Friday 27 April 2012

robert john kennedy: Catholic News in Tamil - 26/04/12

robert john kennedy: Catholic News in Tamil - 26/04/12: 1. சீனக் கத்தோலிக்க திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை 2. சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்ப...

Catholic News in Tamil - 26/04/12

1. சீனக் கத்தோலிக்க திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை

2. சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது - திருப்பீட அதிகாரி

3. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டது குறித்து ஆராய கர்தினால்கள் குழு

4. செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை லெபனான் நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்

5. மனிதகுல நன்மைக்கு ஒன்றிணைந்து உழைக்க இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஒப்பந்தம்

6. அன்டார்டிக் பகுதியில் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி கடல் மட்டம் வேகமாக உயரும் ஆபத்து உள்ளது - ஆய்வறிக்கை

7. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது:வல்லுநர் குழு

------------------------------------------------------------------------------------------------------

1. சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கான நிறையமர்வுக் கூட்ட அறிக்கை

ஏப்ரல்,26,2012. சீனக் கத்தோலிக்கத் திருஅவைக்கானத் திருப்பீட அவை இவ்வாரம் மேற்கொண்ட நிறையமர்வுக் கூட்டத்தில் சீனக் கத்தோலிக்க விசுவாசிகளுக்கான பயிற்சிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது.
இவ்வாரம் திங்கள் முதல் புதன் வரை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், சீனக் கத்தோலிக்கர்கள், தாங்களும் திருஅவையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து செயல்பட தேவையான பயிற்சியை வழங்குதல் என்பது முதல் கருத்தாக விவாதிக்கப்பட்டது.
இரண்டாவதாக, சமூகக் குடிமக்கள் என்ற முறையில் சீனக் கத்தோலிக்கர்கள் வாழ்வையும் குடும்பத்தையும் அன்பு கூர்பவர்களாகவும், சீனக்கலாச்சார மதிப்பீடுகளை ஊக்குவிப்பவர்களாகவும், தங்கள் நாட்டை அன்புகூர்ந்து வாழ்பவர்களாகவும் செயல்பட ஊக்கமளித்தல் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
மூன்றாவதாக, விசுவாசிகள் இறைவனின் கொடைகளைப் பெற்று, பங்குத்தள அளவில் உயிர்த் துடிப்புடைய உறுப்பினர்களாகச் செயல்பட உதவ வேண்டியது அவசியம் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது.
இம்மூன்று முக்கிய கூறுகள் தவிர, வயது வந்தோர் திருமுழுக்கு பெறுவதற்குத் தயாரித்தல், தங்கள் மேய்ப்புப்பணிகளை ஆற்றமுடியாமல் சிறைத்தண்டனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ளும் ஆயர்கள் மற்றும் குருக்களுடன் ஒருமைப்பாடுதிருத்தந்தையின் அனுமதியின்றி ஆயர் மற்றும் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றுள்ளவர்கள் நிலை, அண்மைக்காலங்களில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கைக் குறைந்து வருதல், வரும் மே 24ம் தேதி சீனத் திருஅவைக்கான செப நாள் சிறப்பிக்கப்படல் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


2. சமுதாய முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதை திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது - திருப்பீட அதிகாரி

ஏப்ரல்,26,2012. உண்மையான பொருளாதார முன்னேற்றமும், சமுதாய முன்னேற்றமும் வெறும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் உருவாக்கப்படுவதில் பொருள் இல்லை என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் கத்தார் தலைநகர் Dohaவில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அமைப்பின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி  உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
2000மாம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே சரிவை நோக்கிச் சென்ற உலகப் பொருளாதாரம், 2008ம் ஆண்டு நெருக்கடியான நிலையைச் சந்தித்தது என்று சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, இந்த நெருக்கடியால் 3 கோடி மக்கள் வேலைகளை முற்றிலும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும், பல நாடுகளின் அரசியல், கலாச்சார நிலைகள் மாறியதும் நமக்கு பல உண்மைகளை உணர்த்தியது என்று கூறினார்.
இப்பொருளாதாரச் சரிவுக்கு அடிப்படை காரணம் வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல, மாறாக, இது ஒரு நன்னெறி கோட்பாடுகளின் நெருக்கடி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய Caritas in Veritate என்ற சுற்று மடலில் எழுதியுள்ளதை தன் உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராயர் தொமாசி.
சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றும் வழிகளைத் தீர ஆய்வு செய்வதன் மூலம், நிலையான நீடித்த முன்னேற்றத்தை மனித சமுதாயம் காணமுடியும் என்பதையும், இந்த முன்னேற்றம் நன்னெறிகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் திருப்பீடம் ஐ.நா. அவையிடம் வலியுறுத்துகிறது என்று திருப்பீட அதிகாரி தன் உரையில் எடுத்துரைத்தார்.


3. வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டது குறித்து ஆராய கர்தினால்கள் குழு

ஏப்ரல்,26,2012. திருப்பீடத்தின் சில இரகசிய ஆவணங்கள் அண்மைக்காலத்தில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வெளியிடப்பட்டு சமூகத்தொடர்புச் சாதனங்களில்  விவாதிக்கப்பட்டது குறித்து ஆராய கர்தினால்களைக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது குறித்து விசாரித்து, அதனால் எழுந்துள்ள தப்பெண்ணங்களை மாற்றுவதற்கு உதவ உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவின் தலைவராக கர்தினால் Julián Herranzம் அக்குழுவின் உறுப்பினர்களாக கர்தினால்கள் Jozef Tomko மற்றும் Salvatore De Giorgiம்  செயல்படுவர்.
திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு இவ்வாரம் செவ்வாயன்று கூடி, தங்கள் ஆய்வுப்பணிகளுக்கான கால அட்டவணை மற்றும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தது.
வத்திக்கான் நிதிநிலை குறித்து பேராயர் Carlo Maria Vigano தன் கருத்துக்களை வெளியிட்டு எழுதிய கடிதம், திருப்பீடச்செயலருக்கும் மிலான் கர்தினாலுக்கும் இடையே கத்தோலிக்க மருத்துவமனை குறித்து இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம்  போன்ற சில இரகசிய ஆவணங்கள் எவ்வாறு பத்திரிகையாளர் கைகளுக்குச் சென்றன என்பது குறித்தும், இதற்கான பதில்மொழிகள் குறித்தும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு ஆய்வு செய்யும்.


4. செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை லெபனான் நாட்டு மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்

ஏப்ரல்,26,2012. லெபனான் நாட்டு மக்கள் திருத்தந்தையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள் என்றும் செப்டம்பர் மாதம் திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தருவதை அவர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர் என்றும் இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்து வரும் அருள்தந்தை Marwan Tabet கூறினார்.
வருகிற செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் இத்திருப்பயணத்தை வத்திக்கான் அதிகாரிகளுடன் இணைந்து திட்டமிட்டு வரும் அருள்தந்தை Tabet, வத்திக்கான் வானொலிக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே திருத்தந்தையின் பயணம் குறித்து லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் எதிர்பார்த்து வந்தாலும், உயிர்ப்புத் திருநாளன்று திருத்தந்தையின் திருப்பயணத்திற்கான திட்டவட்டமான தேதிகள் வெளியானதும், அனைவரும் இச்செய்தியினை ஆர்வமாய் வரவேற்றனர் என்று அருள்தந்தை Tabet எடுத்துரைத்தார்.
லெபனான் நாட்டுத் தலைவர்கள் மட்டுமல்லாமல், மத்திய கிழக்குப் பகுதியின் பல நாடுகளிலிருந்தும், வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் முக்கியமான தலைவர்கள் திருத்தந்தையின் பயணத்தின்போது லெபனான் நாட்டுக்கு வருகை தர உள்ளனர் என்று அருள்தந்தை Tabet கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியில், முக்கியமாக சிரியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளைப் பற்றி தொடர்ந்து அறிந்து வரும் திருத்தந்தை, இப்பகுதியில் அமைதி திரும்புவதற்கு செபிக்குமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருவது, இப்பகுதியின் மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது என்று அருள்தந்தை Tabet தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.


5. மனித குல நன்மைக்கு ஒன்றிணைந்து உழைக்க இந்தோனேசிய கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய குழுக்கள் ஒப்பந்தம்

ஏப்ரல்,26,2012. மனிதகுலத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து உழைப்பது குறித்த புரிதல் ஒப்பந்தத்தில் இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய இஸ்லாமியக் குழுவும் இத்தாலியின் கத்தோலிக்கப் பிறரன்புக் குழு சான் எஜிதியோவும் கையெழுத்திட்டுள்ளன.
அறியாமை மற்றும் ஏழ்மை எனும் சுமைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும் இவ்விரு குழுக்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வந்திருப்பது நல்லதொரு முன்மாதிரிகை என்றார்  Muhammadiyah  என்ற இந்த இஸ்லாமிய குழுவின் தலைவர்  Din Syamsuddin.
இத்தகைய ஒத்துழைப்பு என்பது சமூகப்பணிகளை மட்டுமல்ல, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை ஊக்குவிப்பதையும் தன்னுள் கொண்டுள்ளது என்றார் அவர்.
வன்முறையற்ற ஓர் உலகைக் கட்டியெழுப்புவதை நோக்கம் கொண்டதாக, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களின் ஒன்றிணைந்த பணி இருக்கும் என மேலும் கூறினார் Din Syamsuddin.
பல்வேறு மதப்பின்னணியைக் கொண்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழும் இந்தோனேசியாவில், ஏழ்மையை அகற்றவும் அமைதியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவித்தார் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் அதிகாரி Marco Impagliazzo.


6. அன்டார்டிக் பகுதியில் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி கடல் மட்டம் வேகமாக உயரும் ஆபத்து உள்ளது - ஆய்வறிக்கை

ஏப்ரல்,26,2012. உலகின் தென் துருவத்தில் அண்டார்டிக் பகுதியில் உறைபனி பகுதிகளுக்குக் கீழ் உருவாகும் வெப்ப நீரினால் பனி உருகி உலகின் பல கடல் மட்டங்கள் வேகமாக உயரும் ஆபத்து உள்ளதென்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அண்டார்டிக்கின் மேற்குப் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் கடலில் மிதக்கும் பனிப் பாறைகள் 23 அடி அளவு கரைந்து வருவதாக இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
NASA செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்து வரும் பிரித்தானிய அண்டார்டிக் ஆய்வுக் கழகம், பனிப் பாறைகள் உருகுவதற்கு வெப்பமான காற்று மண்டலம் மட்டும் பொறுப்பல்ல, மாறாக, வெப்பமான நீரும் காரணம் என்று கூறியுள்ளது.
அண்டார்டிக் மேற்குப் பகுதியில் உள்ள பனிமலைகள் அனைத்தும் உருகினால், உலகின் அனைத்து கடல்களிலும் நீர்மட்டம் 16 அடி வரை உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


7. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது:வல்லுநர் குழு

ஏப்ரல்,26,2012. முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது என்றும், அங்கு புதிய அணை வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி, அது தொடர்பாக ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வல்லுநர் குழுவொன்றைப் பணித்தது.
தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் அந்த வல்லுநர் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை இப்புதனன்று (25.4.12) உச்சநீதிமன்றத்தில் ஒரு மூடிய உறையில் சமர்ப்பித்துள்ளது.
அக்குழுவில், தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
தற்போதைய அணை உறுதியாக உள்ளது என்பதிலும் அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் ஒத்த கருத்துக்கள் இருந்தாலும், வேறு சில அம்சங்களில் மாற்றுக் கருத்துக்களும் இருந்தன என்றும் அவர் மேலும் கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும், அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

Thursday 26 April 2012

robert john kennedy: Catholic News in Tamil - 25 April 12

robert john kennedy: Catholic News in Tamil - 25 April 12: 1. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு 2. காங்கோ ஆயர்கள் ஊழலற்ற அரசுக்கு வலியுறுத்தல் 3. ம...

Catholic News in Tamil - 25 April 12


1. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு

2. காங்கோ ஆயர்கள் ஊழலற்ற அரசுக்கு வலியுறுத்தல்

3. மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியத் திருஅவை

4. சூடானும் தென் சூடானும் போரைத் தவிர்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் வேண்டுகோள்

5. சூடான் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குச் சமயக் காழ்ப்புணர்வு காரணம் விமர்சகர்கள் கருத்து

6. பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

7. வளர்இளம் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு யுனிசெப் அழைப்பு

8. மியான்மார் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் ஆர்வத்தில் எடுக்கப்பட்டது - மியான்மார் அரசியல் தலைவர்

-------------------------------------------------------------------------------------------

1. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு

ஏப்ரல்25,2012. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் அந்நாட்டுக் கர்தினால் Juan Luis Cipriani.
தலைநகர் லீமாவிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் 71 பிணையல் கைதிகள் காப்பாற்றப்பட்டதன் 15ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த கர்தினால் Luis Cipriani, இந்தத் தென் அமெரிக்க நாட்டில் வன்முறைகள் ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்று செபிப்போம் என்று கூறினார்.
1996ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Tuparac Amaru பயங்கரவாதக் குழு ஜப்பானியத் தூதர் இல்லத்தைக் கைப்பற்றி சுமார் 72 பேரை பிணையலில் வைத்தது. அவ்வியக்கத்தின் 400 கைதிகளை அரசு விடுதலை செய்யும்வரை அவர்களை விடுவிக்கப் போவதில்லை என்றும் அக்குழு எச்சரித்தது.
எனினும், 4 மாதங்கள் கழித்து 1997ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாளன்று பெரு நாட்டு இராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 71 பிணையல் கைதிகள் மீட்கப்பட்டனர். மேலும், இந்நடவடிக்கையில் ஒரு பிணையல் கைதியும், 2 படைவீரர்களும்  பயங்கரவாதிகள் 14 பேரும் இறந்தனர்.
வன்முறை எப்போதும் பொய்யுடன் தொடங்குகிறது, இது மற்றவர்களைப் பாதித்து வன்முறைக்கும் இறப்புக்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் காரணமாகின்றது என்றும் கர்தினால் கூறினார்.

2. காங்கோ ஆயர்கள் ஊழலற்ற அரசுக்கு வலியுறுத்தல்

ஏப்ரல் 25,2012. காங்கோ குடியரசில் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஊழலற்ற அரசும் மக்களின் நலன்நாடும் நல்ல நிர்வாகமும் அவசியம் என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
தலைநகர் Brazzaville ல் 40 வது ஆண்டுக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், காங்கோ குடியரசில் ஏழ்மையை ஒழிக்கும் முறைகள் குறித்த தங்களது தீர்மானங்களை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பொது நிர்வாகத்தில் இருக்கும் தலைவர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும், சமூகத்தின் நலனை மனதிற்கொண்டு நல்ல விழுமியங்கள் காக்கப்படுவதற்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளில் இறப்பை எதிர்நோக்கும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, வளர்ந்த நாடுகளைவிட 45 மடங்கு அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

3. மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியத் திருஅவை

ஏப்ரல் 25,2012. இந்தியாவில் ஆண்டுதோறும் 2,05,000 பேரும், உலகில் 6,55,000 பேரும் மலேரியாவால் இறக்கின்றவேளை, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது இந்திய கத்தோலிக்கத் திருஅவை.
ஏப்ரல் 25 இப்புதன் அனைத்துலக மலேரியா நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் செய்தித் துறை இத்தகவலை வெளியிட்டது.
மேலும், இத்தினம் குறித்து செய்தி வெளியிட்ட WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், தென் கிழக்கு ஆசியாவில் 130 கோடிப் பேர் மலேரியா நோயின் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்றும், இந்நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சமுதாயத்தின் எல்லாத் துறைகளும் ஈடுபட்டால் மட்டுமே இந்நோயை ஒழிக்க முடியும் என்றும் கூறுகிறது.
கொசுக்களால் பரவும் மலேரியாவால் தென் கிழக்கு ஆசியாவில் கடந்த ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 38 ஆயிரம் பேர் இறந்தனர் என்றும் WHO நிறுவனம் கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 330 கோடிப் பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல துறையினரின் கூட்டு முயற்சி : மலேரியா நோய்த் தடுப்புக்கு முதலீடுகள், வாழ்வைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் இவ்வாண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

4. சூடானும் தென் சூடானும் போரைத் தவிர்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் வேண்டுகோள்

ஏப்ரல்25,2012. சூடானும் தென் சூடானும் முழுவீச்சாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, இவ்விரு நாடுகளும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விரு நாடுகளின் எல்லைப் புறத்திலுள்ள Heglig எண்ணெய்வளப் பகுதி குறித்து இடம் பெற்று வரும் தகராறு, தற்போது போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதை முன்னிட்டு கத்தோலிக்கத் திருஅவையும், ஆப்ரிக்க ஒன்றியமும், ஐ.நா.வும் ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துமாறு இவ்விரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றன.
சுமார் 20 ஆண்டுகளாக சூடான் அரசுக்கும், தென் சூடான் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற போர், 2005ம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. தென் சூடான் புதிய நாடாகவும் கடந்த ஆண்டு ஜூலையில் உருவானது. இருந்த போதிலும், Abyei, தெற்கு Kordofan, Blue Nile, எண்ணெய்வளப் பகுதி போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படாமலே இருந்தது.
சூடானில் இடம் பெற்ற சுமார் 20 வருட உள்நாட்டுப் போரில் சுமார்  15 இலட்சம் பேர் இறந்தனர்.

5. சூடான் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குச் சமயக் காழ்ப்புணர்வு காரணம் விமர்சகர்கள் கருத்து

ஏப்ரல்25,2012. சூடானில் அண்மையில் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னணியில் சமயக் காழ்ப்புணர்வு இருப்பது தெரிவதாக, சர்வதேச மத சுதந்திரம் குறித்த வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சூடானில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வரும் சண்டையில் மத உள்நோக்கம் இருப்பதைச் சர்வதேச ஊடகங்கள் பார்க்கத் தவறியுள்ளன என்று வாஷிங்டன் மத சுதந்திரத்திற்கான ஹட்சன் நிறுவன இயக்குனர் Nina Shea கூறினார்.
அண்மை ஆண்டுகளில் எகிப்து, ஈராக், நைஜீரியா உட்பட பல நாடுகளில் ஆலயங்களில் தொடர்ந்து குண்டு வைப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் Shea சுட்டிக் காட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்று Khartoumல் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கத்தோலிக்க ஆலயத்துக்குத் தீ வைத்தனர் என்றும், இவ்வாலயத்தில் பல கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சூடானில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட தென் சூடானியர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

ஏப்ரல்25,2012. பேச்சு சுதந்திரம், மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று என அனைத்துல பத்திரிகை சுதந்திர நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
மே மாதம் 3ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இவ்வுலக நாளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், பேச்சு சுதந்திரம், மற்ற சுதந்திரங்களைத் தாங்கிப் பிடிப்பதாகவும், மனித மாண்புக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உலகின் எல்லா இடங்களிலும் எந்த வகையான ஊடகம் மூலமாகவும் தகவல்களைப் பெறவும், அறிவிக்கவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை அனுமதியளிக்கின்றது என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், 2010க்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பணியில் இருந்த போது 127 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் 62 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

7. வளர்இளம் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு யுனிசெப் அழைப்பு

ஏப்ரல்25,2012. வன்முறை, நோய்கள், கல்வியறிவின்மை ஆகியவற்றினின்று வளர்இளம் பிள்ளைகள் பாதுகாக்கப்படுமாறு யுனிசெப் நிறுவனம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சாலை விபத்துக் காயங்கள், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரங்கள், தற்கொலை, எய்ட்ஸ் மற்றும் வன்முறையாலும் ஆண்டுதோறும் சுமார் 14 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் இறக்கின்றனர் என்று கூறும் யுனிசெப் நிறுவனம், இந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது.
சிறார் முன்னேற்றம் : வளர்இளம் பிள்ளைகள் குறித்த அறிக்கை என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், உலகில் பரவலாக 1990ம் ஆண்டிலிருந்து ஆரம்பக் கல்வி பெறும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் இந்நிலையைக் காண முடியவில்லை என்றும் கூறுகிறது.
வளர்இளம் பிள்ளைகளே உலகின் வருங்காலம் என்பதை நினைவுபடுத்தியுள்ள இவ்வறிக்கை, உலகின் 120 கோடி வளர்இளம் பிள்ளைகளில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
10க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் குறித்த விபரங்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்று கூறும் இவ்வறிக்கை, சுமார் 22 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் எய்ட்ஸ் நோயாளிகள், இவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கிறது.
வளர்ச்சி குன்றிய நாடுகளில், 15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஆண்களில் நான்கில் ஒரு பாகத்தினரும், பெண்களில் மூன்றில் ஒரு பாகத்தினரும் எழுத்தறிவற்றவர்கள் என்றும் யுனிசெப் கூறுகிறது.

8. மியான்மார் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் ஆர்வத்தில் எடுக்கப்பட்டது - மியான்மார் அரசியல் தலைவர்

ஏப்ரல்25,2012. மியான்மார் நாட்டின் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் மற்றும் பொருளாதார ஆர்வத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று மியான்மார் அரசியல் தலைவர் ஒருவர் கூறினார்.
1990ம் ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற தேர்தலில் NLD (National League for Democracy) எனப்படும் தேசியக் குடியரசு கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற Tint Swe என்ற அரசியல் தலைவர், அங்கு உருவான இராணுவ ஆட்சியின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் Luxembourgல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மியான்மாரின் தடைகளை நீக்கும் முடிவை இச்செவ்வாயன்று எடுத்ததைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்ட Tint Swe, மியான்மாரில் உருவாகிவரும் வரவேற்கத்தக்க மாற்றங்களையும் குறித்து பேசினார்.
இயற்கை வளங்கள் அதிகம் உள்ள மியான்மாரில் மக்கள் இன்னும் பெருமளவு வறுமையில் இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஓர் உண்மை என்று Tint Swe தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
இச்செவ்வாயன்று மியான்மாரில் நடைபெற்ற பாராளு மன்றக் கூட்டத்தில் Aung San Suu Kyiயின் தலைமையில் அண்மைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவ அரசு ஏற்காததால், Suu Kyiயும் அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் பாராளு மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

Tuesday 24 April 2012

robert john kennedy: Catholic News 24 April 12

robert john kennedy: Catholic News 24 April 12: 1. சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில் 2. சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண , சர்வதேச சமுதாயம் உதவ ...

Catholic News 24 April 12

1. சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில்

2. சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சர்வதேச சமுதாயம் உதவ பேராய‌ர் அழைப்பு

3. சிறுபான்மை மதத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார் பாகிஸ்தான் பேராயர் கூட்ஸ்

4. மதங்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் உலக அமைதிக்கு உதவ வேண்டும்

5. முதல் முறையாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு திருத்தந்தையின் விருது

6. இசுலாமிய‌ ம‌சூதி அக‌ற்ற‌ப்ப‌ட‌ இல‌ங்கை அமைச்ச‌க‌ம் க‌ட்ட‌ளை

7. ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர்இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள்

8. தட்டம்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் யுக்திகள் அவற்றின் இலக்கை அடையவில்லை லான்செட் இதழ்

-------------------------------------------------------------------------------------------

1. சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில்

ஏப்ரல்,24,2012. இவ்வாண்டு அக்டோப‌ர் மாத‌ம் துவ‌க்க‌ப்ப‌ட‌விருக்கும் விசுவாச‌ ஆண்டின் பின்னணியில் சீன‌க் க‌த்தோலிக்க‌ர்க‌ளுக்கு விசுவாசக்கல்வி வழங்கும் வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில் இடம்பெற்று வருகிறது.
திருப்பீட அதிகாரிகள், சீன கத்தோலிக்க திரு அவையின் பிரதிநிதிகள், துறவு சபைகளின் அங்கத்தினர்கள் ஆகியோரைக் கொண்டு 2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வவை, சீனக் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஃபீதேஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இம்மாதம் இடம்பெற்ற இயேசு உயிர்ப்புத் திருவிழாவின்போது சீனாவில் 22 ஆயிரத்து 104 பேர் கத்தோலிக்க மறையைத் தழுவியுள்ளனர்.

2. சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சர்வதேச சமுதாயம் உதவ பேராய‌ர் அழைப்பு

ஏப்ரல்,24,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தென் சூடான் தலைநகர் ஜூபாவின் பேராய‌ர் Paulino Lukudu Loro.
தென் சூடான் எல்லைப்ப‌குதியை நோக்கி பெரிய‌ அள‌வில் சூடான் ப‌டைக‌ள் அனுப்ப‌ப்ப‌டுவ‌தாக‌வும், எண்ணெய் வ‌ள‌ப்ப‌குதியான‌ Heglig குறித்த‌ விவாத‌ங்க‌ள் பெரும் மோத‌லாக‌ உருவெடுத்துள்ள‌தாக‌வும் க‌வ‌லையை வெளியிட்ட‌ பேராய‌ர், இந்த‌ப் பிர‌ச்னைக்கான‌ தீர்வு ச‌ர்வ‌தேச‌ த‌லையீட்டின் மூல‌ம் பெற‌ப்ப‌ட‌ முடியும் என்றார்.
சூடான் விமானப்படையினர், தென்சூடான் எல்லையில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கி வருவது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் பேராயர்.
தென்சூடானுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் முன்வரப் போவதில்லை, துப்பாக்கிக் குண்டுகளே பேசும் என சூடான் அரசுத்தலைவர் Omar al Bashir வெளியிட்ட கருத்து, தென் சூடான் மக்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பேராய‌ர் Lukudu Loro.

3. சிறுபான்மை மதத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார் பாகிஸ்தான் பேராயர் கூட்ஸ்

ஏப்ரல்,24,2012. கிறிஸ்தவர்கள் என்ற முறையிலும், மத சிறுபான்மையினர் என்ற வகையிலும் முழு மாண்பு மற்றும் விடுதலையுடன் கூடிய சரிநிகர் உரிமைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் குரல் கொடுப்பதாக அறிவித்தார் பாகிஸ்தான் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவருக்கு சரிநிகர் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கத்தோலிக்க ஃபீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கராச்சி பேராயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் கூட்ஸ், கிறிஸ்தவர்களும் சரிநிகர் உரிமையுடைய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் விசுவாசத்தைக் கடைபிடிக்க உதவும் உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய மிகப்பெரும் சவாலாக உள்ளதாக அறிவித்தார்.
கல்வித்தொடர்புடையவைகளில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்வதால் கிறிஸ்தவர்களின் கல்வியில் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய ஓர் அவசரத்தேவை உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.
பாகிஸ்தானில் மதசகிப்பற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், கிறிஸ்தவர்கள் மீதான பகைமை உணர்வுடன் கூடிய தாக்குதல்கள் தொடர்வதாகவும் கூறினார் பேராயர் கூட்ஸ். பாகிஸ்தானின் குடிமக்களாக இருந்து இஸ்லாமியர்களின் மதிப்பீடுகளை பகிர்கிறபோதிலும், கிறிஸ்தவர்கள் அந்நியர்களாகவே நோக்கப்ப்படுவது வருத்தம் தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.

4. மதங்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் உலக அமைதிக்கு உதவ வேண்டும்

ஏப்ரல்,24,2012. உலகில் அமைதியையும், சிறுபான்மையினருக்குரிய மதிப்பையும் வளர்க்கும் நோக்கில் மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என இந்தோனேசியாவில் இடம்பெற்ற பலசமய கருத்தரங்கில் இத்திங்களன்று அழைப்பு விடப்பட்டது.
ஜகார்தாவில் சான் எஜிதியோ குழுவால் ஏற்பாடுச் செய்யப்பட்ட பல்சமய உரையாடல் கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற இந்தோனேசிய மற்றும் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.
ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் தன்மையுடன் கூடிய பாலங்களை கட்டியெழுப்புவதே உலகில் அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும் என்றார் இந்தோனேசிய அமைச்சர் Marty Natalegawa.
இதே கருத்தரங்கில் உரையாற்றிய இத்தாலிய அமைச்சர் ஜூலியோ தெர்சி, சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.
ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo, இந்தோனேசிய இஸ்லாமிய அமைப்பு தலைவர் Din Syamsuddin, சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Marco Impagliazzo ஆகியோருடன் மதப்பிரதிநிதிகள் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

5. முதல் முறையாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு திருத்தந்தையின் விருது

ஏப்ரல்,24,2012. சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு முதல் முறையாக திருத்தந்தையின் விருது ஒன்று வழங்கப்படுவது மகிழ்வு தரும் நிகழ்வு என்று இங்கிலாந்தின் Birmingham பேராயர் Bernard Longley கூறினார்.
திருத்தந்தை புனித பெரிய கிரகோரி அவர்கள் நினைவாக பாப்பிறைத் தளபதி என்ற விருது தலைசிறந்த சேவை செய்துள்ள கத்தோலிக்கர்களுக்கு பொதுவாக வழங்கப்படும். வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், கத்தோலிக்கத் திருஅவைக்கு சிறந்த பணியாற்றியவர்களுக்கு மிக அரிதாக இவ்விருது வழங்கப்படும். சீக்கியர்களின் குருநானக் Nishkam Sewak Jatha என்ற பிறரன்புச் சேவை அமைப்பின் தலைவரான Bhai Sahib Bhai Dr Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு இஞ்ஞாயிறன்று இவ்விருது திருத்தந்தையின் பெயரால் வழங்கப்பட்டது.
சமயங்களுக்கிடையே இணைப்பை உருவாக்கவும், பிறரன்பு சேவைகள் ஆற்றவும் தன் வாழ்வைச் செலவிட்டு வரும் Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு திருத்தந்தையின் இந்த உயரிய விருது வழங்கப்படுவதால், சமய உரையாடல், பிறரன்புச் சேவைகள் ஆகியவற்றிற்குத் திருத்தந்தையும், கத்தோலிக்கத் திருஅவையும் வழங்கும் தனி கவனம் வெளிப்படுகிறது என்று பேராயர் Longley கூறினார்.
சீக்கியர்களின் ஆன்மீகத் தலைவராக பணியாற்றும் Mohinder Singh Ahluwalia, திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால், மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் அசிசி நகரில் நடத்திய அனைத்துலக பல்சமயத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்.

6. இசுலாமிய‌ ம‌சூதி அக‌ற்ற‌ப்ப‌ட‌ இல‌ங்கை அமைச்ச‌க‌ம் க‌ட்ட‌ளை

ஏப்ரல்,24,2012. இலங்கையில் புத்த மதத்தவரின் புனிதப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை நகரிலிருந்து 50 வருட தொன்மையுடைய இசுலாமிய மசூதியும், இந்து கோவில் ஒன்றும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளது அந்நாட்டு மத விவகார அமைச்சகம்.
தம்புள்ளையின் கிராமப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புத்த மதத்துறவிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்ப‌ட்ட‌தாக‌ ம‌த‌ விவ‌கார‌ங்க‌ளுக்கான‌ அமைச்ச‌க‌ம் அறிவித்த‌து.
தம்புள்ளை அடுத்த‌ ஆறு மாத‌ங்க‌ளுக்குள் புனித‌ ந‌க‌ராக‌ நிறுவ‌ப்ப‌ட்டு, அங்குள்ள அனும‌தி பெறாத‌ அனைத்து க‌ட்டிட‌ங்க‌ளும் அக‌ற்ற‌ப்ப‌டும் என்றார் அப்பகுதியின் புத்த‌ த‌லைமைக்குரு Inamaluwe Sri Sumangala Thero.
தம்புள்ளை ப‌குதியிலிருந்து இசுலாம் ம‌ற்றும் இந்துக் கோவில்க‌ளை அக‌ற்றுவ‌த‌ற்கான‌ அமைச்ச‌க‌த்தின் தீர்மான‌த்தை அர‌சு நிறைவேற்ற‌வேண்டும் அல்ல‌து ம‌க்க‌ளின் போராட்ட‌த்தை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும் என மேலும் கூறினார் அவ‌ர்.
இத‌ற்கிடையே, தம்புள்ளை மசூதி, அர‌சு அனும‌தியுட‌னேயே க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும், அது க‌ட‌ந்த‌ 50 ஆண்டுக‌ளாக‌ எவ்வித‌ பிர‌ச்சனையும் இன்றி செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌தாக‌வும் அப்ப‌குதி இசுலாமிய‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.

7. ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர்இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள்

ஏப்ரல்,24,2012. பாலியல் செயல்பாடுகளில் இளையோர் அதிக அளவில் ஈடுபடுவதால், அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மக்கள் தொகையும், சமுதாய முன்னேற்றமும் என்ற ஐ.நா.வின் பணிக்குழு நியூயார்க் நகரில் இத்திங்களன்று துவக்கிய ஒருவாரக் கருத்தரங்கின் முதல் அமர்வில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
47 நாடுகளின் பிரதிநிதிகளும், 500க்கும் அதிகமான அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில், இளையோரைத் தகுந்த வழியில் சக்திமிக்கவர்களாக மாற்றும் வழிகளை அனைத்து நாடுகளும் கண்டுணர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
வருகிற ஜூன் மாதம் Rio+20 என்ற பன்னாட்டு உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் Rioவில் நடைபெறும் வேளையில், இளையோரை மனதில் கொண்டு உலகின் முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியை அனைத்து நாடுகளும் கேட்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்று ஐ.நா. தலைவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும் 2000 இளையோர் HIV நோயால் தாக்கப்படுகின்றனர் மற்றும், ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர் இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள் என்ற புள்ளி விவரங்களைக் கூறிய பான் கி மூன், இந்த எண்ணிக்கைகளை விரைவில் குறைக்கும் பெரும் கடமை உலகச் சமுதாயத்திற்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.

8. தட்டம்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் யுக்திகள் அவற்றின் இலக்கை அடையவில்லை லான்செட் இதழ்

ஏப்ரல்,24,2012. தட்டம்மையால் ஏற்படும் இறப்புக்களை குறைப்பதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி வேகமாக முன்னேறவில்லை என்று பிரிட்டன் மருத்துவ இதழ் Lancet அறிவித்தது.
Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2000 மாம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தட்டம்மை நோய் இறப்புக்களை 90 விழுக்காடு குறைப்பதாய்த் திட்டமிடப்பட்டிருந்தது, ஆயினும், இவற்றில் 74 விழுக்காட்டு இறப்புக்களையே தடுக்க முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.
ஆப்ரிக்காவில் இந்நோய் பரவி வருவதும், இந்தியாவில் இந்நோய்க்குத் தடுப்பூசி போடும் திட்டங்கள் தாமதம் அடைவதும் இந்நிலைக்குக் காரணம் என்றும் அவ்விதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
தட்டம்மையால் இரண்டாயிரமாம் ஆண்டில் 5,35,300 பேரும், 2010ம் ஆண்டில் 1,39,300 பேரும் இறந்தனர் என்றும் கூறும் அவ்விதழ், இவ்வெண்ணிக்கைக் குறைவு 2007ம் ஆண்டு வரை வேகமாக இருந்தது, அதற்குப் பின்னர் தாமதம் ஏற்பட்டது என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் இவ்விறப்புக்களை 95 விழுக்காடாகக் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
2010ம் ஆண்டில் 1 கோடியே 90 இலட்சம் குழந்தைகள் தட்டம்மைநோய்த் தடுப்பூசிகள் பெறவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.