Sunday, 8 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 05 ஜனவரி 2012

1. விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்கள் வெளியிடப்படவுள்ளன

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கர்தினால் Rodriguez அழைப்பு

3. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் விரோதிகளாகக் காட்டிவரும் ஊடகங்களால் நைஜீரியா மேலும் அழிவை நோக்கிச் செல்லும் - பேராயர் Onaiyekan

4. வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் - அகில உலக காரித்தாஸ் அமைப்பு

5. இந்தியாவில் பரவிவரும் வாடகைத் தாய்மை என்ற எண்ணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு

6. மனித விற்பனையைத் தடுக்கும் முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

7. திருத்தந்தை வழங்கிய 45வது உலக அமைதி நாள் செய்தியை ஆதரித்து பாகிஸ்தானில் அமைதி ஊர்வலங்கள்

8. பாகிஸ்தானில் UNICEF உருவாக்கிய 35 பள்ளிகள்

------------------------------------------------------------------------------------------------------

1. விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்கள் வெளியிடப்படவுள்ளன

சன.05,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்களைத் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இச்சனிக்கிழமை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவாச வாசலைத் தேடும் மக்களுக்கு உதவக் கூடியவர்களாக நாம் அனைவரும் மாறும் பொருட்டு, நம்பிக்கைக்குரிய மகிழ்ச்சிநிறை சாட்சிகளாகவும் விசுவாசத்தை மீண்டும் கண்டு கொள்பவர்களாகவும், இயேசுவை நோக்கிய நம் மனமாற்றத்தை      புதுப்பிப்பவர்களாகவும் வாழ இவ்விசுவாச ஆண்டின் நடவடிக்கைகள் உதவும் என்றும் அப்பேராயம் கூறியது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதையும் இப்பேராயம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அகில உலகத் திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குத்தளங்களும் இயக்கங்களும் என நான்கு படிகளில் இந்த விசுவாச ஆண்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி நூலின் இருபதாம் ஆண்டு போன்றவையும் இந்த விசுவாச ஆண்டில் சிறப்பிக்கப்படும் எனவும் அப்பேராயம் கூறியது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி நிறைவடையும்.


2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கர்தினால் Rodriguez அழைப்பு

சன.05,2012. தென் அமெரிக்காவின் தொமினிக்கன் குடியரசு நாட்டில் இவ்வாண்டு மேமாதம் நிகழவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வன்முறைகளைக் களைந்து, மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அந்நாட்டு கர்தினால் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தாண்டையொட்டி Santo Domingo பேராலயத்தில், நாட்டின் துணை அரசுத்தலைவர், மற்றும் பிற நாட்டுத் தூதர்கள் கலந்து கொண்ட திருப்பலியில் புத்தாண்டு சிறப்புச் செய்தியை வழங்கிய அம்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez, மேமாதம் 20ம் தேதி நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.
தொமினிக்கன் குடியரசு நாட்டில் அண்மைக்காலங்களில் பெருகிவரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் Rodriguez, இவ்வன்முறைகள் குடும்பங்களில் பெண்களுக்கு பெருமளவில் இழைக்கப்படுகிறதென்றும், பொதுவாழ்வில் வன்முறைகளின் ஒரு முக்கிய காரணம் போதைப் பொருள் வர்த்தகம் என்றும் சுட்டிக் காட்டினார்.


3. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் விரோதிகளாகக் காட்டிவரும் ஊடகங்களால் நைஜீரியா மேலும் அழிவை நோக்கிச் செல்லும் - பேராயர் Onaiyekan

சன.05,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் தற்போது உருவாகியுள்ள பதட்ட நிலைகள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழும் மோதல்கள் என்று ஊடகங்கள் கூறிவருவதை அந்நாட்டின் பேராயர் ஒருவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
கிறிஸ்மஸ் நாளன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களுக்கு போகோ ஹராம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய குழு பொறுப்பேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய அபுஜா பேராயர் John Olurunfemi Onaiyekan, அந்நாட்டில் தற்போது நிலவும் போராட்டங்களை இரு மதங்களுக்கிடையில் உருவாகியுள்ள மோதல்களாக ஊடகங்கள் கூறிவருவது பொறுப்பற்ற ஒரு செயல் என்று வன்மையாக கண்டித்துள்ளார்.
திருப்பீடத்தின் சார்பாக இயங்கிவரும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், நைஜீரியாவின் பல ஊர்களில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர் என்றும், ஒரு சில குடும்பங்களில் இவ்விரு மதங்களையும் சார்ந்தவர்கள் உள்ளனர் என்றும் பேராயர் Onaiyekan சுட்டிக் காட்டினார்.
இவ்விரு மதத்தவரையும் விரோதிகளாக உருவாக்கிவரும் ஊடகங்களால் இந்த நாடு மேலும் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்து உள்ளதென்று அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
போகோ ஹராம் என்ற அடிப்படைவாதக் குழு இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறதென்பதையும், இக்குழுவால் இஸ்லாமியரும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும்  பேராயர் கூறினார்.
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி பேராயர் Onaiyekan தன் பேட்டியின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.


4. வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் - அகில உலக காரித்தாஸ் அமைப்பு

சன.05,2012. பிறரன்புப் பணி நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளைக் கடந்தது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வடகொரியாவில் வளர்ந்து வரும் கவலைக்குரிய சூழல் குறித்து அண்மையில் Seoul நகரில் அகில உலக காரித்தாஸ் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய கொரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Osvaldo Padilla இவ்வாறு கூறினார்.
பல அரசியல் தடைகள் இருந்தாலும், அவைகளைத் தாண்டி வட கொரியாவில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளைக் குறித்தும் பேராயர் Padilla இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
வடகொரிய அரசுத் தலைவரின் மரணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஆயினும் அந்நாட்டில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்கள் உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்க வேண்டும் என்று அகில உலக காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
பல வழிகளிலும் ஆசிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா, வெள்ளம், கடும் பனிக்காலம் மற்றும் பழமையான வேளாண்மை முறைகள் ஆகிய பிரச்சனைகளால் கடும் உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது என்று காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
காரித்தாஸ் வெளியிட்ட விவரங்களின்படி, 2 கோடியே 45 இலட்சம் மக்கள்தொகை கொண்ட வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வட, தென் கொரிய நாடுகளுக்கிடையில் சுமுகமான உறவுகள் இல்லாத ஒரு சூழலிலும், தென் கொரிய காரித்தாஸ் அமைப்பு வட கொரியாவின் அவசரத் தேவைகளை நிறைவு செய்து வருகிறதென்று ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. இந்தியாவில் பரவிவரும் வாடகைத் தாய்மை என்ற எண்ணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு

சன.05,2012. இயற்கைக்கு முரணான செயற்கை முறைகளில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதை கத்தோலிக்கத் திருஅவை ஏற்றுக் கொள்ளாது என்று நன்னெறி இறையியலாளரான அருள்தந்தை சூசை ஆரோக்கியசாமி கூறினார்.
மனைவி அல்லாமல் மற்றொரு பெண்ணின் உதரத்தில் ஆணின் உயிரணுக்களை செலுத்தி, குழந்தையை உருவாக்கும் வாடகைத்தாய் என்ற எண்ணம் இந்தியாவில் பரவி வருவதற்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாடகைத் தாய்மை என்பது இயற்கைக்கு முரணானது என்றும், விவிலியப் படிப்பினைகளுக்கு எதிரானது என்றும் அருள்தந்தை ஆரோக்கியசாமி எடுத்துரைத்தார்.
வாடகைத் தாய்மை என்பது நன்னெறிக்கு முரணானது என்பது மட்டுமல்ல, அதனால் பல்வேறு உளநல ரீதியான பிரச்சனைகளும் உருவாகும் என்று மனநல மருத்துவர் Anita Chauhan கூறினார்.
இயற்கையில் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முறையையும் இஸ்லாம் நியதிகள் ஏற்றுக் கொள்ளாது என்று இந்திய இஸ்லாம் தலைமைப் போதகர் Umer Ahmed Ilyasi கூறினார்.
உடலையும், மனதையும் பாதிக்கும் இந்த செயற்கை முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குழந்தையற்ற பெற்றோர் அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று இஸ்லாம் தலைவர் Ahmed Ilyasi பரிந்துரைத்தார்.
வாடகைத் தாய்மை என்பது இந்துமத கோட்பாடுகளிலும் ஐயங்களை உருவாக்கும் ஒரு போக்கு என்று இராமகிருஷ்ணா அறக்கட்டளையைச் சார்ந்த சுவாமி சாந்தாத்மானந்த் கூறியதுடன், அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கும் முறை வரவேற்கப்பட வேண்டியதொன்று என்ற பரிந்துரையை அவரும் வலியுறுத்தினார்.


6. மனித விற்பனையைத் தடுக்கும் முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

சன.05,2012. மனித விற்பனை, முக்கியமாக, பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் விற்பனை இந்தியா சந்திக்கும் ஒரு பெரும் கொடுமை என்று கல்கத்தா உயர்மறைமாவட்டம் கூறியது.
இந்தியத் திருஅவை சந்தித்து வரும் இந்த பெரும் சவாலைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு கல்கத்தா உயர்மறைமாவட்டம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
இவ்வறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏறத்தாழ 6 கோடி பேர் மனித விற்பனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமூகப்பணி மையத்தின் வழியாக 50 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு குழுவிலும் செயல்படும் 30 இளையோர் கிராமங்களுக்குச் சென்று மனித விற்பனைகள் நடைபெறுகின்றனவா என்று கண்காணித்து வருகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


7. திருத்தந்தை வழங்கிய 45வது உலக அமைதி நாள் செய்தியை ஆதரித்து பாகிஸ்தானில் அமைதி ஊர்வலங்கள்

சன.05,2012. புத்தாண்டு நாளுக்கென நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது என்ற மையக்கருத்தில் 45வது உலக அமைதி நாள் செய்தியை திருத்தந்தை வழங்கியதை ஆதரித்து பாகிஸ்தானின் பைசலாபாத் மற்றும் தாண்ட்லியான்வாலா (Tandlianwala) ஆகிய இரு இடங்களில் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
Peace and Human Development (PHD) மற்றும் Association of Women for Awareness and Motivation (AWAM) என்ற இருவேறு அமைப்புக்களால் நடத்தப்பட்ட இந்த ஊர்வலங்களில் இளையத் தலைமுறையைச் சார்ந்த கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் கலந்து கொண்டனர்.
இளைய தலைமுறையை நீதியிலும் அமைதியிலும் வளர்ப்பதற்கு கல்வி ஒரு முக்கிய வழி என்று திருத்தந்தை கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதே என்று ஊர்வலத்தில் கலந்து கொண்ட நசீம் அந்தனி கூறினார்.
மனித உரிமைகள், அமைதி, ஒப்புரவு, மத நல்லிணக்கம் ஆகிய பல அழகிய அம்சங்கள் பாகிஸ்தானில் பாடத்திட்டங்களாக வழங்கப்படுவது அவசியம் என்றும் நசீம் அந்தனி எடுத்துரைத்தார்.
பல மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட பாகிஸ்தானில் சகிப்புத் தன்மையை வளர்க்கும் முயற்சிகளில் அரசு பெருமளவு ஈடுபடவேண்டும் என்று AWAM அமைப்பின் தலைவர் நாசியா சர்தார் கூறினார்.


8. பாகிஸ்தானில் UNICEF உருவாக்கியுள்ள 35 பள்ளிகள்

சன.05,2012. 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் UNICEF எனும் ஐ.நா.கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு உருவாக்கிய 35 பள்ளிகளை அம்மாநிலத்தின் கல்வித்துறையிடம் இப்புதனன்று ஒப்படைத்தது.
நெதர்லாந்து தூதரகம், மற்றும் OPEC நிறுவனம் உட்பட பல்வேறு உலக நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த 35 பள்ளிகளில் 4,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வெள்ளத்தில் அழிக்கப்பட்ட பல பள்ளிகளின் குழந்தைகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூடாரங்களில் அமைக்கப்பட்ட பள்ளிகளில் UNICEF பணியாளர்கள் கல்வி புகட்டி வந்தனர் என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.
குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, நலவாழ்வு, சுத்தமான சூழ்நிலை, தகுந்த உடல்பயிற்சிகள் மற்றும் மனநலப் பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் வழங்குவதே இப்பள்ளிகளின் இலக்காக இருக்கும் என்று UNICEF அதிகாரி Karen Allen கூறினார்.

 

Thursday, 5 January 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 04 ஜனவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 04 ஜனவரி 2012: 1. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து கர்தினால் Seán Brady 2. சீனாவில் முதன் முதலாக கத்தோ...

கத்தோலிக்க செய்திகள்: 04 ஜனவரி 2012

1. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து கர்தினால் Seán Brady

2. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது

3. டில்லி உயர்மறைமாவட்டத்தில் இந்திய நாட்டுப் பண்ணின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

4. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தி முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

5. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்

6. மியான்மாரில் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை

7. சீனாவின் பொருளாதார முன்னேற்ற மாற்றங்களால், 44,000க்கும் மேற்பட்ட கலாச்சார நினைவுச் சின்னங்கள் அழிவு

8. புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம்

------------------------------------------------------------------------------------------------------
1. குழந்தைகள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால் பல தற்கொலைகளை தடுக்க முடியும் - அயர்லாந்து கர்தினால் Seán Brady

சன.04,2012. குடும்பங்களில் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கிஅவர்கள் சொல்வதை பெற்றோர் செவிமடுத்தால், பல தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று அயர்லாந்து கர்தினால் Seán Brady கூறினார்.
புத்தாண்டு நாளன்று உலக அமைதிக்கென திருத்தந்தை வழங்கிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு தன் புத்தாண்டு மறையுரையை வழங்கிய அயர்லாந்து தலைமை ஆயர் கர்தினால் Brady, அயர்லாந்தில் தற்கொலைகள் மூலம் இளையோரை அதிக அளவில் நாம் இழக்கிறோம் என்ற எச்சரிக்கையை விடுத்தார்.
பணியிடம், சமுதாயம், குடும்பம் என்ற பல சூழல்களில் பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்கும் இளையோரின் உள்ளத்து ஏக்கங்களைக் கேட்பதற்கு வயது முதிர்ந்தவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கர்தினால் Brady வலியுறுத்திக் கூறினார்.
2012ம் ஆண்டு நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பலர் இருக்கும்போது, இவ்வாண்டு டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் மீது நமது கவனமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று கர்தினால் Brady தன் மறையுரையில் குறிப்பிட்டார்.


2. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது

சன.04,2012. சீனாவில் முதன் முதலாக கத்தோலிக்கத் திருமறையைத் தழுவிய Paul Xu Guangqiன் வாழ்க்கையைப் பின்பற்றி, சீனக் கலாச்சாரத்தையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் இணைக்க விசுவாசிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று Shanghai மறைமாவட்ட ஆயர் Aloysius Jin Luxian வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு சபையைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய ஆயர் Jin Luxian, சனவரி 23 அன்று ஆரம்பமாகும் சீனப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள மேய்ப்புப் பணி மடலில் தான் Xu Guangqiன் எண்ணங்களையும் வாழ்வையும் ஆர்வமாய் பின்பற்றுகிறவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருமறையின் முதல் திருத்தூதராக சீனாவில் பணியாற்றிய இயேசுசபை குரு Matteo Ricciயினால் திருமுழுக்கு பெற்ற Xu Guangqi பிறந்த 450ம் ஆண்டு 2012ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பதை ஆயர் Jin Luxian இம்மடலில் மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.
சீனக் கலாச்சாரமும் கத்தோலிக்க விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பதை தன் விசுவாச வாழ்வால் உணர்த்திய Xu Guangqi வெறுப்பை வெளிப்படுத்தும் வழிகள் மேலும் வெறுப்பையே வளர்க்கும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறார் என்று ஆயரின் இம்மடல் சுட்டிக்காட்டுகிறது.
Xu Guangqiன் 450ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் அவர் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவரது பரிந்துரையால் நடைபெறும் புதுமைகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆயர் Jin Luxian.


3. டில்லி உயர்மறைமாவட்டத்தில் இந்திய நாட்டுப் பண்ணின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சன.04,2012. நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்திய நாட்டுப் பண்ணைச் சிறப்பிக்கும் விதமாக, டில்லி உயர்மறைமாவட்டம் புத்தாண்டு நாளன்று ஒரு விழா எடுத்தது. இந்தியாவில் இத்தகைய ஒரு விழா எடுக்கும் முதல் அமைப்பு இதுவாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
Dheerendra Tyagi என்பவர் திரு இருதயப் பேராலய வளாகத்தில் மூவர்ணக் கோடியை ஏற்றியபின், சூழ இருந்த டில்லி துணை ஆயர் Franco Mulakkal  மற்றும் குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இணைந்து நாட்டுப் பண்ணைப் பாடினர்.
இந்திய அரசு உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்களால் இன்னும் அதிகமான மக்கள் பயன்பெறவும், கல்வி, சமுதாய விழிப்புணர்வு இவற்றின் வழியாக இந்நாட்டிற்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யவும் தலத்திருஅவை எப்போதும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று டில்லி துணை ஆயர் Mulakkal கூறினார்.
கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்ளும் பணிகளின் எண்ணிக்கை அம்மக்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும், இதனால் இந்தியா பல வழிகளில் முன்னேறியுள்ளது என்றும் விழாத் தலைவர் தியாகி கூறினார்.


4. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தி முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

சன.04,2012. சூரிய ஒளிகொண்டு உருவாக்கப்படும் சக்தியினால் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்று கல்கத்தா உயர்மறைமாவட்ட சமுதாயப் பணி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Reginald Fernandes கூறினார்.
கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமுதாயப் பணி மையம், மேற்கு வங்கத்தில் சுற்றுச்சூழலை அழிக்காத வண்ணம் சக்தியை உருவாக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள Kalidaherpota என்ற கிராமத்தில் மின்சார வசதிகள் இல்லாததால், அங்குள்ள மக்களின் வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது என்று கூறிய அருள்தந்தை Fernandes, அந்த கிராமத்தில் சமுதாயப் பணி மையம் மேற்கொண்ட முயற்சிகளை ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விளக்கிக் கூறினார்.
சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளால் அக்கிராமத்து மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், சிறப்பாக, அக்கிராமத்து குழந்தைகள் கல்வியில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் அருள்தந்தை Fernandes எடுத்துரைத்தார்.
கல்கத்தா சமுதாயப் பணி மையத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கும் சென்று சூரிய சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒளிவிளக்குகளை உருவாக்கும் வழிகளை கற்பித்து வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இரு தேசிய விருதுகள்

சன.04,2012. தமிழ் நாட்டின் வேலூரில் அமைந்துள்ள CMC எனப்படும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
பெரு நகரங்கள் அல்லாத பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு மருத்துவப் பணிகளை ஆற்றிவரும் மருத்துவமனை என்பதற்காகவும், நாட்டிலேயே இதய சிகிச்சையில் தலைசிறந்த மருத்துவமனை என்பதற்காகவும் CMCக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ மனைகள் வழங்கும் பல்வேறு சேவைகள், நோயுற்றோருக்கு காட்டப்படும் தனி கவனம் மற்றும் பாதுகாப்பு, மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் மற்றும் ஆய்வுகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன.
சமுதாயத்தின் மீது மிகவும் பொறுப்புள்ள வகையில் செயல்பட்ட மருத்துவ மனை என்று CMC கடந்த ஆண்டு விருது பெற்றுள்ளது என்பதும், The Week என்ற புகழ்பெற்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின்படிபல துறைகள் கொண்ட மருத்துவ மனைகளில் CMC இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கவை.


6. மியான்மாரில் கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை

சன.04,2012. சனவரி 4ம் தேதி, இப்புதனன்று மியான்மாரில் நடைபெற்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் புதிய அரசு சில கைதிகளை விடுதலை செய்துள்ளது.
கருணை அடிப்படையில் சில கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்றும், மரணதண்டனை பெற்றோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் என்றும் அரசால் நடத்தப்படும் ஊடகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறவிப்பால் எத்தனை அரசியல் கைதிகள் பயன்பெறுவார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை.
சில அரசியல் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிபிசி நிறவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முக்கியமான அரசியல் கைதிகள் எவரது பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை என்று பிபிசி அறிவித்துள்ளது.
மியான்மாரின் மனித உரிமை நிலவரங்கள் மோசமாக இருப்பதாகக் கூறி அதனைத் தடை செய்துள்ள பல மேற்கத்திய நாடுகள், அதற்கான காரணங்களில் முக்கியமானதாக அரசியல் கைதிகளின் விவகாரத்தையும் வலியுறுத்தி வருகின்றன.


7. சீனாவின் பொருளாதார முன்னேற்ற மாற்றங்களால், 44,000க்கும் மேற்பட்ட கலாச்சார நினைவுச் சின்னங்கள் அழிவு

சன.04,2012. பொருளாதார முன்னேற்றம் என்ற விரைவான மாற்றங்களால், 44,000 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கலாச்சார நினைவுச் சின்னங்கள் சீனாவில் அழிக்கப்பட்டுள்ளன என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய மாவோ மக்கள் குடியரசு என்ற கொள்கையின் விளைவாக ஏற்பட்ட பல முன்னேற்றங்கள், அந்நாட்டின் பல்லாயிர பாரம்பரிய சின்னங்களை அழித்து, அவைகள் இருந்த நிலங்களையும் அபகரித்து, அங்கு அடுக்கு மாடி கட்டிடங்களை உருவாக்கி வருகிறதென்று இந்த ஆய்வு கூறுகிறது.
சீனாவில் இருக்கும் 700,000 க்கும் அதிகமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட சீன கலாச்சார அரசுத் துறை வெளியிட்ட இந்த அறிக்கையில், சீனா மேற்கொண்டுள்ள விரைவான பொருளாதார மாற்றம் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அழிவதற்கான முக்கிய காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த அழிவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது Shaanxi மாநிலம் என்றும், அங்குள்ள 3500க்கும் அதிகமான கலாச்சார சின்னங்கள் எவ்வித சுவடும் இன்றி அழிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.


8. புத்தாண்டையொட்டி, தமிழ்நாட்டில் மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகம்

சன.04,2012. தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, மதுபானங்களின் விற்பனை, கடந்த ஆண்டை விட 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடந்த டிசம்பர் 31 மற்றும் சனவரி 1ம் தேதிகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் 142 கோடி ரூபாய் அளவில் விற்பனை ஆகி உள்ளன.
கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, விற்பனையான மதுவகைகளின் மதிப்பு, 103 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் மதுபானங்களின் விலை ஏற்றம் பெற்றிருந்தாலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறினார்.

 

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 03 ஜனவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 03 ஜனவரி 2012: 1. நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல...

கத்தோலிக்க செய்திகள்: 03 ஜனவரி 2012

 
1. நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல்

2. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை

3. இந்த ஆண்டிலாவது ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை

4. பிலிப்பீன்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை சார்பில் 1000 வீடுகள்

5. வன்முறைகள் களையப்பட வெனிசுவேலா கர்தினால், நாட்டு மக்களுக்கு அழைப்பு

6. அயர்லாந்து வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது -  Dublin பேராயர்

7. பிரேசில் நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்

8. ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 1,62,000 பேர் உயிரிழப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல்

சன.03,2012. உடல்நலம் அல்லது வயது காரணமாக வழிப்பாட்டுத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதில் உலகளாவியத் திருஅவையும் பங்குச் சமூகங்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தியுள்ளார்.
உடல்நலமில்லாதவர்களும் முதியவர்களும் தங்களது வாழ்க்கையைக் கிறிஸ்துவின் அன்புக்காக அர்ப்பணிப்பதன் வழியாக கிறிஸ்துவோடு தங்களுக்குள்ள உறவை உறுதிப்படுத்துவதற்கு இதன்மூலம் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 
இதனாலே மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும் பணிசெய்யும் குருக்கள், நோயாளரின் திருப்பணியாளர்கள் என்று உண்மையிலேயே உணருவது முக்கியம் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் 20வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது”(லூக்.17:19) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படவிருக்கின்ற இந்த 20வது அனைத்துலக நோயாளர் தினம், இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும் அனைத்துலக விசுவாச ஆண்டின் மையப் பொருளை மீண்டும் கண்டுணரக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
ஒருவர் குணமடைவதற்கு, குணமாக்கும் திருவருட்சாதனங்கள் குறித்த முக்கியத்துவத்தையும் விவரித்துள்ள திருத்தந்தை, ஒப்புரவு திருவருட்சாதனம், நோயில் பூசுதல் திருவருட்சாதனம், திருநற்கருணை திருவருட்சாதனம் ஆகிய மூன்றும் ஒருவர் உடலிலும் உள்ளத்திலும் குணமடைய உதவுவன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
நல்ல சமாரித்தன் என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஜெர்மனியில் வெகு ஆடம்பரமாக நடைபெறவிருக்கும் அனைத்துலக நோயாளர் தினம் பற்றியும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை

சன.03,2012. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று அமைவது எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
புது டில்லியில் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட வரைவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு கூறியது.
சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் நாட்டு ஆலோசனை அவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, நாட்டின் எந்த மாநிலத்திலும் நடைபெறும் மத வன்முறைகளை, மாநில அரசுகளின் அழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு கட்டுப்படுத்த தேவையான அதிகாரம் வழங்கும் அம்சங்களைப் பரிந்துரைக்கிறது.
2003ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளும் 2008ம் ஆண்டில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளும் இந்த சட்ட வரைவைப் பரிந்துரைக்க காரணமாய் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
எதிர்கட்சிகளும், மற்ற சமுதாய அமைப்புக்களும் இந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


3. இந்த ஆண்டிலாவது ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை

சன.03,2012. வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு புலர்ந்திருக்கும் இந்த ஆண்டிலாவது தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று ஒரிஸ்ஸாவில் வாழும் கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.
புத்தாண்டையொட்டி புபனேஸ்வரில் கூடி வந்த அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, கிறிஸ்தவர்கள் அரசிடம் சமர்ப்பித்த 3500க்கும் அதிகமான முறையீடுகளில் அரசு இதுவரை 68 வழக்குகளுக்கே தீர்வு வழங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, FIDES செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள புள்ளி விவரங்களின்படி, கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான முறையீடுகளில் காவல் துறையினர் 827 புகார்களை ஏற்றுக்கொண்டனர் என்றும், அவற்றில் 68 வழக்குகளில் 412 பேர் மட்டுமே குறைந்தபட்சம் தண்டனை பெற்றுள்ளனர், மற்றும் 1900க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த வன்முறைகள் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும், ஒரிஸ்ஸாவில் வாழும் 56,000 கிறிஸ்தவர்களுக்கு இன்னும் பாதுகாப்பும், நல் வாழ்வும் அமையவில்லை என்று அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச் செயலர் ஜான் தயாள் கூறினார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைகளுக்கு சாட்சிகளாய் இருப்பவர்களைப் பாதுகாத்து வந்த Rabindra Parichha என்ற கத்தோலிக்கத் தலைவர் அண்மையில் கொல்லப்பட்டது அங்கு நிலவும் பாதுகாப்பற்றச் சூழலை விளக்குகிறது என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. பிலிப்பீன்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை சார்பில் 1000 வீடுகள்

சன.03,2012. பிலிப்பீன்ஸ் நாட்டின் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நோக்கில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருவதாக அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
1200க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிபல ஆயிரக்கணக்கானோரைக் குடிபெயர்ந்தவர்களாக மாற்றிய அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடங்களைக் கட்டித்தர கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பிடம் 16 இலட்சம் டாலருக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக கூறினார் தலத்திருஅவை அதிகாரி குரு Edwin Gariguez.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தலத்திருஅவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உறைவிடங்களைக் கட்டும் பணி பிப்ரவரி மத்தியில் துவங்கும் எனவும் கூறினார் அவர்.
தற்காலிக முகாம்களில் வாழும் மக்களுக்கு நிரந்தர தங்குமிடங்களைக் கட்டிக் கொடுப்பதே தலத்திருஅவையின் தற்போதைய முதல் திட்டம் எனவும் உரைத்தார் குரு Gariguez.
இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை, இயேசு சபையினரால் நடத்தப்படும் மணிலா அத்தனேயோ பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது.


5. வன்முறைகள் களையப்பட வெனிசுவேலா கர்தினால், நாட்டு மக்களுக்கு அழைப்பு

சன.03,2012. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 623 உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ள வன்முறைகளைக் கைவிட்டு, அமைதிக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் வெனிசுவேலா கர்தினால் Jorge Urosa Savino.
ஆண்டின் இறுதி 15 நாட்களில் வெனிசுவேலா நாட்டில் வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என கவலையை வெளியிட்ட கர்தினால், அந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழவேண்டும் என்றார்.
ஒரே மாதத்தில் 623 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது என்ற கர்தினால் Urosa Savino, பாதுகாப்பற்ற உணர்வுகளை அகற்றவும் வன்முறைகளைக் களையவும் அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.


6. அயர்லாந்து வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது -  Dublin பேராயர்

சன.03,2012. பொது வாழ்வில் மதத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கும்போது, விசுவாசத்தை கேலிக்கண்ணோட்டத்துடன் நோக்கும் போக்கு மாறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்தின் Dublin பேராயர் Diarmuid Martin.
அயர்லாந்து கலாச்சாரத்தின் மீது தன் பெருமளவான பாதிப்பைக்கொண்டிருந்த திரு அவை, தற்போது அதனை இழந்து வருகின்றது என்ற பேராயர், மத பாதிப்புகள் குறித்த கருத்தரையாடல்கள் நியாயமானவைகளே எனினும், அவை அனைத்தும் சமூகத்தில் திருஅவையின் பங்கைத் தெளிவாக உணர்ந்த நிலையில் இடம்பெற வேண்டும் என்றார்.
மத நம்பிக்கைகளை சமூகத்தில் கட்டாயமாகப் புகுத்தும் முயற்சிகள் தடைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் பேராயர் Diarmuid Martin.
திருஅவையின் தனியார்களும் திருஅவையும் அயர்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகக் கலாச்சாரத்திற்கும் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது என்பதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர்.


7. பிரேசில் நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்

சன.03,2012. குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிரான சட்டங்கள் பிரேசில் நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அந்நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
10 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவது அரசின் தடைகளையும் மீறி இன்னும் தொடர்வதாகக் கூறும் இந்த ஆய்வறிக்கை, பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி தொழிலாளர்களுள் 10 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் கூறுகிறது.
வீடுகளில் மற்றும் சிறு பண்ணைகளில் பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டுவது சிரமமாக உள்ளதால், குழந்தைத் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக்கூறும் இவ்வறிக்கை, 2020ம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் திட்டம் வெற்றி பெறுவதற்கு மேலும் அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்படுவதாகவும் கூறுகிறது.


8. ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 1,62,000 பேர் உயிரிழப்பு

சன.03,2012. ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கப் படைகளும் விலக்கி கொள்ளப்பட்டு வருவதால் குண்டுவெடிப்புகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டதாக கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.பி.சி எனப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஈராக்கில் நடந்த பல்வேறு குண்‌டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்புப்படையினர் எனவும், கடந்த 2008-2009ம் ஆண்டுகளில்தான் அதிக எண்ணிக்கையிலான உயிர்பலி ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Monday, 2 January 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 02 ஜனவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 02 ஜனவரி 2012: 1. திருத்தந்தை : நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது 2. புத்தாண்டின் முதல் நாளன்...

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...