவ்வேட்டில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment