Friday, 2 July 2021

ஜூலை 3, புனித தோமா திருநாள் – ‘இந்திய கிறிஸ்தவ நாள்’

 

இந்தியாவில், கிறிஸ்தவ மறையானது, தொன்றுதொட்டு வளர்ந்துவரும் ஒரு மதம் என்பதையும், அது, இந்நாட்டில், ஒரு வெளிநாட்டு மதம் அல்ல என்பதையும் உணர்த்தும், இந்திய கிறிஸ்தவ நாள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 3 இச்சனிக்கிழமை, திருத்தூதரான புனித தோமா திருநாள் சிறப்பிக்கப்படும் வேளையில், அதனை, ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ என்று இணைந்து கொண்டாட, இந்தியாவின் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகள் முடிவெடுத்துள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்தியாவில், கிறிஸ்தவ மறையானது, தொன்றுதொட்டு வளர்ந்துவரும் ஒரு மதம் என்பதையும், அது, இந்நாட்டில், ஒரு வெளிநாட்டு மதம் அல்ல என்பதையும் உணர்த்த, இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பாபு ஜோசப் அவர்கள் கூறினார்.

கி.பி. 52ம் ஆண்டில், இந்திய மண்ணில் காலடி வைத்து, 72ம் ஆண்டு முடிய இந்தியாவில் கிறிஸ்துவத்தை விதைத்து வளர்ந்துவந்த திருத்தூதரான புனித தோமா அவர்களின் திருநாள், இவ்வாண்டு முதல்முறையாக ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ என்று கொண்டாடப்படுகிறது என்பதை அருள்பணி ஜோசப் அவர்கள் கூறினார்.

2021ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு முடிய 10 ஆண்டுகள், இந்திய கிறிஸ்தவத்தைக் கொண்டாடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்றும், இயேசு கிறிஸ்து இறையரசை அறிவித்ததன் 2000மாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், இந்தக் கொண்டாட்டங்கள் அமையும் என்றும், அருள்பணி ஜோசப் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த பத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, யுனெஸ்கோ, இந்தியாவின் மிகப் பழமையான ஆலயங்களை, கலாச்சாரக் கருவூலங்களாக அறிவிக்கவேண்டும் என்றும், இந்தியக் கலாச்சாரம், வரலாறு ஆகிய தளங்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பை மக்கள் உணரவேண்டும் என்றும், அருள்பணி ஜோசப் அவர்கள் விண்ணப்பித்தார்.


திருத்தந்தையுடன் பூர்வீகக் குடிமக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு

 


கனடா ஆயர்கள் : பூர்வீகக் குடிமக்களும், கனடா திருஅவையும், அமைதி, மற்றும் இணக்கம் நிறைந்த வருங்காலத்தை பகிர்வதற்கு உதவும் சந்திப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனடா நாட்டு, பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று, இவ்வாண்டு டிசம்பர் 17ம் தேதி முதல், 20ம் தேதி முடிய, திருத்தந்தையைச் சந்திக்கவிருப்பது, கனடா திருஅவைக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் இடையே நிலவும் உறவில் நல்லதொரு இணக்கத்தை உருவாக்குமென்ற நம்பிக்கையை, அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூர்வீகக் குடிமக்களும், கனடா திருஅவையும், அமைதி, மற்றும் இணக்கம் நிறைந்த வருங்காலத்தை பகிர்வதற்கு இந்த சந்திப்பு உதவும் என்றும் திருத்தந்தையுடன் பூர்வீகக்குடிமக்கள் கொள்ளும் சந்திப்பு, கலந்துரையாடல், மற்றும் குணப்படுத்தலை வளர்க்கும் சந்திப்பாக அமையும் என்றும், கனடா ஆயர்கள், மேலும் கூறியுள்ளனர்.

கனடாவின் Kamloops என்னுமிடத்திலுள்ள பூர்வீகக்குடிமக்களின் குழந்தைகளுக்குரிய தங்கும் விடுதியில், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி, பூர்வீகக்குடிமக்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்திருந்த அந்நாட்டு ஆயர்கள்,  பூர்வீகக்குடிமக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து, திருத்தந்தையை, இவ்வாண்டு இறுதியில் சந்தித்து, கலந்துரையாட உள்ளனர்.

கனடா நாட்டில், குழந்தைகள் தங்கும் விடுதியின் நிலத்தில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியிடப்பட்டவுடன், ஜூன் 6ம் தேதி, தன் நண்பகல் மூவேளை செப உரையில், ஆழ்ந்த அதிர்ச்சியையும், கனடா மக்களுடன் நெருக்கத்தையும், பூர்வீகக் குடிமக்களுடன் ஒருமைப்பாட்டையும், அறிவித்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 20ம் தேதி முடிய, திருத்தந்தையுடன் திட்டமிடப்பட்டுள்ள இச்சந்திப்பில், பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகள், நாட்டு அறிஞர்கள் குழுவின் பிரதிநிதிகள், பூர்வீகக் குடிமக்களின் குழந்தைகள் தங்கும் விடுதியில் பயின்றோரின் பிரதிநிதிகள், நாட்டின் இளையோர் பிரதிநிதிகள், ஆயர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...