Wednesday 24 June 2015

செய்திகள்-22.06.15

செய்திகள்-22.06.15
ஜூன் 21, 22 - தூரின் நகரில் திருத்தந்தை...


------------------------------------------------------------------------------------------------------

1. இத்தாலியின் தூரின் நகரில் திருத்தந்தை - திருப்பயண விளக்கம்

2. கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரை

3. தூரின் நகரில் இளையோருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசியவை

4. தூரின் நகர் வித்தோரியோ சதுக்கத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை
------------------------------------------------------------------------------------------------------

1. இத்தாலியின் தூரின் நகரில் திருத்தந்தை - திருப்பயண விளக்கம்

இத்தாலியின் வடமேற்கில் உள்ள தூரின் நகருக்கு ஜூன் 21,22 ஆகிய இரு நாள்கள் திருப்பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஞாயிறன்று துவக்கப்பட்ட இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, இயேசுவின் இறந்த உடலைப் போர்த்தியிருந்த துணியைத் தரிசித்து, செபிப்பது. இரண்டு, சலேசிய துறவுசபையை நிறுவிய புனித ஜான் போஸ்கோ பிறந்ததன் 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்து.
ஞாயிறன்று காலை இத்தாலிய நேரம் எட்டு மணிக்கு, திருத்தந்தை, தூரின் நகர் விமான நிலையத்தில் இறங்கி, நேரடியாக, அரச வளாகம் என அழைக்கப்படும் Reale வளாகம் நோக்கிச் சென்றார். அங்கு தொழில் உலகினருடன் ஓர் சந்திப்பை மேற்கொண்டார். தொழில் உலகம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒரு பெண் தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு சிறு தொழிலதிபர் என மூவர் மேடையில் எடுத்துரைக்க, திருத்தந்தையும், அங்கு குழுமியிருந்த தொழில் உலக அங்கத்தினர்களை நோக்கி, வெலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும், மக்கள் முன்னேற்றத்தை மனதில்கொண்ட ஒப்பந்தங்களின் அத்தியாவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளையோர், மற்றும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் போராடும் குடியேற்றதாரர்கள் ஆகியோருடன் தன் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வருங்காலத்தின் நம்பிக்கையாக இருக்கும் இளையோரும், கடந்த காலத்தின் நினைவுகளாக இருக்கும் முதியோரும், ஒரு தேசத்தின் சொத்துக்கள் எனவும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இந்த சந்திப்புக்குப் பின்னரே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர் புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் சென்று, இயேசுவின் புனிதத் துணியைத் தரிசித்தார். தூரின் நகர் முதிய அருள்பணியாளர்களும், அடைபட்ட மடத்தின் அருள்கன்னியர்களும் அத்துணியை தரிசிக்க திருத்தந்தையுடன் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், தூரின் நகர் வித்தோரியோ சதுக்கத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, திருப்பலி நிறைவேற்றி மறையுரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலிக்குப்பின் தூரின் நகர் பேராயர் இல்லத்தில், இளையோர் பிரதிநிதிகளோடும், புலம்பெயர்ந்த மக்கள் சிலருடனும் இணைந்து மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிற்பகலில், அன்னமரி பசிலிக்காவில், சலேசிய துறவுசபை அருள்பணியாளர்களையும், சலேசிய சபை பெண் துறவிகளையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. அவர்களுக்கு வழங்கிய உரையில், சலேசிய சபைக்கும் தனக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துரைத்தார். தனக்கு திருமுழுக்கு அளித்ததும், துறவு வாழ்வை மேற்கொள்ள வழிகாட்டியதும் ஒரு சலேசிய அருள்பணியாளரே எனவும் திருத்தந்தை கூறினார். இன்றைய உலகில் இளையோர் வேலைவாய்ப்பின்றி இருப்பது குறித்த ஆழ்ந்த கவலையையும் தன் உரையில் வெளியிட்டார் திருத்தந்தை.
இச்சந்திப்பிற்குப்பின் கொத்தொலெங்கோ கோவில் சென்று அங்கு குழுமியிருந்த நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து, உரை வழங்கி, அவர்களை ஆசீர்வதித்தார். இஞ்ஞாயிறின் இறுதி நிகழ்ச்சியாக, பல்லாயிரம் இளையோரை வித்தோரியோ சதுக்கத்தில் சந்தித்தார் திருத்தந்தை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், முதலில் இளையோர் பிரதிநிதிகள் மூவர், தங்கள் சந்தேகங்களை கேள்விகளாக திருத்தந்தையின் முன்வைக்க, அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தன் உரையை வழங்கினார் திருத்தந்தை. இச்சந்திப்புடன் திருத்தந்தையின் ஞாயிறுதின நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.
திருத்தந்தையின் திங்கள் தின நிகழ்ச்சிகளுள் முதலாவதாக, அந்நகரிலுள்ள வால்தேசே (Valdese) எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைக் கோவிலுக்குச் சென்று அவர்களுடன் உரையாடியது இடம்பெற்றது. அங்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த தன் கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, அங்கு குழுமியிருந்தவர்களுடன் இணைந்து 'வானகத்தில் உள்ள எங்கள் தந்தாய்' என்ற செபத்தையும் செபித்தார். இந்த சந்திப்பு ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் பின் தூரின் நகர் பேராயர் இல்லம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவரைக் காண வந்திருந்த அவரின் உறவினர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றி, அவர்களுடன் பேராயர் இல்லத்திலேயே மதிய உணவும் அருந்தினார்.
தன் இரண்டு நாள் திருப்பயணத்தை திங்கள் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு நிறைவுச்செய்து, அங்கிருந்து விமானம் மூலம் உரோம் நகர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரை

ஜூன்,22,2015. உடன்பிறந்தோர் என்ற உணர்வை நாம் மீண்டும் கண்டுணர, அண்மைய ஆண்டுகளில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள் உதவி செய்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தூரின் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணிப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இத்திங்கள் காலை 9 மணியளவில், தூரின் நகரில் அமைந்துள்ள வல்தேசே (Valdese) என்ற கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், திருத்தந்தை வழங்கிய உரையில், நமது உடன்பிறந்தோர் உணர்வு, இயற்கை சார்ந்த உணர்வு அல்ல, மாறாக, கிறிஸ்தவ வாழ்வின் வேர்களைப் பகிர்ந்துகொள்வதால் எழும் உணர்வு என்று கூறினார்.
ஒன்றிப்பு எனும்போது, அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கவேண்டும் என்ற கட்டாயம் அல்ல என்பதை, தன் உரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, விவிலியக் காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களிடையே பல்வேறு கருத்தியல்களைப் பின்பற்றிய பிரிவுகள் நிலவிவந்தன என்பதை, விவிலிய எடுத்துக்காட்டுகளுடன் கூறினார்.
வல்தனேசிய எவஞ்செலிக்கல் சபையை, கத்தோலிக்கத் திருஅவை நடத்திய கடுமையான வழிமுறைகளுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் மன்னிப்பு வேண்டினார்.
வல்தனேசிய சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் அண்மையக் காலங்களில் பகிர்ந்துவரும் நல்லுறவு முயற்சிகள் நிறைவைத் தருகின்றன என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. தூரின் நகரில் இளையோருடன் திருத்தந்தை மனம்விட்டுப் பேசியவை

ஜூன்,22,2015. தூரின் நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் உச்ச நிகழ்வாக, வித்தோரியோ சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளையோரை, இஞ்ஞாயிறு மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.
அவ்விளையோருக்கு வழங்குவதற்காக தான் தயாரித்திருந்த உரையை வாசிப்பதற்குப்  பதிலாக, இளையோரிடம் மனம்விட்டு நேரடியாகப் பேசினார் திருத்தந்தை.
அவ்விளையோரில் மூவர் எழுப்பியக் கேள்விகளுக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, அவர்களது கேள்விகள், யோவான் நற்செய்தியில் காணப்படும் அன்பு, வாழ்வு, நண்பர்கள் என்ற மூன்று வார்த்தைகளை மையப்படுத்தியிருந்தன என்ற குறிப்புடன் தன் உரையை ஆரம்பித்தார்.
அன்பு, வாழ்வு, நண்பர்கள் என்ற மூன்று அம்சங்களும், வாழவேண்டும் என்ற மன உறுதியிலிருந்து வருவன என்பதை, தன் உரையின் துவக்கத்தில் திருத்தந்தை வலியுறுத்தினார்.
"வாழ்வது என்பது, ஏனோதானோவென்று இயங்குவது அல்ல" என்று, அவர்களையொத்த இளையோரான, அருளாளர், பியர் ஜார்ஜியோ ஃபிரசாத்தி (Pier Giorgio Frassati) அவர்கள் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு நினைவுறுத்தியபின், 20 வயதிலேயே, வாழ்வதிலிருந்து ஒய்வு பெற விழையும் இளையோரைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாகக் கூறினார்.
தொலைக்காட்சியில் இடம்பெறும் நாடகங்களில் காட்டப்படும் அன்பு, உண்மையான அன்பு அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தைகளைவிட, செயல்களில் வெளிப்படுவதே, உண்மையான அன்பு என்பதை வலியுறுத்திக் கூறினார்.
உறவுகளில் வெளிப்படும் அன்பு குறித்துப் பேசியத் திருத்தந்தை, தங்கள் சுயநலனுக்காக, ஆதாயத்திற்காக, அடுத்தவரைப் பயன்படுத்தத் தூண்டும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுபட்டு, அடுத்தவரை உண்மையாகவே மதித்து, உறவுகொள்ளும்போதுதான் உண்மை அன்பு வெளிப்படுகிறது என்று திருத்தந்தை கூடியிருந்த இளையோரிடம் கூறினார்.
தனக்கென அனைத்தையும் அபகரித்துக்கொள்ளத் தூண்டும் இவ்வுலகில், அவரவர் பெறக்கூடிய இன்பத்தை மட்டும் விளம்பரப்படுத்தும் இவ்வுலகில், கற்புடன் வாழ்வது பெரும் சவால் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
அன்பு என்பது, பிறருக்குப் பணியாற்றுவதில் அமைந்துள்ளது என்ற கருத்தை விளக்கும் வகையில், நோயுற்றிருக்கும் தன் குழந்தையின் அருகில் இரவெல்லாம் கண்விழித்திருக்கும் பெற்றோர், அடுத்தநாள், தங்கள் களைப்பைப் பெரிதுபடுத்தாமல், மற்ற பணிகளை மேற்கொள்வது, உண்மை அன்பின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.
இவ்விதம், அன்பைக் குறித்து தன் மனதிலிருந்து எழுந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயப் பிரச்சனைகள் குறித்து, சிறப்பாக, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையோர், உபயோகமற்றவர்கள் என்ற கருத்தால், கருவில் அழிக்கப்படும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோரைக் குறித்துப் பேசினார்.
பகிர்ந்து வாழ்வதில் இளையோர் வளரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, தெருவில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது, இளையோர் ஆற்றக்கூடிய ஒரு பெரும் உதவி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மிகக் கடினமானச் சூழலில் வாழ்ந்த சிறுவர்களையும், இளையோரையும் காக்க, சலேசியத் துறவு சபை துவக்கப்பட்டது என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு வழங்கியத் தன் உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தூரின் நகர் வித்தோரியோ சதுக்கத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

ஜூன்,21,2015. உண்மையான அன்பு ஏமாற்றுவதில்லை, நம்மைக் கைவிடுவதும் இல்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 21, இஞ்ஞாயிறன்று தூரின் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின்போது, வித்தோரியோ (Vittorio) சதுக்கத்தில் தலைமையேற்று நடத்தியத் திருப்பலியின்போது, உண்மையான இறையன்பின் பண்புகளை, தன் மறையுரையில் விளக்கினார்.
இறைவனின் அன்பு, உண்மையான, கைவிடாத அன்பு; அனைத்தையும் மீண்டும் படைக்கிறது; பாறையைப் போல நிலைத்து நிற்பது என்ற மூன்று பண்புகளை, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.
புயல் வீசும் நேரங்களில், மிகுந்த வேகத்துடன், வேதனைதரும் வகையில், அலைகள் நம்மைத் தாக்குகையில், இயேசுவின் அன்பு, ஒரு பாறையாக இருந்து, அவ்வலைகளிலிருந்து நம்மைக் காக்கிறது என்று திருத்தந்தை கூறினார்.
'பாறை' மற்றும் 'உறுதி' என்ற வார்த்தைகளின் பொருளை, தூரின் மற்றும் பியத்மோந்த் (Pietmont) பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர் நன்கு உணர்ந்தவர்கள் என்று கூறியத் திருத்தந்தை, அப்பகுதிகளில் புகழ்பெற்ற ஒரு கவிதையின் சில வரிகளை மேற்கோளாகக் கூறினார்.
இறைவன் என்ற பாறையை நம்பி, தங்கள் கடினமானப் பணிகளை மேற்கொண்டதால், இப்பகுதியிலிருந்து உலகெங்கும் சென்றுள்ள பல புனிதர்களும், அருளாளர்களும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
அன்று கலிலேயக் கடலில் உருவான புயல்போல, இன்றும் உலகின் பல இடங்களில் வன்முறைப் புயல்களால் பலகோடி மக்களின் வாழ்வு அலைகழிக்கப் படுகின்றது என்பதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, துன்புறும் அனைவருக்கும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
தூரின் நகரின் வித்தோரியோ சதுக்கத்தில் திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியில், ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம்   வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment