Monday, 2 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 02 ஜனவரி 2012

 
1. திருத்தந்தை: நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது

2. புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செபஉரை

3. ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய சிந்தனைகள்

4. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிற கிறிஸ்தவ சபையினருக்கென புதிய அமைப்பு

5. கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி வழங்க உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி

6. ஆண்டிறுதியில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான்கு தாக்குதல்கள்

7. தென் சூடானில் அமைதி காப்புத்துருப்புகளை நிறுத்துதியுள்ளது ஐநா அமைப்பு

8. 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது

சன.02,2012. நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு, குடும்பங்களில் ஆரம்பமாகி, பின்னர் பள்ளிகளிலும், இளையோரை நெறிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களிலும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது என்ற மையக் கருத்தில் 45வது உலக அமைதி நாளுக்கென தான் ஏற்கனவே வழங்கியிருந்த செய்தியை மையப்படுத்தி, புத்தாண்டின் முதல் திருப்பலியை நிறைவேற்றுகையில் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புலர்ந்திருக்கும் புத்தாண்டின் முதல் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை, உண்மை என்பது பல வழிகளிலும் மறைக்கப்பட்டு வரும் இவ்வுலகில் இளையோருக்கு உண்மையை வழங்கும் பொறுப்பு முதியோராகிய நமக்கு அதிகம் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
அமைதியாக வாழ்வது என்பது இளையோர் சுயமாக விரும்பும் ஒரு நல்ல பண்பு; ஆயினும், உலகின் பல்வேறு எதிர்மறை சக்திகள் இளையோருக்கு அமைதிப் பாதையைக் காட்டத் தவறுவதால், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, “பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். என்ற 84வது திருப்பாடலின் வரிகளை மேற்கோள் காட்டி, வானின்று வரும் அமைதியையும், நீதியையும் இளையோரின் கவனத்திற்குக் கொண்டு வருவது நமது கடமை என்று கூறினார்.
புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் உட்பட பல திருப்பீட அதிகாரிகளும், பன்னாட்டு தூதர்களும் கலந்து கொண்டனர்.


2. புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செபஉரை 

சன.02,2012. அன்னை மரியாவின் வழியாகவும், குழந்தை இயேசுவின் முகத்திலும் இறைவனின் முகத்தைக் கண்டு, புலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டை நாம் துவக்குகிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புதிய ஆண்டின் முதல் நாளன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாண்டின் முதல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, சனவரி முதல் நாளன்று கொண்டாடப்படும் மரியா, இறைவனின் தாய் என்ற திருநாளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
45வது உலக அமைதி நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள இளையோர் குறித்த தன் கருத்துக்களை மக்களுக்கு மீண்டும் இம்மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.
கல்வி, வேலைதேடுதல், வாழ்க்கைத்துணையைத் தேர்தல், குடும்பம் அமைத்தல் என்று வாழ்வின் முக்கியமான முடிவுகளில் சரியான பாதையைத் தேடும் இளையோருக்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய அனைத்து அமைப்புக்களும் சரியான வழியைக் காட்ட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நீதியையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துவது மிகப் பெரிய சவால் என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அமைதி என்பது ஒரு நாளில் அடையக்கூடிய ஓர் இலக்கு அல்ல என்றும், தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவாலான பயணம் என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்மஸ் காலத்தில் நாம் கொண்டாடும் அமைதியின் அரசர் மற்றும், அவரது தாய் நம் உலகத் தலைவர்கள் அனைவரையும் அமைதி மற்றும் நீதியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற செபத்துடன் தன் மூவேளை உரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்தோர் அனைவருக்கும் தன் சிறப்பான ஆசீரையும் வழங்கினார்.


3. ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய சிந்தனைகள்

சன.02,2012. ஒவ்வோர் ஆண்டும் நம்மைக் கடந்து செல்லும்போது, மறுமுறை வரமுடியாத வண்ணம் காலம் கடந்துவிட்டதே என்ற கவலை நம்மைச் சூழ்ந்தாலும், கடவுளின் அன்பில் நாம் வாழ்கிறோம் என்ற உறுதி அனைத்து கவலைகளையும் போக்கிவிடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
சனிக்கிழமை மாலை “Te Deum” என்ற நன்றிப்பாடல் இசைக்கும் ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டை நடத்தியத் திருத்தந்தை, கடந்து செல்லும் ஆண்டையும், எதிர்வரும் ஆண்டையும் குறித்து தன் சிந்தனைகளை மறையுரையாக வழங்கினார்.
நிலையற்ற வாழ்வை நினைவுறுத்தும் காலத்தைப் பற்றி சிந்திக்க புதிய ஆண்டின் வாசலில் இருக்கும் நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நிலையான கடவுளின் முகத்தைக் காணும்போது, காலத்தின் நிலையாமை பற்றிய கவலைகள் நம்மிடம் இருந்து விடை பெறுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.
“Te Deum” என்று நாம் பாடும் இந்தப் பாரம்பரியப் பாடல் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்ட பல கோடி மக்கள் பல நூற்றாண்டுகளாய் பாடி வந்த ஒரு பாடல் என்பதை கூறியத் திருத்தந்தை, இப்பாடலைப் பாடுவதன் மூலம் நமது நன்றியை இறைவனுக்குக் கூறுவதுடன், நம் வாழ்வையும் அவர் பராமரிப்பில் ஒப்படைக்கிறோம் என்பதை எடுத்துரைத்தார்.


4. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிற கிறிஸ்தவ சபையினருக்கென புதிய அமைப்பு

சன.02,2012. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆங்கிலிக்கன் மற்றும் எப்பிஸ்கோபல் கிறிஸ்தவ சபையினருக்கு உதவுவதற்கென மறைமாவட்டத்தையொத்த ஓர் அமைப்பு முறையை இஞ்ஞாயிறன்று உருவாக்கியுள்ளது திருப்பீடம்.
எப்பிஸ்கோப்ப‌ல் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஆயர், குரு Jeffrey Neil Steensonஐ அவ்வ‌மைப்பினை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ராக‌வும் அறிவித்த‌ திருப்பீட‌ம், இவ்வ‌மைப்பு டெக்ச‌ஸ் மாநில‌த்திலிருந்து செய‌ல்ப‌ட்டாலும், தேசிய‌ அள‌வில் அதிகார‌த்தைக் கொண்டுள்ளதாக‌ இருக்கும் என‌வும் தெரிவித்த‌து.
க‌டந்த‌ ஆண்டு இத்த‌கைய‌ ஓர் அமைப்பு முறையை இங்கிலாந்தில் உருவாக்கிய‌ திருப்பீடம், த‌ற்போது அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டிலும் இத்த‌கைய‌ ஓர் அமைப்பை உருவாக்கியுள்ள‌த‌ன் மூல‌ம் ஆங்கிலிக்க‌ன் ம‌ற்றும் எப்போபிஸ்கோப்ப‌ல் கிறிஸ்த‌வ‌ ச‌பைக‌ளிலிருந்து க‌த்தோலிக்க‌த்தில் சேர‌ விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழி அமைத்துள்ள‌து.
த‌ற்போது இவ்வ‌மைப்பை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ராக‌ திருப்பீட‌த்தால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ குரு Neil Steenson, 2007ம் ஆண்டுவரை எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ சபையில் ஆயராகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்தார். திருமணம் புரிந்து 3 குழந்தைகளுக்குத் தந்தையான இவர், 2009ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.


5. கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி வழங்க உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி

சன.02,2012. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழக முதல்வர், எருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக, 500 பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு இந்திய கத்தோலிக்கத் திருஅவை சார்பில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களிடம் கூறினார்.
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த  தஞ்சை ஆயர், கீழ்த்திசையின் லூர்து என்ற சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி ஆலயத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்ததோடு, கிறஸ்தவர்களுக்கு மான்ய உதவி வழங்க முன் வந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வேளாங்கண்ணி பசிலிக்கா சார்பில் அனைத்து மத நல்லிணக்க விழாக்கள் இலவசத் திருமணங்கள், மற்றும் எளியோருக்கு உதவிகள் இடம்பெற உள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. ஆண்டிறுதியில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான்கு தாக்குதல்கள்

சன.02,2012. கிறிஸ்மஸ் காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற நான்கு தாக்குதல்களும், மத அடிப்படைவாதிகள் மனித மாண்பை மதிக்காதப் போக்கைக் காண்பிக்கும் அதேவேளை, அம்மாநில அரசு தன் மௌனம் மூலம் இசைவு அளிப்பதையும் வெளிப்படுத்துகிறது என்றார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.
கிறிஸ்மஸ் நாளன்று ஒரு தாக்குதலும் 28ம் தேதி மேலும் மூன்று தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது பற்றி க‌வலையை வெளியிட்ட ஜார்ஜ், 2011ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 49 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள‌ன எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளதுடன், உடலளவிலும் தாக்கியுள்ள இச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எவ்வித தண்டனையும் இன்றி தப்ப அனுமதிப்பது, மேலும் தாக்குதல்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.


7. தென் சூடானில் அமைதி காப்புத்துருப்புகளை நிறுத்துதியுள்ளது ஐநா அமைப்பு

சன.02,2012. தென் சூடானில் ஆயுதம் ஏந்திய கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் Pibor நகர் மக்களைக் காப்பாற்ற அமைதிகாப்புத் துருப்புகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அமைப்பு.
இந்நகரில் இரு பழங்குடி இனங்களிடையே இடம்பெறும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய ஏறத்தாழ 6,000 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக உரைத்த தென் சூடானுக்கான மனிதாபிமானப்பணிகளின் ஐ.நா. துணை ஒருங்கிணைப்பாளர் லிசே கிராந்தே, பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துள்ள‌தாகவும் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கட‌மை எனவும் தெரிவித்தார்.
வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், மக்களைக் காப்பாற்றுவதில் அரசுக்கு உதவவும் ஐ.நா. துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கிராந்தே.


8. 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு

சன.02,2012. இந்தியாவில் வேலை தேடுவோருக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் எனவும், புதிதாக ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பொருளாதாரச் சூழ்நிலை மோசமாக இருந்ததாலும், நிலையற்றதன்மை நிலவியதாலும், இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில், கடந்த ஆண்டில், சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது எனக் கூறும் இந்திய நிபுணர்கள், இந்த ஆண்டில் வேலை வாய்ப்புகள்  உருவாவது தொடரும் எனவும், 2012ம் ஆண்டில் புதிதாக ஐந்து இலட்சம் ஊழியர்களை  நிறுவனங்கள் வேலைக்குச் சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைகளில் மட்டும் இந்த ஆண்டில் மூன்று இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 December 2...

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 December 2...: 1. வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர் 2. திருப்பீடச் சமூகத்தொடர்பு அ...

Catholic News - hottest and latest - 30 December 2011

1. வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர்

2. திருப்பீடச் சமூகத்தொடர்பு அவைக்கு, உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களாக இரண்டு இந்தியர்கள் நியமனம்

3. 2012ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

4. 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

5. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்திற்கு வயது ஐம்பது

6. பெரு நாட்டில் 2012ம் ஆண்டு, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு

7. குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தி மத்ரித்தில் பேரணி

8. சுனாமி விவிலியப் பிரதிகள் பேரிடரைப் புரி்ந்து கொள்ள உதவுகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர்

டிச.30,2011. 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலிகள், திருவழிபாடுகள், புதன் பொது மறைபோதகங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவச நுழைவுச் சீட்டுகளை வழங்கும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 5 இலட்சம் பேர் நுழைவுச் சீட்டுகளுடன் பங்கு பெற்றனர் என்று அந்த வத்திக்கான் அமைப்பு கூறியது. எனினும், அந்நாளில் இந்தப் பேதுரு வளாகத்திலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் நின்று இத்திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் பத்து இலட்சத்துக்கு அதிகம் என்று இத்தாலிய காவல்துறை கணித்துள்ளது.
2011ம் ஆண்டில் திருத்தந்தை நடத்திய 45 புதன் பொது மறைபோதகங்களில் சுமார் நான்கு இலட்சம் பேரும்  ஞாயிறு மூவேளை செப உரைகளில் 12 இலட்சத்துக்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர் எனவும் வத்திக்கான் வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மேலும், வத்திக்கானில் திருத்தந்தை சந்தித்த சிறப்புக் குழுக்களில் சுமார் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் பேர் இருந்தனர் எனவும், திருத்தந்தை நிகழ்த்திய திருவழிபாடுகளில் சுமார் 8 இலட்சத்து 46 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர் எனவும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு கூறியது.
மொத்தத்தில், 2011ம் ஆண்டில் திருத்தந்தையைச் சந்தித்த மக்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டைவிட அதிகம் என்று கூறும் அவ்வமைப்பு, 2010ம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் பேர்  திருத்தந்தையைச் சந்தித்தனர் என்று தெரிவித்தது.


2. திருப்பீடச் சமூகத்தொடர்பு அவைக்கு, உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களாக இரண்டு இந்தியர்கள் நியமனம்

டிச.30,2011. இரண்டு இந்தியர்கள் உட்பட 9 புதிய உறுப்பினர்கள் மற்றும் 10 ஆலோசகர்களைத் திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், குரோவேஷிய கர்தினால் யோசிப் போஷானிச், திருப்பீடத்தின் புதிய நற்செய்தி அறிவிப்பு அவையின் தலைவர் பேராயர் சால்வாத்தோரே ஃபிசிக்கெல்லா உட்பட 9 பேரை உறுப்பினர்களாகத் திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் சமூகத்தொடர்புத்துறை இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை அகுஸ்தீன் சவரிமுத்து உட்பட இரண்டு குருக்கள், ஓர் அருட்சகோதரி, 5 ஆண்கள், 2 பெண்கள் என 10 பேரை ஆலோசகர்களாகவும் அந்த அவைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.
தமிழகத்தைச் சேர்ந்த இயேசு சபை அருள்தந்தை முனைவர் அகுஸ்தீன் சவரிமுத்து, பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் சமூகத்தொடர்புத்துறையில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, தற்போது அத்துறையின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.


3. 2012ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

டிச.30,2011. இலத்தீன் அமெரிக்காவுக்குத் திருப்பயணம், புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம், விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்தல், புதிய புனிதர்களை அறிவித்தல் உட்பட பல நிகழ்ச்சிகள் திருத்தந்தையின் 2012ம் ஆண்டின் குறிப்பேட்டில் உள்ளன.
2012ம் ஆண்டு ஏப்ரலில் 85 வயதை எட்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற மார்ச் மாதத்தில் மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்வார் எனவும், உலகக் கத்தோலிக்கரில் ஏறக்குறைய பாதிப்பேர் வாழும் இலத்தீன் அமெரிக்காவுக்கு இத்திருப்பயணம் ஓர் உந்துதலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறும் என்றும், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் தவிர, வழக்கமான புதன் பொது மறைபோதகங்கள், மூவேளை செப உரைகள், சிறப்புச் சந்திப்புக்கள், திருவழிபாடுகள் எனப் பல நிகழ்வுகள் திருத்தந்தையின் குறிப்பேட்டில் உள்ளன.


4. 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

டிச.30,2011. ஆசியாவில் நான்கு பேர் உட்பட உலகளாவியத் திருச்சபையில், 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள்   கொல்லப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.
2011ம் ஆண்டில் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொடூரமாய்க் கொல்லப்பட்ட ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்ட Fides செய்தி நிறுவனம், இவ்வாண்டில் 18 அருட்பணியாளர்கள், நான்கு அருட்சகோதரிகள் மற்றும் 4 பொதுநிலை விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அக்கண்டத்தில் 13 அருட்பணியாளர்களும் 2  பொதுநிலை விசுவாசிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவில் 2 அருட்பணியாளர்கள், 3அருட்சகோதரிகள் மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும், ஆசியாவில் 2 அருட்பணியாளர்கள், ஓர் அருட்சகோதரி மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா நகருக்கு அருகில் கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு அருட்சகோதரி வல்சா ஜான் கொடூரமாய்க் கொல்லப்பட்டார். இச்சகோதரி கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் நலனுக்காக வேலை செய்து வந்தவர்.
2010ம் ஆண்டில் அகில உலகத் திருச்சபையில் 25 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது.


5. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்திற்கு வயது ஐம்பது

டிச.30,2011. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியிலுள்ள ஆரோக்ய அன்னை திருத்தலம், பசிலிக்கா நிலைக்கு உயர்த்தப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் திருநற்கருணை ஆராதணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தை, அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், 1962ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார்.
இந்த வேளாங்கண்ணி பசிலிக்காவை, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டில், கீழை நாடுகளின் லூர்து என்றழைத்தார்.
இந்தப் பொன்விழா பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அப்பசிலிக்கா அதிபர் அருட்பணி ஏ.மைக்கிள், இந்த ஜூபிலி ஆண்டைக் கொண்டாடும் விதமாக, விடியற்கால விண்மீன் என்ற பெயரில் புதிய, பெரிய ஆலயம் கட்டத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இடம் பெற்ற சுனாமியின் போது வேளாங்கண்ணியில் சுமார் 850 பேர் இறந்தனர், 300 பேர் ஆழிப்பேரலைகளில் அடித்துச் செல்லப்பட்டனர், ஆயினும், இந்தப் பசிலிக்காவில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


6. பெரு நாட்டில் 2012ம் ஆண்டு, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு

டிச.30,2011. தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2012ம் ஆண்டை, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு என அறிவித்துள்ளார் அந்நாட்டின் ஹூவான்காயோ உயர்மறைமாவட்ட பேராயர் Pedro Barreto Jimeno.
ஹூவான்காயோ உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 67ம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது இதனை அறிவித்தார் பேராயர் Barreto Jimeno.


7. குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தி மத்ரித்தில் பேரணி

டிச.30,2011. திருக்குடும்பத் திருவிழாவாகிய டிசம்பர் 30ம் தேதி இஸ்பெயின் மத்ரித்தில் பல ஆயர்கள், குருக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்காக பேரணி ஒன்றை நடத்தினர்.
குழந்தைப் பிறப்புக்களை ஊக்குவிக்கவும் குடும்ப வாழ்வைப் பாதுகாக்கவும் குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படவும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இக்காலத்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், குடும்ப  விழுமியங்களிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று இஸ்பெயின் ஆயர் ஹூவான் ஹோசே ஒமெல்லா கூறினார்.


8. சுனாமி விவிலியப் பிரதிகள்பேரிடரைப் புரி்ந்து கொள்ள உதவுகின்றன

டிச.30,2011. இவ்வாண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் சேதமடையாமல் இருந்த ஆயிரக்கணக்கான விவிலியப் பிரதிகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்நோக்கிய இந்தச் சுனாமிப் பேரிடர் பற்றிப் புரிந்து கொள்ள இப்பிரதிகள் உதவுகின்றன என்று, அவற்றை வாங்கும் மக்கள் கூறுவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
இந்த விவிலியப் பிரதிகளை வெளியிட்ட அச்சகம் சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இடத்தில் மூவாயிரம் விவிலியப் பிரதிகள் மட்டும் சேதமடையாமல் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 December 2...

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 December 2...: 1. திருத்தந்தை : கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும் 2. 2011ம் ஆண்டில் திருத்...

Catholic News - hottest and latest - 29 December 2011

1. திருத்தந்தை: கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும்

2. 2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

3. பெண் குழந்தைகளை அழிப்பவர்கள் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது - கர்தினால் கிரேசியஸ்

4. அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

5. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் -  நைஜீரியா நாட்டின் பேராயர்

6. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியத் திருச்சபை வரவேற்பு

7. தென் கொரியாவில் Salvation Army மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை

8. ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22,000

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை: கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும்

டிச.29,2011. மனிதர்கள் உருவாக்கும் பல்வேறு எல்லைகளைக் கடந்து இளையோராகிய நீங்கள் செபத்தால் உள்ளம் ஒன்றி இருப்பது மிகவும் அழகான ஒரு தருணம்  என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Taize எனப்படும் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆயிரக்கணக்கான இளையோருடன் மேற்கொண்டுள்ள ஒரு மாநாட்டிற்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள் அடங்கிய செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே இவ்வியாழனன்று அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் உங்களை விடுவித்து, இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை உங்களுக்கு வழங்கும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறினார்.
உலகின் வறுமை மற்றும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் பல்லாயிரம் இளையோர் வன்முறைகள் வழியே இவைகளுக்குத் தீர்வுகள் காண எண்ணும் வேளையில், நீங்கள் காட்டும் பற்றுறுதியும், நம்பிக்கையும் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையட்டும் என்று திருத்தந்தை வாழ்த்தினார்.
35வது ஐரோப்பிய Taize கூட்டம்  வருகிற ஆண்டு உரோம் நகரில் நடைபெற உள்ளதைத் தன் செய்தியின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்டு, அக்கூட்டத்திற்கு இளையோரை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறினார்.


2. 2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

டிச.29,2011. திருத்தந்தையர்களின் ஒவ்வோர் ஆண்டு நிகழ்வுகளைப் போலவே இவ்வாண்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயல்பாடுகளும் அர்த்தமுள்ள வகையில் நிறைவேறின என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை ஃபெடெரிகோ லொம்பார்தி கூறினார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வாண்டு பெரும் பிரச்சனைகள் இன்றி ஓரளவு அமைதியாகக் கழிந்தது என்று கூறினார்.
திருத்தந்தை 2011ம் ஆண்டு மேற்கொண்ட பல்வேறு திருப்பயணங்களைப் பற்றி பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இஸ்பெயினில் நிகழ்ந்த உலக இளையோர் தினத்தில் திருத்தந்தை பங்கேற்றதும், அண்மையில் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் அவர் மேற்கொண்ட திருப்பயணமும் நம்பிக்கை தரும் அடையாளங்கள் என்று கூறினார்.
மேலும், திருத்தந்தை அசிசி நகரில் தலைமையேற்று நிகழ்த்திய உலக அமைதி நாள் பல்சமய செப வழிபாடு குறித்தும், அண்மையில் திருத்தந்தை Rebibbia சிறைக்கூடத்திற்கு சென்றதையும் திருப்பீடப் பேச்சாளர் தன் பேட்டியில் சிறப்பான வகையில் குறிப்பிட்டார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தையின் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவை என்று எண்ணிப் பார்க்கையில், மே மாதம் முதல் தேதியன்று முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்திய நிகழ்வும், விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை உரையாடிய நேரமும் மனதில் நிற்கின்றன என்று வத்திக்கான் பத்திரிக்கை அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.


3. பெண் குழந்தைகளை அழிப்பவர்கள் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது - கர்தினால் கிரேசியஸ்

டிச.29,2011. பெண் குழந்தைகளையும், பிற குழந்தைகளையும் கருவிலேயே அழிப்பவர்களையும், மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மறுப்போரையும் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது என்று ஒப்புமைப்படுத்தி மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் பேசினார்.
டிசம்பர் 28, இப்புதனன்று கொண்டாடப்பட்ட மாசில்லாக் குழந்தைகள் திருநாளையொட்டி, தன் கருத்துக்களை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், ஆசிய ஆயர் பேரவையின் பொதுச் செயலுருமான கர்தினால் கிரேசியஸ், மாசில்லாக் குழந்தைகளைக் கொன்று குவித்த ஏரோதைப் போலவே தற்காலத்திலும் அப்பாவி உயிர்களைப் போக்கும் பலர் நம் மத்தியில் இருப்பது வேதனையைத் தருகிறது என்று கூறினார்.
ஏரோதைப் போலவே தங்கள் செல்வத்தையும் சுகத்தையும் தெய்வங்களாக வழிபடும் மக்களே கருக்கலைப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றங்களை இவ்வுலகில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டுள்ள ஒரே காரணத்தால் துன்பங்களை அனுபவிக்கும் இந்தியக் கிறிஸ்தவர்களின் துயரங்களைக் குறித்தும் கர்தினால் கிரேசியஸ் தன் கருத்துப் பரிமாற்றத்தில் எடுத்துரைத்தார்.


4. அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

டிச.29,2011. அர்ஜென்டினா நாட்டில் நிலவும் கொடுமையான வறுமை ஒரு சமுதாய அமைப்பாக மாறிவருவதாகவும், இன்றைய இளையோர் பலரின் பெற்றோர் பல ஆண்டுகளாக வேலை எதுவுமின்றி வாழ்ந்து வருவது பெரும் கவலைக்குரிய ஒரு போக்கு என்றும் அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி அர்ஜென்டினா நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் கிறிஸ்மஸ் செய்தியை அனுப்பியுள்ள அந்நாட்டு ஆயர்கள், மனித உயிர்கள் கருவிலிருந்து கல்லறை வரை மதிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பினை விடுத்துள்ளனர்.
குடும்பங்களில் காணப்படும் வன்முறைகளால் பாதிக்கப்படும் இளையோர், அதே வன்முறைகளை சமுதாயத்தில் தொடர்வது நாம் சமுதாயத்தில் களைய வேண்டிய ஓர் அவசரமான சவால் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் புதியத் தலைவர் பேராயர் José María Arancedo கூறினார்.
எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து இளையோரும் கல்வி பெறுவதற்கான வழிகளை அரசும் மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பேராயர் Antonio Marino கூறினார்.


5. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் -  நைஜீரியா நாட்டின் பேராயர்

டிச.29,2011. கிறிஸ்மஸ் அன்று தங்கள் உயிரை இழந்தவர்கள் வீணாகச் சாகவில்லை என்பதை தான் நம்புவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல்களால் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆப்ரிக்க பேராயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்மஸ் நாளன்று நைஜீரியா நாட்டின் அபுஜா நகரில் புனித தெரேசா ஆலயத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்த மக்களைக் குறித்து FIDES செய்திக்கு பேட்டியளித்த அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan இவ்வாறு கூறினார்.
இவ்வன்முறைகளுக்குக் காரணமான Boko Haram குழுவினர் இஸ்லாமியர் அல்ல என்று பல இஸ்லாமியக் குழுக்கள் கூறிவந்தாலும், இந்த நிராகரிப்பு மட்டுமே வன்முறைகளை ஒழிக்கப் போவதில்லை என்று பேராயர் Onaiyekan சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பாதுகாப்பு முயற்சிகள் பலபடுத்தப்பட்டிருந்தாலும், அபுஜா நகரில் நிகழ்ந்த தாக்குதல் தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதால், அவர்கள் குண்டுகளுடன் ஏறிவந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரில் பலர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இளையோரே என்றும் பேராயர் வருத்தத்துடன் கூறினார்.
Boko Haram போன்ற அடிப்படைவாத, வன்முறையாளர்களால் நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவ்விரு மதத்தினரும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் என்றும் பேராயர் Onaiyekan வலியுறுத்திக் கூறினார்.


6. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியத் திருச்சபை வரவேற்பு

டிச.29,2011. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றத்தில் இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியத் திருச்சபைத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
1968ம் ஆண்டு முதல் பல்வேறு பாராளுமன்ற அவைகளின் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த சட்ட வரைவு, தற்போது பாராளுமன்றத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ராஜ்ய சபாவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் சட்டமாக அமல்படுத்தப்படும்.
42 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தற்போது பலன்களைத் தந்துள்ளது என்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று மனித உரிமை ஆர்வலரும் இயேசு சபை குருவுமான செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
ஊழல் என்பது இந்திய சமுதாயத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதால், இதனை ஒழிப்பது வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது எனினும் இது சிறந்ததொரு ஆரம்ப முயற்சி என்று அருள்தந்தை பிரகாஷ் எடுத்துரைத்தார்.
இந்திய அரசின் இந்த முயற்சியை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. தென் கொரியாவில் Salvation Army மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை

டிச.29,2011. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி தென் கொரியாவில் Salvation Army எனப்படும் பிறரன்பு அமைப்பு மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை திரட்டப்பட்டது.
டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்து கிறிஸ்மஸ் விழா வரை 300 இடங்களில் திரட்டப்பட்ட தொகை, 473 கோடி won, அதாவது, ஏறத்தாழ 41 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ளது.
45,000 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்த இந்த நிதித் திரட்டும் முயற்சியின் வழி கிடைத்த தொகையைக் கொண்டு மிகவும் வறுமையில் உள்ளோரின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று Salvation Armyன் சார்பாகப் பேசிய Chung Mi-sun கூறினார்.
2009ம் ஆண்டு இறையடி சேர்ந்த கர்தினால் Stephen Kim Sou-hwan தன் மரணத்திற்கு முன் கண்களைத் தானம் செய்த நிகழ்ச்சி, கொடுக்க வேண்டும் என்ற ஆவலை தென் கோரிய கத்தோலிக்க மக்களிடையே அதிகரித்துள்ளது என்று Mi-sun மேலும் கூறினார்.


8. ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22,000

டிச.29,2011. உலகின் பல நாடுகளில் பணியாற்றும் 21 கோடியே 50 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் 11 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல்களில் பணி புரிகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கல்வி மற்றும் கலை வழியாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள SCREAM என்ற திட்டத்தின் 8வது அறிக்கையைச் சமர்ப்பித்த ILO எனப்படும் உலக உழைப்பாளர் அமைப்பு ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நோயுற்றும், விபத்துக்களுக்கு உள்ளாகியும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 22,000க்கும் அதிகம் என்று கூறும் இவ்வறிக்கை, தொழில் தொடர்பான விபத்துக்களில் இறக்கும் வயது வந்தோரின் எண்ணிக்கையை விட இவ்வாறு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளது.
2010ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து Hague நகரில் நடைபெற்ற உலகக் கருத்தரங்கில், உலகினின்று 2016ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...