Friday 10 December 2021

விண்மீன் காட்டும் பாதையில்...ஞானமிக்கவர்கள் துவண்டுபோவதில்லை

 


நான் வாக்களிக்கப் போதுமான தகுதியுள்ளவனாய் இருக்கும்போது, எனது மத நம்பிக்கையைத் தெரிவுசெய்யவும் போதுமான தகுதியுடையவனாய் இருப்பேன் – மனமாற்ற வழக்கில் விசாரிக்கப்பட்ட ஏழை ஒருவர், நீதிமன்றத்தில்

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 10, இவ்வெள்ளி உலக மனித உரிமைகள் நாள். இந்நாளையொட்டி, பத்திரிகை ஒன்றில் கற்பனையாகப் பதிவுசெய்யப்பட்டிருந்த ஓர் உரையாடலைத் தருகிறோம். இந்தியாவில் மதமாற்றத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஒரு மாநிலத்தில், ஏழை ஒருவர், தன் மூதாதையர் மதத்திலிருந்து, வெளிநாட்டு கடவுள் எனச் சர்வசாதாரணமாக அழைக்கப்படும் மதம் ஒன்றிற்கு மாறியதால், அவர் நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டார். விசாரணையைத் துவக்கினார் நீதிபதி.

நீ உனது சொந்த விருப்பத்தால் மதம் மாறினாயா? ஆமாம் மதிப்பிற்குரியவரே,

நீ மதம் மாறுவதற்கு யாரும் உன்னை வற்புறுத்தினார்களா? அல்லது தூண்டினார்களா?”

ஆமாம் என்று, அந்த மனிதர் சொல்ல நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்தப் பதிலால், வழக்கை இதோடு முடித்துக்கொள்ளலாம் என நினைத்த நீதிபதி, ஆவலோடு, அவரிடம் உன்னை வற்புறுத்தியது எது? என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை, கவர்ச்சிகரமான ஆன்மீக வாழ்வு அளித்த வாக்குறுதியும், எனக்குச் செவிசாய்க்கும் கடவுளுமே என்றார்.

வேறு எதுவும் உண்டா?” என நீதிபதி கேட்க, இல்லை ஐயா. ஆனால் கடந்த பொதுத் தேர்தலில், எனது வாக்கைப் பெறுவதற்காக, எல்லா வேட்பாளர்களும் எனக்குப் பணம் கொடுத்தது போன்று, எனது கடவுளை மாற்றிக்கொள்ள யாருமே எனக்கு பணம் எதுவும் தரவில்லை என்றார். ஐயா பெரியவரே, அரசியல் கட்சிகள் இலவச டிவி, இலவசமாக மின்சாரம், வீட்டுவசதி, வங்கியில் பணம் இவற்றையெல்லாம் தரும்போது, அது தூண்டுதல் மற்றும் வற்புறுத்தல் இல்லையா? என ஏழை கேட்டார்.

அதைக் கேட்ட நீதிபதி, நான்தான் கேள்வி கேட்கவேண்டும் என்று சொல்ல, ஏழையோ, ஐயா மன்னிக்கணும். நான் ஓர் ஏழை. கல்வியறிவற்றவன். பசியால் வாடுகிறவன் என அடுக்கிக்கொண்டே போனார். பொறுமையிழந்த நீதிபதி நீ என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்டார். இவையனைத்திற்கு மத்தியிலும் நான் ஓட்டளிக்க எனக்குச் சுதந்திரம் அளித்துள்ளீர்கள் என்றார் ஏழை. ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அந்த உரிமையை எவரும் தடுக்காமல் இருப்பதைப் பார்த்துக்கொள்வது எனது கடமை என்று நீதிபதி கூறியதும், நன்றி ஐயா என்று அந்த ஏழை கூறியதோடு, நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்டு, ஓர் அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு, வாக்களிக்கும் எனது உரிமை நம்பப்படும்போது, உம்மிடமோ அல்லது இந்நாட்டிலுள்ள வேறு எந்த அதிகாரியிடமோ  விளக்கம் அளிக்காமல், அதே ஏழை, விரும்பும்போது தனது மதத்தையும் கடவுளையும் மாற்றிக்கொள்வதற்கு அவரை ஏன் நம்பக்கூடாது?. நான் வாக்களிக்கப் போதுமான தகுதியுள்ளவனாய் இருக்கும்போது, எனது மத நம்பிக்கையைத் தெரிவுசெய்யவும் போதுமான தகுதியுடையவனாய் இருப்பேன், அப்படித்தானே? என்று கேட்டு அந்த ஏழை மனிதர் அமர்ந்தார். அந்நேரத்தில் நீதிமன்றத்தில் நிசப்தம் நிலவியது. (Indian Christian Day (ICD) group, October 24, 2021). இன்றைய உலகில் விளிம்புநிலையில் வாழ்வோர், சாதி, மதம், இனம், பண்பாடு, மொழி, நிறம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படும்போது, ஒருவர் உரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தில், துணிவோடு இறங்கு, பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும், செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! (எசா.48:17) என்று, ஆண்டவர் அவருக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஞானம் நிறைந்த நம்பிக்கையைக் கொடுக்கிறார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...