Friday 30 November 2012

robert john kennedy: Catholic News in Tamil - 30/11/12

robert john kennedy: Catholic News in Tamil - 30/11/12: 1. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto 2. Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Binay Kandulna 3. திருத்தந்தை ப...

Catholic News in Tamil - 30/11/12


1. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto

2. Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Binay Kandulna

3. திருத்தந்தை ப்ரெஞ்ச் ஆயர்களிடம் : ஐரோப்பாவில் இறையழைத்தலை ஊக்குவியுங்கள்

4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்குத் திருப்பீடம் வரவேற்பு

5. மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

6. முதுபெரும் தலைவர் Tawadros II : எகிப்துக்குத் தேவை செபம், அன்பு, ஞானம்

7. ஐ.நா.நிறுவனங்கள் : எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்

8. பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்


------------------------------------------------------------------------------------------------------

1. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto

நவ.30,2012. இந்தியாவின் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் Anil Joseph Thomas Couto அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டெல்லி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வந்த பேராயர் Vincent Michael Concessao அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்டம் எண் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, தற்போதைய ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் Anil Couto அவர்களை, டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் Pomburaவில் 1954ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பிறந்த ஆயர் Anil Couto, 1981ம் ஆண்டில் குருவானார். உரோமையில் உயர்படிப்பை முடித்துள்ள இவர், 2011ம் ஆண்டில் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜலந்தர் ஆயராக நியமிக்கப்பட்டார். 

2. Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Binay Kandulna

நவ.30,2012. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் Binay Kandulna அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் பணிபுரிந்துவந்த ஆயர் Binay Kandulna, 1964ம் ஆண்டு Gondraவில் பிறந்தவர். 
1994ம் ஆண்டில் Khunti மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2009ம் ஆண்டு ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2012ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
ராஞ்சி உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட Khunti மறைமாவட்டத்தில் Mundas பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

3. திருத்தந்தை ப்ரெஞ்ச் ஆயர்களிடம் : ஐரோப்பாவில் இறையழைத்தலை ஊக்குவியுங்கள்

நவ.30,2012. ஐரோப்பாவில் இறையழைத்தல்கள் குறைந்து வருவதற்கு ஐரோப்பிய மற்றும் ப்ரெஞ்ச் திருஅவைகள் பாராமுகமாய் இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா அப்போஸ்தலிக்கச் சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களில் மூன்றாவது குழுவினரை இவ்வெள்ளிக்கிழமை காலையில்  திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இளையோர் இறைவனின் அழைப்பைக் கேட்பதற்குச் சாதகமான மேய்ப்புப்பணிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
திருஅவை மற்றும் உலகின் நம்பிக்கையாகவும் வருங்காலமாகவும் இருக்கின்ற இளையோர்க்கு கத்தோலிக்கக் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, எடுத்துக்காட்டான மற்றும் சான்று பகரக்கூடிய பயிற்சியாளர்கள் இளையோருக்குத் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நம்பிக்கை ஆண்டில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றியும் பேசிய அவர், இப்பணியில் பங்குத்தளங்களும் கிறிஸ்தவ சமூகங்களும் இணைக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வாலும் கலாச்சாரத்தாலும் உருவாகியுள்ள பிரான்சில், பள்ளிகள் மற்றும் பன்முகப் பணியிடங்கள் வழியாகப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இடம்பெறுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்குத் திருப்பீடம் வரவேற்பு

நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதிபாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, அப்பகுதியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அங்கீகாரம் மட்டும் போதுமானதாக இல்லை என்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கு இந்த அங்கீகாரம் வழங்குவது குறித்து இவ்வியாழனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
இந்த அங்கீகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், தனது நடுநிலைத் தன்மையை உறுதி செய்திருப்பதோடு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் பாலஸ்தீனப் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறும் கேட்டுள்ளது.
இஸ்ரேல், தனி நாடாகச் செயல்படுவதற்குரிய உரிமை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பன்னாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும் அங்கீகாரம் பெற்றுள்ளது, இதேபோல் பாலஸ்தீனாவும் முழுமாண்புடன் இறையாண்மை கொண்ட தனிப்பட்ட நாடாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் திருப்பீடம் அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக எல்லைகள் உள்பட பல பிரச்சனைகள் நிலவுகின்றன. யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு தகுதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீனத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதியை அங்கீகரித்து ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில், இந்தியா உள்பட 138 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன.

5. மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதியைப் பாலஸ்தீனத்துக்கு வழங்குவது குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பங்கேற்காமல் இருந்ததையொட்டி, தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் ஆயர்கள்.
ஆயர்கள் Michael Langrish, Declan Lang ஆகிய இருவரும் இணைந்து வெளியுறவுத்துறைச் செயலர் William Hagueக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் தடைபட்டுள்ள அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ஐ.நா.வில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று விண்ணப்பித்த பாலஸ்தீன அதிகாரிகளின் ஆவல் நியாயமானது என்றும், இது, அப்பகுதியின் தற்போதைய இடர்நிறைந்த அரசியல் சூழலை நீக்குவதற்கு வன்முறையற்ற வழியில் எடுக்கும் முயற்சியாகும் என்றும்,  இதற்குப் பரவலான ஆதரவு தேவை என்றும் பிரிட்டன் ஆயர்கள் விளக்கியுள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் இரண்டு நாடுகளாக செயல்படுவதற்குரிய நேரம் வந்தாகிவிட்டது என்று கூறியுள்ள ஆயர்கள், இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருப்பது கொடுமையானது என்று தெரிவித்துள்ளனர். 

6. முதுபெரும் தலைவர் Tawadros II : எகிப்துக்குத் தேவை செபம், அன்பு, ஞானம்

நவ.30,2012. எகிப்தின் முன்வரைவு அரசியல் அமைப்பு, அந்நாட்டின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் கிறிஸ்தவ உறுப்பினர்களின் பங்கேற்பு இன்றி இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களால் இவ்வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார் அந்நாட்டின் ஆர்த்தடாக்ஸ் காப்டிக் கிறிஸ்தவ சபையின் புதிய தலைவர்  இரண்டாம் Tawadros
இந்த அரசியல் அமைப்பு, முஸ்லீம் குருக்களுக்குச் சட்டத்தின்மீது  அதிக அதிகாரம் அளிக்கும் எனவும், பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம், பெண்களின் உரிமைகள் மற்றும் பிற சுதந்திரங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் என மனித உரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எகிப்தின் தற்போதைய நிலவரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த காப்டிக் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros,  தற்போது எகிப்துக்குச் செபம், அன்பு மற்றும் ஞானம் தேவை என்று கூறினார்.
இந்த அரசியல் அமைப்பை இச்சனிக்கிழமையன்று அரசுத்தலைவரிடம் கொடுப்பதற்கும் அந்நாட்டின் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது எனவும், இது குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு 30 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டுமெனவும் மனித உரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

7. ஐ.நா.நிறுவனங்கள் : எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்

நவ.30,2012. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் பணி செய்யும் இடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்படுமாறு ஐ.நா.நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
டிசம்பர் முதல் தேதியன்று அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள அனைத்துலக தொழில் நிறுவன இயக்குனர் Guy Ryder,  HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்பவர்கள் மாண்புடன் வாழவும், வேலை செய்யும் இடங்களில் வேறுபாடின்றி நடத்தப்படவும் அனைவரும் உழைக்குமாறு கேட்டுள்ளார்.
பாகுபாடற்ற சுதந்திரம், பணிசெய்வதற்கான அடிப்படையான உரிமை என்றுரைத்த Guy Ryder, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாகுபாடுகளைக் களைய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைசெய்யும் வயதுடையவர்களில் 3 கோடிக்கு மேற்பட்டோர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர் மற்றும் வேலை செய்யும் இளையோரில் 40 விழுக்காட்டுக்கு அதிகமானோர் ஆண்டுதோறும் புதிதாக இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று அனைத்துலக தொழில் நிறுவனம் கூறுகிறது.

8. பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

நவ.30,2012. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு ஒரு வழியாக, அவர்களை வன்முறைக்கு உள்ளாக்கும் மனிதருக்குரிய தண்டனைகளைப் பொதுப்படையாக அறிவிக்க வேண்டுமென பாகிஸ்தான் மனித உரிமைகள் குழு ஒன்று கூறியது.
பாகிஸ்தானில் காவல்நிலையங்களில் இடம்பெறும் ஊழல் கலாச்சாரம், சட்டமும் ஒழுங்கும் மீறப்படுவது, நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிக்கப்படல் ஆகியவை ஆணாதிக்க சமுதாயத்தில் சட்டத்தினால் கிடைக்கும் தண்டனைகள் மீது பயத்தை நீக்குகின்றன என்று அக்குழு கூறியது. 
பாகிஸ்தானில் கடத்தல் குற்றமே பெண்களுக்கு எதிராகப் பரவலாக இடம்பெறும் குற்றம் என்றுரைக்கும் Aurat மனித உரிமைகள் அமைப்பு, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 1,086 கடத்தல் குற்றங்களும், 792 கொலைகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளது.

robert john kennedy: Catholic News in Tamil - 29/11/12

robert john kennedy: Catholic News in Tamil - 29/11/12: 1. சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பிக்கும் அல்பேனியா குடியரசுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள் 2. புலம்பெயரும் மக்கள் நம்பிக்க...

Catholic News in Tamil - 29/11/12


1. சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பிக்கும் அல்பேனியா குடியரசுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

2. புலம்பெயரும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் - கர்தினால் Veglio

3. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

4. இந்தியாவில் கத்தோலிக்க நலப்பணிகளால் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்

5. 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை செய்துள்ள 28,05,442 டாலர்கள் நிதி உதவிகள்

6. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் ஐந்தாவது நூற்றாண்டு விழா

7. இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்க அரசு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிறிஸ்தவ, யூத அமைப்புக்கள் கண்டனம்

8. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்:வருமான வரித்துறை புது முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பிக்கும் அல்பேனியா குடியரசுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

நவ.29,2012. நவம்பர் 28, இப்புதனன்று, ஆல்பேனியா நாடு தன் சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பித்தையொட்டி, தன் வாழ்த்துக்களை அனுப்பிவைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் சார்பில் இந்நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் Bar உயர்மறைமாவட்டப் பேராயர் Zef Gashi வழியாக அல்பேனியா குடியரசின் தலைவர் Bujar Nishani அவர்களுக்கு, இந்த வாழ்த்துக்களை நேரடியாக அனுப்பிவைத்தார் திருத்தந்தை.
அமைதி, நீதி மற்றும் வளங்கள் பலவும் பெற்று அல்பேனியா சிறந்து விளங்க வேண்டுமென்ற தன் செபங்களையும் ஆசீரையும் இவ்வாழ்த்தின் மூலம் திருத்தந்தை அனுப்பிவைத்தார்.
28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஆல்பேனியா நாடு, 1912ம்  ஆண்டு நவம்பர் 28ம் தேதி ஒரு குடியரசு நாடாக விடுதலை அடைந்தது.

2. புலம்பெயரும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் - கர்தினால் Veglio

நவ.29,2012. உலகமயமாக்கல் என்ற போக்கினால் நமது சமுதாயம் சந்தித்துவரும் உலகளாவிய ஒரு நிகழ்வு புலம்பெயர்தல் என்று, பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
உரோம் நகரில் உள்ள திருத்தந்தை உர்பான் பல்கலைக்கழகத்தில், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் SIMI என்ற ஒரு அமைப்பின் துவக்க விழாவில் இவ்வியாழனன்று உரையாற்றிய கர்தினால் Veglio, இவ்வாறு கூறினார்.
அண்மையில் நாம் கடந்து வந்த 20ம் நூற்றாண்டின் ஒரு மிகப்பெரும் மாற்றம் புலம்பெயர்தல் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியச் சொற்களை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, புலம்பெயர்தல் என்ற வரலாற்று நிகழ்வு, மனித சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்டது என்று எடுத்துரைத்தார்.
புலம்பெயர்தல் ஒரு துயரமான நிகழ்வு என்றாலும், இந்தக் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் என்று கூறிய கர்தினால் Veglio, இந்த ஒரு அம்சத்தால், நம்பிக்கை ஆண்டில் இப்பணி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது என்று  வலியுறுத்தினார்.

3. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

நவ.29,2012. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு கொண்டாடிவரும் நூற்றாண்டு நிறைவையொட்டி, இவ்வறக்கட்டளையின் நிர்வாகக் குழுவினரை நல்ல சமாரியர் அறக்கட்டளையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உரோம் நகரில் சந்தித்து, தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நலவாழ்வுப் பணியாளர்கள் திருப்பீட அவையால் இப்புதனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பிற்கு, இவ்வவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski தலைமை தாங்கினார்.
Paluel J. Flagg என்ற மருத்துவரால் 1912ம் ஆண்டு நியூயார்க் நகரில் கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளை துவக்கப்பட்டது. தேவையில் உள்ள வறியோர் மத்தியில் இவ்வறக்கட்டளையின் மூலம் மருத்துவப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய புதன் பொது மறைபோதகத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

4. இந்தியாவில் கத்தோலிக்க நலப்பணிகளால் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்

நவ.29,2012. மாறிவரும் உலகச் சூழலில் நலமற்றோருக்குத் திருஅவை ஆற்றும் பணிகளிலும் மாற்றங்கள் தேவை என்று பெங்களூரு பேராயர் Bernard Moras கூறினார்.
உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற நலப்பணியாளர்கள் அகில உலகக் கருத்தரங்கில் இந்தியத் திருஅவையின் சார்பில் பங்கேற்றப் பேராயர் Moras, இந்தியாவுக்குத் திரும்பியபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினார்.
"சவால்கள் நிறைந்த உலகில் கத்தோலிக்க மருத்துவமனைகளின் பணி" என்ற தலைப்பில் அகில உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Moras, இந்தியாவில் கத்தோலிக்க மருத்துவமனைகள் ஆற்றிவரும் பணி போற்றுதற்குரியது என்று சுட்டிக் காட்டினார்.
இந்திய மக்கள்தொகையில் கத்தோலிக்கர்கள் 2 விழுக்காட்டினரே ஆயினும், இந்தியாவில் ஆற்றப்படும் நலப்பணிகளில் 20 விழுக்காடு, கத்தோலிக்கர்களால் செய்யப்படுகிறது என்று பேராயர் Moras சுட்டிக்காட்டினார்.
இந்திய கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் நலவாழ்வு நிலையங்கள் 3300க்கும் அதிகமானது என்றும், இவற்றில் பணியாற்றும் 35,000க்கும் அதிகமான நலப்பணியாளர்கள் மூலம் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பயன்பெறுகின்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

5. 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை செய்துள்ள 28,05,442 டாலர்கள் நிதி உதவிகள்

நவ.29,2012. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள 16 ஆயர் பேரவைகள் அனுப்பியிருந்த விண்ணப்பங்களில் 49 விண்ணப்பங்களுக்கு 12,26,500 டாலர்கள் நிதி உதவி செய்ய அமெரிக்க ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அங்கமான ஆப்ரிக்கத் திருஅவைப் பணிகள் அவையின் இந்த முடிவினால் எத்தியோப்பியா, உகாண்டா, டான்சானியா ஆகிய நாடுகள் உதவிகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முடிவான இத்தொகையுடன் சேர்த்து, 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை 28,05,442 டாலர்கள் நிதி உதவிகளை 109 பணித்திட்டங்களுக்கு வழங்கியுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் ஆப்ரிக்கத் திருஅவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அவர்களுக்குச் செய்யும் உதவிகள் நம்பிக்கை ஆண்டின் ஓர் அடையாள வெளிப்பாடு என்றும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசிய ஆயர் John Ricard கூறினார்.

6. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் ஐந்தாவது நூற்றாண்டு விழா

நவ.29,2012. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டமான Santa Maria la Antigua தன் ஐந்தாவது நூற்றாண்டை இப்புதனன்று கொண்டாடியது.
மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள Guatemala, El Salvador, Honduras, Nicaragua, Costa Rica, Panama ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஆயர்கள் இந்த ஜுபிலி விழாவை ஒரு கூட்டுத் திருப்பலியுடன் துவக்கிவைத்தனர்.
நவம்பர் 30, இவ்வெள்ளி முடிய நடைபெறும் இந்த விழாவில் மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள நாடுகள் சந்திக்கும் பல பிரச்சனைகளும் பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறப்பாக, இப்பகுதிகளில் சுரங்கத்தொழில் என்ற பெயரால் மண்ணின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படுவதைக் குறித்து விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7. இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்க அரசு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிறிஸ்தவ, யூத அமைப்புக்கள் கண்டனம்

நவ.29,2012. இஸ்ரேல் நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நிபந்தனை ஏதுமற்ற வகையில் உதவிகள் செய்துவருவதைக் கண்டனம் செய்து, கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புக்கள் வாஷிங்டன் நகரில் இவ்வியாழனன்று கண்டன கூட்டம் ஒன்றை நடத்தின.
அமெரிக்க அரசின் நிபந்தனையற்ற ஆதரவைக் குறித்து கேள்விகள் எழுப்பி, 15 கிறிஸ்தவத் தலைவர்கள் அரசுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளனர்.
பாலஸ்தீனா ஒரு தனி நாடாக இயங்கும் உரிமையை வழங்க, இவ்வியாழனன்று ஐ.நா.வின் பொது அவையில் ஓட்டெடுப்பு நடைபெறும் சூழலில், பாலஸ்தீனாவுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பயன்படுத்திவரும் இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க அரசு நிபந்தனையற்ற ஆதரவு தருவது பெரும் கண்டனத்திற்குரியது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
வாஷிங்டனில் நடைபெறும் இந்த கண்டனக் கூட்டம் இணையத்தளங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்:வருமான வரித்துறை புது முடிவு

நவ.29,2012. சுவிட்சர்லாந்து வங்கியில், கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களுக்கு எதிராக, வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சில வங்கிகளில், பெருமளவு கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்திய வி.ஐ.பி.,க்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால், அண்மையில் வெளியிட்டார்.
வங்கிக்கணக்கில் காட்டப்படாத பணத்தைப் பதுக்கி வைத்துள்ள, 700 இந்தியர்களின் பட்டியலை, பிரான்சு அரசு, இந்திய அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைத்திருந்தது.
இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணையைத் துவக்கியிருந்தனர். சுவிட்சர்லாந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து வங்கியில், இரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள், வருமான வரித்துறையிடம் உள்ளன. இவர்களுக்கு எதிரான, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும்இதுகுறித்த அதிகாரப்பூர்வ அனுமதி, நிதி அமைச்சகத்திடமிருந்து வரவேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Wednesday 28 November 2012

robert john kennedy: Catholic News in Tamil - 28/11/12

robert john kennedy: Catholic News in Tamil - 28/11/12: 1. கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி 2. பாலஸ்தீனாவைத் தனி நாடாக...

Catholic News in Tamil - 28/11/12


1. கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி

2. பாலஸ்தீனாவைத் தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் -  இந்திய ஆயர்கள் வேண்டுகோள்

3. கர்தினால் Angelo Dalla Costaவுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" விருது

4. இறைவன் வழங்கியுள்ள இயற்கை சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் கொரியா, ஜப்பான் ஆயர்கள்

5. கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அகில உலகக் கருத்தரங்கு

6. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" இலண்டன் மாநகரில் கருத்தரங்கு

7. புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம்

8. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி

நவ.28,2012. நாடுவிட்டு நாடு செல்லும் பாரம்பரியம் கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரியான கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களின் கூட்டம் ஒன்று நவம்பர் 27, இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் துவக்கவிழாவில் புலம்பெயர்ந்தோர் பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
வரலாற்றில், கிறிஸ்தவர்கள் நாடு விட்டு நாடு சென்ற வேளையில், நற்செய்தியையும் தங்களுடன் எடுத்துச் சென்றதால், கிறிஸ்தவ மறை உலகெங்கும் பரவியது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, தற்காலச் சூழலில் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக் கோடுகள் பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்டு, அல்லது அழிக்கப்பட்டு வருவதையும் நாம் காண முடிகிறது என்று கூறினார்.
நாடுகளுக்கிடையே அமைதியற்ற நிலை அதிகரித்து வருவதால், புலம்பெயர்தல் என்பதும் பெரும் பிரச்சனையாக வளர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் Veglio, கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் இப்பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.


2. பாலஸ்தீனாவைத் தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் -  இந்திய ஆயர்கள் வேண்டுகோள்

நவ.28,2012. பாலஸ்தீனாவை ஒரு தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டுமென்று இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனாவைத் தனியொரு அரபு அரசாக உருவாக்கும் முயற்சிகள் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.பொது அவையில் இவ்வியாழனன்று மேற்கொள்ளப்படும் சூழலில், இந்த முயற்சியை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் சார்பில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Salman Khurshid அவர்களுக்கு மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீனா தனியொரு நாடாக உருவாவது மட்டுமல்லாமல், அந்நாட்டில் இஸ்ரேல் இராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் நிலப்பகுதிகளும் பாலஸ்தீன அரசிடம் ஒப்புவிக்கப்படவேண்டும் என்றும் இந்திய ஆயர்கள் இம்மடல் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசு இஸ்ரேல் அரசின் பக்கம் அதிகம் சாய்ந்திருப்பது, பாலஸ்தீனா தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பெரியதொரு தடையாக உள்ளதென்று ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
1948ம்  ஆண்டிலிருந்து நவம்பர் 29ம் தேதியை, பாலஸ்தீனாவுக்கு ஆதரவு திரட்டும் அகில உலக நாளாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.


3. கர்தினால் Angelo Dalla Costaவுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" விருது

நவ.28,2012. 1931ம்  ஆண்டிலிருந்து 1961ம் ஆண்டு முடிய இத்தாலியின் Florence உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Angelo Elia Dalla Costa, அவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" (Righteous Among the Nations) என்ற உயரிய விருதை Yad Vashem என்ற யூத அமைப்பு ஒன்று இத்திங்களன்று வழங்கியது.
இரண்டாம் உலகப் போரின்போது, வன்முறைகளுக்கு உள்ளான யூதர்களை Florence நகரில் கர்தினால் Dalla Costa அடைக்கலம் கொடுத்து காத்துவந்ததால் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று  YV அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பேராயரான கர்தினால் Dalla Costa, யூதர்களைக் காக்கும் பணியில் தன் மறைமாவட்டக் குருக்களையும் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார் என்றும், தனது செயலராகப் பணியாற்றிய அருள்தந்தையை இப்பணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளிலிருந்து அக்குலத்தவரைக் காத்தவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" என்ற விருது 1953ம்  ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24000க்கும் அதிகமானோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 530 பேர் இத்தாலியர்கள்.


4. இறைவன் வழங்கியுள்ள இயற்கை சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் கொரியா, ஜப்பான் ஆயர்கள்

நவ.28,2012. மனிதர்களுக்கு இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள சூரிய ஒளி, காற்று ஆகிய சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்துவதால், அணுசக்தியை நம்பி வாழும் ஆபத்தான நிலையிலிருந்து விடுதலை பெறலாம் என்று கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் கூறியுள்ளனர்.
கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் அண்மையில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் 'அணுசக்தியைப் படிப்படியாக அகற்றுவது' என்ற தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்வாண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட ஆயர்களும் குருக்களும், தென் கொரியாவின் Gyeongju நகரில் இயங்கி வரும் அணுசக்தி நிலையத்தைச் சென்று பார்வையிட்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்விரு நாடுகளின் ஆயர்களும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் ஒன்று கூடுவதாகத் தெரிவித்துள்ளனர்.


5. கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அகில உலகக் கருத்தரங்கு

நவ.28,2012. மறைபரப்புப் பணி, திருஅவை, இறையியல் ஆகிய முப்பரிமாணங்கள் அடங்கிய ஓர் அகில உலகக் கருத்தரங்கு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இப்புதனன்று ஆரம்பமானது.
இப்பல்கலைக் கழகத்தில் 1931ம்  ஆண்டு துவக்கப்பட்ட மறைபரப்புப் பணியியல் (Missiology) என்ற பிரிவின் 80ம் ஆண்டு நிறைவையும், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பமானதன் 50ம்  ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் வெள்ளி முடிய நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் பல நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் இறையியல் வல்லுனர்கள் பங்கேற்று வருகின்றனர்.
விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடப் பேராயத்தின் ஆலோசகராகப் பணியாற்றிய கர்தினால் Karl Josef Becker என்ற இயேசு சபை பேராசிரியர் இக்கருத்தரங்கின் இறுதிநாள் அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


6. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" இலண்டன் மாநகரில் கருத்தரங்கு

நவ.28,2012. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" என்ற கருத்தில் டிசம்பர் 1ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று இலண்டன் மாநகரில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 25, கடந்த ஞாயிறுமுதல் உலகின் பல நாடுகளிலும் துவக்கப்பட்டுள்ள "ஏன் வறுமை" மற்றும் "வறுமையைப் பழங்கால வரலாறாக்குவோம்" என்ற மையக் கருத்துடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முயற்சிகளின் ஓர் அங்கமாக, பிரித்தானிய கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் கருத்தரங்கில், வறுமை என்ற சமுதாய அவலத்தால் அதிக அளவு பாதிக்கப்படுவது பெண்களே என்ற கருத்து வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வறுமையிலிருந்து பெண்கள் விடுதலை பெற, ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டும் முறைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வமைப்பினர் மேற்கொள்வர் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Amy Daughton கூறினார்.


7. புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம்

நவ.28,2012. வருகிற ஞாயிறன்று ஆரம்பமாகும் புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, The new Radiant Light என்ற ஒரு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
Elizabeth Wang என்ற ஒரு கத்தோலிக்க ஓவியர் வரைந்துள்ள 5000 ஓவியங்கள் அடங்கிய இவ்விணையதளத்தில், மூவொரு இறைவன், கிறிஸ்துவின் வாழ்வு, செபமாலை, என்பன போன்ற கத்தோலிக்கத் திருமறையின் பல்வேறு கருத்துக்களில் ஓவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களை யாரும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டின் ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ள கலைநயம் மிக்க இந்த ஓவியங்களைத் தீட்டியுள்ள Elizabeth Wang, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியங்கள் தீட்டி, பல கண்காட்சிகளை நடத்தியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியங்களைக் காண விரும்புவோர் www.radiantlight.org.uk என்ற இணையதளத்தை காண்க.


8. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது

நவ.28,2012. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாடுகளில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக அளவில் போலியோ ஒழிப்பைக் கண்காணிக்கும் Global Polio Eradication Initiative என்ற அமைப்பு, இம்மூன்று நாடுகளில் இருந்தும் யாராவது ஒருவர் பயணம் மேற்கொண்டால், அதன் மூலம் போலியோ கிருமி ஏற்றுமதியாகும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இனி, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எல்லையை கடக்கும் முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இளம்பிள்ளைவாத நோய் ஏறத்தாழ ஒழிக்கப்பட்டுவிட்டது.