Monday, 30 March 2026

கத்தோலிக்க மக்கள்தொகை சீராக வளர்ந்து வருகிறது!

 

கத்தோலிக்க மக்கள்தொகை சீராக வளர்ந்து வருகிறது!



ஒட்டுமொத்தமாக, உலகின் தென்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்காவில், கத்தோலிக்க மதம் அதிகளவில் வளர்ந்து வருவதையும், அதேவேளையில் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்து வருவதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு 2026" (Annuario Pontificio 2026) மற்றும் "திருஅவைப் புள்ளிவிவர ஆண்டு ஏடு 2024" (Annuarium Statisticum Ecclesiae 2024) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள புதிய உலகளாவியத் திருஅவையின் புள்ளிவிவரங்கள், உலகெங்கிலும் கத்தோலிக்கர்களின் சீரான வளர்ச்சியை வெளிப்படுத்துவதோடு, ஆப்பிரிக்கா மிக வேகமாக வளரும் பகுதியாக உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

இவை இரண்டும் அளித்துள்ள புள்ளிவிபரங்களின்படி உலகளாவியக் கத்தோலிக்க மக்கள் தொகை 2024-ஆம் ஆண்டில் 142 கோடியைக் கடந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டைவிட 1.14 விழுக்காடு அதிகமாகும். மேலும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏறக்குறைய இணையாக உள்ளது.

ஆப்பிரிக்காவில் மிக முக்கியமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அங்குக் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 28.1 கோடி முதல் 28.8 கோடிக்கு மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளாவியக் கத்தோலிக்க மக்கள் தொகையில் இக்கண்டத்தின் பங்கும் 19.9 விழுக்காட்டிலிருந்து 20.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது திருஅவைக்குள் அதன் விரிவடைந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு மாறாக, ஐரோப்பா வெறும் 0.8 விழுக்காடு என்ற மிக மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளதுடன், அதன் உலகளாவிய பங்கும் சற்றே சரிந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களில் 47.7 விழுக்காடு  என்ற மிகப்பெரிய விகிதத்தை அமெரிக்கக் கண்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. அதேவேளையில், ஆசியா மற்றும் ஓசியானியா நிலையானதாக உள்ளன.

2024-ஆம் ஆண்டில் திருஅவையின் ஆன்மிகப் பணியாளர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு அதிகரித்து, 44.6 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. மேலும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள அதேவேளையில், நிரந்தரத் திருத்தொண்டர்கள் மற்றும் பொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை, குறிப்பாக ஆப்பிரிக்காவில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அருள்பணித்துவப் பணிக்கான அழைப்புகள் உலகளவில் 2.7 விழுக்காடு குறைந்துள்ளன; ஆப்பிரிக்கா மட்டுமே அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள ஒரே பகுதியாக அமைத்துள்ளது. 

அருளடையாளப் பங்கேற்பு கலவையான போக்குகளைக் காட்டியுள்ளது. அதாவது, திருமுழுக்குகள் சற்றே குறைந்துள்ள அதேவேளையில், முதல் திருவிருந்துகளும் உறுதிப்பூசுதல்களும் மிதமாக உயர்ந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, உலகின் தென்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்காவில், கத்தோலிக்க மதம் அதிகளவில் வளர்ந்து வருவதையும், அதேவேளையில் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்து வருவதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...