Sunday 28 October 2012

Best Of UFO Sightings Of June 2012, AFO

robert john kennedy: Catholic News in Tamil - 27/10/12

robert john kennedy: Catholic News in Tamil - 27/10/12: 1. திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள் , குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும் 2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மு...

Catholic News in Tamil - 27/10/12

1. திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும்

2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால்

3. அருள்தந்தை லொம்பார்தி : இறைவனால் அன்புகூரப்பட்ட உலகில்...

4. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் புது வழிமுறைகளைத் தேடும் மாநாடு

5. சீனக் கத்தோலிக்கரின் உலக மாநாடு

6. மிசோராமில் புகையிலைப் பயன்பாடு நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அழைப்பு

7. முப்பது வயதில் புகைப்பிடிப்பதைக் கைவிடும் பெண்கள், குறைந்த வயதில் இறக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றனர்

8. மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்

9. மியான்மாரில் தொடரும் வன்முறைகள், ஐ.நா.எச்சரிக்கை

10. கூடங்குளம்: வட இலங்கையிலும் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும்

அக்.27,2012. குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழும், மறைக்கல்விகள், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் கீழும் இனிமேல் இயங்கும் என்பதை இச்சனிக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சனிக்கிழமை காலையில் தொடங்கிய புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 22வது பொது அமர்வின் இறுதியில் இதனை அறிவித்தார் திருத்தந்தை.
252 மாமன்றத் தந்தையர் பங்கு பெற்ற இப்பொது அமர்வில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, குருத்துவக் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்திலிருந்து எடுக்கப்பட்டு குருக்கள் பேராயத்திடமும், மறைக்கல்விகளை நடத்தும் பொறுப்பு, குருக்கள் பேராயத்திலிருந்து எடுக்கப்பட்டு புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடமும் கொடுக்கப்படுவதாகக் கூறினார்.
ஆழ்ந்த செபம் மற்றும் சிந்தனைகளுக்குப் பின்னர் இதனை அறிவிப்பதாகவும், இந்த மூன்று துறைகளும் தங்களது பணிகளைத் திறம்படச் செய்யும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இத்துடன் கடந்த பிப்ரவரியின் கர்தினால்கள் அவை முழுமை அடைகின்றது என்றும் கூறினார்.
மேலும், இச்சனிக்கிழமையன்று இம்மாமன்ற விரிவுரையாளர் வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald William WUERL, இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலர் பிரான்சின் Montpellier பேராயர் Pierre Marie CARRÉ, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி ஆகியோர் ஆங்கிலம், ப்ரெஞ்ச், இத்தாலியம் ஆகிய மொழிகளில், மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகள் குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கினர்.
மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகளின் அதிகாரப்பூர்வ இறுதிப் பட்டியல், உலக ஆயர்கள் மாமன்ற விதிமுறைகளின்படி இலத்தீனில் இருக்கும், ஆனால், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனுமதியின்பேரில், தற்போது இது ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது என்று இந்நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது.
இந்தப் பரிந்துரைகள் திருத்தந்தையிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது எனவும் கூறப்பட்டது. 
வத்திக்கானில் இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியோடு நிறைவடையும். 

2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால்

அக்.27,2012. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio G. TAGLE உட்பட 12 பேரும், திருத்தந்தையால் மூவரும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர்.  
இவ்வெள்ளி மாலை நடைபெற்ற இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் 21வது பொது அமர்வில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச் இதனை அறிவித்தார்.
இச்சனிக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகளின் தொகுப்பும், இந்த வெள்ளி மாலைப் பொது அமர்வின்போது மாமன்றத் தந்தையரிடம் கொடுக்கப்பட்டது.
இதில் 249 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
3. அருள்தந்தை லொம்பார்தி : இறைவனால் அன்புகூரப்பட்ட உலகில்...

அக்.27,2012. இந்த உலகம் முரண்பாடுகளாலும் சவால்களாலும் நிறைந்திருந்தாலும், அதனை இறைவன் அன்பு கூருகிறார் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதால், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு பதட்டமில்லாத துணிவுடன் உலகை நோக்க வேண்டும் எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்தந்தை லொம்பார்தி.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் அவசியம் குறித்து திருஅவை சிந்தித்துள்ள கருத்துக்கள், இன்று உலகில் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிப்பதற்கு ஏற்படும் இன்னல்கள், மக்கள் இறைநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்வதால் ஏற்படும் அனுபவங்கள்  ஆகியவற்றிலிருந்து எழுந்தவை என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறியுள்ளார்.
உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் திருஅவைக்கு வழங்கியுள்ள செய்தியும், தூய ஆவியின் வல்லமையிலும் உயிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்திலும் இறைவனில் நம்பிக்கை வைப்பதை அடிப்படையாகக் கொண்ட அர்ப்பணமும் நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளாக உள்ளன   என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்துள்ளார். 

4. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் புது வழிமுறைகளைத் தேடும் மாநாடு

அக்.27,2012. அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள் என்ற தலைப்பில் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத்தில் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் இஞ்ஞாயிறன்று நான்கு நாள் மாநாட்டைத் தொடங்குகின்றனர்.
இதில், துறவு சபைகளின் அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர்.
CRI எனப்படும் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர்.
இந்தியத் துறவு சபைகளின் அதிபர்களின் தேசிய மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.

5. சீனக் கத்தோலிக்கரின் உலக மாநாடு

அக்.27,2012. பொதுநிலை விசுவாசிகளின் மறைப்பணிகள் குறித்த ஆறுநாள் மாநாடு ஒன்றை உலகின் 27 நகரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 170 சீனக் கத்தோலிக்கர் ஹாங்காங்கில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளனர்.
ஹாங்காங் மறைமாவட்டம் சிறப்பித்து வந்த பொதுநிலையினர் ஆண்டை நிறைவு செய்யும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தொலைத்தொடர்புகளும் பயண வசதிகளும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள ஹாங்காங்கில் இம்மாநாட்டை நடத்துவது பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்த ஹாங்காங் மறைமாவட்ட முதன்மைக்குரு Dominic Chan Chi-ming, கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள  பொதுநிலையினரின்  மறைப்பணிகள் குறித்து விளக்கினார்.

6. மிசோராமில் புகையிலைப் பயன்பாடு நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அழைப்பு

அக்.27,2012. இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்வேளை, அம்மாநில மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு, மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் கேட்டுள்ளது.
ஆலயங்களும் ஆலய வளாகங்களும் மக்கள் கூடும் இடங்களாக இருப்பதால், அவ்விடங்களில் புகைப்பிடிப்பது சட்டத்தை மீறுவதாகும் என்று சொல்லி, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அக்கழகம் கேட்டுள்ளது.
மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் நடத்திய கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகள் கலந்து கொண்டன.
வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோராமில் ஏறக்குறைய 87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

7. முப்பது வயதில் புகைப்பிடிப்பதைக் கைவிடும் பெண்கள், குறைந்த வயதில் இறக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றனர்

அக்.27,2012. முப்பது வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் பெண்கள், புகையிலைத் தொடர்புடைய நோய்களால் குறைந்த வயதிலே இறக்கும் ஆபத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்றப்படுகின்றனர் என்று Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
பிரிட்டனில் 12 இலட்சம் பெண்களிடம் எடுத்த ஆய்வின் முடிவில் இவ்வாறு கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கும் அந்த ஆய்வு, ஒரு நாளைக்குப் பத்து சிகரெட்டுக்கும் குறைவாகப் பிடிப்பவர்கள்கூட விரைவிலே இறக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது. 
உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர். மேலும், ஏறக்குறைய 25 நோய்களுக்குப் புகைப்பிடித்தல் காரணமாக அமைகின்றது.
மனித உடலைப் பாதிக்கும் நான்காயிரம் வேதியப் பொருள்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவற்றில் எட்டு, புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன.   

8. மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்

அக்.27,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் இசுலாம் தீவிரவாதிகளால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று மறைபோதக அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.
மாலியின் வட பகுதியில் இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் அமைத்துள்ள ஆட்சியில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பல கிறிஸ்தவர்கள் தென் பகுதிக்குச் சென்று விட்டனர் என்று அருள்பணி Laurent Balas கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மாலி நாட்டின் வடக்கிலிருந்து இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்கள் Algeria அல்லது Mauritania விலுள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது.
ஆயினும் இவ்வெண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அக்குரு, பல முஸ்லீம்களும் தீவிரவாதக் குழுக்களுக்குப் பயந்து வெளியேறியுள்ளனர் என்று கூறினார்.  

9. மியான்மாரில் தொடரும் வன்முறைகள், ஐ.நா.எச்சரிக்கை

அக்.27,2012. மியான்மாரின் மேற்கிலுள்ள Rakhine மாநிலத்தில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை Rohingya முஸ்லிம்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் இனரீதியான வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
Rakhine மாநிலத்தில் இடம்பெறும் வன்முறையால் இவ்விரு இனத்தவரும் தொடர்ந்து துன்பப்பட்டு வருவதால், இவ்விரு இனத்தவருக்கும் இடையே ஒப்புரவு ஏற்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு மியான்மார் அரசு உடனடியாக முயற்சிகள் எடுக்குமாறு, மியான்மார் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.சிறப்புத் தொடர்பாளர் Tomás Ojea Quintana கேட்டுக் கொண்டார்.
மியான்மாரில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன. தற்போதைய வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 2,000 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.
Rohingya முஸ்லிம்களைத் தனது குடிமக்களாக ஏற்க மறுக்கும் மியான்மார் அரசு, அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி வருகிறது.

10. கூடங்குளம்: வட இலங்கையிலும் எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்கள்

அக்.27,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டங்களுக்கு ஆதரவாக, இலங்கையின் வட பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்தத் துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.
மேலும், கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை இந்திய அரசு பொருட்படுத்தாமல் இருப்பதால் அம்மக்களுக்கு ஆதரவாகத் தாங்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளன.
மக்கள் போராட்டக் குழு என்ற அமைப்பு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

 

robert john kennedy: Catholic News in Tamil - 26/10/12

robert john kennedy: Catholic News in Tamil - 26/10/12: 1. திருத்தந்தை : வத்திக்கானின் கலை , உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது 2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு 3. ஆயர்க...

Catholic News in Tamil - 26/10/12


1. திருத்தந்தை : வத்திக்கானின் கலை, உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது
2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு

3. ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி : புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை

4. சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் நம்பிக்கை
 
5. சிரியாவிலுள்ள டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் நம்பிக்கையின் அடையாளம்

6. சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம்

7. புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : வத்திக்கானின் கலை, உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது

அக்.26,2012. வத்திக்கானின் கலைப் பாரம்பரியம் உலகுக்கு ஒருவகை உவமையாக இருக்கின்றது, இது வழியாக, உலகின் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சார மனிதர்களிடம் திருத்தந்தையரால் பேச முடிகின்றது எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கலையும் நம்பிக்கையும் : வத்திக்கானில் அழகு என்ற தலைப்பில்  வத்திக்கான் அருங்காட்சியகம் பற்றிய போலந்து திரைப்படத்தை இவ்வியாழன் மாலையில் பார்த்த பின்னர் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
வத்திக்கான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருள்களிலும் வெளிப்படும் கலைக்கும் நம்பிக்கைக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இத்திரைப்படம் இல்லாவிடினும், நம்பிக்கை ஆண்டின் தொடக்கத்தில் இத்திரைப்படம் வெளிவருவது சிறப்பான மதிப்பைப் பெறுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
உங்களுக்கு இறையாட்சியின் மறையுண்மைகள் விளக்கப்பட்டுள்ளன, மற்றவர்கள் இதனை உவமைகள் மூலம் புரிந்து கொள்வார்கள் என, இயேசு தமது சீடர்களுக்குக் கூறியதை இத்திரைப்படம் நினைவுகூர வைக்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.


2. உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு

அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 20வது பொது அமர்வு இவ்வெள்ளி காலை தொடங்கியது.
258 மாமன்றத் தந்தையர் பங்கு பெற்ற இப்பொது அமர்வில், இந்த மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்படும் செய்தி சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த வாக்கெடுப்பும் நடைபெற்றது.
இறைமக்களுக்குச் செய்தி எனும் தலைப்பிலான இச்செய்தி, இத்தாலியம், ப்ரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டது. பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பையும் அது பெற்றது.
மேலும், இம்மாமன்ற விரிவுரையாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்த ஆய்வுகளும்  இடம்பெற்றன. 17 பேர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்பரிந்துரைகளின் இறுதித் தொகுப்பு சமர்ப்பிக்கப்படுவது, இவ்வெள்ளி மாலையில் இடம்பெறும் 21வது பொது அமர்வின் கால அட்டவணையில் உள்ளது.


3. ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி : புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை

அக்.26,2012. புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய உலகுக்கு அவசரத் தேவை எனவும், கிறிஸ்தவர்கள், நம்பிக்கையால் பயத்தை மேற்கொண்டு, அமைதியுடன்கூடிய துணிச்சலுடன் இவ்வுலகில் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமெனவும் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.
இறைமக்களுக்குச் செய்தி எனும் தலைப்பில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், உலகின் அனைத்து இறைமக்களுக்குமென 14 தலைப்புகளில் வழங்கிய செய்தி, இவ்வெள்ளிக்கிழமையன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குடும்பத்தினர், இளையோர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் பொறுப்புகள் இச்செய்தியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் திருஅவைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் செய்தி வழங்கியுள்ள மாமன்றத் தந்தையர், உலகின் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி மக்களைக் கொண்டுள்ள ஆசியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களின் இருப்பு பலனுள்ளதாக இருக்கின்றது எனப் பாராட்டியுள்ளனர்.
ஆசியக் கண்டத்தில் பல இடங்களில் திருஅவை நசுக்கப்பட்டாலும், அது தனது உறுதியான நம்பிக்கையால், நீதி, வாழ்வு, நல்லிணக்கத்தை அறிவிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியின் விலைமதிப்பில்லாத பிரசன்னத்தை உணர்த்தி வருகிறது எனவும், ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உலகின் மற்ற நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களின் சகோதரத்துவ அன்பை உணருமாறும் அச்செய்தி ஊக்குவித்துள்ளது. 
யோவான் நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள, காலியான குடத்துடன் கிணற்றடியில் நின்ற சமாரியப் பெண் போன்று, இறைமக்கள் பல நேரங்களில் தடுமாற்றத்திலும் குழப்பத்திலும், சோர்வடைந்தும் இருக்கின்றனர், ஆயினும் அப்பெண்ணில் கடவுளுக்கான ஏக்கம் இருந்தது, அப்பெண் போன்று இயேசுவைச் சந்தித்தவர்கள் அமைதியாக இருக்க முடியாது, மாறாக அவரை அறிவித்து அவருக்குச் சான்றுகளாக வாழ வேண்டுமென அச்செய்தி வலியுறுத்துகிறது.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு ஒவ்வொருவரின் சொந்த மனமாற்றமும் முக்கியம் என்பதையும் அச்செய்தி கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.


4. சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் நம்பிக்கை 

அக்.26,2012. வருங்காலத்தில் சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள உரையாடல் இடம்பெறும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
சீனத் திருஅவைக்கெனத்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய கடிதம் வெளியிடப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் என்ற தலைப்பில் 2,500 வார்த்தைகளைக் கொண்ட செய்தி ஒன்றை, சீனக் கம்யூனிச அரசுக்கும் இலட்சக்கணக்கான சீனக் கத்தோலிக்கருக்குமென இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் கர்தினால் Filoni.
இத்தாலியம், ஆங்கிலம், சீனம் ஆகிய மூன்று மொழிகளில்   வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் சீனாவுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே பலனுள்ள புதிய உரையாடல் இடம்பெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் கர்தினால் Filoni.
சீனக் கத்தோலிக்கர் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் Filoni, சீனாவில் சமய சுதந்திரம் குறைவாக இருப்பது குறித்த கவலையையும் தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிசக் கட்சியின் தேசிய மாநாடு வருகிற நவம்பர் 8ம் தேதி தொடங்கவுள்ளவேளை, கர்தினால் Filoniயின் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


5. சிரியாவிலுள்ள டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் நம்பிக்கையின் அடையாளம்

அக்.26,2012. சிரியாவில் மக்கள் துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் இவ்வேளையில், தாங்கள் அந்நாட்டிலிருந்து செல்ல முடியாது என, அந்நாட்டில் மறைப்பணியாற்றும் இத்தாலிய டிராப்பிஸ்ட் அருள்சகோதரிகள் கூறினர்.
மேற்கு சிரியாவில் Homs மற்றும் Tartous நகரங்களுக்கு இடையே Azeir என்ற சிறிய மாரனைட் கிராமத்திலுள்ள டிராப்பிஸ்ட் துறவு இல்லத்தில் வாழும் ஐந்து அருள்சகோதரிகள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உதவி வருகின்றனர்.
செபங்கள் மற்றும் சகோதரத்துவ ஒன்றிப்பு மூலம் கடவுளின் உண்மையான பிரசன்னத்தை வழிபடும் இடமாகத் தங்களது துறவு இல்லம் இருக்கின்றது, இந்தத் துறவு இல்லம் ஓர் உறுதியான நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கின்றது எனவும் இச்சகோதரிகள் கூறியுள்ளனர்.
தங்களது இந்தச் சிறிய கிராமத்தில்கூட இளையோர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள இச்சகோதரிகள், சண்டை சமயத்தில் முஸ்லீம்களும் ஆறுதல்தேடி டிராப்பிஸ்ட் துறவு இல்லத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.


6. சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம்

அக்.26,2012. மேலும், முஸ்லீம்களின் Eid al-Adha விழாவையொட்டி இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 6 மணிக்குச் சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
ஐ.நா. மற்றும் அரபுக் கூட்டமைப்பு பிரதிநிதி Lakhdar Brahimi முன்வைத்த பரிந்துரையின்பேரில் இந்தப் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம், அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிஅமைக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் Brahimi .
சிரியா அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு எதிராக ஏறக்குறைய இருபது மாதங்களாக இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும் 25 இலட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. 
இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், போரிடும் எல்லாத் தரப்புகளுமே இதனைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.


7. புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை

அக்.26,2012. இலங்கையில் போரின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதி மக்கள் பாம்புகள் மற்றும் வெடிப்பொருள்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
மிகக் கடுமையாகப் போர் இடம்பெற்ற இப்பகுதிக் கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் மற்றும் கட்டிடங்களிலும், அங்கு வளர்ந்துள்ள புதர்களிலும் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ள மக்கள் கூறுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடும் வறட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதையடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, புல்புதர்கள் நிறைந்து காடுபோல இருக்கும் அவ்விடங்களில் கண்ணிவெடிகளும் பலதரப்பட்ட வெடிப்பொருள்களும் அகற்றப்படாமல் இருப்பதால், நிலங்களில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அம்மக்கள் கூறியுள்ளனர்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே, இந்தப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளபோதிலும், கண்ணிவெடிகள் நிலங்களில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.


robert john kennedy: Catholic News in Tamil - 25/10/12

robert john kennedy: Catholic News in Tamil - 25/10/12: 1. சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு 2. சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம் ...

Catholic News in Tamil - 25/10/12

1. சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம்
3. புதிய கர்தினால் குறித்து உலகெங்கும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வு

4. அடுத்த ஆண்டிற்குள் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம்
5. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள்

6. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி

7. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும் - FAOவின் இயக்குனர்

8. அக்டோபர் 24 கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

அக்.25,2012. இவ்வியாழன் காலை சைப்ரஸ் நாட்டுத் தலைவர் Demetris Christofias திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருப்பீடத்திற்கும், சைப்ரஸ் நாட்டுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவைக் குறித்து தான் மகிழ்வதாக இச்சந்திப்பின்போது தெரிவித்தார் திருத்தந்தை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை சைப்ரஸ் நாடு தற்போது வகித்து வருவதால், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பல்வேறு சவால்கள் குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
மேலும், உலக நாடுகளின் முயற்சிகளால் மத்தியகிழக்குப் பகுதியில் நிலையான அமைதி உருவாகும் வழிகளும் இச்சந்திப்பில் பேசப்பட்டன.
இச்சந்திப்பிற்குப் பின், சைப்ரஸ் அரசுத் தலைவர் Christofias, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே மற்றும் நாடுகளுடனான உறவுகள் அவையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.


2. சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம்

சீனாவில் வாழும் கிறிஸ்தவர்களின் செபங்கள், அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் இறைவன் கண்ணோக்குகிறார், அவர்களின் நம்பிக்கை ஏனைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை வளர்க்கிறது என்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.
வத்திக்கானில் தற்போது நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவிலிருந்து வர இயலாத ஆயர்களின் சார்பில் Fengxiang மறைமாவட்ட ஆயர் Lucas Li Jingfeng, திருத்தந்தைக்கும், மாமன்றத் தந்தையருக்கும் அனுப்பியிருந்த ஒரு கடிதத்திற்கு இச்செவ்வாயன்று பதில் அனுப்பப்பட்டுள்ளது.
சீன மக்களின் சார்பாக, தாய்வான், ஹாங்காங் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயர்கள் மாமன்றத்தில் இடம் பெற்று வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் இந்தப் பதிலுரையில், வருங்காலத்தில் நடைபெறும் மாமன்றங்களில் சீனாவிலிருந்தும் ஆயர்கள் கலந்துகொள்ளும் அருளை இறைவன் வழங்குவார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


3. புதிய கர்தினால் குறித்து உலகெங்கும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வு

அக்.25,2012. சீரோ மலங்கரா ரீதி திருஅவைக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று திருவள்ளா உயர்மறைமாவட்டப் பேராயர் Thomas Mar Coorilos கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று அறிவித்த ஆறு புதிய கர்தினால்களில், இந்திய சீரோ மலங்கரா ரீதி தலைவரான உயர் பேராயர் Catholicos Baselios Mar Cleemisம் ஒருவர்.
இச்செய்தியை Pattomல் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் இப்புதன் மாலை அறிவித்த பேராயர் Mar Coorilos, பேராயர் Mar Cleemis அவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு தக்க பரிசு இது என்று கூறினார்.
53 வயதே நிரம்பிய பேராயர் Mar Cleemis, தற்போதைய கர்தினால்கள் குழுவில் மிகவும் இளையவர் என்றும், சீரோ மலங்கரா ரீதியில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள கர்தினால் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வுடன் இந்தச் செய்தியை வரவேற்றனர் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. அடுத்த ஆண்டிற்குள் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம்

அக்.25,2012. அமைதி என்ற பொருள் கொண்ட 'Salam' என்ற பெயரில் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம் அடுத்த ஆண்டிற்குள் இயங்க ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Alexandriaவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Adel Zaki இது குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், எகிப்தில் இயங்கிவரும் ஏழு கத்தோலிக்க ரீதியினரின் ஒப்புதலுடன் இந்தத் தொலைகாட்சி நிலையம் இயங்கும் என்று கூறினார்.
இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் உள்ள ஆயர் பேரவைகள் வழங்கும் நிதி உதவியுடன் ஆரம்பமாகவிருக்கும் இத்தொலைக்காட்சி நிலையம் உள்நாட்டு கத்தோலிக்கர்களின் ஆதரவுடன் நடைபெறும் என்று எடுத்துரைத்தார்.
காப்டிக் ரீதியினர் மத்தியிலும், ஏனைய கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ஊடகங்கள் வளர்ந்துள்ள வேளையில், தற்போது நிறுவப்படவிருக்கும் 'Salam' தொலைக்காட்சி நிலையம் கத்தோலிக்கப் பார்வையை எகிப்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் ஆயர் Zaki.


5. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள்

அக்.25,2012. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள் அண்மையில் உலகில் துவக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் Skype வசதி கொண்டவர்கள் 8 முதல் 10 பேர் என்ற அளவில் கணணி வழியே தொடர்பு கொண்டு, செபமாலையை செபிக்கின்றனர் என்று இவ்வசதியை ஒருங்கிணைக்கும் Kinga Sólyomné Székely, ICN கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
செபத்தில் ஈடுபடுவோர் வழியாகவே இவ்வுலகின் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதை விருதுவாக்காகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
'செபமாலையின் திருத்தூதர்' என்று அழைக்கப்படும் மறைந்த அருள்தந்தை Petrusz Pavlicek, செபமாலையின்  மணிகள் ஒரு சேர இணைக்கப்பட்டிருப்பதுபோல, உலகின் வடதுருவம் முதல் தென் துருவம் வரை மக்கள் செபத்தால் இணைவதற்கு செபமாலையே சிறந்த வழி என்று கூறியுள்ளதை நனவாக்க இம்முயற்சி என்று அமைப்பாளர் Székely கூறினார்.
இம்முயற்சியில் ஈடுபட விழைவோர் theholyrosaryprayer@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் மேலும் விவரங்களைப் பெற முடியும்.


6. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி

அக்.25,2012. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி வழங்கியுள்ளது.
உலகின் மிகப் பழமையான கோவில் என்று கருதப்படும் இயேசு பிறப்புப் பேராலயம் அழியும் ஆபத்துள்ள உலக நினைவுச் சின்னங்களில் ஒன்று என்று UNESCO வால் அறிவிக்கப்பட்ட ஒரு கோவில்.
இக்கோவிலின் கூரைப்பகுதியை சீர் செய்யும் பணிக்கென பிரான்ஸ் பாராளுமன்றம் இந்த நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
புனித பூமியில் உள்ள கோவில்களுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் உள்ள உறைவை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே இந்த நிதி உதவி என்று எருசலேமில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் Frédéric Desagneaux கூறினார்.


7. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும் - FAOவின் இயக்குனர்

அக்.25,2012. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாட்டு அரசுகளும், உணவு உற்பத்தி நிறுவனங்களும் உறுதி எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
Slow Food International என்ற அமைப்பினரால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் கருத்தரங்கு, இத்தாலியின் Turin நகரில் இவ்வியாழன் முதல் வருகிற திங்கள் முடிய நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் உரையாற்றிய Graziano da Silva, பட்டினியால் வாடும் குழந்தைகளைக் காப்பது நமது தலைமுறையினரின் அவசரமான சவால் என்று கூறினார்.
உலகில் 50 கோடி மக்கள் பசியால் வாடும்போது, ஒவ்வோர் ஆண்டும் உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாக்கப்படுகிறது என்பதை FAO இயக்குனர் சுட்டிக்காட்டினார்.
உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாவது நமது கையில் உள்ளது என்பதை ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்திக் கூறினார்.

Slow Food International என்ற அமைப்பில் 130 நாடுகளைச் சேர்ந்த 1,00,000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாய் உள்ளனர். இயற்கை சார்ந்த வேளாண்மை முறைகளில் உணவு தயாரிக்கப்படும் முறைகளை இவ்வுறுப்பினர்கள் உலகெங்கும் தெளிவாக்கி வருகின்றனர்.


8. அக்டோபர் 24 கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

அக்.25,2012. நாம் வாழும் இன்றைய உலகில் அமைதியைக் குலைக்கும் பல முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அமைதியையும், மனித உரிமைகளையும் மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் 24 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர், சிறந்ததோர் உலகை உருவாக்க தனி மனிதர்களும், உலக நிறுவனங்களும் இணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐ.நா. அமைப்பின் கொள்கைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டதென்பதை நினைவுகூறும் வழியில், 1948ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. நாளென்று கடைபிடிக்கப்படுகிறது.
ஐ.நா. என்பது பன்னாட்டு அதிகாரிகள் சந்திக்கும் ஒரு அலுவலகம் மட்டும் அல்ல என்றும், அமைதிக்காக உழைக்கும் வீரர்கள், உடல் நலனை உலகெங்கும் கொண்டு செல்லும் உதவியாளர்கள் என்று பலரையும் உள்ளடக்கியது இந்த அமைப்பு என்றும் பான் கி மூன் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவிவரும் தொடர் நெருக்கடிகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், அங்கு வாழும் மக்களுக்கு கல்வி, நல வாழ்வு அனைத்தும் சமமான முறையில் கிடைப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் உழைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஐ.நா. நாளையொட்டி உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் உலக அமைதி என்ற கருத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினர்.