An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Wednesday, 29 June 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 27 June 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 27 June 2011: " 1. ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை 2.தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எ..."
Catholic News - hottest and latest - 27 June 2011
1. ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை
2.தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்கிறார் திருத்தந்தை
3.உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை திருநற்கருணை என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்
4. மத உரிமைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை கடிதம்
5. போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அழைப்பு விடுக்கிறது கோவா தலத்திருச்சபை
6. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால்
7. உலகில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை
ஜூன் 27, 2011. புனிதர்களாக அறிவிப்பதற்கான படிகளுக்கென ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 இறையடியார்களின் பெயர்களை இத்திங்களன்று பெற்று அதற்கான தனது ஒப்புதலையும் வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனிதர்படிநிலைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோவிடம் இருந்து இப்பெயர்களுக்கானப் பரிந்துரைகளைப் பெற்ற திருத்தந்தை நான்கு இறையடியார்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள், மறைசாட்சியாக உயிரிழந்த மூன்று இறையடியார்களின் பெயர்கள், வீரத்துவ பண்புகளுக்காக எட்டு இறையடியார்களின் பெயர்கள் ஆகியவைகளை ஏற்று ஒப்புதல் வழங்கினார்.
வணக்கத்துக்குரிய இறையடியார்கள், இத்தாலியின் Mariano Arciero, பிரான்சின் Giovanni Giuseppe Lataste, மெக்ஸிகோவின் Maria Agnese Teresa, ஜெர்மனியின் Ildegarda Burjan ஆகியவர்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள் திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மறைசாட்சியாக உயிரிழந்த இஸ்பெயினின் இறையடியார்கள் Salvio Huix Miralpeix, Giuseppa Martínez Pérez, ஆஸ்திரியாவின் இறையடியார் Carlo Lampert ஆகியவர்களின் பெயர்களுடன், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக, இந்தியாவின் Matteo Kadalikattil, இத்தாலியின் முத்திப்பெற்ற Giovanni Marinoni, இறையடியார்கள் Raffaele Dimiccoli, Maria Giuseppina Benvenuti, Laura Meozzi, Luigia Tincani, இஸ்பெயினின் Giuseppe Maria García Lahiguera போலந்தின் Sofia Czeska-Maciejowska ஆகியோர்களின் பெயர்களும் புனிதர் பட்ட நிலைக்கானப் படிகளுக்கென திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.
2.தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்கிறார் திருத்தந்தை
ஜூன் 27, 2011. மேற்கத்திய நாடுகள் மூழ்கிப்போயிருக்கும் மற்றும் உலகம் முழுமையும் பரவிப்போயிருக்கும் தன்னலம் தாங்கிய தனியுரிமைக்கோட்பாட்டிற்கான எதிர் மருந்து திருநற்கருணையே என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருச்சபை எனும் மறையுடலுக்கு வாழ்வை வழங்கும் இதயம் திருநற்கருணையே என இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, திருநற்கருணையின்றி திருச்சபையால் உயிர் வாழமுடியாது என்றார்.
திருநற்கருணை எனும் இந்த அருட்சாதனமே மனிதகுல ஐக்கியத்தைக் கொணர்கிறது ஏனெனில், இறைவனை உலகிற்கு கொணரவும் உலகை இறைவனிடம் கொணரவும் இதனாலே முடியும் என்றார்.
தனியுரிமைக்கோட்பாட்டால் மூழ்கிப்போயிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும், அதன் பாதிப்பை அனுபவித்து வரும் உலகிற்கும் எதிர்மருந்தாகச் செயல்படும் திருநற்கருணை, ஐக்கியம், சேவை, பகிர்தல் போன்றவைகளை வழங்குகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை.
3.உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை திருநற்கருணை என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்
ஜூன் 27, 2011. திருநற்கருணையால் பலன்பெறுபவர்கள் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஏனெனில் அது உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருநற்கருணையின் வல்லமை குறித்து 'ஒக்தாவோ தியேஸ்' என்ற தன் வாராந்திர தொலைக்காட்சித்தொடரில் உரை வழங்கிய குரு லொம்பார்தி, பிரிவினைகளை மேற்கொள்ளவும், இறைவனின் வாழ்வுடனான ஒன்றிப்பை நோக்கி நம்மை அழைத்து வரவும், சுயநலப்போக்குகளில் இருந்து நம் தனிப் பண்புகளுக்கு விடுதலை அளிக்கவும் திருநற்கருணையின் சக்தி உதவுகிறது என்றார்.
உலகமயமாக்கல் கோட்பாடு பரவி வரும் இன்றையக் காலக்கட்டத்தில் சகோதரத்துவமும் நீதியும் ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கானக் கிறிஸ்தவர்களின் முயற்சியில், திருநற்கருணை எனும் அன்பு திருச்சபையிலும் உலகிலும் பரவி உதவுகிறது என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் உண்மையான அன்பின் இருப்பிற்கு அழைப்பு விடுத்தார் குரு லொம்பார்தி.
4. மத உரிமைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை கடிதம்
ஜூன் 27, 2011. ஒருவர் தான் தேர்ந்து கொள்ளும் மதத்தைப் போதிப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், அது குறித்து எடுத்துரைப்பதற்கும் இருக்கும் உரிமையை வலியுறுத்தி இந்தியாவின் மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை அம்மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மாநிலத்தின் அமைதிக்கும் இணக்க வாழ்வுக்குமான தன் உறுதியான அர்ப்பணத்தை மாநில முதல்வர் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள கத்தோலிக்க அவையின் இக்கடிதம், மாநில அரசின் பல்வேறு திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்படுவதான ஓர் எண்ணத்தைத் தருவதாகவும் குறைகூறியுள்ளது.
அனைத்து மதங்களும் சம உரிமைகளுடன் நடத்தப்படவேண்டும், மதசகிப்புத்தன்மை வேண்டும், எம்மதமும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பவைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பையும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய பிரதேச ஆயர்களின் கத்தோலிக்க அவை, அரசுப்பள்ளிகளில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்த பாடங்கள் இடம்பெறுவது, குறிப்பிட்ட ஒரு மதக்கல்விக்கென வரி விதிப்பது போன்றவை அரசியலமைப்பிற்கு எதிரானவை எனவும் தன் கடிதத்தில் கூறியுள்ளது.
5. போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அழைப்பு விடுக்கிறது கோவா தலத்திருச்சபை
ஜூன் 27, 2011. கோவா மாநிலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என மாநில அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது அம்மறைமாவட்டத்தின் சமூக நீதி மற்றும் அமைதி அவை.
சட்ட விரோத போதைப்பொருட்கள் மற்றும் அளவுக்கு மீறிய மதுபானம் அருந்தல் போன்றவைகளைக் கட்டுப்படுத்த அரசு தவறியுள்ளதன் மூலம் சுற்றுலாப் பயணிகளிடையேயான போதைப்பொருள் தொடர்புடைய மரணங்களுக்கும் குடும்பப் பிரச்னைகளுக்கும் காரணமாகியுள்ளது எனக்கூறும் இந்தக் கத்தோலிக்க அவை, கோவா மாநிலமானது போதைப்பொருட்களின் புகலிடமாகவும் காவல்துறைக்கும் போதைப்பொருட்களுக்கும் தொடர்புடைய மாநிலமாகவும் செய்திகளில் வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலாவை ஊக்குவிக்கிறேன் என்ற போர்வையில் போதைப்பொருள் பயன்பாட்டையே அரசு ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டிய இந்த சமூக நீதி மற்றும் அமைதி அவையின் உயர் செயலர் குரு மவெரிக் ஃபெர்னாண்டோ, இலாபத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மீட்புத் திட்டங்களில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
6. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால்
ஜூன் 27, 2011. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால் Keith Patrick O'Brien.
கடந்த இரண்டு மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 14 தாக்குதல்கள் இடம்பெற்றதற்கு பாகிஸ்தானின் தேவ நிந்தனைச்சட்டமே காரணம் எனக்கூறி அச்சட்டம் நீக்கப்பட் அழைப்பு விடுத்திருக்கும் 'Aid to the Church in Need' என்ற கத்தோலிக்க அமைப்பின் முயற்சிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார் கர்தினால்.
கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கத் தவறியுள்ள பாகிஸ்தான் அரசிற்கான உதவிகளை இருமடங்காக்கியுள்ள இங்கிலாந்து அரசின் செயல்பாட்டையும் குறைகூறியுள்ளார் கர்தினால் O'Brien.
7. உலகில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது
ஜூன் 27, 2011. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இலண்டனின் இம்பீரியல் கல்லூரியும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஹார்வார்டு பலகலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம், உலகம் முழுவதும் நீரழிவு நோய் பெருமளவில் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 1980ம் ஆண்டு 15 கோடியே 30 இலட்சமாக இருந்தது தற்போது 34 கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்கப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், உலகில் மருத்துவச் செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக இவ்வாய்வு மேலும் கூறுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளுக்கென தற்போது ஒவ்வோர் ஆண்டும் உலகில் செலவழிக்கப்படும் 2,200 கோடி பவுண்டுகள் என்பது 2015ம் ஆண்டில் 3000 கோடியாக உயரக்கூடும் என மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
robert john kennedy: Catholic News - hottest and latest - 25 June 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 25 June 2011: "1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு 2 . Knights of Malta வின் பெருந்தலைவர் , திருத்தந்தை சந்திப்பு ..."
Catholic News - hottest and latest - 25 June 2011
1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு
2. Knights of Malta வின் பெருந்தலைவர், திருத்தந்தை சந்திப்பு
3. கடல்சார்ந்த தொழில் செய்வோரின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதி வழங்க வேண்டும், திருப்பீடம் அழைப்பு
4. நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்படவிருக்கின்றார்கள்
5. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டும், இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் வலியுறுத்தல்
6. தென் சூடானில் அமைதி நிலவ வேண்டுமென்று பல்வேறு சமயத்தினர் இணைந்து செபத்தினர்
7. இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவர அரசியல்வாதிகள் அச்சம், குறைகூறுகிறது ஒரு நிருபர் குழு
8. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு
ஜூன்25,2011. “விசுவாசமாக இருத்தல்” என்ற நல்ல விழுமியத்தை இழந்த ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளை, இந்த விழுமியமானது இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகத்தின் சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகத்தினர் தங்கள் வாழ்க்கையில் இந்த விழுமியத்தைக் கடைபிடித்து வாழுமாறு கேட்டுக் கொண்டார்.
கடவுள் வாக்குமாறாதவர், விசுவாசமானவர் என்று விவிலியம் குறிப்பிடுகிறது, எனவே, கடவுளின் அருள் மற்றும் அன்னைமரியின் உதவியுடன், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பிரமாணிக்கமாக வாழுமாறு இக்கழகத்தினருக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இக்கழகத்தினர் வத்திக்கானில் செய்து வரும் தன்னார்வப் பணிகளையும் பாராட்டிப் பேசிய அவர், ஒருவர் பிறர் செபம் செய்வதற்கு உதவ வேண்டுமானால் முதலில் அவரது இதயம் கடவுள் பக்கமாய் இருக்க வேண்டும் மற்றும் புனித இடங்களையும் புனிதப் பொருட்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகமானது திருத்தந்தை ஆறாம் பவுலால் 1971ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதில் உரோம் நகரின் கத்தோலிக்கர் உறுப்பினர்களாக உள்ளனர். 1850ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் உருவாக்கிய பாப்பிறை இராணுவ அமைப்புகள் உட்பட வத்திக்கானில் இயங்கி வந்த பல்வேறு பாப்பிறைப் பாதுகாப்பு அமைப்புக்களை 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கலைத்தத் திருத்தந்தை ஆறாம் பவுல், தூயவர்கள் பேதுரு, பவுல் கழகம் என்ற புதிய குழுவில் சேருமாறு அவ்வமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தார். இப்புதிய அமைப்பு, திருப்பீடத்துக்குத் தங்களது வரையறையற்ற விசுவாசத்தை வெளிப்படுத்த விரும்பும் உரோம் கத்தோலிக்கருக்காக உருவாக்கப்பட்டது.
2. Knights of Malta வின் பெருந்தலைவர், திருத்தந்தை சந்திப்பு
ஜூன்25,2011. Knights of Malta என்றழைக்கப்படும் கத்தோலிக்க பக்த அமைப்பின் பெருந்தலைவர் Frà Matthew Festing தலைமையிலான உயர்மட்ட குழுவையும் இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை.
1048ம் ஆண்டுவாக்கில் எருசலேமில் தோன்றிய இந்தப் பழமையான கத்தோலிக்க அமைப்பின் தலைமையகம் 1834ம் ஆண்டிலிருந்து உரோமையில் உள்ளது. இதில் தற்சமயம் ஐந்து கண்டங்களிலிருந்தும் 13 ஆயிரம் உறுப்பினர்களும் 80 ஆயிரம் தன்னார்வப் பணியாளர்களும் உள்ளனர். 120 நாடுகளில் பணியாற்றும் இவ்வமைப்பு, திருப்பீடம் உட்பட 104 நாடுகளுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது. இதில் மருத்துவர்கள், தாதியர்கள், பிற மருத்துவத்துறைப் பணியாளர்கள் என இருபதாயிரம் பேர் உள்ளனர்.
3. கடல்சார்ந்த தொழில் செய்வோரின் பாதுகாப்புக்கு நாடுகள் உறுதி வழங்க வேண்டும், திருப்பீடம் அழைப்பு
ஜூன்25,2011. கடல்சார்ந்தத் தொழில் செய்வோரின் நல்வாழ்வுக்கு உறுதி வழங்கும் விதத்தில் அவர்களுக்கானத் தற்காப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படுமாறு திருப்பீடம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வருகிற ஜூலை 10ம் தேதி ஞாயிறன்று அனைத்துலக கடல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவை, இக்காலத்தில் கடல்சார்ந்தத் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடற்கொள்ளையர்கள் குறித்தத் தனது அண்மை அறிக்கை பற்றியும் குறிப்பிட்டுள்ள அத்திருப்பீட அவை, இத்தொழிலாளிகள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது மட்டுமே அவர்கள் உலகுக்கு அறியப்படுகிறார்கள் என்றும் கூறியது.
இவர்கள் அரசுகளோடும், சர்வதேச நிறுவனங்களோடும் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையானது 1920ம் ஆண்டு முதல் இத் இத்தொழிலாளிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றி வருகின்றது.
கடல்சார் தொழிலாளிகளுக்கான மேயப்புப்பணி அவை, அடுத்த ஆண்டு நவம்பர் 19 முதல் 23 வரை உரோமையில் 23வது உலக மாநாட்டை நடத்தவிருப்பதையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது
தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் சுமார் 15 இலட்சம் பேர் கடல்சார் தொழிலாளிகள் பணியில் உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உலகளாவிய வணிகத்தில் 90 விழுக்காட்டுப் போக்குவரத்தைச் செய்து உலகப் பொருளாதாரத்திற்கு நற்சேவை செய்கின்றனர்.
இச்செய்தியில் அவ்வவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò மற்றும் செயலர் ஆயர் Joseph Kalathiparambi கையெழுத்திட்டுள்ளனர்.
4. நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்படவிருக்கின்றார்கள்
ஜூன்25,2011. 1943ம் ஆண்டில் நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் இஞ்ஞாயிறன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்றார்கள்.
மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட Johannes Prassek, Hermann Lange, Eduard Muller ஆகிய மூன்று குருக்களுடன் லூத்தரன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த போதகர் Karl Friedrich Stellbrink என்பவரும் கொல்லப்பட்டார்.
திருத்தந்தையின் பெயரில் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, அருளாளர் நிலைக்கு உயர்த்தும் இத்திருப்பலியை நிகழ்த்துவார்.
5. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டும், இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் வலியுறுத்தல்
ஜூன்25,2011. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனிதர் என அறிவிக்கப்படும் போது அவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென ஓர் இத்தாலிய பத்தரிகையாளர் கழகம் கேட்டுள்ளது
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், புதிய தொழிற்நுட்பங்களுக்கு விவேகத்துடனும் தைரியத்துடனும் திறந்த மனது காட்டினார் என்று கூறி, இவர் நவீனச் சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட வேண்டுமென உரோம் நிருபர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது 26 வருட பாப்பிறைப் பணியின் போது ஊடகத்துறையினரோடு நெருங்கிய உறவு வைத்திருந்தார் எனவும் இவர் போல் எந்தத் திருத்தந்தையும் இத்தகைய உறவை வைத்திருந்ததில்லை எனவும் உரோம் நிருபர் கழகத் தலைவர் ரொமானோ பர்த்தோலோனி கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், கடந்த மே ஒன்றாந்தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதுவே அவர் வரலாற்றில் பிரபலமானத் திருத்தந்தையாக இருந்தார் என்பதைக் காட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி தனது 84வது வயதில் இறைபதம் அடைந்தார். அவர் 1978ம் ஆண்டு பாப்பிறையான அக்டோபர் 22ம் தேதியை அவரது திருவிழா நாளாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
6. தென் சூடானில் அமைதி நிலவ வேண்டுமென்று பல்வேறு சமயத்தினர் இணைந்து செபத்தினர்
ஜூன்25,2011. ஜூலை 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தனிநாடாக மாறவிருக்கின்ற தென் சூடானில் பல்வேறு இன மற்றும் மதங்களின் மத்தியில் அமைதி நிலவ வேண்டுமென்று அப்பகுதியின் 13 கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் முஸ்லீம் சமூகத்தினரும் இணைந்து செபித்தனர்.
பன்மைத்தன்மை வலிமையின் ஊற்றாக இருக்கவேண்டுமேயொழிய மோதல்களுக்குக் காரணமாக அமையக் கூடாது என்று கொம்போனி மறைபோதக அருட்பணியாளர் ஹோசே வியெய்ரா கூறினார்.
சூடானில் 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை இடம் பெற்ற உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட தரப்பினர் உரையாடல் மூலம் ஒன்றிணைந்து வாழ முடியும் என்றும் அருட்பணியாளர் வியெய்ரா கருத்து தெரிவித்தார்.
7. இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவர அரசியல்வாதிகள் அச்சம், குறைகூறுகிறது ஒரு நிருபர் குழு
ஜூன்25,2011. இலங்கையில் தகவல் அறியும் உரிமை மசோதா கொண்டுவரப்படுவதற்கு அரசியல்வாதிகள் அச்சம் அடைந்தாலும் அது கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்று CRCMO என்ற குடிமக்களின் உரிமைகள் மற்றும் ஊடக நிறுவனம் அறிவித்தது.
தெற்கு ஆசியாவில், தகவல் அறியும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படாத ஒரே நாடு இலங்கை என்று குறிப்பிட்ட அந்நிறுவனம், உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே இச்சட்டம் அமலில் இருக்கின்றது என்றும் கூறியது.
எல்லா அரசு நிறுவனங்களும் மக்களுக்கு கடமைப்பட்டுள்ளன என்பதை உணர்த்தும் ஓர் அரசியல் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கத்தில், இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி விழிப்புணர்வு நாளைக் கடைபிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக CRCMO நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்கிடையே, இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசியகட்சியால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இம்மசோதா குறித்து இடம் பெற்ற வாக்கெடுப்பில் அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
8. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
ஜூன்25,2011. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவுலின் நீராமாசுஹூக்கோவுக்கு இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.
பவுலினுக்கு எதிரான வழக்கு 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவொன்று, இந்த தீர்ப்பை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கு முடிவில், 65 வயதான பவுலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1994ம் ஆண்டு ருவாண்டாவில் இடம் பெற்ற இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் பேர் கொலை செய்யப்பட்டனர்.
Saturday, 25 June 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 24 June 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 24 June 2011: "1. மத்தியக்கிழக்கு நாடுகளில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறு திருத்தந்தை அழைப்பு..."
Subscribe to:
Posts (Atom)
போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!
போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
ROBERT JOHN KENNEDY: Nakkan Pullan Inscription | நல்லமனார் கோட்டை | Tam...
-
India still in shackles On Independence Day, is there anything to celebrate? ...
