Saturday, 4 July 2020

புதைக்கப்பட்ட தமிழர்கள் மறைக்கப்பட்ட உண்மை.. ஜப்பானின் கொடூரம்... | Deat...

திருத்தந்தை: குடும்பங்கள், அன்பு, மதிப்பு, தோழமையைப் பெற்றிட...

1580292474685.jpg

இன்றையக் குடும்பங்கள், அன்பு, மதிப்பு, மற்றும், வழிகாட்டல் ஆகியவற்றின் தோழமையை, குறிப்பாக, அவை, அரசிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றிடுமாறு இந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்


மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இன்றையக் குடும்பங்கள், அன்பு, மதிப்பு, மற்றும், வழிகாட்டல் ஆகியவற்றின் தோழமையைப் பெற்றிட இந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இன்றையக் குடும்பங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, கடவுளை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.
வாழ்வில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மாற்றங்களால், பெற்றோர், சிலவேளைகளில் தங்கள் பிள்ளைகளுடன் விளையாட மறந்துவிடுகின்றனர் என்றும், இத்தகைய இன்னல்களிலிருந்து குடும்பங்கள் மீள்வதற்குரிய வழிகளைக் காண, திருஅவை, குடும்பங்களுக்கு உதவவேண்டும் என்றும், இச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை.
பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குடும்பங்கள், அவற்றை மேற்கொள்வதற்கு, குடும்பங்களின் அருகாமையில் இருந்து, திருஅவை, அவற்றை ஊக்குவிக்கவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றையக் குடும்பங்கள், அன்பு, மதிப்பு, மற்றும், வழிகாட்டல் ஆகியவற்றின் தோழமையை, குறிப்பாக, அரசிடமிருந்து அவை பாதுகாப்பைப் பெற்றிடவேண்டும் என்று, இந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த காணொளிச் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களோடு தொடர்புடைய கருத்துக்களுக்காக, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தையர் செபக் கருத்து ஒன்றை வெளியிட்டு, அக்கருத்துக்காகச் செபிக்குமாறு, உலக கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
திருத்தந்தையரின் செபக்கருத்தை, இயேசு சபையினர் நடத்தும், உலகளாவிய திருத்தூது செப வலைத்தள அமைப்பு, ‘திருத்தந்தையின் காணொளி’ என்ற ஊடகவடிவில், ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

திருத்தந்தையின் டுவிட்டர் - கிறிஸ்தவ மகிழ்வு என்பது...

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பு பற்றிய நற்செய்திக்குச் செவிமடுப்பதிலிருந்தும், அவற்றை ஏற்பதிலிருந்தும் கிடைப்பது, கிறிஸ்தவ மகிழ்வு - திருத்தந்தை பிரான்சிஸ்


மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பு பற்றிய நற்செய்திக்குச் செவிமடுப்பதிலிருந்தும், அவற்றை ஏற்பதிலிருந்தும் கிடைப்பது, கிறிஸ்தவ மகிழ்வு. இச்செய்தியை நம்புகின்ற எவரும், இறைத்தந்தையாம் கடவுளின் அன்பிலிருந்து வாழ்வு பிறக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 03, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
நிதி சார்ந்த தகவல் அமைப்பு
மேலும், AIF எனப்படும் வத்திக்கானின் நிதி சார்ந்த தகவல் அமைப்பு, ஜூலை 03, இவ்வெள்ளியன்று, 2019ம் ஆண்டின் அறிக்கை மற்றும், அண்மையில் அந்த அமைப்பின் வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, இந்த அமைப்பின் தலைவர் Carmelo Barbagallo அவர்கள், AIF அமைப்பு, 2010ம் ஆண்டின் இறுதியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டு, 2011ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்கியது என்றும், படிப்படியாக இவ்வமைப்பின் பணிகள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும் கூறினார்.
பயங்கரவாதத்திற்குப் பணம் செலவழிக்கப்படுவது, மற்றும், சட்டத்திற்குப்புறம்பே பணப்பரிமாற்றம் நடைபெறுவது ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது என்றும், Barbagallo அவர்கள் அறிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், இந்த அமைப்பிற்குத் தான் தலைவராக நியமிக்கப்பட்டது முதல், இவ்வாண்டில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் எடுத்துரைத்த Barbagallo அவர்கள், வத்திக்கான் மற்றும், திருப்பீடத்தின் நிதி பட்டுவாடா குறித்த ஆய்வு, வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.
கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த இந்த ஆய்வு, கோவிட்-19 கொள்ளைநோயால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் Barbagallo அவர்கள் அறிவித்தார்.

வளரும் நாடுகளின் கடன் இரத்துச்செய்யப்பட திருப்பீடம் அழைப்பு

கொலம்பியாவில் கோவிட்-19ன் எதிர்மறை தாக்கம்

கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், அதிகமான நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது, இது, உலகப் பொருளாதாரத்தின் சமநிலைக்குப் பெரும் சவாலாக உள்ளது - பேராயர் யுர்க்கோவிச்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளைநோயால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே  விடுத்துள்ள அழைப்பை, மீண்டும், ஜூலை 02, இவ்வியாழனன்று புதுப்பித்துள்ளது திருப்பீடம்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், UNCTAD எனப்படும் ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு நடத்திய, 67வது அமர்வில், ஜூலை 2, இவ்வியாழனன்று, அறிக்கை சமர்ப்பித்த வேளையில், ஏழை நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், அதிகமான நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்றும், இது, உலகப் பொருளாதாரத்தின் சமநிலைக்குப் பெரும் சவாலாக உள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.   
கொரோனா கொள்ளைநோயால், பல தொழிற்சாலைகள் மற்றும், உற்பத்தி வசதிகள், கட்டாயமாய் மூடப்பட்டிருந்த நாளிலிருந்து, சரக்குகளின் விநியோகமும் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்துள்ளது என்றும், இதனால் மக்கள்  மத்தியில் பணப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது என்றும், பேராயர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் உருவாகியுள்ள நிச்சயமற்றதன்மையால், பெரிய கூட்டுறவு அமைப்புகள், நீண்டகால முதலீடுகளைப் போடுவதற்குத் தயங்குகின்றன என்றும், தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாய்ப் பாதித்துள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.
அண்மை ஆண்டுகளாக வறிய நாடுகள் சேர்த்துவைத்துள்ள வெளிநாட்டு கடன் சுமைகள் நீக்கப்படுவதன் வழியாக, அந்நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் கடுந்துன்பங்களை அகற்றமுடியும் என்று கூறிய பேராயர் .யுர்க்கோவிச் அவர்கள், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படுமாறு உலகளாவிய சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்திய சமுதாயம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள..

இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராட்டம்

இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினத்தைக் கண்டுபிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை, 4,00,600 பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டுள்ளனர் – ஐ.நா. அறிக்கை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்திய சமுதாயம் பெண்களையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் மதிப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்று, Maher அமைப்பின் இயக்குனரான அருள்சகோதரி லூசி குரியன் அவர்கள் கூறியுள்ளார்.
கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்க்கென, Maher என்ற அமைப்பை உருவாக்கி நடத்திவரும் அருள்சகோதரி குரியன் அவர்கள், இந்தியாவில், பாலியல் பாகுபாடு காரணமாக, கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஏறத்தாழ 4 கோடியே 58 இலட்சம் பெண்கள் காணாமல்போயுள்ளனர் என்று கூறும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“2020ம் ஆண்டின் உலக மக்கள் தொகை நிலவரம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மக்கள்தொகை நிதி அமைப்பு (UNFPA), இந்த எண்ணிக்கை, உலக அளவில் காணாமல்போயுள்ள பெண்களின் எண்ணிக்கையில் 32 விழுக்காடு என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, Chavanod திருச்சிலுவை சபையைச் சார்ந்த, அருள்சகோதரி குரியன் அவர்கள், இந்தியாவில் பெண்களின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதும், அது குறித்து மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவருவதும், இந்திய அரசு, மற்றும், பொதுமக்களின் கடமை என்பதை வலியுறுத்தினார்.
இந்திய சமுதாயத்தில் மகன்களே குடும்பத்திற்கு வருமானம் கொணர்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது என்றும், வரதட்சணை சுமையால் மகள்கள் வருங்காலத்தில் கடனாளியாக்கிவிடுவார்கள் என, பல பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகின்றது என்றும் அச்சகோதரி கூறினார்.
இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினத்தைக் கண்டுபிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், குடும்பங்களில் மகன்களே அதிகம் விரும்பப்படுவதால், 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை, 4,00,600 பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்பட்டுள்ளனர் என்று, ஓர் அறிக்கை கூறுகிறது. (UCAN)

இரந்துண்பவரும் தங்க நாணயமும்

இரந்துண்பவர் ஒருவர்

இலட்சியத்தை நோக்கமாகக்கொண்டு, அறிவுப்பூர்வமாக வளர்த்துக்கொள்வது, ஆசை. தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு, அழிவை நோக்கி இட்டுச்செல்வது, பேராசை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப்பிடித்த தலைமுடியோடு, இரந்துண்டு வாழ்ந்த ஒருவர், உணவுக்காக, வீடு வீடாக அலைந்தார். ஒரு பழைய கோணிப்பையே அவரது உடமையாக இருந்தது. ஒரு வீட்டின் முன் போய் நின்று எதுவும் கிடைக்காததால், "வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்...", என்று கூறிவிட்டுச் சென்றார். இன்னொரு வீட்டுக்குப் போனபோதும் உணவு கிடைக்கவில்லை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல், அவற்றை இரண்டு மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும், திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்!" என்று அந்த இரந்துண்பவர் சொன்னதும், தேவதை ஒன்று, அவர்முன் தோன்றியது. "நான் உனக்கு உதவப்போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள் தங்கநாணயங்களைப் போடுகிறேன், உனக்கு எவ்வளவு வேண்டுமோ, பெற்றுக்கொள்", என்றது தேவதை. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது தேவதை சொல்லியது, "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால், தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை...", என்று.
இரந்துண்பவர், மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். தேவதை மீண்டும் எச்சரித்துவிட்டு, பின்னர், இரந்துண்பவரின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும், தேவதை, தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது தேவதை. "போதாது. இன்னும் வேண்டும்" என்றார் இரந்துண்பவர். தேவதை, மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது" என்று சொன்னது. இரந்துண்பவரோ, "இன்னும் கொஞ்சம் வேண்டும்" என்று கேட்டார். தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, "உன் கோணிப்பை கிழியப்போகிறது...", என்று எச்சரித்தது. இரந்துண்பவர் மறுத்தார். "இல்லை, நீ இன்னும் கொஞ்சம் நாணயங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்" என அவர் சொன்ன மறுவினாடியே கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் அனைத்தும் கீழே விழுந்து, தூசியாயின. தேவதையும் மறைந்திட, இரந்துண்பவர் திகைத்து நின்றார்.

உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.அவையின் அழைப்பு

சிரியாவில் தாக்குதலுக்கு உள்ளான இடம்

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடவேண்டிய இவ்வேளையில், உலகின் பல நாடுகளில் நிகழும் ஏனைய மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - ஐ.நா.நிறுவனத்தின் பாதுகாப்பு அவை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடவேண்டிய இவ்வேளையில், உலகின் பல நாடுகளில் நிகழும் ஏனைய மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று, ஐ.நா.நிறுவனத்தின் பாதுகாப்பு அவை, ஜூலை 1, இப்புதனன்று அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கிருமி உலகளாவிய பரவலாக மாறிவந்ததையடுத்து, உலகெங்கும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, இவ்வாண்டு மார்ச் 23ம் தேதி ஐ.நா. அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் விடுத்திருந்த அழைப்பை, ஐ.நா.வின் பாதுகாப்பு அவை தன் தீர்மான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது மோதல்கள் இடம்பெற்றுவரும் நாடுகளில், குறைந்தது, அடுத்த 90 நாள்கள் போர்நிறுத்தம் ஏற்பட்டால், கோவிட் 19 கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வழங்க இயலும் என்று, பாதுகாப்பு அவையின் தீர்மான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களும் ஒரே மனதாய் எடுத்துள்ள இந்த தீர்மானத்தைப் பாராட்டியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், இத்தீர்மானம், ஏக மனதாக எடுக்கப்பட்டிருப்பது, மோதலில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான அடையாளமாக விளங்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
ஜூன் 30 இச்செவ்வாயன்று உலக நலவாழ்வு நிறுவனம் WHO வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, உலகெங்கும் 10,185,374 பேர் இந்நோயினால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 503,862 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நோய்தொற்று அதிக அளவில் உள்ள அமெரிக்க நாடுகளில், 5,136,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 247,129 உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
 

மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

  மனிதகுலத்தின் நலனுக்கு எண்ணிமத் தொழில்நுட்பங்கள் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (IIAS) உறுப்பினர்கள...