Wednesday, 6 July 2011

Catholic News - hottest and latest - 04 July 2011

1. உண்மை ஒளிரவேண்டும் என இவ்வுலகு எதிர்பார்க்கிறது என்கிறார் திருத்தந்தை

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் திருத்தந்தையின் பணிகளுக்கென க‌ர்தினால்களின் பங்களிப்பு

4. இந்தியத் தலத்திருச்சபையின் கல்வி,மருத்துவம் மற்றும் நலஆதரவுப்பணிகளில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும்
   வழிந்தோடுகிறது கர்தினால்

5. சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியினை கட்டியெழுப்ப இந்திய ஹைகமிஷனர் உதவி

6. குஜராத் படுகொலை தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து தலத்திருச்சபை கண்டனம்

7. வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு ஐரோப்பிய ஐக்கிய அவை உணவு உதவி

----------------------------------------------------------------------------------------------------------------

1. உண்மை ஒளிரவேண்டும் என இவ்வுலகு எதிர்பார்க்கிறது என்கிறார் திருத்தந்தை

ஜூலை 04, 2011.  தற்பெருமையும் சுயநலமும் வெற்றிகொள்ளப்பட்டு, பிறரன்பு என்பது செயல்பாடுடையதாய் மாறி, பொய்களால் மறைக்கப்படாத உண்மை இவ்வுலகில் ஒளிரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி அவர் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சி ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாப்பிறை, கிறிஸ்துவிலே உண்மையும் அன்பும் ஒன்று சேர்ந்து வருகின்றன, அதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாகவும் இருக்கிறது என்றார்.
உண்மையின் பிரசன்னத்தைக் கொண்டிராத அன்பு, பார்வை ஒளியிழந்ததாகவும், அன்பில்லாத உண்மை, ஒலிக்கும் வெண்கலம் போன்றதாயும் இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
ஒவ்வொருவரும் மேலும் மனிதாபிமானம் உடையவராக வாழவேண்டுமெனில், உண்மை மற்றும் அன்பின் அழகு நம் இதயத்தின் ஆழத்தைச் சென்று தட்ட வேண்டும் எனவும் உரைத்த அவர், கலைஞர்கள் ஒரு நாளும் உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து தங்கள் கலைப்படைப்புகளைப் பிரிக்கக்கூடாது எனவும், உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து அழகைப் பிரிக்கவும் முயலக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி துவக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, திருப்பீடத்தின் கலாச்சார அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை 04, 2011.  இன்றைய உலகின் அநீதி, ஏழ்மை மற்றும் துன்பங்களுக்கான பதில்கள் இறையன்பில் காணக்கிடக்கின்றன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்ற இஞ்ஞாயிறு நற்்செய்தி வாசக வார்த்தைகளை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை, அன்று மக்கள் கூட்டத்தை நோக்கி கருணைப் பார்வையுடன் செயல்பட்ட இயேசு இன்றும் இவ்வுலகை நோக்கி அப்பார்வையைத் தொடர்கிறார், ஏனெனில் பல்வேறு துன்ப நிலைகளால் அழுத்தப்பட்டிருக்கும் மக்கள், தங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இழந்து நிற்கிறார்கள் என்றார்.
ஏழை நாடுகளில் பெருமெண்ணிக்கையில் வாழும் ஏழைகளையும், பணக்கார நாடுகளில் மனநிறைவின்றி வாழும் மக்களையும், பல நாடுகளில் துன்புறும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளையும் இம்மூவேளை செப உரையின்போது நினைவு கூர்ந்தார் திருத்தந்தை. இறைவன் அனைவருக்கும் இளைப்பாறுதல் வழங்குகிறார், ஆனால் அதற்கு முன் நிபந்தனையாக, 'என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதையும் எடுத்துரைக்கிறார் இயேசு என்ற திருத்தந்தை, இயேசுவின் நுகம் என்பது அன்பின் கட்டளை எனவும் எடுத்துரைத்தார். அதிகாரத்திற்கென வன்முறையைக் கைக்கொள்வதையும், எவ்விலை கொடுத்தும் வெற்றியைப் பெற முயல்வதையும் மனித குலம் கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கான மதிப்புடன் வன்முறையற்ற வழிகளைக் கைகொள்வதே நல்லதொரு வருங்காலத்திற்கு வழிவகுக்கும் என மேலும் கூறினார் பாப்பிறை.

3. உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் திருத்தந்தையின் பணிகளுக்கென க‌ர்தினால்களின் பங்களிப்பு

ஜூலை 04, 2011.  உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் பணிகளுக்கான‌த் தங்கள் பங்களிப்பாக 72,000 டாலர்களை, திருத்தந்தையின் 60வது குருத்துவ விழாவை முன்னிட்டு திருத்தந்தையிடம் வழங்கினர் கர்தினால்கள்.
கடந்த புதனன்று புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்ட திருத்தந்தையின் 60வது குருத்துவ திருநிலைப்பாட்டை ஒட்டி வெள்ளியன்று திருத்தந்தையுடன் இணைந்து மதிய உணவருந்திய கர்தினால்கள், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கானத் தங்கள் பங்களிப்பாக இத்தொகையை அளித்தனர்.
உரோம் நகரின் ஏழைகளுக்காகவும், அந்நகரில் வாழும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளிடையேயானப் பணிகளுக்கெனவும் இதனைத் திருத்தந்தையிடம் வழங்குவதாக அறிவித்தார் கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
புனித பேதுரு விழாவன்று கர்தினால்கள் அவை, உரோம் நகரின் 200 ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியதையும் குறிப்பிட்டார் கர்தினால் சொதானோ. உரோம் நகரிலும் ஏழ்மை அதிகரித்து வரும் இன்றையச் சூழலில், எக்காலத்தையும் விட தற்போது திருச்சபை, பிறரன்பின் திருச்சபையாக வாழ ஆவல் கொள்கிறது என மேலும் உரைத்தார் கர்தினால்.

4. இந்தியத் தலத்திருச்சபையின் கல்வி,மருத்துவம் மற்றும் நலஆதரவுப்பணிகளில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும்
   வழிந்தோடுகிறது - கர்தினால்        

ஜூலை 04, 2011.  கல்வி, மருத்துவம் மற்றும் நலஆதரவுத் துறைகளில் இந்திய தலத்திருச்சபை கொண்டிருக்கும் மறைப்பணி ஈடுபாட்டில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும் வழிந்தோடுகின்றது என்றார் இந்தியாவின் பம்பாய் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
இயேசுவின் திரு இதய விழாவையொட்டி செய்தி வழங்கிய கர்தினால், நமக்கான இயேசுவின் உயரிய அன்பு குறித்து நினைக்கும் நாம், நற்செய்தி மதிப்பீடுகளான நீதி, அமைதி மற்றும் உண்மைக்கு நம்மைத் திறக்கவேண்டும் என்பது குறித்து அதன் வழி நினைவூட்டப்படுகிறோம் என்றார்.
ஏறத்தாழ 25,000 கல்வி நிறுவனங்கள், 746 மருத்துவமனைகள், 2547 மருந்தகங்கள் மற்றும் பல்வேறு மருத்துவமையங்களை நடத்திவரும் இந்தியத் திருச்சபை, தன் அன்பு நடவடிக்கைகள் மூலம் உண்மையின் அழகைப் பரப்பி வருகிறது என மேலும் கூறினார் கர்தினால் கிராசியாஸ்.

5. சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியினை கட்டியெழுப்ப இந்திய ஹைகமிஷனர் உதவி

2004ம் ஆண்டின் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் Payagala பெண்கள் பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கில் 21 இலட்சத்து 80, 000 ரூபாயை கர்தினால் மால்கம் இரஞ்சித்திடம் வழங்கியுள்ளார் அந்நாட்டிற்கான இந்திய ஹைகமிஷனர்.
Payagalaவின் Holy Angel பெண்கள் பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்ப உதவிகள் வழங்கப்படவேண்டும் என கொழும்பு கர்தினால் விண்ணப்பம் விடுத்ததைத் தொடர்ந்து, இதற்கு இந்நிதி உதவியை வழங்கியுள்ளார் இந்திய ஹைகமிஷனர் Ashok Kantha.

6. குஜராத் படுகொலை தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து தலத்திருச்சபை கண்டனம்

ஜூலை 04, 2011.  குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏறத்தாழ 2000 இசுலாமியர்கள் கொல்லப்பட்டது தொடர்புடைய காவல்துறை ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என மாநில அரசு தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது, அநீதி இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடுகின்றது என்றார் மனித உரிமைகளுக்காக உழைக்கும் இந்திய இயேசுசபை குரு ஒருவர்.
எந்த ஓர் ஆவணமும் ஐந்தாண்டுகளுக்கே பாதுகாக்கப்படும் அதன் பின்னர் அழிக்கப்பட்டுவிடும் என அரசு தரப்பில் இந்த செயல்பாடு நியாயப்படுத்தப்பட்ட போதிலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார் ஆஹமதாபாத்தில் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான மையத்தை நடத்தி வரும் இயேசு சபை குரு செத்ரிக் பிரகாஷ்.
இப்படுகொலைகள் இடம்பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகியும்  பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதி தேடிக் காத்திருக்கின்றார்கள் என்ற கவலையை வெளியிட்ட குரு பிரகாஷ், தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்குத் தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட அனுமதிக்கப்பட்டால், நீதி என்பது கிட்டவே வழி இல்லை என்றார்.

7. வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு ஐரோப்பிய ஐக்கிய அவை உணவு உதவி

ஜூலை 04, 2011.  வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு 1 கோடி யூரோ உணவு உதவிகளை வழங்குவதாக இத்திங்களன்று அறிவித்தது ஐரோப்பிய ஐக்கிய அவை.
போதிய உணவின்மையால் துன்புறும் ஏறத்தாழ ஆறு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற இந்த உதவியை வட கொரியாவிற்கு வழங்குவதாகக் கூறும் ஐரோப்பிய ஐக்கிய அவை, இதுவரை வடகொரிய அரசு தன் மக்களில் மூன்றில் இரு பகுதியினருக்கு வழங்கி வந்த உணவு உதவிகள் 60 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த உணவு உதவி, WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது ஐரோப்பிய ஐக்கிய அவை.

Monday, 4 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 02 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 02 July 2011: "1. திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் 2. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டி..."

Catholic News - hottest and latest - 02 July 2011

1.   திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

2. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவு பட்டியல்

3. நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு லாகோஸ் கர்தினால் எதிர்ப்பு

4. இஸ்பெயினில் மனித வாழ்வை ஆதரித்து செப வழிபாடுகள்

5. நற்செய்தி அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு

6. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, ஐ.நா. அறிக்கை

7. இலங்கை 'போர்க்குற்றம்' -  நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

8. உலகில் சுமார் 260 கோடிப் பேருக்குக் கழிப்பறைகள் தேவை

----------------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

ஜூலை02,2011. கத்தோலிக்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதன்மூலம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதியான விசுவாசப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒரு பணியில், முதலில் பெற்றோர் விசுவாசத்திற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, பிள்ளைகளை வளர்ப்பதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டு பெற்றோர் பயப்படக் கூடாது என்று கூறினார்.
இவ்வேளைகளில் முழு கிறிஸ்தவ சமூகமும் அவர்களோடு இருக்கின்றது என்றுரைத்த அவர், திருவழிபாடுகளில், குறிப்பாகத்  திருநற்கருணையில் பெற்றோர் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி வழங்கும் முக்கிய பொறுப்பு குடும்பங்களுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.
இத்தாலியின் Altamura-Gravina-Acquaviva delle Fonti மறைமாவட்டத்தின் சுமார் ஏழாயிரம் பேரை வத்திக்கானில் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை, திருச்சபை என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தனக்கு மட்டுமே வாழ்தல், நுகர்வுத் தன்மை, பொறுப்புக்களிலிருந்து விலகியிருக்கும் போக்கு போன்ற இக்காலத்திய போக்குகள், பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன, ஆனால் கிறிஸ்தவச் சமூகங்கள் எப்போதும் தகுந்த விசுவாசப் பாதைகளைத் தேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.

2. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவு பட்டியல்

ஜூலை02,2011. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவில், செலவைவிட வரவு ஏறக்குறைய ஒரு கோடி யூரோக்கள் அதிகம் இருந்ததாக இச்சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருப்பீட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பீட நிர்வாகம் மற்றும் வரவு செலவுக்குப் பொறுப்பான கர்தினால்கள் அவை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் கடந்த மூன்று நாட்களாகக் கூட்டம் நடத்திய பின்னர் இவ்வறிக்கையை வெளியிட்டது.
2010ல் வரவு 245,195,561 யூரோக்கள் ஆகவும் செலவு 235,347,437 யூரோக்கள் ஆகவும் இருந்து 9,848,124 யூரோக்கள் மீதமாக அவ்வரவு செலவு பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போலவே, 2010ம் ஆண்டிலும் இலாபம் காட்டியுள்ள திருப்பீடம், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், அகிலத் திருச்சபையில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்கு உதவுதல் போன்றவைகளுக்கே முக்கியமாகச் செலவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது.
2010, டிசம்பர் 31ம் தேதியோடு திருப்பீடத்தில் பணியாற்றியோரின் எண்ணிக்கை 2806 ஆகவும் இது 2009ல் 2762 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
அதேசமயம், வத்திக்கான் நகர நிர்வாகத்தின் பணியாளர்கள் 2010, டிசம்பர் 31ம் தேதியோடு 1876 ஆகவும் ஆனால் அவ்வெண்ணிக்கை 2009ல் 1891 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
2010ல் வத்திக்கான் அருங்காட்சியத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது இந்த இலாபத்திற்கு ஒரு காரணம் எனவும், இந்தப் பார்வையாளர்களுக்கு இந்தக் கர்தினால்கள் அவை தனது நன்றியையும் தெரிவித்துள்ளது. 

3. நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு லாகோஸ் கர்தினால் எதிர்ப்பு

ஜூலை02,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு மத்திய வங்கி ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Anthony Olubunmi Okogie.
நைஜீரியாவில் இசுலாமிய வங்கித் தொடங்கப்படுவதற்கு, மத்திய வங்கி ஆதரவு வழங்கப் பரிந்துரைக்கும் நடுவண் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த லாகோஸ் பேராயர் கர்தினால் Okogie, இந்நடவடிக்கை அந்நாட்டை இசுலாமிய ஆட்சியின்கீழ் வைத்துவிடும் என்று எச்சரித்தார்.
இசுலாமிய வங்கி அமைப்பைப் புகுத்துவது, அந்நாட்டில் இசுலாம் தீவிரவாதிகளால் ஏற்கனவே நாடு எதிர்நோக்கும் சமயப் பதட்டநிலை மேலும் தீவிரமடைய வழி செய்யும் என்றும் கர்தினால் கூறினார்.

4. இஸ்பெயினில் மனித வாழ்வை ஆதரித்து செப வழிபாடுகள்

ஜூலை02,2011. இஸ்பெயினில் அமலில் இருக்கும் கருக்கலைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்து அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செப வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இஸ்பெயினில் கருக்கலைப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஜூலை 5ம் தேதியோடு ஓராண்டு ஆகும் வேளை, இச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டு மனித வாழ்வை ஆதரிப்பதற்கானப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக வழிபாடுகள் நடக்கின்றன.
இஸ்பெயினின் 36 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வெள்ளியன்று தொடங்கப்பட்டுள்ள செப வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வழிபாடுகள் 5ம் தேதி வரை நடைபெறும்.
இஸ்பெயினில் 2010ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கருக்கலைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

5. நற்செய்தி அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு

ஜூலை02,2011. கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்தல் மற்றும் தொடக்ககாலத் திருச்சபையை மையமாக வைத்து நற்செய்தி அறிவிப்புக்கான வழிகாட்டி விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகக் கிறிஸ்தவ சபைகள் மன்றம், உலக லூத்தரன் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து, பலசமயங்கள் கொண்ட உலகில் கிறிஸ்தவ சாட்சியம் என்ற தலைப்பில் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் இவ்விசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாற்பதுக்கும் மேற்பட்ட வல்லுனர்கள் ஐந்து ஆண்டுகள் செய்த பணியின் பயனாக இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
உலகில் கிறிஸ்தவர்கள் சாட்சியாக வாழும் முறைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பெரிய அவைகளில் கத்தோலிக்க, ஆங்லிக்கன், ஆர்த்தடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபை, இவாஞ்சலிக்கல், பெந்தகோஸ்து, இன்னும் பிற தனிப்பட்ட சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் உலகின் சுமார் 200 கோடிப்பேர் அதாவது உலகக் கிறிஸ்தவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் உறுப்பினர்களாக உள்ளனர். 

6. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, ஐ.நா. அறிக்கை

ஜூலை02,2011. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக UNWTO என்ற ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்தது.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவில் இந்நிலை மந்தமாகக் காணப்பட்டாலும் இவ்வாண்டின் இறுதியில் இப்பகுதிகளிலும் சுற்றுலாக்கள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டில் இதே காலத்தில் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக UNWTO கூறியது.  
இந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 26 கோடியே 80 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் சுமார் 25 கோடியே 60 இலட்சம் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.
தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சுற்றுலாக்கள் அதிகரித்துள்ளன.

7. இலங்கை 'போர்க்குற்றம்' -  நவநீதம்பிள்ளை எச்சரிக்கை
   
ஜூலை02,2011. இலங்கை போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் தாமதம் செய்யக்கூடாது, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்த இலங்கை தவறினால் சர்வதேச நடவடிக்கைக்கு அது வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களைச் சுட்டுக்கொன்றது மற்றும் பிற தாக்குதல் சம்பவங்கள் குறித்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,  இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகள் மத்தியில் மிக அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து தெரிவித்த நவநீதம்பிள்ளை இவ்வாறு  சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விசாரணை ஒரு காலவரம்பற்ற, முடிவில்லாத வழிமுறையாக இருக்கக்கூடாது என்று கூறிய நவநீதம் பிள்ளை,  இலங்கை அரசு முன்பு நடத்திய ஒரு விசாரணையில், அதற்குத் தரப்பட்ட பணியை முடிக்க தவறிவிட்டது, எந்த ஓர் அறிக்கையையும் வெளியிடவில்லை, அந்த விசாரணையின் விளைவாக ஒருவர்கூட நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை என்றார்.
அதே போல் இப்போதும் நடந்தால், சர்வதேச சமூகம், மேல் நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது என்று கூறிய நவநீதம் பிள்ளை,  ஐ.நா மனித உரிமை அவை இந்த விடயத்தை மேலும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

8. உலகில் சுமார் 260 கோடிப் பேருக்குக் கழிப்பறைகள் தேவை

ஜூலை02,2011. உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் சுமார் 260 கோடிப் பேர் சரியான கழிப்பறை வசதிகளின்றி வாழ்கின்றனர் என்று ஐ.நா.கூறியது.
தகுந்த கழிப்பறை வசதிகள் இல்லாததால் வயிற்றுப்போக்கு நோய் ஏற்படுகின்றது என்றும் வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறாரின் இறப்புக்கு இரண்டாவது காரணமாக அமைவது வயிற்றுப்போக்கு என்றும் ஐ.நா.கூறியது.
மக்களுக்குப் போதுமான நலவாழ்வு வசதிகளை அமைத்துக் கொடுப்பது ஐ.நா.வின் மில்லென்யத் திட்டத்தில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 01July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 01July 2011: "1. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை 2. சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்க..."

Catholic News - hottest and latest - 01July 2011

1. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை

2. சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்கர் பேரணி

3. போலந்தில் இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க மாநாடு

4. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, உலக சாதனை படைத்துள்ளார்

5. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகம் கலைக்கப்படுவதற்கு சிறுபான்மை மதத் தலைவர்கள் எதிர்ப்பு

6. இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்டவர் குறித்த விவரங்களை ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது

7. ஆயுத‌ மோதல்களின் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை

8. உலகில் சிறந்த 10 போராட்டங்கள் பட்டியலில் உப்பு சத்தியாகிரகம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை

ஜூலை01, 2011. உலகின் ஏழை எளிய மக்களின் உண்மையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் நிறுவனங்களுடன் பணிபுரிவதற்கான அர்ப்பணத்தை மீண்டும் ஒருமுறை திருச்சபை புதுப்பிப்பதாக, இவ்வெள்ளியன்று ஐநாவின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை கூறினார்.
உரோம் நகரில் இடம்பெற்ற FAO நிறுவனத்தின் 37வது அவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 400 பிரதிநிதிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, முதலில் அந்தச் சர்வதேச நிறுவனத்தின் புதிய தலைவர் ஹோசே கிராசியானோ த சில்வாவுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இன்றைய உணவுப் பிரச்சனைகளுக்கானக் காரணமாக‌, உற்பத்திக் குறைபாடுகளைப்பற்றி மட்டும் சிந்திக்காமல், அதைவிட ஆழமாகச் சென்று ஆராயும் போது, ஏழ்மை,வளர்ச்சியற்ற நிலை மற்றும் பசிக்கு, மனிதனின் சுய‌நலப் போக்குகளே முக்கியக் காரணம் எனத் தெரிய வருகிறது என்றார்.
இலாபம் என்ற குறிக்கோளில் உயர் ஒழுக்கரீதி கொள்கைகளும் பாதுகாப்புச் சட்டங்களும் நீக்கப்பட்டு, மனிதனின் அடிப்படை உரிமையான உணவு மறுக்கப்படுவது குறித்து மனிதகுலம் எங்ஙனம் மௌனம் காக்கமுடியும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் பாப்பிறை.
சர்வதேச அளவில் இடம்பெறும் வியாபாரங்கள் குறித்த கொள்கைகள், அனைத்து மனித குலத்தின் நன்மையை கருத்தில் கொண்டதாய் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, இதன் மூலமே ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும் எனவும் அதில் FAO நிறுவனம் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
உணவு இன்மையால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதனால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் இளவயது மரணங்களும் இடம்பெறுகின்றன மற்றும் சிறிய அளவிலான உணவுக்காகக்கூட அவர்கள் சுரண்டப்படும் அபாயம் இருப்பதையும் குறிப்பிட்டு கவலையை வெளியிட்டார்.

2. சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்கர் பேரணி

ஜூலை01,2011. சீனாவில் சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஹாங்காக் முன்னாள் ஆயர் கர்தினால் ஜோசப் ஜென் தலைமையில் கத்தோலிக்கர் ஹாங்காக்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
சீனாவில் சிறையிலுள்ள பாப்பிறைக்கு விசுவாசமாயுள்ள மறைந்து வாழும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஆயர்களும் அருட்பணியாளர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பீடத்துடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இவ்வியாழனன்று திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர், ஹாங்காக்கிலுள்ள சீனாவின் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் கூடி நின்று, சீன அரசு, அருட்பணியாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
இப்பேரணி குறித்துப் பேசிய ஹாங்காக் கத்தோலிக்கப் பேச்சாளர் பாட்ரிக் பூன், சீனக் கத்தோலிக்கரின் சமய சுதந்திரம் சகித்துக்கொள்ளப்பட முடியாத வகையில் மீறப்படுவதால் தாங்கள் தெருக்களில் வந்து போராட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

3. போலந்தில் இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க மாநாடு

ஜூலை01,2011. இறைவனின் இரக்கத்தை அதிகமாக உணர்ந்து அதை நோக்கி மக்களை வழிநடத்துவதே திருச்சபையின் ஒட்டு மொத்த மறைப்பணி என்று இறைஇரக்கம் குறித்த அனைத்துலக மாநாட்டின் பொதுச் செயலர் அருட்பணி Patrice Chocholski கூறினார்.
வருகிற அக்டோபரில் போலந்தில் இடம்பெறவிருக்கின்ற இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்கம் மாநாடு குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அருட்பணி Chocholski, இம்மாநாடு, இறைஇரக்கம் நோக்கி அகிலத் திருச்சபையையும் திருப்பும் எண்ணம் கொண்டுள்ளது என்றார்.
இறைஇரக்கம் குறித்த அனைத்துலக முதல் மாநாடு உரோமையில் 2008ல் நடைபெற்றது. அதன்பின்னர் ஐந்து கண்டங்களிலும் சுமார் ஐம்பது தேசிய மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
இம்மாநாட்டு அவையின் தலைவராக ஆஸ்ட்ரியாவின் வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn இருந்து வருகிறார்.

4. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, உலக சாதனை படைத்துள்ளார்

ஜூலை01,2011. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, இத்தகைய துறவு வாழ்க்கையில் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயினில், Cistercian Buenafuente del Sistal அடைபட்ட துறவு இல்லத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிறந்த அதே நாளில் சேர்ந்த அருட்சகோதரி தெரேசா, துறவு வாழ்வில் 84 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், தற்சமயம் அச்சகோதரிக்கு வயது 103 ஆகும்.
தனது இத்தனை ஆண்டு துறவு வாழ்வு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அருட்சகோதரி தெரேசா, இவ்வாழ்க்கையில் தான் பெற்ற மிகப்பெரும் கொடை செபம் என்று தெரிவித்துள்ளார்.
வலேரியா என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்சகோதரி தெரேசா, 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி துறவு சபையில் சேர்ந்தார்.

5. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகம் கலைக்கப்படுவதற்கு சிறுபான்மை மதத் தலைவர்கள் எதிர்ப்பு

ஜூலை01,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகத்தைக் கலைத்து அதனை மாநில வாரியாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சிறுபான்மை அமைச்சகத்தை மாநில அளவுக்குக் கொண்டு செல்வது, சிறுபான்மை மதத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கும் என்று அத்தலைவர்கள் குறை கூறினர்.
அரசின் இச்செயல், சிறுபான்மை சமூகங்களின் தேசிய தனித்துவத்தை இருட்டடிப்பு செய்வதற்கான முயற்சியாக இருக்கின்றது என்று, உலக சிறுபான்மை கூட்டமைப்பு உரிமைக் குழுவின் ஜூலியஸ் சாலிக் கூறினார்.
கிறிஸ்தவர்கள், நாட்டில் தொடர்ந்து அநீதிகளையும் பாகுபாடுகளையும் காழ்ப்புணர்வுகளையும் எதிர் கொண்டு வருவதால் அவர்கள் மத்திய அரசு அளவில் தங்களது இருப்பைக் கொண்டிருப்பது மிகவும் இன்றியமையாதது என்று சாலிக் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் அரசின் அண்மைப் புள்ளி விபரங்களின்படி, நாட்டின் சுமார் 17 கோடியே 70 இலட்சம் மக்களில் 5.5 விழுக்காட்டினர் இந்துக்கள், 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

6. இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்டவர் குறித்த விவரங்களை ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது

ஜூலை01, 2011. 1988க்கும் 2011க்கும் இடைப்பட்டக் காலத்தில் மிகக்கொடுமையான முறையில் இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்ட‌ 323 பேர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது ஆசிய மனித உரிமைகள் அமைப்பு.
இல‌ங்கை காவ‌ல்துறையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் குறித்த‌ 1500 ச‌ம்ப‌வ‌ங்க‌ளைத் திர‌ட்டியுள்ள‌ ஹாங்காங்கைத் த‌லைமையிட‌மாகக் கொண்ட‌ ஆசிய‌ ம‌னித‌ உரிமைக‌ள் அவை, ம‌ன‌ம்போன‌ போக்கில் ம‌க்க‌ளைக் கைது செய்துள்ள‌ காவ‌ல்துறை, அவ‌ர்க‌ள் செய்யாத‌க் குற்ற‌த்தை அவ‌ர்க‌ளைக் கொடுமைப்ப‌டுத்தி ஒப்புக்கொள்ள‌ வைத்துள்ள‌தாக‌வும் குற்ற‌ங்சாட்டுகிற‌து.
எவ்வித‌த் த‌ண்ட‌னைப் ப‌ய‌மும் இன்றி இல‌ங்கை காவ‌ல்துறைச் செய‌ல்ப‌ட்டுள்ள‌தாக‌த் தெரிவித்தார் இம்மனித உரிமைகள் அவையின் இலங்கை இயக்குனர் பேசில் ஃபெர்னாண்டோ. கிறிஸ்தவப் படிப்பினைகளின் பின்னணியில் இது குறித்து வெளிப்படையாகப் பேசி, இத்தகைய உரிமை மீறல்களை இலங்கையிலிருந்து அகற்ற உதவுவது தலத்திருச்சபையின் கடமை என்றார் உரிமை நடவடிக்கையாளர் அருட்பணி சரத் இட்டமல்கோடா.

7. ஆயுத‌ மோதல்களின் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை

ஜூலை01, 2011. அண்மைக் காலங்களில் ஆயுத‌ மோதல்களின் போது பள்ளிகளும் மருத்துவமனைகளும் தாக்கப்படுவதும், குழந்தைகள் அச்சுறுத்தப்படுவதும் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அவைகள் நிறுத்தப்படுவதற்கான அழைப்பை முன்வைத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
குழந்தைகளுக்கான கல்வியையும் நல பராமரிப்பு நடவடிக்கைகளையும் தடைச் செய்யும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் அவர்.
சிறார்களைப் படைவீரர்களாகத் தேர்வுச் செய்வது தடைச் செய்யப்படவேண்டும் என்பதில் அரசுகள், அரசு சாரா அமைப்புகள், பொது மக்கள் குழுக்கள் ஆகியவை ஆற்றி வரும் பணிகள் பற்றியும் குறிப்பிட்ட பொதுச்செயலர் பான் கி மூன்இது குறித்தக் காலவரையறையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

8. உலகில் சிறந்த 10 போராட்டங்கள் பட்டியலில் உப்பு சத்தியாகிரகம்

ஜூலை01,2011. உலக நாடுகளில், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய பத்து போராட்டங்களில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது
அமெரிக்காவின், "டைம்ஸ்' பத்திரிகை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய  பத்துப் போராட்டங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது, அதாவது, 1930ம் ஆண்டு மார்ச்சில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகிலுள்ள, சபர்மதி ஆசிரமத்திலிருந்து, சிறிய கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார். இது தண்டி யாத்திரை என அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக, வன்முறையற்ற முறையில், காந்தியால் நடத்தப்பட்ட இந்தத் தண்டி யாத்திரை மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. இது குறித்து, "டைம்ஸ்' தெரிவித்துள்ள செய்தியில், "சத்யாகிரகா என்றால், "உண்மையான படை' என்று பொருள். பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை உடைக்க உப்பு சத்தியாகிரகம் உதவியது. இந்த வன்முறையற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எண்பதாயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்' எனத் தெரிவித்துள்ளது.

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...