Saturday, 2 April 2011

Catholic News - hottest and latest - 01April 2011

1. கர்தினால் விதயத்தில் இறைபதம் அடைந்தார், திருத்தந்தையின் இரங்கல் செய்தி

2. உலகின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல்: வத்திக்கான் உயர் அதிகாரி

3. ஐவரி கோஸ்டின் ஆயுதம் தாங்கிய மோதல்களில் அருட்பணியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : திருப்பீடத் தூதர்

4. கர்தினால் Naguib: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இரண்டு நிலைப்பாடுகளை எகிப்து எதிர்நோக்குகிறது

5. இந்தியாவின் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிநாடுகளில் வேலை செய்வோர் பலர் விடப்பட்டுள்ளனர்-கோவா தலத்திருச்சபை

6. இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கத்தோலிக்கப் பெண்கள் உறுதிமொழி

7. குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் : மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வது பேச்சு சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது

8. ஐ.நா. அறிக்கை : உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையிலே வாழச் செய்துள்ளது

9. எய்ட்ஸ் நோயைக் க்டடுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் வேண்டுகோள்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் விதயத்தில் இறைபதம் அடைந்தார், திருத்தந்தையின் இரங்கல் செய்தி

ஏப்.01,2011: கேரளாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மார் வர்கி விதயத்தில் (Varkey Vithayathil) இறைபதம் அடைந்ததையொட்டி தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் Kakkanad சீரோ-மலபார் ரீதி தலைமையக நிர்வாகி ஆயர் Mar Bosco Puthurக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் பிரிவால் வருந்தும் சீரோ-மலபார் திருச்சபையின் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலையினருக்குத் தனது செபத்துடன்கூடிய அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
சீரோ-மலபார் திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் இவர் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைகளையும் அதில் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை. 
இவ்வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்த கர்தினால் விதயத்தில், கேரளாவின் பாரூரில் 1927ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர் உலக இரட்சகர் துறவு சபையில் சேர்ந்து 1954ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1996ல் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1999ல் எர்ணாகுளம் அங்கமாலி பேராயராகவும் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2001ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற பாப்பிறைத் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கர்தினால் விதயத்தில். 2008 முதல் 2010 வரை இந்திய ஆயர் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
கர்தினால் விதயத்திலின் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116. இவர்களில் இந்தியக் கர்தினால்களின் எண்ணிக்கை 5. இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 3.


2. உலகின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல்: வத்திக்கான் உயர் அதிகாரி

ஏப்.01,2011: உலகில் இடம் பெறும் உலகாயுத மற்றும் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இன்றைய உலகில் காணப்படும் உலகாயுத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் உண்மையான சுதந்திரத்திற்கும் ஆன்மீக விழுமியங்களுக்கும் எதிரியாக இருக்கும்வேளை, அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும் ஒன்றிணைந்து உழைப்பதற்கும் பல்சமய உரையாடலை மிக உயரிய பாதையாக கைக்கொள்ளலாம் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran  கூறினார்.
புத்த மதத்தினர் சிறப்பிக்கும் வேசாக் (Vesakh) விழாவை முன்னிட்டு உலகின் எல்லாப் புத்த மதத்தினருக்குமென திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்ட செய்தியில், இவ்விழா, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவேண்டுமென்று கத்தோலிக்கர் செபிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அமைதி, உண்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் உறவு பற்றிக் குறிப்பிட்டு, உண்மையான அமைதியைத் தேடும் பாதையில் உண்மையைத் தேடுவதற்கான அர்ப்பணம் மிகவும் அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேசாக் விழா ஜப்பானில் ஏப்ரல் 8ம் தேதியும், கொரியா, சீனா, தாய்வான் வியட்நாம் ஆகிய நாடுகளில் மே 10ம் தேதியும், தாய்லாந்து, இலங்கை, கம்போடியா பர்மா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மே 17ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, புத்தரின் பிறப்பு, அவர் விழிப்புணர்வு அடைந்தது, அவரின் இறப்பு ஆகியவைகளைக் குறிக்கின்றது.
விடுதலையில் உண்மையைத் தேடுதல்: கிறிஸ்தவர்களும் புத்த மதத்தினரும் அமைதியில் வாழ என்ற தலைப்பில் இச்செய்தி இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


3. ஐவரி கோஸ்டின் ஆயுதம் தாங்கிய மோதல்களில் அருட்பணியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : திருப்பீடத் தூதர்

ஏப்.01,2011: மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் தற்போது இடம் பெற்று வரும் கடும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கத்தோலிக்க அருட்பணியாளர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார்கள் என்று அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டுத் தலைநகர் அபிஜான் காரித்தாஸ் இயக்குனர் Richard Kissi, இச்செவ்வாயன்று ஆயுதம் தாங்கிய குழுக்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பேட்டியளித்த பேராயர் Madtha, தற்சமயம் அந்நாட்டில் நடப்பதை உள்நாட்டுப் போர் என்று சொல்ல முடியாது, ஆனால் புரட்சிப்படைகள் முக்கிய நகரங்களைத் தாக்கி வருகின்றன என்றார்.
இந்த மோதல்களில் இரண்டு தரப்பினருமே பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களை மதிக்கின்றனர், எனினும் படைவீரர்கள் புரட்சிப்படைவீரர்களைத் தேடி குறைந்தது ஓர் ஆலயத்தில் நுழைந்துள்ளனர் என்றார் பேராயர்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்ட் நாட்டில் ஆலயங்களில் புகலிடம் தேடியுள்ள சுமார் பத்தாயிரம் அப்பாவி பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென அவ்விடங்களுக்கு ஐ.நா.அமைதிகாக்கும் படைகள் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் Duékoué நகர் பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.கூறியது.


4. கர்தினால் Naguib: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இரண்டு நிலைப்பாடுகளை எகிப்து எதிர்நோக்குகிறது

ஏப்.01,2011: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலையைத் தற்போது எகிப்து நாடு எதிர்நோக்குவதாக அந்நாட்டு முதுபெரும் தந்தை கர்தினால் Antonios Naguib  தெரிவித்தார்.
எகிப்தை முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்ததற்குப் பின்னர் அந்நாட்டின் நிலவரம் குறித்துப் பேட்டியளித்த கர்தினால் Naguib,  தற்சமயம் நாடு, சுதந்திரம், சம உரிமைகள், சனநாயகம் ஆகியவைகளை நோக்கிச் செல்கின்றதா அல்லது இந்த விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக இசுலாமிய நாடாக மாறும் நிலையில் இருக்கின்றதா என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது என்றார்.
இந்த மார்ச் 19ம் தேதி நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில், சமய அடித்தளத்தினின்று அரசு நடவடிக்கைகளைப் பிரித்துப் பார்ப்பதற்கு மக்களில் ஒருவித  தயக்கம் தெரிவது வெளிப்பட்டுள்ளது.  


5. இந்தியாவின் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிநாடுகளில் வேலை செய்வோர் பலர் விடப்பட்டுள்ளனர்-கோவா தலத்திருச்சபை

ஏப்.01,2011: இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, வெளிநாடுகள் மற்றும் கப்பல்களில் வேலை செய்யும் கோவா மாநில மக்களில் பலர் இந்தப்  புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கோவா மறைமாநில சமூகநீதி மற்றும் அமைதிப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி Valeriano Vaz குறை கூறினார்.
வெளிநாடுகள் வேலை செய்யும் கோவா மாநில மக்கள் இந்தப்  புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடப்பட்டுள்ளவேளை, தற்போது கோவாவில் வேலைசெய்யும் குடியேற்றதாரர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
சரியாக எடுக்கப்படாத இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, பின்னாளில் அரசின் பல சலுகைத் திட்டங்களிலிருந்து கத்தோலிக்கர் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என்றும் அருட்பணி Valeriano Vaz எச்சரித்தார்.
இவ்வியாழனன்று வெளியான அறிவிப்பின்படி, இந்த மார்ச் முதல் தேதியோடு இந்தியாவின் புதிய மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடியே 10 இலட்சமாக அதிகரித்துள்ளது.
ஆயினும் கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 விழுக்காடாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு 17.64 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது என்று தெரிகிறது.
இப்போதைய இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உலக மக்கள்தொகையில் 17.5 விழுக்காடாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால் அதை விட அதிகமாக இந்தியாவின் மக்கள்தொகை உள்ளது.
ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 இலட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 இலட்சம்.
ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது எனவும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது எனவும் இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதம் எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


6. இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கத்தோலிக்கப் பெண்கள் உறுதிமொழி

ஏப்.01,2011: இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகப் போர் ஒன்றை அறிவித்துள்ளனர் ஆஜ்மீர் மறைமாநிலக் கத்தோலிக்கப் பெண்கள்.
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, தகவல் உரிமை பெறும் சட்டம் உள்ளிட்ட சமூக விவகாரங்கள் குறித்து இவ்வாரத்தில் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் மறைமாநிலம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட கத்தோலிக்கப் பெண்கள் இவ்வாறு உறுதி எடுத்தனர்.
ஒவ்வொரு நாளும் பெண்சிசுக்கருக்கள் கருக்கலைப்பு செய்யப்படுவது பற்றியும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.
இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகை குறித்தப் புள்ளிவிபரங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலை 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைவான விகிதமாகும். உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன.


7. குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் : மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வது பேச்சு சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது

ஏப்.01,2011: இந்தியாவில் மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பேச்சுரிமைக்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது என்று குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் குறை கூறினர்.
மாபெரும் ஆன்மா: மகாத்மா காந்தியும் அவரது விடுதலைப் போராட்டமும்” (Great Soul: Mahatma Gandhi and his Struggle with India) என்ற தலைப்பில்  Pulitzer விருது பெற்ற Joseph Lelyveld என்பவர் எழுதிய புத்தகம் விநியோகம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு குஜராத் அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசின் இந்நடவடிக்கை, இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு முரணாக இருக்கின்றது என்று திருச்சபைத் தலைவர்கள் கூறினர்.
நமது நாட்டின் தந்தையை வெறுக்கத்தக்க விதத்தில் இந்தப் புத்தக ஆசிரியர் விமர்சித்துள்ளார் என்று குஜராத் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 


8. ஐ.நா. அறிக்கை : உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையிலே வாழச் செய்துள்ளது 

ஏப்.01,2011: உலகில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்ற ஆண்டில் தங்கள் வறுமையிலிருந்து வெளிவருவதற்குத் தடையாய் இருந்ததென்று ஐ.நா.வின் புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
உணவு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் இந்த 2011ம் ஆண்டிலும் அம்மக்களை வறுமையிலே வைக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், நேபாளம் போன்ற நாடுகளில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கான ஐ.நா.வின் மில்லென்ய இலக்கு நிறைவேறுவதற்கு இந்த விலைவாசி உயர்வுத் தடங்கலாக இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்த விலை உயர்வுகளால் மேலும் ஒரு கோடி முதல் நான்கு கோடியே இருபது இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 


9. எய்ட்ஸ் நோயைக் க்டடுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் வேண்டுகோள்

ஏப்.01,2011: உலகில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகள் தைரியமுடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
உலகில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுக்ள் ஆகியிருக்கும் வேளை வருகிற ஜூனில் இவ்விவகாரம் குறித்து ஐ.நா. பொதுஅவை கூடவிருப்பதையொட்டி வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளார் மூன். 182 நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில் இவ்வறிக்கைத் தயாரிக்கப்பட்டது.
2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த 22 நாடுகள் உட்பட 33 நாடுகளில் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது 25 விழுக்காடு குறைந்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2010ம் ஆண்டின் இறுதியில் அறுபது இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


robert john kennedy: Catholic News - hottest and latest - 31 Mar 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 31 Mar 2011: "1. அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கானப் பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும் 2. சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியி..."

Catholic News - hottest and latest - 31 Mar 2011

1. அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கானப் பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும்

2. சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் கிறிஸ்தவர்களும் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது

3. ஒசாகா துணை ஆயர் : புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்து ஜப்பானுக்கும் அகில உலகுக்கும் பாடம்

4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் காண வரும் மக்களை வரவேற்க உரோம் தயார்

5. பாகிஸ்தான் சிறையிலிருக்கும் ஆசியா பீபி திருத்தந்தையைச் சந்திக்க ஆவல்

6. இயேசு சபை கருத்தரங்கு : அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டும்

7. கிறிஸ்தவ அமைப்புக்கள் வலியுறுத்தல் : மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும்

8. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் : பான் கி மூன்

----------------------------------------------------------------------------------------------------------------

1. அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கானப் பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும்

மார்ச் 31,2011. மனித குலத்தைக் காப்பதற்காக லிபியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நாட்டுத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று Tripoli மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறியுள்ளார்.
லிபியாவில் நிலவும் வன்முறைச் சூழலைத் தீர்க்க, இச்செவ்வாயன்று லண்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆப்ரிக்க ஒன்றியத்திலிருந்து ஒருவரையும் அழைக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்று ஆயர் Martinelli, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
லிபியாவில் புரட்சி செய்து வரும் குழுக்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினருக்கு எதிராகப் போரிடுவதற்கு அவர்களுக்கு இராணுவத் தளவாடங்களை அளிப்பது சரியான தீர்வாகாது என்று ஆயர் Martinelli எச்சரித்தார்.
தற்போது ஐரோப்பியப் படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடைபெறுவதாகக் கூறினாலும், இந்தத் தாக்குதல்களில் ஒரு மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதைத் தான் அறிந்துள்ளதாகவும், அம்மருத்துவமனையில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதை உணர முடிந்ததென்றும் ஆயர் விளக்கினார்.
ஆப்ரிக்காவின் ஒரு பகுதியாக விளங்கும் லிபியாவில் நிரந்தர தீர்வு உண்டாக வேண்டுமெனில், அரேபிய நாட்டுத் தலைவர்களும், ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர்களும் சேர்ந்து வந்து இந்தத் தீர்வைக் காண்பதே சிறந்த வழி என்று ஆயர்  Martinelli வலியுறுத்தினார்.


2. சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் கிறிஸ்தவர்களும் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது

மார்ச் 31,2011. புகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகில் அணுக்கதிர் வீச்சு ஆபத்தைத் துணிந்து எதிர்கொண்டு உழைத்து வரும் பல ஊழியர்கள் மத்தியில் கிறிஸ்தவர்களும் உழைத்து வருவது மிகுந்த மகிழ்வைத் தருகிறதென்று Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
ஜப்பான் மக்களுக்கும், மனித குலத்திற்கும் உண்டாகியிருக்கும் இந்த ஆபத்தை நீக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மனிதகுலம்  தலை வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறிய ஆயர், இந்தச் செயல் வீரர்கள் மத்தியில் நற்செய்தி மதிப்பீடுகளுக்கும், கிறிஸ்தவத்திற்கும் உயர்ந்த சாட்சிகளாய் உழைத்து வரும் கிறிஸ்தவர்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.
தற்சமயம் புகுஷிமா அணுசக்தி நிலையத்திற்குள் 180 தன்னார்வத் தொண்டர்கள் உழைத்து வருகின்றனர் என்றும், இவர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, பணி நேரங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து, பணி செய்து வருகின்றனர் என்றும் வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனம் கூறுகிறது.

3. ஒசாகா துணை ஆயர் : புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்து ஜப்பானுக்கும் அகில உலகுக்கும் பாடம்

மார்ச் 31,2011. புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்துக்களைக் கண்ட பின்னர் ஜப்பான் வருங்காலத்தில் அணுசக்தி நிலையங்களைப் பற்றிய தன் நிலைப்பாட்டை ஆராய வேண்டும் என்று Osaka மறைமாவட்டத்தின் துணை ஆயர் Michael Goro Matsuura கூறினார்.
மிக ஆபத்தான இந்த விபத்து, உலகில் வாழும் அனைவரையும் விழித்தெழ வைத்துள்ளது என்று கூறிய ஆயர் Matsuura, அணுசக்தி நிலையங்களை ஜப்பானிலும்  இன்னும் பிற நாடுகளிலும் எழுப்புவது குறித்து ஜப்பான் அரசு மிகத் தீவிரமாக எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அப்படி செய்வது மனித குலத்திற்கு இந்நாடு செய்யக்கூடிய ஒரு பெரும் சேவை என்றும் வலியுறுத்திக் கூறினார்.
புகுஷிமா அணுசக்தி நிலையத்தைச் சுற்றி 30 கிலோமீட்டர் வட்டத்தில் வாழும் அனைவரும் மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பிற இடங்களுக்குச் செல்ல தயாராக உள்ளதாகவும் Saitama மறைமாவட்ட ஆயர் Marcellino Daiji Tani கூறினார்.
அணுசக்தியை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் ஆயர் அவை சென்ற ஆண்டு தங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. புகுஷிமா விபத்துக்குப் பின், ஜப்பான் ஆயர் பேரவை அணு ஆயுதங்களை இந்த உலகிலிருந்து முற்றிலும் அழிக்க வேண்டும் என்று தங்கள் அரசுக்கும், அமெரிக்க அரசுத் தலைவருக்கும், இன்னும் பிற உலகத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று FIDES செய்தியொன்று கூறுகிறது.

4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் காண வரும் மக்களை வரவேற்க உரோம் தயார்

மார்ச் 31,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மே மாதம் முதல் தேதியன்று முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சியைக் காண வரும் அனைத்து மக்களையும் வரவேற்க உரோமை மாநகரம் தயாராக உள்ளதென இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பல்லாயிரம் மக்களைச் சமாளிக்க முடியாமல் உரோமையில் பதட்டநிலைகள் உருவாகலாம் என்று கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஏற்பாடு குழுவினரின் சார்பில் இச்செவ்வாயன்று பேசிய பேரருள் தந்தை Liberio Andreatta செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 30 சனிக்கிழமை Circus Maximus என்ற உரோமைத் திடலில் நடைபெறும் திருவிழிப்புச் சடங்கு, மே மாதம் முதல் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையால் நிகழ்த்தப்படும் திருப்பலி, மற்றும் மே 2ம் தேதி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்தோனே தலைமையில் நடைபெறும் நன்றியறிதல் திருப்பலி ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கும் நுழைவுச் சீட்டு எதுவும் கிடையாது என்று அருள்தந்தை Andreatta விளக்கினார்.
இந்நிகழ்வையொட்டி, திருப்பயணிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஏப்ரல் 30, மே 1, மே 2 ஆகிய மூன்று நாட்கள் பொது வாகனங்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இம்மூன்று நாட்களிலும் உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளனவென்றும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

5. பாகிஸ்தான் சிறையிலிருக்கும் ஆசியா பீபி திருத்தந்தையைச் சந்திக்க ஆவல்

மார்ச் 31,2011. பாகிஸ்தானில் Sheikupura சிறையில் இருக்கும் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண் திருத்தந்தையைச் சந்திக்கத் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
தேவ நிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை சுமத்தப்பட்டு, சிறையில் இருக்கும் ஆசியா பீபியை அவரது கணவர் அண்மையில் சென்று சந்திக்கும்போது, அவர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
தவக்காலத்திற்கான உண்ணாநோன்பை சிறையில் மேற்கொண்டுள்ள ஆசியா பீபி, மிகுந்த களைப்புடன் காணப்பட்டார் என்று அவரது கணவர் கூறினார்.
திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அச்சந்திப்பை தான் இப்போது மேற்கொண்டுள்ள இந்தச் சிலுவையின் பயனாகத் தனக்குக் கிடைத்த உயிர்ப்பாக இருக்கும் என்று ஆசியா பீபி கூறியதாக அவரது கணவர் தெரிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்னைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அறிந்து வருவதையும், தன்னைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டதையும் தான் அறிந்தபோது, தொடர்ந்து வாழ வேண்டும் என்ற உந்துதலும், நம்பிக்கையும் தனக்குப் பிறந்ததென ஆசியா பீபி தன் கணவரிடம் கூறியுள்ளார்.
திருத்தந்தையை நேரில் சந்தித்து, அவருக்குத் தன் நன்றியைக் கூறுமளவுக்குத் தான் வாழ்ந்தாலே போதும் என்ற தன் ஆவலையும் ஆசியா பீபி வெளியிட்டதாக அவரது கணவர் கூறினார்.

6. இயேசு சபை கருத்தரங்கு : அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டும்

மார்ச் 31,2011. சட்டப்படி அங்கீகாரம் பெற்றவர், பெறாதவர் என்று எந்த நிலையில் இருந்தாலும், அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டுமென்று இயேசுசபையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
இயேசுசபையினரின் அகதிகள் பணிக் குழுவினர் இச்செவ்வாயன்று Brusselsல் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் அகதிகளுக்கு சரியான பாதுகாப்பு  இல்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள பல புரட்சிகளின் எதிரொலியாக ஐரோப்பாவிற்கு வந்து சேரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சிறப்பாக, தற்போது இத்தாலியின் Lampedusaவில் உருவாகியிருக்கும் அகதிகள் நிலை இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் வருவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை என்றும், இதற்குத் தகுந்த தீர்வுகள் காண்பது இந்த ஒன்றியத்தின் கடமை என்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
இயேசுசபையினர் நடத்தும் அகதிகள் பணி தற்போது  உலகின் 50 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஐரோப்பிய நாடுகளில் 12 இடங்களில் இப்பணிகளுக்கான அலுவலகங்கள் உள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. கிறிஸ்தவ அமைப்புக்கள் வலியுறுத்தல் : மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும்

மார்ச் 31,2011. மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
Alkitab என்று அழைக்கப்படும் இவ்விவிலியப் பிரதிகளில் கடவுளை அல்லா என்று குறிப்பிட்டதால் உருவான பிரச்சனையைத் தொடர்ந்து, மலேசிய அரசு இவ்விவிலியப் பிரதிகளில் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அண்மையில் தன்னிடம் இருந்த விவிலியங்களை மீண்டும் அளிக்க முன் வந்தபோது, அவ்விவிலியங்களில் கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று முத்திரை குத்தி, அவற்றிற்கு எண்கள் இட்டு வெளியிட தீர்மானித்தது.
நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு புத்தகம் என்று Alkitabஐ அரசு கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து என்று கூறும் கிறிஸ்தவ அமைப்புகள், அரசு விதித்திருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி, விவிலியத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றன.


8. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் : பான் கி மூன்

மார்ச் 31,2011. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மியான்மார் மக்கள் பல ஆண்டுகளாய் விரும்பி வரும் குடியரசு, ஒப்புரவு ஆகிவற்றை உறுதி செய்யும் ஒரு அரசாக இப்போது பொறுப்பேற்கும் அரசு விளங்க வேண்டுமேயொழிய, பழைய இராணுவ அரசின் தொடர்ச்சியாக இது இருக்கக் கூடாதென்று இப்புதனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டளவாய் இராணுவ ஆட்சியைக் கண்டுள்ள மியான்மாரில் தற்போது நிகழும் மாற்றங்களுக்கான முடிவுகள் அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளாக இருக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தினார்.
அமைதிக்கான நொபெல் பரிசையும், மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெற்ற Aung San Suu Kyi கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டபோது, மற்ற அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Thursday, 31 March 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 Mar 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 Mar 2011: "1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick 2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்க..."

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...