Thursday 9 February 2023

அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்காதீர் தென்சூடான் ஆயர்

 


அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நம்பிக்கையால் எல்லாவிதமான தடைகளையும் கடக்கலாம் : ஆயர் Christian Carlassare

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதிக்கான  போராட்டத்தில் நம்பிக்க்கையை இழக்கவேண்டாம் என்றும் துணிவுடன் உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும்  திருத்தந்தையின் தென்சூடான் பயணம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார் ஆயர் Christian Carlassare

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்ற திருத்தந்தையின் 40ஆவது திருத்தூதுப் பயணத்தைக்  குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தென்சூடானின் Rumbek மறைமாவட்டத்தின் ஆயர்  Christian Carlassare

திருத்தந்தை பிரான்சிஸ், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் இணைந்து மேற்கொண்ட தென்சூடான்  திருத்தூதுப்பயணம் அமைதிக்கான பயணமாகவும் பெரும் ஆசீர்வாதத்தை அளித்த பரிசாகவும் அமைந்ததாக எடுத்துரைத்தார் ஆயர்  Carlassare

மக்களின் பிரச்சனைகளுக்கு அமைதியின் வழியில் ஒன்றிணைந்து செல்லும்போது வழிகிடைக்கின்றது என்று கூறியுள்ள இத்தாலியைச் சேர்ந்த ஆயர்  Carlassare அவர்கள், 2005-ஆம் ஆண்டு முதல் தென்சூடானில் வசித்து வருபவர். நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவம், இளைஞர்களுக்கான கல்வியின் அவசியம் மற்றும் அனைத்துலக ஆயுத வர்த்தகத்தின் பங்கு பற்றியும் இந்த நேர்காணலில் அவர்  எடுத்துரைத்தார்.

நிச்சயமற்ற மற்றும் விரக்தியான சூழ்நிலையின் போதும் ஒன்றிணைந்து செயல்பட்டால், அமைதி நிச்சயம் என்பதை ஊக்குவித்த திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், மக்களுக்குப் பெரும் ஆசீரையும், அமைதிக்கான வழியில் நாம் ஒன்றித்துப் பயணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை வெளிப்படுத்தியதாகவும், மதம் பிளவுபடுத்துவதற்கல்ல ஒன்றிணைப்பதற்கே என்பதை எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Carlassare

மோதலின் போது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள், மற்றும் ஏழை மக்களே என்று கூறிய ஆயர், ஒவ்வொரு தலத்திரு அவையும் இல்லமாக இருந்து அவர்களுக்கு  நம்பிக்கையையும் புதிய கண்ணோட்டத்தையும் தருவதாக எடுத்துரைத்துள்ளார். மேலும் இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பு, கல்வி போன்றவற்றை அளித்து சமூகவாழ்வில் ஈடுபாடு கொள்ள வேண்டிய அறிவுசார் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் எடுத்துரைத்தார் ஆயர் Carlassare.   

அமைதிக்கான போராட்டத்தில் நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும்  நம்பிக்கையால் எல்லாவிதமான தடைகளையும் கடக்கலாம் என்றும், துணிவுடன் உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஆயர் Carlassare


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...