Saturday 29 November 2014

Saint Andrew Apostle († First century)

Saint Andrew

Apostle
(† First century)

Saint AndrewSaint Andrew, Apostle
O.D.M. pinxit Saint Andrew was one of the fishermen of Bethsaida, and was the brother of Saint Peter. He became a disciple of Saint John the Baptist. When called himself by Christ on the banks of the Jordan, his first thought was to go in search of his brother, and he said to Peter, We have found the Messiah! and brought him to Jesus.
It was Saint Andrew who, when Christ wished to feed the five thousand in the desert, pointed out a little lad with five loaves and a few fishes. After Pentecost, Saint Andrew went forth upon his mission to plant the Faith in Scythia and Greece and, at the end of years of toil, to win a martyr's crown at Patrae in Achaia. When Saint Andrew first caught sight of the gibbet on which he was to die, he greeted the precious wood with joy. O good cross! he cried, made beautiful by the limbs of Christ, so long desired, now so happily found! Receive me into thy arms and present me to my Master, that He who redeemed me through thee may now accept me from thee! After suffering a cruel scourging he was left, bound by cords, to die upon this diagonal cross. For two whole days the martyr remained hanging on it, alive, preaching with outstretched arms from this chair of truth, to all who came near, and entreating them not to hinder his passion.

குடும்ப வறுமையால் பேஸ்புக் மூலம் தன்னை விற்கும் இந்திய மொடல் அழகி

குடும்ப வறுமையால் பேஸ்புக் மூலம் தன்னை விற்கும் இந்திய மொடல் அழகி

Source: Tamil CNN. இந்தியா எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் பல மாநிலங்களீல் பெண்கள் ஒரு விற்பனை பொருளாக இருக்கிறார்கள். அசாம், மேற்கு வங்காளம், ஜார் கண்ட், பிகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 10 வயது முதல் பெண்கள் விலைக்கு விற்பனை செய்யப்படுகி றார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணே தனை விற்க பேஸ் புக் மூலம் விளம்பரம் செய்து உள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக உள்ளார். வறுமையில் வாடும் சாந்தினியால் பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் தனது உடல் விற்பனைக்கு என்று பேஸ்புக்கில் துணிச்சலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சாந்தினி கூறுகையில், என் பெற்றோரை காப்பாற்ற பணம் இல்லை. உதவி கேட்கவும் ஆள் இல்லை. பிறகு நான் என்ன செய்ய முடியும். இந்த அறிவிப்பை பார்த்து பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை என்றார்.
சாந்தினி பற்றி குஜராத் மாநில பெண்கள் ஆணைய தலைவர் லீலாபென் அன்கோலியா கூறுகையில், குஜராத்தில் உள்ள பொது மருத்துவமனைகளில் அவரது பெற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. சாந்தினிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர் எங்களை அணுகலாம் என்று கூறினார்.
Faced-with-acute-poverty-girl-puts-herself-up-for-sale-on_SECVPF
10341438_320970011413146_6572997759090923577_n
10421395_374353519408128_657806473827699693_n

இயேசுவின் முதல் சீடர் - திருத்தூதரான புனித அந்திரேயா

இயேசுவின் முதல் சீடர் - திருத்தூதரான புனித அந்திரேயா

ஆண்மை, வலிமை என்ற பொருள்படும், 'அந்திரேயா' என்ற பெயரைத் தாங்கியவர், இயேசுவின் முதல் சீடராக மாறினார். "Protocletus" (the First Called), அதாவது, 'முதல் அழைப்புப் பெற்றவர்' என்றும் இவர் அழைக்கப்படுகிறார். மீன்பிடிக்கும் தொழிலாளியான அந்திரேயா, திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார்.
'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி' (யோவான் நற்செய்தி 1,36) என்று திருமுழுக்கு யோவான் அவர்கள் இயேசுவைச் சுட்டிக்காட்டியதும், அந்திரேயா, இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவோடு ஒருநாள் தங்கிய அந்திரேயா அவர்கள், அவரது முதல் சீடராக மாறியதோடு நில்லாமல், இயேசுவை, தன் சகோதரர் பேதுருவுக்கு அறிமுகம் செய்து, அவரும் இயேசுவின் சீடராக மாற வழிவகுத்தார்.
அவர் அறிமுகம் செய்துவைத்த சகோதரர் பேதுரு, அந்திரேயாவை விட திருஅவை வரலாற்றில் புகழ்பெற்றார். அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் முதல் நான்கு சீடர்கள் எனினும், பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூவரின் பெயர்கள் மட்டுமே, நற்செய்தியில் அடிக்கடி இடம்பெற்றுள்ளன. தான் மறைந்து, இயேசு வளரவேண்டும் என்று வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப் போல, அந்திரேயாவும் தன்னை மறைத்து, இயேசுவை அறிக்கையிட்ட திருத்தூதராக வாழ்ந்தார்.
பாலை நிலத்தில் மக்களுக்கு உணவளிக்குமாறு இயேசு கூறியபோது, (யோவான் 6, 1-14) அங்கு ஒரு சிறுவனிடம் "ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்" (யோவான் 6, 8-9) இருந்ததாகக் கூறும் அந்திரேயா அவர்கள், அங்கு நிகழ்ந்த புதுமைக்கு மறைமுகமாகக் காரணமானார்.
கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப்பின் அவரை அறிக்கையிடச் சென்ற முதல் திருத்தூதர் அந்திரேயா என்று சொல்லப்படுகிறது. இவரது திருத்தூதுப் பணி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கிரேக்க நாட்டிலும் மேற்கொள்ளப்பட்டது.
அவரது திருத்தூதுப் பணியால் கோபமடைந்த உரோமைய அதிகாரிகள், அவரை, 'எக்ஸ்' (X) வடிவ சிலுவையில் அறைந்தனர். அச்சிலுவையில் தொங்கியபடி அவர் மூன்று நாள் போதித்தார் என்று சொல்லப்படுகிறது.
திருத்தூதர் அந்திரேயா அவர்களின் வழித்தோன்றலாக இன்று பணியாற்றுபவர், Constantinople முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள். கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையான முதலாம் பர்த்தலோமேயு அவர்களை, நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கிறார்.
ஸ்காட்லாந்து, இரஷ்யா, உட்பட பல நாடுகளுக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும்,  மீன்பிடிக்கும் தொழிலாளிகளுக்கும் பாதுகாவலாரான, திருத்தூதர் புனித அந்திரேயா அவர்களின் திருநாள் நவம்பர் 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

செய்திகள் - 29.11.14

செய்திகள் -  29.11.14
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் - நவம்பர் 29, சனிக்கிழமை - நிகழ்ச்சிகள்



திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம்
இரண்டாவது நாள் நிகழ்வுகள்

நவ.29,2014. மதத்தின் பெயரால் இடம்பெறும் அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும், மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளையும் எதிர்ப்பதற்கு சமயத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள், இவற்றுக்கு எதிராக, சமயத் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும்போது, மதத்தவர் மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும், மதத்தவர்க்கிடையே நட்புறவும், ஒருவர் ஒருவரையொருவர் மதிப்பதும் இயலக்கூடியதே என்ற தெளிவான செய்தியை தங்களின் சமூகங்களுக்கு அனுப்ப வேண்டும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், துருக்கியில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களுக்கு, அனைத்துலக அளவில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முக்கிய அறைகூவலுடன் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 28, இவ்வெள்ளி இந்திய நேரம் மாலை 4.30 மணிக்குத் துருக்கி தலைநகர் அங்காரா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி அரசுத்தலைவர் எர்டோகான், பிரதமர் அகமது ஆகியோரைச் சந்தித்த பின்னர், அந்நாட்டின் தேசத்தந்தை அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரோஜா மலர் வளையம் ஒன்றை அக்கல்லறையில் வைத்து அந்நாட்டுக்காகச் செபித்தார். அன்று உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு,  துருக்கியின் சமய விவகாரத் துறையான Diyanet İşleri Başkanlığı சென்று அதன் தலைவர் பேராசிரியர் Mehmet Gormez அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. அவ்விடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள நூலக அறையில், துருக்கியின் முஸ்லிம் சமூகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், திருத்தந்தையுடன் சென்ற முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் இருப்பில் இச்சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் முதலில் வரவேற்புரை வழங்கினார் Gormez.

உலகில் நிலவும் ஏழ்மை, பசி, சண்டை, சுற்றுச்சூழல் சீர்கேடு, அனைத்துவிதமான தீவிரவாதச் செயல்கள் ஆகிய எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர். அல்லாவின் பெயரால் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள், இஸ்லாம் மதத்தின் அமைதியான பாதையை முழுமையாக மீறுகின்றனர் என்று Gormez அவர்கள் உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடல், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மற்றும் நட்புறவில் சமயத் தலைவர்களின் பொறுப்புணர்வு பற்றி உரையாற்றினார்.

துருக்கியின் முஸ்லிம் சமூக உயர்மட்ட அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

இஸ்லாம் மதத்தையும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்த அரசியல் மற்றும் மதத்தலைவர்களை இந்த இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள பல்வேறு மதத்தலைவர்களைச் சந்திப்பது திருத்தந்தையர்களின் பயணத்திட்டத்தில் இடம்பெறும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது. உரையாடல்களுக்கும் சந்திப்புக்கும் இணக்கமான மனநிலை இல்லையெனில், அந்தத் திருத்தூதுப்பயணம் தன் நோக்கத்தோடு இணங்கிச் செல்வதாக இருக்காது. இதே எண்ணத்தோடு எனக்கு முந்தைய திருத்தந்தையர்களின் பாதையில் நடைபோடும் நானும்,  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே இடத்தில் உங்களைச் சந்தித்ததை நினைவு கூருகிறேன்.
மதத்தலைவர்களிடையேயான கலந்துரையாடல்களும் நல்லுறவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பினும், ஒருவரை ஒருவர் மதித்து நட்புணர்வுடன் வாழமுடியும் என்பதை அவை காட்டுகின்றன. இன்றைய உலகின் சில இடங்களில் காணப்படும் நெருக்கடி நிலைகளைக் காணும்போது, இந்த நட்புணர்வின் அர்த்தமும் அத்தியாவசியமும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. போர்கள், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதுடன், பேரழிவுகளையும், இனங்களிடையே, மதங்களிடையே பதட்டநிலைகளையும், மோதல்களையும், பல ஆயிரம் மக்களைப் பாதிக்கும் ஏழ்மை, பசி போன்றவைகளையும், காற்று, நீர், நிலம் ஆகியவைகளின் இயற்கை அழிவுகளையும் கொணர்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் மோதல்களால் விளைந்துள்ள துன்பங்கள் தாங்கமுடியா நிலையில் உள்ளன. வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகள், முதியோர், தாய்மார்கள் மற்றும் அகதிகளை இந்த நேரத்தில் நான் நினைவுகூர்கின்றேன்.
தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் குழுக்களின் போக்குகளால் சில சமூகங்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்களும் Yazidis மக்களும் தங்களின் இன மற்றும் மதக் காரணங்களுக்காக வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் வாழ்வையும் விசுவாசத்தையும் காப்பதற்காக இவர்கள் பலவேளைகளில் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த வன்முறைகளால் பலவேளைகளில் மத வழிபாட்டுத் தலங்களும் கலாச்சார இடங்களும் அழிவுக்குள்ளாகின்றன. மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பிற்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். இறைவனின் கொடையான மனித வாழ்வு தன்னிலையிலேயே புனிதத்தன்மையுடையது என்பதால், மதத்தின்வழி நியாயப்படுத்த முயலும் எந்த வன்முறையும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். ஏனெனில், இறைவனே வாழ்வு மற்றும் அமைதியின் தலைவர். இறைவனை வழிபடுவதாகக் கூறிக்கொள்ளும் மக்கள் தங்கள் அயலார்களுடன், இனம், மதம், கலாச்சாரம் மற்றும் கொள்கை வேறுபாடுகளையும் தாண்டி, சகோதர சகோதரிகளாக வாழவல்லவர்களாக இருக்கவேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. வன்முறைகளுக்கு எதிராக நாம் உழைக்கும் அதேவேளை, இதற்கான தீர்வுகளைக் காணவும் முயல வேண்டும். அரசு மற்றும் மதத்தலைவர்கள்சமூகப் பிரதிநிதிகள், நல்மனதுடைய ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவைப்படுகின்றது.  ஒவ்வொரு மதத்தவரும் தங்களின் பாரம்பரிய மதிப்பீடுகளை வலியுறுத்துவதன் மூலம் இதற்கு உயிர்த்துடிப்புடைய சிறப்புப் பங்காற்ற முடியும்.  கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்களிடம் விலைமதிப்படமுடியாத ஆன்மீகச் செல்வங்களைக் கொண்டுள்ளனர். இதில் நம் பொதுக்கூறுகளான, கருணைக்கடலாம் இறைவனை வழிபடுவது, முதுபெரும் தந்தையாக‌ ஆபிரகாமைக் கொண்டிருப்பது, செபம், ஏழைகளுக்கு ஈதல், உண்ணா நோன்பிருத்தல் போன்றவைகள் உண்மையாகவே வாழப்பட்டால், அது நம் வாழ்வை மாற்றுவதுடன், மாண்பும் சகோதரத்துவமும் நிரம்பிய அடித்தளத்தை நிச்சயமாக வழங்கும். நம் மதங்களிடையேயான கலந்துரையாடல்களின் துணைகொண்டு நம் பொது ஆன்மீகப் பாரம்பரியத்தை ஏற்று வளர்ப்பதன்வழி,  ஒழுக்க மதிப்பீடுகள், அமைதி, மற்றும் சமூக விடுதலையை ஊக்குவிக்கவும் நிலைநாட்டவும் உதவ முடியும்’ (அங்காராவில் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால், 1979 நவம்பர் 29ல் கூறிய வார்த்தைகள்). ஒவ்வொருவரின் மனித வாழ்வின் புனிதத்தன்மையை ஏற்பதே ஒருமைப்பாடு, கருணை, உதவி ஆகியவைகளுக்கு அடித்தளமாக உள்ளது. மோதல்களால் அகதிகளாகியுள்ள மக்களுக்கு இந்நாட்டின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் செய்துவரும் உதவிகளை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இந்த எடுத்துக்காட்டுத் தொடரவேண்டும். அதேவேளை, இங்குள்ள இஸ்லாமிய அவைக்கும், மதங்களிடையேயான திருப்பீட கலந்துரையாடல் அவைக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுக்கு ஊக்கமளிப்பதோடு, இது மேலும் தொடர்ந்து, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கும் உலகிற்கு நல்லதொரு நம்பிக்கையின் அடையாளமாக இருப்பதாக. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிப்பதோடு, என் செபங்களுக்கான உறுதியையும் வழங்குகிறேன்.

துருக்கியிலுள்ள 98 விழுக்காட்டு முஸ்லிம்களில் 68 விழுக்காட்டினர் சுன்னி இஸ்லாம் பிரிவையும், 30 விழுக்காட்டினர் ஷியையட் இஸ்லாம் பிரிவையும் சார்ந்தவர்கள். இருந்தபோதிலும் துருக்கி நாடு சமயச் சார்பற்ற ஒரு நாடு. இஸ்லாமிய அரசியல்-சமய தலைமைத்துவத்தைக் குறிக்கும் caliphate அமைப்புமுறையை 1924ம் ஆண்டில் இரத்து செய்து சமயச் சார்பற்ற துருக்கியை அறிவித்தார் அந்நாட்டுத் தேசத்தந்தை அத்தாத்துர்க். caliphate அமைப்புமுறை நீக்கப்பட்ட பின்னர், 1924ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது Diyanet. இஸ்லாம் மதத்தின் நம்பிக்கைகள், வழிபாடு, அறநெறிகள், அம்மதம் பற்றி பொது மக்களுக்கு அறிவித்தல் போன்றவைகளுக்காக, Diyanet நிறுவனம் அமைக்கப்பட்டது. இங்கு நடந்த சந்திப்புடன், துருக்கி நாட்டுக்கான தனது முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துருக்கி சமுதாயத்துக்கு அமைதியின் திருப்பயணியாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய சாட்சியாகவும் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாவது நாள் நிகழ்வுகளைத் தொடங்கினார். அங்காரா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று எசம்போவா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நகருக்குப் புறப்பட்டார். ஒரு மணி நேரம் விமானப் பயணம் செய்து இஸ்தான்புல் அத்தாதுதுர்க் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த திருத்தந்தையை, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ மற்றும் இஸ்தான்புல் ஆளுனர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில், இஸ்தான்புல் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அகமது மசூதிக்குச் சென்றார் திருத்தந்தை. இவ்விடத்தின் முகப்பிலே அம்மசூதியின் பெரிய Mufti மற்றும் இமாம் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அதிகாரிகளுடன் துணையுடன் இவ்விடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இஸ்தான்புலிலுள்ள மசூதிகளில் மிக முக்கியமானதாகிய நீல மசூதி, சுல்தான் முதலாம் அகமது ஆட்சி காலத்தில் எட்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு 1617ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உட்புறச் சுவர், மேல் கூரை என அனைத்தும் நீலநிறப் பளிங்குக் கற்களால் ஆனது. இதனால் இது நீல மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்தான்புல் நகரின் நீல மசூதியைப் பார்வையிட்ட பின்னர், அந்நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க Hagia Sophia அல்லது புனித சோஃபியா அருங்காட்சியகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய வளங்களில் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்குச் சென்ற மூன்றாவது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருக்கிறார். இறைஞானத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பசிலிக்காவை, கி.பி. 360ம் ஆண்டில் கான்ஸ்ட்டைன் பேரரசர் கட்டினார். 404 மற்றும் 532ம் ஆண்டுகளில் தீயினால் சேதமடைந்த இந்த பசிலிக்காவை, பேரரசர் ஜூஸ்தீனியன் மீண்டும் அழகுற அமைத்தார். உரோமைப் பேரரசரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களையும், மிக அழகான பளிங்கு கற்களையும், பத்தாயிரம் பணியாளர்களையும், நூறு மேற்பார்வையாளர்களையும் கொண்டு ஆறு ஆண்டுகளில் இந்த புனித சோஃபியா பசிலிக்கா புதுப்பிக்கப்பட்டது. இறைவனின் படைப்பின் மேன்மையைச் சித்தரிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டது. இது 537ம் ஆண்டில் திருப்பொழிவு செய்யப்பட்டபோது இதன் அழகை வியந்த பேரரசர் ஜூஸ்தீனியன், ஓ சாலமோனே, உன்னையும் இது மிஞ்சிவிட்டது எனப் பரவசமடைந்தார். 1453ம் ஆண்டில் 2ம் முகமதுவிடம் இந்நகரம் வீழ்ந்தபோது, இக்கிறிஸ்தவ பசிலிக்கா மசூதியாக மாற்றப்பட்டது. சுல்தான்களிடமிருந்து பெற்ற விலைமதிப்பற்ற நன்கொடைகளால் இவ்விடம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகவும் மாறியது.

புனித சோஃபியா அருங்காட்சியகத்தின் அழகைப் பார்த்து வியந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில், முதலில் கிரேக்கத்தில் இறைவனின் புனித சோஃபியா(Αγία Σοφία του Θεού) என்று எழுதினார். பின்னர், இலத்தீனில் "ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது" தி.பா.84 (Quam dilecta tabernacula tua Domine, (Psalmus 83), Franciscus). என்று எழுதி கையெழுத்திட்டார். இந்தப் புனித இடத்தின் அழகையும், அமைதியையும் தியானிக்கும்போது, அனைத்து அழகுக்கும் ஊற்றும் முதலுமான எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எனது ஆன்மா எழும்புகிறது. உண்மை, நன்மைத்தனம் மற்றும் அமைதியின் பாதையில் மனித சமுதாயத்தின் இதயங்களை எப்போதும் வழிநடத்தும் என இறைவனிடம் செபிக்கின்றேன் எனவும் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித சோஃபியா அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர் இஸ்தான்புல் நகரின் கத்தோலிக்கச் சமுதாயத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவையும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இஸ்தான்புல் நகரிலுள்ள தூய ஆவி இலத்தீன் வழிபாட்டுமுறைப் பேராலயம் சென்றார் திருத்தந்தை. 1846ம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பேராலயத்தில் கி.பி.67 முதல் 69 வரை திருத்தந்தையாக இருந்தவரும் மறைசாட்சியுமான புனித லீனுஸ் திருப்பண்டம் உட்பட பல புனிதர்களின் திருப்பண்டங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு திருப்பலி நிறைவேற்றினார்  திருத்தந்தை. இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சுருக்கத்துக்குச் செவிமடுப்போம்.

இஸ்தான்புல் நகரில், தூய ஆவியார் பேராலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

நவ.29,2014. மீட்பின் தாகம் கொண்டுள்ள அனைவருக்கும், தாகம் தீர்க்கும் ஊற்றாக, இயேசு தன்னையே வெளிப்படுத்துகிறார் (யோவான் நற்செய்தி 7,38). எருசலேமில் இத்தகைய இறைவாக்குரைத்த இயேசு, தன் சீடர்கள் பெறவிருக்கும் தூய ஆவியாரின் கொடைகளை இவ்விதம் முன்னறிவிக்கிறார்.
தூய ஆவியார், திரு அவையின் ஆன்மாவாக விளங்குகிறார். வாழ்வு வழங்கும் அவர், ஒவ்வொருவருக்கும் தனி வரங்களைத் தந்து, அவர்களை ஒருங்கிணைக்கும் ஊற்றாகவும் விளங்குகிறார். திருஅவையின் வாழ்வும், பணியும் தூய ஆவியாரைச் சார்ந்தே உள்ளன.
புனித பவுல் அடியார் கூறுவதுபோல், தூய ஆவியாரின் தூண்டுதலால்தான், நமது நம்பிக்கையை அறிக்கையிட முடியும் (1 கொரிந்தியர் 12,3). நாம் செபிக்கும்போது நமக்குள்ளிருந்து வழிநடத்துவது, தூய ஆவியாரே! தன்னலத்தைக் கடந்து, அடுத்தவருக்குப் பணியாற்ற நம்மைத் தூண்டுவதும் தூய ஆவியாரே!
தூய ஆவியார், திருஅவைக்கு வழங்கியுள்ள பல்வேறு கொடைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை குழப்பத்தை உருவாக்குவதுபோல் தெரியலாம். ஆனால், இத்தகைய வேற்றுமைகளின் வழியே, ஒற்றுமையை உருவாக்குவது, தூய ஆவியாரின் பணி. திருஅவையும், ஏனையச் சபைகளும், தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்குக் கீழ்படிந்து நடக்க அழைக்கப்பட்டுள்ளன.
தூய ஆவியாரின் வழிநடத்துதல், சுகமான நிலைகளிலிருந்து நம்மை வெளியேற்றுவதால், அவருக்குக் கீழ்படிவது எளிதானதல்ல. நமது சுக நிலைகளிலேயே தங்கி, அவற்றைக் காப்பதிலேயே குறியாய் இருப்பது எளிது. ஆனால், இவற்றைவிட்டு வெளியேறி, தூய ஆவியாரால் வழிநடத்தப் படும்போதுதான் நாம் மறைபரப்புப் பணியாளர்களாக மாறுகிறோம்.
சுகமான, பாதுகாப்பான நிலைகளில் தங்கிவிடும்போது, அடுத்தவரின் கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் ஏற்க மறுக்கிறோம். தூய ஆவியாரின் வருகையால் வாழ்வு பெற்றுள்ளத் திருஅவை, எண்ணங்களாலும், வலிமையாலும் நிரப்பப்படுவதில்லை; மாறாக, அடுத்தவருக்குப் பணியாற்றும் அன்பினால் நிரப்பப்படுகிறது.
தூய ஆவியார் வழங்கும் இந்த மகிழ்வான உறுதியுடன், இங்கு கூடியிருக்கும் சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, இப்பகுதியின் திருத்தூதுப் பிரதிநிதி, ஏனைய ஆயர்கள், அருள் பணியாளர், தியாக்கோன்கள், துறவியர், பொதுநிலையினர், ஏனைய மத நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரையும் நான் அரவணைக்கிறேன்.
தூய ஆவியாரின் வருகைக்குக் காத்திருந்த சீடர்களுடன் மேலறையில் செபத்தில் இணைந்த அன்னை மரியாவை அணுகிவருவோம். இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுகளாக நாம் வாழ, இறைவன், தன் தூய ஆவியாரை நம்மிடையே அனுப்புமாறு மன்றாடுவோம்.

இந்திய நேரம் இச்சனிக்கிழமை மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய இத்திருப்பலியில் பிற வழிபாட்டுமுறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலியின் இறுதியில் இஸ்தான்புல் ஆயர் லூயிஸ் பெல்லாத்ரே அவர்கள் திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்தார். அவரது நன்றியுரையின் சுருக்கம்...

பல நிகழ்வுகளைக் கொண்ட இந்தக் குறுகியப் பயணத்தில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்காக நன்றி கூறுகிறோம். இத்திருப்பலியில் கலந்துகொள்ள விரும்பினாலும், இயலாமல் தவிக்கும் பலரது சார்பில் நன்றி கூறுகிறோம்.
இஸ்தான்புல் நகரம் ஏற்கனவே உங்கள் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற 6ம் பால், புனித 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரை வரவேற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக, எங்கள் வாழ்வைப் பகிர்ந்து, இந்நகரில் பணியாற்றி, தற்போது புனிதராக உயர்ந்துள்ள 23ம் ஜான் அவர்களை எங்களால் மறக்க முடியாது. அவரது புனிதர் பட்ட விழா ஆண்டில், அவருக்காக நாங்கள் பல விழாக்களைக் கொண்டாடினோம். இந்தக் கொண்டாட்டங்களில் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் கலந்துகொண்டது, நமது கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகத் திகழ்கிறது.
புனித 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையால், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் பல்சமய உரையாடல் ஆகிய பணிகளை திறம்பட ஆற்ற இறைவன் எங்களுக்கு வழங்கும் வரங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

இந்த திருத்தூதப் பயணத்தின் முக்கிய அம்சமாகிய கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்திப்பது இந்த 2வது நாள் பயணத் திட்டத்தில் உள்ளது.

உலகில் இரு கண்டங்களை இணைக்கும் ஒரே நகரமான இஸ்தான்புலிலுள்ள பாஸ்பொரஸ் நீர்க்கால்வாய், ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இந்த நீர்க்கால்வாய், கருங்கடலும், மார்மராக் கடலும் இணையும் இடத்தில் உள்ளது. கிரேக்க காலனியாளர்களால் கி.மு. 667ம் ஆண்டில் இஸ்தான்புல் நகரம் உருவாக்கப்பட்டது. கிரேக்கர்களின் அரசர் Byzantas  என்பவரைக் கவுரவிக்கும் விதமாக, இஸ்தான்புல் நகரம் Byzantium என அழைக்கப்பட்டது. பின்னர், கி.பி.196ம் ஆண்டில் உரோமைப் பேரரசின்கீழ்   இந்நகரம் வந்தது. கி.பி.330ம் ஆண்டு மே 11ம் தேதியன்று உரோமைப் பேரரசர் பெரிய கான்ஸ்ட்டைன், இந்நகரை பைசான்டைன் பேரரசின் அல்லது கீழை உரோமன் பேரரசரின் தலைநகராக அறிவித்தபோது, இந்நகர் கான்ஸ்டான்டிநோபிள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் என்றால், கான்ஸ்ட்டைன் நகர் என்று அர்த்தமாகும். இதனை புதிய உரோம் என்றுகூட அழைத்தனர். மத்திய காலத்தில் இந்நகரம், ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமாக விளங்கியது. உரோமைப் பேரரசு, உலகின் கிழக்கில் பரவுவதற்கும், கிரேக்க கலாச்சாரமும், கிறிஸ்தவமும் பரவுவதற்கும் இந்நகர் முக்கிய மையமாக இருந்தது. அக்காலத்தில் Hagia Sophia புகழ்பெற்ற ஆலயம் உட்பட எண்ணற்ற கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன. உரோமைப் பேரரசர் பெரிய ஜூஸ்தீனியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட Hagia Sophia ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய பேராலயமாக விளங்கியது. 

ஆயினும், 1453ம் ஆண்டு மே 29ம் தேதி நான்காவது சிலுவைப்போரின்போது, ஒட்டமான்களால் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. முஸ்லிம் பேரரசர் 2வது Mehmed தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது. பின்னர் இந்நகரம், ஒட்டமான் பேரரசின் தலைநகராக மாறியது. ஒட்டமான் சுல்தான்கள் தொடர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்நகரை ஆட்சி செய்தனர். நகரின் பெயரும் இஸ்தான்புல் என மாறியது. இஸ்தான்புல் என்றால், நகருக்கு என்று அர்த்தமாகும். கான்ஸ்டான்டிநோபிள் நகரில் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தும் இஸ்லாம் கலாச்சாரமாக மாற்றப்பட்டன. பின்னர் முதல் உலகப் போரின்போது 1922ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஒட்டமான் பேரரசு கவிழ்ந்தது. காலிஃபா ஆட்சிமுறை வீழ்ந்தது. 1923ம் ஆண்டில் துருக்கி குடியரசு உருவானது. அப்போது தலைநகர் அங்காராவுக்கு மாற்றப்பட்டது. துருக்கியின் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்றின் மையமாக விளங்கும் இஸ்தான்புல் நகரின் வர்த்தக மற்றும் வரலாற்று மையங்கள், இதன் ஐரோப்பியப் பகுதியில் உள்ளன. ஒரு கோடியே 41 இலட்சம் மக்கள் வாழும் இந்நகரம், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகப் பெரியதும், உலகின் ஆறாவது பெரிய நகரமாகவும், உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐந்தாவது பெரிய நகரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் நகருக்கு, 2012ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 16 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.   

கனவினால் வருங்கால வாழ்வைத் தீர்மானித்தவர் (St. Catherine Labouré)

கனவினால் வருங்கால வாழ்வைத் தீர்மானித்தவர்
(St. Catherine Labouré)

தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்த அந்தச் சிறுமி, தாயை அடக்கம் செய்துவிட்டு வந்தவுடன் முதல் வேலையாக, தனது அறையிலிருந்த அன்னை மரியாவின் திருவுருவத்தை எடுத்து, "அம்மா, இனி நீங்கள்தான் எனது தாய்" என்று வணங்கிச் செபித்தார். இந்த உணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு ஒரு நாள் கனவில் ஒரு காட்சி. வயதான அருள்பணியாளர் ஒருவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திலிருந்து திரும்பிய அவர், தனது கையை நீட்டி இச்சிறுமியை அழைத்தார். ஆனால் அச்சிறுமி பின்னோக்கி நடந்தார். அப்படியே அக்காட்சி அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. தான் காட்சியில் கண்ட அந்த  அருள்பணியாளர் அங்கு படுத்திருந்தார். அவர் இச்சிறுமியை அழைத்து, குழந்தாய், நோயாளிகளைப் பராமரித்து நற்பணிகள் செய். அதில் உனக்கு மகிழ்வு கிடைக்கும். இறைவன் உன்னை அதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று சொன்னார். கனவிலிருந்து விழித்தெழுந்த சிறுமி பொருள் புரியாது திகைத்தார். சிலநாள்கள் கழித்து பிறரன்பு சகோதரிகள் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றார் அச்சிறுமி. தான் கனவில் கண்ட அந்த அருள்பணியாளரின் உருவப்படம் அங்கு மாட்டியிருந்ததைக் கண்டு, அவர்தான் அச்சகோதரிகள் சபையை நிறுவிய புனித வின்சென்ட் தெ பால் என       அறிந்துகொண்டார். பின்னர் அச்சபையில் சேர்ந்த சிறுமிதான் கேத்ரீன் லாபுரே. பிரான்ஸின் Burgundy மாநிலத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில், 1806ம் ஆண்டு மே 2ம் தேதி பிறந்த கேத்ரீன் லாபுரே, துறவு வாழ்வுக்கென பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அன்னைமரியாவை பல தடவைகள் காட்சியில் கண்டவர். அன்னைமரியாவின் வேண்டுகோளின்பேரில் அற்புத பதக்கப் பக்தியைப் பரப்பியவர். "அஞ்சாதே, இந்தப் பணியைச் செய்வதற்குத் தேவையான அருளை இறைவன் கொடுப்பார். உனது ஆன்மீக வழிகாட்டியிடம் சொல். இப்பதக்கத்தை கழுத்தில் அணிபவர்கள் அளவற்ற அருள்வரங்களைப் பெறுவார்கள். பிரான்சிலும் உலகிலும் தீமை நிறைந்துள்ள காலம் இது" என்று காட்சியில் சொன்னார் அன்னைமரியா. அன்னைமரியா கூறியபடியே செயல்பட்டார் கேத்ரீன். இன்று உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள், முட்டை வடிவிலான இந்த அற்புத பதக்கப் பக்தியைக் கொண்டுள்ளனர். பாவமின்றி பிறந்த ஓ மரியே, உம்மிடம் மன்றாடும் எங்களுக்காகப் பரிந்துரை செய்யும் என்ற வார்த்தைகள் அப்பதக்கத்தைச் சுற்றி எழுதியுள்ளன. 1876ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இறந்தார் கேத்ரீன் லாபுரே. 1830ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்னைமரியா கேத்ரீனுக்குக் கொடுத்த காட்சியில்தான் இந்த அற்புத பதக்கம் பற்றி அன்னைமரியா சொன்னார். புனித கேத்ரீன் லாபுரே அவர்கள் விழா நவம்பர் 28.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

செய்திகள் - 28.11.14

செய்திகள்  - 28.11.14
நவம்பர் 28, இவ்வெள்ளி முதல், 30 ஞாயிறு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாள் நிகழ்வுகளும், அவர் அளித்த உரையும் இன்றையச் செய்திகளாக உங்களுக்குத் தருகிறோம்.


மேலும், நவம்பர் 30 இஞ்ஞாயிறன்று துவங்கும் 'உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு'க்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு மடலும் இன்று இடம்பெறுகிறது.

------------------------------------------------------------------------------------------------------
1. துருக்கி, ஒரு கண்ணோட்டம்

2. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் முதல் நாள் நிகழ்வுகள்

3. திருத்தந்தையின் உரை - துருக்கி நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது

4. திருத்தந்தை : விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்க்கு நன்றி

5. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்

------------------------------------------------------------------------------------------------------

1. துருக்கி, ஒரு கண்ணோட்டம்

நவ.28,2014. உலக வரைபடத்தில் ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களைக் கொண்டிருக்கும் தனித்துவம் பெற்ற நாடு துருக்கி. இந்நாட்டின் ஒரு சிறு பகுதி, அதாவது மூன்று விழுக்காட்டுப் பகுதி தென்கிழக்கு ஐரோப்பாவிலும், பெரும் பகுதி அதாவது 97 விழுக்காட்டுப் பகுதி மேற்கு ஆசியாவிலும் உள்ளன. இது புவியியல்முறைப்படி அல்ல, மாறாக, அரசியல்முறைப்படி இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த இரு கண்டங்களையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதரால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்றாக நோக்கப்படுகிறது. இந்தப் பாலம் துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேற்கத்திய கலாச்சாரமும், கிழக்கத்திய கலாச்சாரமும், முற்போக்குக் கருத்தியலும், இஸ்லாமிய மதமும்.. என்று துருக்கி முழுக்க இரு வேறுபட்ட உலகங்களைக் காணலாம். எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள துருக்கியின் தெற்கே மத்திய தரைக்கடலும், மேற்கே ஏஜியன் கடலும், வடக்கே கருங்கடலும் உள்ளன. துருக்கி நாட்டின் தலைநகரம் அங்காரா. ஆயினும், துருக்கியின் மிகப்பெரிய நகரம் இஸ்தான்புல். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள இஸ்தான்புல் நகரம், Bosphorus கடலால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி. இந்நாட்டில் துருக்கி நாட்டவர் 85.7 விழுக்காடும், குர்த் இனத்தவர் 11 விழுக்காடும், அராபியர்கள் 1.5 விழுக்காடும், பிற மக்கள் 1.8 விழுக்காடும் உள்ளனர். மேலும், 98 விழுக்காட்டுக்கு அதிகமானோர் முஸ்லிம்கள். திருத்தூதர் பவுலடிகளார் நற்செய்தி அறிவித்த துருக்கி நாடு ஒரு காலத்தில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ உலகின் மையமாக இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டின் ஏறக்குறைய எட்டு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரே கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டின் தென்கிழக்கே ஈராக்கும் சிரியாவும் அமைந்துள்ளன. எனவே, அந்நாடுகளில் இடம்பெற்றுவரும் சண்டைகளால், புலம்பெயர்ந்துள்ள மக்களில் ஏறக்குறைய 16 இலட்சம் பேர் துருக்கியில் உள்ளனர்.
அங்காரா, 1923ம் ஆண்டிலிருந்து துருக்கியின் தலைநகராக விளங்கி வருகிறது. துருக்கிக் குடியரசை நிறுவியவரும், ஒரு புரட்சியாளரும், வீரம் மிகுந்த படைவீரரும், மாபெரும் தலைவரும், அனைத்துலக அளவில் புகழ்பெற்றவருமாக நோக்கப்படும், அந்நாட்டுத் தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. நாற்பது டன்கள் பளிங்குக் கற்களால் ஒன்பது ஆண்டுகள் கட்டப்பட்ட இந்நினைவுச் சின்னம், ஏழு இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பத்துக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. அத்தாத்துர்க் இறந்து 15 ஆண்டுகள் கழித்து, 1953ம் ஆண்டில் அவரின் சவப்பெட்டி இவ்விடத்துக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதைக் கட்டுவதற்கான வடிவமைப்பைப் பெறுவதற்கு அனைத்துலக அளவில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் எமின் ஓனட் என்பவர் வெற்றி பெற்றார். இதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 24 சிங்கங்கள், வீரத்துக்கும் பாதுகாப்புக்கும் அடையாளமாக உள்ளன. வாழ்வதென்பது போராடுவது மற்றும் போரிடுவது. போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு மட்டுமே வாழ்வில் வெற்றி கிடைக்கும். ஒரு நாடு சுதந்திரம் இன்றி வாழ்ந்ததில்லை, வாழ முடியாது. விடுதலை அல்லது மரணம். ஒரு நாட்டின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருக்கும்போது சண்டை தொடுப்பது ஒரு கொலைக் குற்றம்" போன்ற அத்தாத்துர்க்கின் கூற்றுகள் இந்த கல்லறை நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் முதல் நாள் நிகழ்வுகள்

நவ.28,2014. நவம்பர் 28, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை ஒன்பது மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து A320 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு புனித பூமிக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பயணத்திலிருந்து இந்நாள்வரை, திருப்பயணங்களின்போது ஆல் இத்தாலியா விமானங்களே திருத்தந்தையரை ஏற்றிச் செல்கின்றன. இவ்வெள்ளி காலையில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் Umberto Saba என்பவருக்குத் திருமுழுக்கு அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வழக்கமான கருப்புநிற பையுடன் விமானத்தில் ஏறிய திருத்தந்தை, அங்கிருந்த அனைவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார். இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களும் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்திருப்பயணம், துருக்கி மக்களுக்கு, நம்பிக்கை நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார் நாப்போலித்தானோ. திருத்தந்தையுடன் திருஅவையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பன்னாட்டுப் பத்திரிகையாளர்களும் பயணம் செய்தனர்.
மூன்று மணி நேரம் விமானப் பயணம் செய்து, துருக்கி நேரம் பகல் ஒரு மணிக்கு, அங்காரா Esemboga  பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் இவ்வெள்ளி மாலை 4.30 மணியாகும். திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Lucibello, இன்னும், துருக்கி அரசுத்தலைவரின் பிரதிநிதியாக ஓர் அமைச்சரும் திருத்தந்தையை வரவேற்றனர். மற்ற அதிகாரப்பூர்வ வரவேற்புகள் அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றன.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து துருக்கிக்குப் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு துருக்கி நாடு செய்துவரும் மனிதாபிமான உதவிகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்காரா Esemboga பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்திற்கு காரில் சென்று அதைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இங்குள்ள தேசிய உடன்படிக்கைக் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், இரு கண்டங்களுக்குப் பாலமாக விளங்கும் துருக்கி நாடு, பாதைகள் கடந்துசெல்லும் இடமாக மட்டும் இல்லாமல், சந்திப்பின் இடமாகவும், நன்மனம் கொண்ட மக்கள், ஒவ்வொரு கலாச்சாரம், இனம், மதம் ஆகியவற்றின் மத்தியில், உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் இடமாகவும் அமையட்டும் என கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், ரோஜா மலர் வளையும் ஒன்றையும் அத்தாத்துர்க் கல்லறையில் வைத்தார்.

துருக்கி தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ”Ak Saray” அதாவது வெள்ளை மாளிகை என அழைக்கப்படும் இம்மாளிகை, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆயிரம் அறைகளும், ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய ஒரு மசூதியும் உள்ளன. இங்கு திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. வத்திக்கான் மற்றும் துருக்கி நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. முக்கியமானவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்களும் தனியே ஓர் அறையில் கலந்துரையாடினர். பின்னர் மற்ற அதிகாரிகளும் திருத்தந்தையை கைகுலுக்கி வாழ்த்தினர். பின்னர் அரசுத்தலைவர் Erdogan அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அறுபது வயதான அரசுத்தலைவர் Erdogan அவர்கள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதன் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் துருக்கி நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். 

அதன் பின்னர், திருத்தந்தை, அரசுத்தலைவருக்கு உரோம் Castel Sant’Angelo” கலைவண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஒன்றை பரிசாக அளித்தார். இச்சந்திப்பை முடித்து துருக்கி பிரதமரையும் சந்தித்தார் திருத்தந்தை. இந்த முதல் நாள் திருப்பயணத் திட்டத்தில், துருக்கி சமய விவகாரத் துறைத் தலைவரைச் சந்தித்து உரையாற்றுவது உள்ளது. திருத்தூதர் பேதுரு, தனது சகோதரர் அந்திரேயாவைச் சந்திக்கும் பயணமாக துருக்கி நாட்டுக்கான இத்திருப்பயணம் அமைகின்றது என்று திருத்தந்தையே குறிப்பிட்டுள்ளார். அதன் காரணத்தை அடுத்தடுத்த இப்பயண நிகழ்வுகள் நமக்கு வெளிப்படுத்தும்.
புலம்பெயர்ந்தவர் பிரச்சனை, இன்னும் சில பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வரும் துருக்கி நாட்டில் அமைதியையும், இணக்க வாழ்வையும் மேம்படுத்தவும், மதங்களுக்கிடையில் மனம் திறந்த உரையாடலை ஊக்குவிக்கவும் இந்நாட்டுக்கான மூன்று நாள் திருப்பயணத்தை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். துருக்கி வரலாற்றில் அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை செல்கின்ற நான்காவது திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறாவது வெளிநாட்டுத்  திருப்பயணமாகவும் இது அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் உரை - துருக்கி நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது

நவ.28,2014. பழமைக் கலாச்சாரத்தின் சுவடுகள், வரலாறு, இயற்கை அழகு அனைத்தும் நிறைந்த உங்கள் நாட்டிற்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் ஜரோப்பா, ஆசியா என்ற இரு கண்டங்களை இணைக்கும் இயற்கைப் பாலமாக இந்நாடு அமைந்துள்ளது. புனித பவுல் அடியார் பிறந்த இடம் என்பதாலும், திருஅவையின் முதல் ஏழு சங்கங்கள் நடைபெற்ற இடம் என்பதாலும், இந்நாடு கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் அமைந்துள்ள எபேசு நகரத்திற்கு அருகே 'அன்னை மரியாவின் இல்லம்' இருந்ததாக பாரம்பரியம் சொல்வதால், இந்நாட்டின் முக்கியத்துவம் பெருகியுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இஸ்லாமியருக்கும் இப்பகுதி ஒரு புண்ணியத் தலமாக விளங்குகிறது.
பழமை வரலாறு மட்டும் துருக்கியின் புகழுக்குக் காரணம் அல்ல, மாறாக, இந்நாடு தற்போது கொண்டிருக்கும் கடின உழைப்பு, மக்களின் தாராள குணம் ஆகியவை இந்நாட்டைப் புகழ்பெறச் செய்துள்ளது.
உரையாடல் வழியே இந்த நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது. என் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர், மதிப்பு, மரியாதையுடன் மேற்கொண்ட உரையாடலை நானும் தொடர விழைகிறேன். இந்நாட்டில் திருத்தூதுப் பிரதிநிதியாக பணியாற்றி, இந்த உரையாடலுக்கு அடித்தளம் இட்ட Angelo Giuseppe Roncali அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, தற்போது புனித 23ம் ஜான் என விளங்குகிறார்.

இன்று நமக்கு மிகவும் தேவையானது, உரையாடல். ஒருவரை ஒருவர் மனதார மதித்து, நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கு, உரையாடல் மிகவும் தேவை. மிகுந்த பொறுமையுடன் மேற்கொள்ளப்படும் இந்த உரையாடல் வழியே, நம்மிடம் உள்ள முற்சார்பு எண்ணங்கள் நீங்கவும், அச்சங்கள் அகலவும் வழிபிறக்கும்.
இஸ்லாமியர், யூதர், கிறிஸ்தவர் என்ற நாம் அனைவரும், ஒருவர் ஒருவரின் உரிமைகளையும், கடமைகளையும் மதிக்க முன்வந்தால், நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வில் வளரமுடியும். மத உரிமை, கருத்துரிமை இரண்டும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டால், அதுவே அமைதியின் மிக அழகிய அடையாளமாக விளங்கும்.
வளர்ச்சியடைந்த, பண்பட்ட இத்தகைய நட்புறவையே மத்தியக் கிழக்குப் பகுதி, ஐரோப்பா, உலகம் அனைத்தும் எதிர்பார்த்து நிற்கின்றன. உடன்பிறப்புக்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் போர்கள் பல மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறுகின்றன. போர், வன்முறை ஆகியவற்றிற்கு, போரும் வன்முறையுமே பதிலாக அமையும் என்று இத்துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன.
மத்தியக் கிழக்குப் பகுதியை அழித்துவரும் இத்துன்பங்கள் இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்கவேண்டும்? இந்த அவல நிலைக்கு ஒரு மாற்று இல்லை என்று நாம் மனம் தளர்ந்து போகக்கூடாது. இறைவனின் துணையோடு, நாம் இப்பகுதியில் அமைதியைக் கொணரமுடியும் என்று நம்பிக்கை கொள்வோம்.
அரசுத் தலைவர் அவர்களே, அமைதி என்ற உயர்ந்த இலக்கை அடைவதற்கு, மதங்கள் மத்தியிலும், கலாச்சாரங்கள் மத்தியிலும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். உரையாடல் வழியே, நமது அடிப்படைவாதப் போக்குகள் மறைய வாய்ப்புண்டு.
மனித உயிர் மதிப்பு, மத உரிமை மதிப்பு என்ற இவ்விரண்டும், ஒருங்கிணைந்த வாழ்வைத் தாங்கும் தூண்கள். இத்தகைய ஒருங்கிணைந்த வாழ்வு, மத்தியக் கிழக்குப் பகுதியில் மிக அவசரமானத் தேவையாக உள்ளது.
ஆயினும், அண்மையக் காலம் வரை, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. குறிப்பாக, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வன்முறைகள் குறைவதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள், Yazidi இனத்தவர் என்ற இரு சிறுபான்மை குழுக்கள், மிக அதிக துன்பங்களை அடைந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
புலம் பெயரும் இம்மக்களை மிகுந்த தாராள மனதோடு துருக்கி நாடு வரவேற்று வருகிறது. துருக்கி நாடு ஆற்றிவரும் இந்த உதவிக்கு பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த மனிதாபிமான பிரச்சனையை இராணுவத்தின் துணைகொண்டு தீர்ப்பது மட்டும் சரியான தீர்வு அல்ல. அனைவரும் இணைந்து இந்த வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
போர், இராணுவம், ஆயுதம் ஆகிய அழிவு வழிகளில் தங்களிடம் உள்ள செல்வங்களை செலவிடுவதை ஒவ்வொரு நாடும் நிறுத்திவிட்டு, பசி, வறுமை, ஒழிப்பு, வேலைவாய்ப்பு, தகுந்த வழிகளில் முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு ஆகிய ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடுவதே இன்றைய முக்கியத் தேவை.
தனது வரலாறு, உலக வரைப்படத்தில் தான் கொண்டுள்ள முக்கியமான இடம், என்ற சக்திநிறைந்த அம்சங்களைப் பயன்படுத்தி, சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதில், துருக்கி நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். உண்மையான அமைதி, உறுதியான முன்னேற்றம் ஆகியவற்றை நிலைநாட்ட துருக்கி ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டும்.
அமைதியை உருவாக்கும் கருவியாக துருக்கி நாடு விளங்க, இறைவன் ஆசீர் வழங்கி, இந்நாட்டைக் காப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்க்கு நன்றி

நவ.28,2014. இந்தப் பயணத்தில் உங்களின் உடனிருப்புக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களை வரவேற்கிறேன். இந்த, சமய மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில், உங்களின் பணி ஓர் ஆதரவாக, ஓர் உதவியாக, அதோடு உலகுக்கும் ஒரு சேவையாக உள்ளது. இக்காலத்தில், அண்டை நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்துள்ள பல மக்களுக்கு உதவி வரும் துருக்கி நாடு ஒரு சாட்சியாகவும் உள்ளது. இவ்வேளையில் பத்திரிகையாளர்களின் பணிகள் முக்கியமானவை. உங்கள் பணிக்கு நன்றி கூறுகிறேன். துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தில் மீண்டும் பத்திரிகையாளர் கூட்டத்தில் சந்திப்போம். நன்றிகள் பல. நல்ல பயணமாக இது அமையட்டும் என்று விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்

நவ.28,2014. அர்ப்பண வாழ்வை மேற்கொண்டவர்கள், வரலாற்றை நன்றியோடு ஏற்கவும், நிகழ்காலத்தை ஆழ்ந்த ஆர்வத்தோடு வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 30, இஞ்ஞாயிறு முதல், 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி முடிய கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று சிறப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்மடலின் சுருக்கம் இதோ:

அர்ப்பணிக்கப்பட்ட சகோதரிகளே, சகோதரர்களே,
'உன் சகோதரர்களை உறுதிப்படுத்து' (லூக்கா 22,32) என்று புனித பேதுருவுக்கு இயேசு கூறிய அறிவுரையின்படி, பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையிலும், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள ஒரு சகோதரன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு இம்மடலை எழுதுகிறேன்.
2ம் வத்திக்கான் சங்கத்தால் உருவாக்கப்பட்ட 'மக்களின் ஒளி' (Lumen Gentium) என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாட நான் அழைப்பு விடுத்தேன். நவம்பர் 30, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று துவங்கும் இந்த உலக ஆண்டு, 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி, ஆண்டவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளன்று நிறைவுபெறும்.

இவ்வாறு துவங்கும் இச்சிறப்பு மடலில், திருத்தந்தை,
1. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்
2. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்
என்ற மூன்று பகுதிகளில் தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

I அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்:

வரலாற்றை நன்றியோடு ஏற்பது, முதல் குறிக்கோள். ஒவ்வொரு துறவு சபையின் வரலாறும், தனி வரங்களும் செறிவுமிக்கவை. இச்செல்வங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது அவசியம். இந்த வரலாற்றில் உருவான குறைகளையும், சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து, பாடங்களைப் பயிலவேண்டும். குறிப்பாக, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகள், தூய ஆவியாரின் புதிய 'மூச்சுக் காற்று' ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் காண்பது மிகவும் அவசியம்.
நிகழ்காலத்தை ஆழமான ஆர்வத்துடன் வாழ்வது, 2வது குறிக்கோள். ஒவ்வொரு துறவுச் சபையையும் நிறுவியவர்கள், இயேசுவின் மீதும், அவரது பணியின் மீதும் கொண்டிருந்த ஆழமான ஆர்வம், நம் வாழ்வில் தொடர்ந்து வெளிப்படவேண்டும். இந்த ஆர்வம் நம்மிடையே குறைந்து, மங்கிப் போய்விட்டதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு ஒரு தகுந்த வாய்ப்பு.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அரவணைப்பது, 3வது குறிக்கோள். மேற்கத்திய நாடுகளில் இறையழைத்தல் குறைந்து, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோரின் சராசரி வயது கூடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், எதையும் நிரந்தரமற்றதாய் காணும் மனநிலை ஆகியவை, இன்றைய உலகில் வளர்ந்துள்ளன.
இத்தகையச் சூழலில், நமது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்பதை உணரவேண்டும். எண்ணிக்கை, வெற்றி என்று இவ்வுலகம் காட்டும் அளவுகோல், நமது நம்பிக்கையைப் பாதிக்காமல், இறைவனில் நம்பிக்கை கொள்ளவேண்டும். எல்லாமே அழிவு என்று இவ்வுலகம் பறைசாற்றும் கருத்துக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு, தன் குறிக்கோள்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, 2வது பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புக்களாக 5 எண்ணங்களை முன்வைத்துள்ளார்:

II அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்:

1. அர்ப்பணிக்கப்பட்டோர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உலக மக்களைப் போலவே, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனால், இறைவனில் நம்பிக்கை கொண்டு, இந்தப் பிரச்சனைகளைத் தாண்டி, துறவியர் மகிழ்வை வெளிப்படுத்த வேண்டும்.
2. அர்ப்பணிக்கப்பட்டோர் இவ்வுலகை விழித்தெழச் செய்வர் என்று எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு துறவுச் சபைக்கும் வழங்கப்பட்டுள்ள தனி வரங்களின் அடிப்படையில் இவ்வுலகை மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு கனவுலகை (Utopia) அல்ல, மாறாக, ஒரு மாறுபட்ட உலகை உருவாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
3. 'ஒன்றிப்பின் அறிஞர்களாக' (experts of communion) அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வர் என்று எதிர்பார்க்கிறேன். தாங்கள் வாழும் குழுமங்களில் இந்த ஒன்றிப்பு துவங்கவேண்டும். புறம்பேசுதல், பொறாமை, வன்மம் ஆகியவை, துறவற இல்லங்களில் இருப்பதற்குத் தகுதியற்ற பண்புகள். துறவு சபைகள் ஒன்றோடொன்று ஒன்றிப்பை வளர்ப்பதையும் இவ்வாண்டு நான் எதிர்பார்க்கிறேன்.
4. அர்ப்பணிக்கப்பட்டோர், இவ்வாண்டில், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்வதை எதிர்பார்க்கிறேன். துறவு இல்லங்களில் உருவாகும் கருத்து வேறுபாடுகளில் சிறைப்பட்டு போகாமல், சமுதாயத் தேவைகளை முன்னிறுத்தும் வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. திருஅவைக்கு, குறிப்பாக, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட துறவு சபைகள் ஒன்றிணைந்து வருவதை எதிர்பார்க்கிறேன். உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, ஒரு தனிப்பட்ட, உன்னத காலமாக இருக்க, இறையாவியாரின் அருளை எதிர்பார்க்கிறேன்.

இச்சிறப்பு மடலில், 'அர்ப்பண வாழ்வின் தொடுவானங்கள்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைப்பிட்டுள்ள மூன்றாவது பகுதியில், அர்ப்பண வாழ்வு, இன்னும் எவ்வாறு வேறு வழிகளில் தன் எல்லைகளை விரிவாக்க முடியும் என்பதை 5 கருத்துக்களாகப் பகிர்ந்துள்ளார்:

III அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்

1. அர்ப்பணிக்கப்பட்டோர் மட்டுமல்லாமல், போதுநிலையினருக்கும் நான் விண்ணப்பிக்கிறேன். துறவு சபைகள், பொது நிலையினரோடு இணைந்து பணியாற்றுவது வரலாற்று உண்மை. அர்ப்பண வாழ்வை வேறு வழிகளில் தேர்ந்துள்ள பொதுநிலையினருக்கும் நான் இந்த சிறப்பு ஆண்டில் விண்ணப்பிக்கிறேன். உங்கள் தனி வரங்களுடன் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருங்கள்.
2. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள துறவியருக்கு மட்டுமல்ல, மாறாக, அனைத்துலக திருஅவைக்கும் ஒரு சிறப்பான ஆண்டு.
புனிதர்களான பெனடிக்ட், பேசில், அகஸ்டின், பிரான்சிஸ், தோமினிக், லொயோலா இஞ்ஞாசியார், அவிலா தெரேசா, ஆஞ்செலா மெரிசி, வின்சென்ட் தே பால் ஆகியோர் இல்லாத திருஅவையை எண்ணிப்பார்க்க இயலாது. புனித ஜான் போஸ்கோ, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா என்று, இந்தப் பட்டியல் மிக நீளமானது. இத்தனைப் புனிதர்களின் உதவியால், திருஅவை வளர்ந்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல அனைவரையும் அழைக்கிறேன்.
3. கத்தோலிக்கப் பாரம்பரியத்தைச் சேராத கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்திலும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் இம்மடல் வழியே நான் அழைப்புவிடத் துணிகிறேன். இந்தச் சிறப்பு ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் தழைத்து வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
4. துறவு என்ற நிலைப்பாடு, அனைத்து பெரும் மதங்களில் காணப்படும் ஓர் உண்மை. அனைத்து மதங்களுடனும் இன்னும் ஆழமான உறவு வளர்வதற்கும் இவ்வாண்டு ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
5. இறுதியாக, என் சகோதர ஆயர்களுக்கு நான் விண்ணப்பிக்கிறேன். அர்ப்பண வாழ்வும், ஒவ்வொரு துறவுச் சபையின் தனிவரங்களும் திருஅவைக்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகள் என்பதை ஆயர்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, துறவுச் சபைகளை உற்சாகப்படுத்த அழைக்கிறேன்.

ஆழ்நிலை தியானம், ஆண்டவனுக்குச் செவிமடுத்தல் என்ற உன்னத பண்புகளின் எடுத்துக்காட்டான மரியன்னையிடம் இந்த உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டை ஒப்படைக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி