Friday 27 July 2012

Catholic News in Tamil - 27/07/12

1.கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை சந்திப்பு

2. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதற்கு உதவும் : பேராயர் சுள்ளிக்காட்

3. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்திற்கு விரைவில் இசைவு  உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

4. அசாம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது கத்தோலிக்கத் திருஅவை

5. தமிழர் ஒருவருக்கு ரமோன் மகசேசே விருது

6. காங்கோவின் "balkanization" திட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்து கொள்ளுமாறு ஆயர்கள் அழைப்பு

7. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு ஓர் அருள்சகோதரி வலியுறுத்தல்

8. சிரியாவில் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறு பான் கி மூன் அழைப்பு


------------------------------------------------------------------------------------------------------

1.கர்தினால்கள் குழுவுடன் திருத்தந்தை சந்திப்பு

ஜூலை,27,2012. வத்திக்கானிலிருந்து நம்பகத்தன்மைமிக்க ஆவணங்கள் பொதுவில் வெளியாகிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூன்று கர்தினால்கள் அடங்கிய குழுவை இவ்வியாழனன்று திருத்தந்தை சந்தித்தார் என்று திருப்பீடம் கூறியது.
இக்குழுவின் கர்தினால்கள் Julian Herranz, Joseph Tomko, Salvatore de Giorgi, இன்னும், இக்குழுவின் செயலர் கப்புச்சின் சபை அருள்தந்தை Louis Martignani, இவ்விவகாரத்தை விசாரிக்கும் குற்றவியல் நடுவர் பேராசிரியர்  Piero Antonio Bonnet, வத்திக்கான் நகர நீதிமன்றத்தின் நீதிஊக்குனர் பேராசிரியர் Nicola Picardi ஆகியோரும் சேர்ந்து திருத்தந்தையைச் சந்தித்தனர்.
இவ்விவகாரம் குறித்த இக்கர்தினால்கள் குழுவின் விசாரணைகளின் முடிவுகளையும், இன்னும் முடிக்கப்பட வேண்டிய குற்ற விசாரணைகள் குறித்தும் அறிந்து அக்குழுவுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்தக் குழு இந்தத் தனது வேலையை தளரா ஊக்கத்துடன் தொடர்ந்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரங்களுக்கான பதிலாளர் பேராயர் Angelo Becciu, திருத்தந்தையின் செயலர் பேரருட்திரு Georg Gänswein, வத்திக்கான் காவல்துறை அதிகாரி முனைவர் Domenico Giani, திருப்பீடச் செயலகத்திற்குத் தொடர்பு ஆலோசகர் முனைவர் Greg Burke ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.


2. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதற்கு உதவும் : பேராயர் சுள்ளிக்காட்

ஜூலை,27,2012. ஆயுதங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள், முறையற்றும், பொறுப்பற்றும், சட்டத்துக்குப் புறம்பேயும் கைமாற்றப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையும் பயமும் ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தால் அகலும் என்று கூறினார் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இவ்வுலகில், மனித வாழ்வும் மனித மாண்பும் அதிகமாக மதிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் கூறினார்.
இந்த ஒப்பந்தம் மிகவும் உறுதியானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருப்பதற்குத் திருப்பீடம் சில வழிமுறைகளை வலியுறுத்த விரும்புகிறது என்றும் கூறிய பேராயர் சுள்ளிக்காட், இவ்விவகாரத்தில் அனைத்துலக அளவில் ஒத்துழைப்பையும், நாடுகளுக்கிடையே உதவிகளையும் ஊக்குவித்து அவற்றை வலியுறுத்த வேண்டுமென்று கூறினார்.
நாடுகளுக்கிடையே இடம்பெறும் நெருங்கிய ஒத்துழைப்பு மூலம், உலகில் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை இவ்வொப்பந்தம் தடை செய்யும், இது உலகில் ஓர் உண்மையான அமைதிக் கலாச்சாரம் ஏற்பட இன்றியமையாதது என்றும் திருப்பீட அதிகாரி பேராயர் சுள்ளிக்காட் ஐ.நா. கூட்டத்தில் கூறினார்.


3. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்திற்கு விரைவில் இசைவு  உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்

ஜூலை,27,2012. ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்த ஐ.நா. கூட்டம் விரைவில் முடியவுள்ளவேளை, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வருமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்  கேட்டுக் கொண்டார்.
சண்டைகளின் காரணமாக, 2010ம் ஆண்டின் இறுதியில் சுமார் 2 கோடியே 75 இலட்சம் மக்கள் நாடுகளுக்குள்ளேயே புலம் பெயர்ந்தனர், அதேநேரம், இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடினர், இவற்றுக்குப் பெரும்பாலும் ஆயுதம் தாங்கிய வன்முறைகளும், ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே காரணங்கள் எனவும் அவர் கூறினார்.
ஆறாயிரம் கோடி டாலர் முதல் ஏழாயிரம் கோடி டாலர் வரையிலான மதிப்புடைய ஆயுத வியாபாரம் ஆண்டுதோறும் உலகில் இடம்பெறுகின்றது.
ஆயுதங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதில் உலகில் அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும் அதற்கடுத்தபடியாக சீனாவும் உள்ளன என ஊடகங்கள் கூறுகின்றன.
சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுதங்களால் ஆண்டுதோறும் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்படுகின்றனர் என்று Stockholm அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
நியுயார்க்கில் நடைபெறும் இந்த நான்கு நாள் கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

4. அசாம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது கத்தோலிக்கத் திருஅவை
ஜூலை,27,2012. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெறும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்கு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.
வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமின் பல மாவட்டங்கள் மதியற்ற வன்முறையாலும் மனிதாபிமான நெருக்கடியாலும் நிறைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், இந்தக் கலவரங்களில் சம்பந்தப்பட்டுள்ள குழுக்கள் அன்பிலும் சகோதரத்துவ உணர்விலும் வாழும் முறைகளைக் கண்டுணருமாறு கேட்டுள்ளனர்.
இம்மாதம் 20ம் தேதி நான்கு போடோ இன இளைஞர்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள், குடியிருப்புக்களுக்குத் தீ வைத்து வீடுகளையும் சூறையாடியுள்ளன. இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் மற்றும் பெருமளவான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

5. தமிழர் ஒருவருக்கு ரமோன் மகசேசே விருது

ஜூலை,27,2012. இந்தியாவின் தமிழர் ஒருவர் உட்பட ஆறு ஆசியர்களுக்கு, ஆசியாவின் நொபெல் விருது என அழைக்கப்படும் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருது அளிக்கப்படுவதாக மனிலாவின் மகசேசே விருதுக்குழு இப்புதனன்று அறிவித்துள்ளது. 
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழைக் கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணி செய்து வரும் குழந்தை பிரான்சிஸ் என்பவர் ரமோன் மகசேசே விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
65 வயதாகும் பிரான்சிஸ், IVDP என்ற ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற வளர்ச்சித் திட்டத்தை 1979ம் ஆண்டு ஆரம்பித்தார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் இந்த IVDP திட்டத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பங்களாதேஷ் வழக்கறிஞர் Syeda Rizwana Hasan, கம்போடிய வேளாண் நிபுணர் Yang Saing Koma, இந்தோனேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் Ambrosius Ruwindrijarto, பிலிப்பீன்ஸ் வேளாண் அறிவியலாளர் Romulo Davide, தாய்வான் காய்கறி விற்பனையாளர் Chen Shu-Chu ஆகியோரும் இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஆறுபேரும் இவ்விருதை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மனிலாவில் பெறுவார்கள்.
முன்னாள் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரமோன் மகசேசேயின் பெயரால் 1958ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்விருதை இதுவரை 49 இந்தியர்கள் உட்பட 290 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் MS சுவாமிநாதன், MS சுப்புலட்சுமி, TN சேஷன், P.Sainath உட்பட 6 பேர் தமிழர்கள்.


6. காங்கோவின் "balkanization" திட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்து கொள்ளுமாறு ஆயர்கள் அழைப்பு

ஜூலை,27,2012. ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசை இன மற்றும் புவியியல் கோடுகளின்படி பிரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள "balkanization" என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், வருகிற ஆகஸ்ட் முதல் தேதி நாடு முழுவதும் இடம்பெறும் போராட்டத்தில் கத்தோலிக்கரும் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
காங்கோவின் கிழக்குப் பகுதியில் புரட்சியாளர்கள் புகுந்து தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறிய காங்கோ ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருட்பணி Leonard Santedi, இம்மாதம் 31ம் தேதியிலிருந்து நாட்டின் அமைதிக்காகச் செபிப்பதற்கு அனைத்து விசுவாசிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காங்கோவைப் பிரிப்பதற்கானத் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அருட்பணி Santedi கூறினார்.
ஆகஸ்ட் முதல் நாள், காங்கோ மூதாதையர் மற்றும் பெற்றோரின் விழாவாகச் சிறப்பிக்கப்படுகிறது. அந்நாள் காங்கோவில் தேசிய விடுமுறை தினமாகும். எனவே காங்கோ என்ற ஒரே நாட்டைப் பாதுகாப்பதற்கு இந்நளில் போராட வேண்டுமென்றும் அக்குரு கேட்டுக் கொண்டார்.
Tutsi இனத்தவரைச் சேர்ந்த M23 என்ற புரட்சிக்குழு, காங்கோ இராணுவத்துடன் சண்டையிட்டதில்  2 இலட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.


7. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு ஓர் அருள்சகோதரி வலியுறுத்தல்

ஜூலை,27,2012. சிரியாவின் புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு அந்நாட்டின் ஹோம்ஸ் நகருக்கு அருகிலுள்ள Deir Mar Youcoub துறவு இல்லத்தலைவர் அருள்சகோதரி Agnes-Mariam de la Croix கேட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சிரியாவின் புரட்சியாளர்கள், சிரியா சமுதாயத்தில் குழப்பத்தை விதைத்து நாட்டின் சமநிலையை அழித்து வருகின்றனர் என்றும், பயங்கரவாதம், அச்சுறுத்தல்கள், இரத்தம்சிந்தல்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டைப் பிணையலில் வைத்துள்ளனர் என்றும் அருள்சகோதரி de la Croix குற்றம் சுமத்தினார்.
புரட்சியாளர்களின் நோக்கங்கள் குறித்து மேற்கத்திய ஆதரவாளர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றுரைத்த அச்சகோதரி, இந்தப் புரட்சியாளர்களில் சிலர், அல்-கெய்தா அல்லது முஸ்லீம் சகோதரத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டமைப்புக் கொண்டவர்கள் என்றும் விளக்கினார்.
கட்டாயத்தின்பேரில் சிரியாவிலிருந்து லெபனன் நாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அச்சகோதரி அரசியல்வாதிகளையும் ஊடகத்துறையினரையும் சந்திப்பதற்காகத் தற்போது உரோமை வந்துள்ளார்.
வெளிநாட்டுச் சக்திகள் சிரியாவின் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதையும், கனரக ஆயுதங்களால் சிரியா ஆக்ரமிக்கப்படுவதற்கு உதவுவதையும் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி de la Croix, சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் ஐ.நா.தீர்மானத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

8. சிரியாவில் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறு பான் கி மூன் அழைப்பு

ஜூலை,27,2012. Bosnia-Herzegovina குடியரசின் Srebrenica நகரில் 1995ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற படுகொலை நாளை நினைவுகூர்ந்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இந்தப் படுகொலை நிகழ்விலிருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிரியாவில் இடம்பெறும் இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
Srebrenica நகரில் எட்டாயிரத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த பான் கி மூன், அச்சமயத்தில் அம்மக்களுக்குத் தேவைப்பட்ட ஆதரவை பன்னாட்டுச் சமுதாயம் வழங்கத் தவறியது என்றும் கூறினார்.
இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், இனஒழிப்பு மற்றும் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடையவை ஏற்படும்போது தங்களது நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசுகளின் பொறுப்பு என்பதை, 2005ம் ஆண்டில் உலகத் தலைவர்கள் ஒரு கொள்கையாகவே கொண்டு வந்தார்கள் என்றும் ஐ.நா.பொதுச்செயலர் கூறினார்.
லிபியா, ஐவரி கோஸ்ட் போன்ற சில இடங்களில் இந்தக் கொள்கையைப் பயன்படுத்த முடிந்தது, ஆனால், சிரியா போன்ற பல இடங்களில் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர் கவலையுடன் கூறினார்.
சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadக்கு எதிராக கடந்த சுமார் 16 மாதங்களாக இடம்பெற்று வரும் கிளர்ச்சியில் பத்தாயிரத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்பதையும் பான் கி மூன் சுட்டிக் காட்டினார்.

 

John Kulandai Elias on Fr. G. Alphonse

John Kulandai Elias
 
I am really sorry to learn about that. He was a great man. I learnt a lot from him. His demise is a loss for all of us. I am extremely shocked to hear this sad news! Was he very sick? Fr. Alphonse helped many many poor people and carried out a silent work of the Kingdom. He was an imbodiment of Church's option for the poor and the vision for the Kingdom. Oh, I feel very sad to miss his funeral. Greater is my sadness to think that I shall no more meet him. HE WAS INDEED A VERY HOLY MAN, BECAUSE HE WAS SELFLESSLY FOR THE POOR. Will I reach there? Good Father G. Alphonse, pray for me!

Thursday 26 July 2012

robert john kennedy: Fr. G. Alphonse, Kandanvilai is with the Lord - 26...

robert john kennedy: Fr. G. Alphonse, Kandanvilai is with the Lord - 26...

Fr. G. Alphonse, Kandanvilai is with the Lord - 26/07/12



















Catholic News in Tamil - 26/07/12

1.Super Rato வத்திக்கான் அலுவலகத்தின் தலைவர் பேரருட்திரு Paul Pallath

2. Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது மறைமாவட்டத்திற்கு மகிழ்ச்சி மிகுந்த நாட்கள்

3. ஏழைகளை மதிப்புடன் வாழவைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை - அமெரிக்க ஆயர்

4. செக் குடியரசில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருப்பித் தரவேண்டுமென்ற சூழல்

5. பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ள ஒலிம்பிக் சிலுவை

6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படும் பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்

7. ஜூலை 28, கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி, WHO வெளியிட்டுள்ள செய்தி

8. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது


------------------------------------------------------------------------------------------------------

1.Super Rato வத்திக்கான் அலுவலகத்தின் தலைவர் பேரருட்திரு Paul Pallath

ஜூலை,26,2012. Super Rato என்ற வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக பேரருட்திரு Paul Pallath அவர்களை இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Super Rato என்ற வத்திக்கான் அலுவலகம், மணமுறிவு மற்றும் குருத்துவத்திருநிலைப்பாட்டிலிருந்து விலகுதல் குறித்த விவகாரங்கள் தொடர்புடையது. இது, திருஅவையின் Roman Rota உச்சநீதிமன்றத்தில் நிர்வாக அலுவலகமாக 2011ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த வத்திக்கான் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்திரு Paul Pallath, 1959ம் ஆண்டு கேரளாவின் Palai மறைமாவட்டத்தில் Ezhacherry என்ற ஊரில் பிறந்தவர். திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1995ம் ஆண்டு மே 15ம் தேதியன்று திருவழிபாட்டுப் பேராயத்தில் பணியில் சேர்ந்தார்.

2. Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது மறைமாவட்டத்திற்கு மகிழ்ச்சி மிகுந்த நாட்கள்

ஜூலை,26,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கோடை விடுமுறை இல்லத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வருகை தரும்போது, Castel Gandolfo மறைமாவட்டத்திற்கு அது மகிழ்ச்சி மிகுந்த நாட்களாக அமைகின்றன என்று அம்மறைமாவட்ட ஆயர் Marcello Semeraro கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் Castel Gandolfoவுக்கு திருத்தந்தை வருகை தருவது குடும்பத்தின் ஒரு முக்கியக் உறவினர் திரும்பி வருவதைப் போல் மக்கள் உணர்கின்றனர் என்றும், இந்த நாட்களில் திருத்தந்தைக்காக எழுப்பப்படும் செபங்கள் உச்சநிலையை அடைகின்றன என்றும் ஆயர் Semeraro கூறினார்.
இந்நாட்களில் திருத்தந்தை வழங்கும் மூவேளை செப உரைகளில் உடலுக்குத் தரப்படும் ஒய்வு எவ்விதம் நமது உடலுக்கு மட்டுமல்லாமல், ஆன்மாவுக்கும் புத்துணர்ச்சி தருகிறது என்பதைத் திருத்தந்தை வலியுறுத்துகிறார் என்று சுட்டிக்காட்டினார் ஆயர் Semeraro.
நமது குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், இறைவனுடன் நமது உறவை ஆழப்படுத்த நேரம் ஒதுக்கவும் நமது விடுமுறைகள் நம்மை அழைக்கின்றன என்று ஆயர் Semeraro எடுத்துரைத்தார்.

3. ஏழைகளை மதிப்புடன் வாழவைப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை - அமெரிக்க ஆயர்

ஜூலை,26,2012. அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மத்தியில் தங்கள் சக்தியைப் பயன்படுத்த முடியாத நிலையில் வாழும் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
செல்வம் மிகுந்தவர்கள் செலுத்தவேண்டிய வரித் தொகையைக் குறைக்கும் முயற்சிகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியால், வறியோருக்குக் கிடைக்கவேண்டிய பல உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற கவலையில், அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றம், உள்நாட்டு நீதி என்ற பணிக்குழுவின் தலைவரான ஆயர் Stephen Blaire தன் கவலையை வெளியிட்டு பிரதிநிதிகளுக்கு இப்புதனன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் வறியோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருகிறது என்றும், தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 4 கோடியே, 60 இலட்சம் வறியோர் உள்ளனர், இவர்களில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் உள்ளனர் என்று ஆயர் Blaire சுட்டிக் காட்டினார்.
செல்வந்தர்களின் வரித்தொகையைக் குறைக்கும்போது, அரசின் நிதி பற்றாக்குறை அதிகமாகும், இதனால் வறியோர் மதிப்புடன் வாழும் பல திட்டங்கள் நீக்கப்படும் என்று ஆயர் Blaire தன் கவலையை வெளியிட்டார்.
4. செக் குடியரசில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருப்பித் தரவேண்டுமென்ற சூழல்

ஜூலை,26,2012. 1948ம் ஆண்டு செக் குடியரசில் கம்யுனிச ஆட்சி நிறுவப்பட்டபோது, அந்நாட்டில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருஅவைக்குத் திருப்பித் தர வேண்டுமென்ற ஒரு தீர்மானம் அண்மையில் அந்நாட்டின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் தற்போது செக் குடியரசின் மேலவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இத்தீர்மானம் சட்டமாக்கப்பட்டால், அரசின் அதிகாரத்திற்குக் கீழ் உள்ள திருஅவையின் நிலங்களும் மற்ற நிறுவனங்களும் மீண்டும் திருஅவைக்குத் திருப்பித்தரப்பட வேண்டும். நிறுவனங்கள் திருப்பித் தரப்படும் நிலையில் இல்லையெனில், அதற்குத் தகுந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.
1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி கம்யுனிச ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றியபோது திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு தற்போது 680 கோடி டாலர் மதிப்புடையது என்று  சொல்லப்படுகிறது.

5. பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ள ஒலிம்பிக் சிலுவை

ஜூலை,26,2012. சிலுவையின்றி கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்பதால், துவங்கவிருக்கும்  ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிறிஸ்தவர்களின் பங்களிப்பாக ஒலிம்பிக் சிலுவையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையின் சார்பாக, 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் James Parker கூறினார்.
ஒலிம்பிக் சிலுவையை பல இளையோர் முன்னிலையில் அருள்தந்தை Simon Penhalagan இப்புதனன்று அர்ச்சித்தார்.
இந்தச் சிலுவை, ஒலிம்பிக் போட்டிகளின்போது கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள Joshua முகாம் என்ற இடத்தில் நிறுவப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அங்கு பல ஆன்மீகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு நீடித்த நினைவாக மக்கள் எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலுவை, Jon Cornwall என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பன்னிருத் திருத்தூதர்களை நினைவுறுத்தும் வண்ணம் இந்தச் சிலுவை பன்னிரு வகை மரங்களிலிருந்து உருவாகப்பட்டுள்ளது என்று இதனை வடிவமைத்த கலைஞர் Cornwall கூறினார்.
இந்த ஒலிம்பிக் சிலுவை இலண்டன் நகர போட்டிகள் முடிந்தபின், 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள், 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டிகள், மற்றும் 2014ம் ஆண்டு இரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படும் பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்

ஜூலை,26,2012. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படவிருக்கும் பல பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஹாங்காங் நகரில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்று பல கவலை தரும் விவரங்களை இப்புதனன்று வெளியிட்டது.
(SACOM) பெரும் தோழில் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள், அறிஞர்கள் என்ற இவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், சட்டப்பூர்வமான வேலை நேரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக ஒவ்வொரு தொழிலாளியும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.
குறைவான கூலி, ஆபத்தான பணிச்சூழல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து செய்துவரும் பெரும் நிறுவனங்களை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உயர்மட்டக் குழுவினர் ஆதரிப்பது, மனித குலத்திற்கு எதிரான அநீதி என்று இவ்வமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் நினைவுப்பொருட்களின் விற்பனை இவ்வெள்ளியன்று ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டப் பொருட்களை ஆதரிப்பதால் அங்கு அநீதமான முறையில் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுவதை உலகம் ஆதரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இவ்வறிக்கை வெளியிடப்படுவதாக இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.
அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிகளின்போதாகிலும் இத்தகைய அநீதிகள் தொடராதவண்ணம் காக்க வேண்டியது ஒலிம்பிக் உயர்மட்டக் குழுவினர் கடமை என்பதையும் இவ்வமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


7. ஜூலை 28, கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி, WHO வெளியிட்டுள்ள செய்தி

ஜூலை,26,2012. கல்லீரல் தொடர்புடைய Hepatitis எனப்படும் நோயைத் தடுப்பதற்கும், அதனை முற்றிலும் ஒழிப்பதற்கும் உலக நாடுகள் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.
ஜூலை 28, இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள WHO எனப்படும் உலக நலவாழ்வு அமைப்பின் உயர் அதிகாரி Sylvie Briand, இந்நோயைப் பற்றிய சரியானப் புரிதலே இந்நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்று கூறினார்.
2010ம் ஆண்டு கணக்கின்படி, உலக மக்கள் தொகையில் 12 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இந்நோய் காணப்படுவதாகத் தெரிந்தது. எனவே, இந்த ஆபத்தான போக்கைத் தடுக்க, அவ்வாண்டு முதல் ஜூலை 28ஐ கல்லீரல் நோய் ஒழிப்பு உலக நாளாக அறிவித்து, இந்நோயைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க WHO முயற்சித்து வருகிறது.
'நீங்கள் நினைப்பதை விட, அது அருகில் உள்ளது' என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு இந்த நாள் கடைபிடிக்கப்படும் என்று WHO அறிவித்துள்ளது.
கல்லீரல் நோய் A,B,C,D,E ஆகிய ஐந்து வகை வகைப்படும். இவற்றில், B,C என்ற இருவகையே மிக அதிக அளவில் மக்களிடம் காணப்படுகிறது. இவை இரண்டும் கல்லீரலைச் செயலிழக்கச் செய்யும் ஆபத்தை உருவாக்குகின்றன.

8. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது

ஜூலை,26,2012. இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 1,25,000 கி.மீ. அளவு சாலை வசதிகள் கூடியுள்ளன என்று மத்திய அரசின் பெருஞ்சாலைத் துறை அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2004ம் ஆண்டு 37 இலட்சம் கி.மீ. அளவு அமைக்கப்பட்டிருந்த சாலைகளின் நீளம், 2012ம் ஆண்டில் 47 இலட்சம் கி.மீ. அளவு வளர்ந்துள்ளது என்றும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி கிராமங்களில் செய்யப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
சாலைகள் அமைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், சாலை பாதுகாப்பில் இந்தியா இன்னும் பெரும் முன்னேற்றம் காணவேண்டும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது என்றும், சாலை விபத்துக்களில் ஒவ்வொரு 3.7 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற வேகத்தில் மரணங்கள் நிகழ்கின்றன என்றும் கூறப்படுகிறது.
சாலை விபத்துக்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
 

Catholic News in Tamil - 25/07/12

1. 1.கியூபா நாட்டு கிறிஸ்தவத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை அனுதாபத் தந்தி

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ஆபத்தான அளவு பரவியுள்ளது - கர்தினால் López Rodríguez

3. அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் - ஆயர் Thomas Pulloppillil

4. வத்திக்கானில் Populorum Progressio அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம்

5. ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்டல்

6. ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்

7. உடலில் தீய உயிரணுக்களை அழிக்கும் மகரந்த துகள்கள்

8. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம்


------------------------------------------------------------------------------------------------------

1. கியூபா நாட்டு கிறிஸ்தவத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை அனுதாபத் தந்தி

ஜூலை,25,2012. கியூபா நாட்டில் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த Osvaldo Paya ஜூலை 22, கடந்த ஞாயிறன்று விபத்தில் உயிரிழந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Osvaldo Paya கிறிஸ்தவ விழுமியங்களைத் தன் வாழ்வாலும், செயல்களாலும் பறைசாற்றிய நல்லதொரு தலைவர் என்று கூறியத் திருத்தந்தை, அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் தன் செபங்களையும், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் வழங்குவதாக Havana பேராயர் கர்தினால் Jaime Lucas Ortega அவர்களுக்கு அனுப்பிய இத்தந்தியில் கூறினார்.
Osvaldo Payaவின் மரணம் கியூபா நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு என்று Santiago பேராயர் Dionisio Garcia செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விபத்தைக் குறித்து அரசு  விடுத்துள்ள அறிக்கையில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்று Osvaldo Paya தலைமையேற்று நடத்திய கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் ஆபத்தான அளவு பரவியுள்ளது - கர்தினால் López Rodríguez

ஜூலை,25,2012. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொமினிக்கன் குடியரசு நாட்டில் பெரும் ஆபத்தான அளவு பரவியுள்ளது என்று அந்நாட்டு கர்தினால் ஒருவரும், பேராயர் ஒருவரும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளைத் தடுக்க தொமினிக்கன் குடியரசு, சட்டத் தீர்திருத்தங்களைத் தாமதிக்காமல் கொண்டுவர வேண்டுமென்று Santo Domingo பேராயரான கர்தினால் Nicolás de Jesús López Rodríguez, மற்றும் Santiago de los Caballeros பேராயர் Ramon de la Rosa y Carpio அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டின் பெரும் அவமானம் என்று அந்நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெறும் Leonel Fernandez அவர்களும் அண்மையில் கூறியுள்ளார்.
தொமினிக்கன் குடியரசில் கடந்த சில மாதங்களில் 100க்கும் அதிகமான பெண்கள் கொடுமையான முறைகளில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் - ஆயர் Thomas Pulloppillil

ஜூலை,25,2012. இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் என்றும், வன்முறைகளுக்கு இலக்காகி வரும் மக்களுக்கு உதவிகள் செய்வதே நமது முக்கிய கடமை என்றும் அஸ்ஸாம் ஆயர் ஒருவர் கூறினார்.
அஸ்ஸாம் பகுதியில் வாழும் Bodo என்ற பழங்குடியினருக்கும், அப்பகுதியில் குடியேறியுள்ள இஸ்லாமியருக்கும் இடையே கடந்த வெள்ளியன்று ஆரம்பமான இந்த வன்முறை குறித்து பேசிய Bongaigaon ஆயர் Thomas Pulloppillil, வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தலத்திருஅவையின் அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Bodo இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள அழிவுகள் பெருமளவில் இருந்தாலும், இஸ்லாமியர் மத்தியில் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களை மட்டும் ஊடகங்கள் காட்டி வருகின்றன என்று பெயர் கூற விரும்பாத ஒரு கத்தோலிக்க குரு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று ஆரம்பமான வன்முறைகள் பல இடங்களுக்கும் பரவியுள்ளதென்றும், இதுவரை 32 பேர் இறந்துள்ளனர், மற்றும் 1,70,000 பேர் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

4. வத்திக்கானில் Populorum Progressio அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம்

ஜூலை,25,2012. கர்தினால் Robert Sarah, அவர்களைத் தலைவராகக் கொண்டு செயலாற்றும் Cor Unum என்ற திருப்பீட அவையின் ஓர் அங்கமான, Populorum Progressio அறக்கட்டளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் தன் ஆண்டுக் கூட்டத்தைத் துவக்கியது.
மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் இவ்வறக்கட்டளை, இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் பகுதிகளில் வாழும் பழங்குடியினர், ஆப்ரிக்க, அமெரிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு உதவும் பல திட்டங்கள் குறித்து விவாதங்களை மேற்கொண்டு வருகின்றது.
ஜூலை 27, இவ்வெள்ளி முடிய நடைபெறும் இவ்வாண்டுக்கூட்டத்தில், பிரேசில், கொலம்பியா, பெரு, எல் சால்வதோர் உட்பட 19 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 203 செயல் திட்டங்கள் விவாதிக்கப்படும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு 29 இலட்சத்து 8 ஆயிரம் கோடி டாலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய ஆயர் பேரவை, இன்னும் பிற தனிப்பட்டவர்களின் நிதி உதவியுடன் பணியாற்றிவரும் Populorum Progressio அறக்கட்டளை, பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் முன்னேற்றச் செயல் திட்டங்களுக்கு நிதி உதவிகள் அளித்து வருகின்றது.

5. ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள் உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்டல்

ஜூலை,25,2012. இங்கிலாந்தில் பணியாற்றும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றும், பிரித்தானிய Rotary சங்கமும் இணைந்து இலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது, உகாண்டா நாட்டு குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒரு புதுமுறை திட்டத்தை வகுத்துள்ளன.
இவ்வமைப்புக்களைச் சேர்ந்த 129 தன்னார்வத் தொண்டர்கள் ஒலிம்பிக் வீரர்கள் தங்கும் குடியிருப்புக்களில் பணி செய்வதற்கு இசைந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் முழுவதும் உகாண்டா குழந்தைகள் நிதிக்கு அளிக்கப்படும்.
தன்னார்வத் தொண்டர்கள் 129 பெரும் இணைந்து 5500க்கும் அதிகமான மணி நேரங்கள் பணிகள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இவர்களின் பணி நேரங்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஏறத்தாழ 46,000 பவுண்டுகள், அதாவது 32 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது எத்தனையோ பிற வழிகளில் தங்கள் நேரத்தைச் செலவிட இளையோருக்கு வசதிகள் இருந்தும், இவர்கள் தங்கள் நேரத்தை உகாண்டாவின் குழந்தைகளுக்கு அளிக்க முன் வந்திருப்பது போற்றுதற்குரியது என்று இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் Kate Batterbury கூறினார்.

6. ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்

ஜூலை,25,2012. இலண்டன் மாநகரை தற்போது வலம்வரும் ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் இவ்வியாழனன்று கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வியாழனன்று இச்சுடரை ஏந்திச்செல்லும் பான் கி மூன், வெள்ளியன்று நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் துவக்கவிழாவிலும் கலந்துகொள்வார் என்று ஐ.நா. அதிகாரி Eduardo del Buey இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளும், உடல் பயிற்சியும் உலக அமைதியை வளர்க்கும் கருவிகளாக அமைய முடியும் என்ற கருத்தை வலியுறுத்தவே பான் கி மூன் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது.
கோடை ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா நடைபெறும் ஜூலை 27 முதல் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் செப்டம்பர் 9ம் தேதி வரை உலகெங்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 197 நாடுகள், 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி மொழி எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

7. உடலில் தீய உயிரணுக்களை அழிக்கும் மகரந்த துகள்கள்

ஜூலை,25,2012. மலர்களில் தேன் திரட்டும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களை உணவில் சேர்த்துக்கொள்வது நலமளிக்கும் என இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மலர் விட்டு மலர் செல்லும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளால் நமது உயிரணுக்கள் பாதிக்கப்படுகின்றன, நல்ல உயிரணுக்கள் அழிந்து தீய உயிரணுக்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன என்று கூறிய மருத்துவர் சாரா ஷங்கர், உயிரணுக்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவும் Anti-oxidantகள் மலர்களின் மகரந்தத் துகள்களில் அதிகம் உள்ளன என்றும் கூறினார்.
மகரந்தத் துகள்களை உணவின் மீது தூவியோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்தத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டு இலண்டனில் உள்ள கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.

8. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

ஜூலை,25,2012. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள Toulouse விமான நிலையத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது.
இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரை அடைந்து, மீண்டும் இச்செவ்வாயன்று  சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது.
உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சூரியஒளி செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
விமானி Bertrand Piccard இந்த விமானத்தை ஓட்டிச்சென்றார். இவர் ஏற்கெனவே வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனின் உதவியுடன் உலகைச் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் மற்றொரு விமானியான André Borschberg  சென்றார்.
மாற்று சக்திகள் கொண்டு வாழ்வைப் பாதுகாப்பாக நடத்தலாம் என்பதை உலகறியச் செய்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று Bertrand Piccard கூறினார்.
தற்போது சூரிய சக்தியால் இந்த விமானம் சென்றது ஓர் ஒத்திகை போல அமைகிறது. 2014ஆம் ஆண்டில் இந்த விமானத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி, சூரிய சக்தியால் உலகம் முழுவதும் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.