Friday 29 June 2012

robert john kennedy: Catholic News in Tamil - 29/06/12

robert john kennedy: Catholic News in Tamil - 29/06/12: 1. புனிதர்கள் பேதுரு , பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை 2. இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்...

Catholic News in Tamil - 29/06/12

1. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

2. இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்தை Pallium வழங்கினார்

3. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய மூவேளைச் செப உரை

4. மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

5. மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை - அமெரிக்கப் பேராயர் William Lori

6. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள ஒலிம்பிக் வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது

7. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.நா. அழைப்பு

8. உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு செயல்திட்டம் தேவை ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

ஜூன்,29,2012. திருஅவையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் புனிதர்கள் பேதுருவும், பவுலும் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நற்செய்தியின் முழு வடிவமாக, இணைபிரியாத இருவராகக் கருதப்படுகின்றனர் என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, பேராயர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு 'Pallium' என்ற கழுத்துப்பட்டைகளைத் திருத்தந்தை வழங்குவது வழக்கம்.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, கடந்த ஓராண்டு நியமனம் பெற்ற 44 பேராயர்களுக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 'Pallium' வழங்கும் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்தியபோது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புனிதர்கள் பேதுருவும், பவுலும் இணைபிரியாதவர்களாகக் கருதப்படுவதைக் குறித்து பேசியபோது, விவிலியத்தில் முதன் முதலாகக் கூறப்பட்டுள்ள காயின் ஆபேல் சகோதரர்களைக் குறித்தும் திருத்தந்தை பேசினார்.
காயினும், ஆபேலும் உடன்பிறந்தவர்களாய் இருந்தாலும், பாவம் அவர்களை வேறுபடுத்தியது, இதற்கு மாறாக, பேதுருவும், பவுலும் பல வழிகளில் வேறுபட்டவர்களாய் இருந்தாலும் கிறிஸ்துவைப் பின்பற்றியதால் இணைபிரியாமல் இணைக்கப்பட்டனர் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இப்பெருநாளன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், கிறிஸ்துவால் 'பாறை' என்றும் 'சாத்தான்' என்றும் பேதுரு அழைக்கப்பட்டதைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்த திருத்தந்தை, இயேசு மெசியா என்ற உண்மையை, இறைவனின் தூண்டுதலால் பேதுரு கூறியபோது, அவரைப் பாறை என்றும், மனித அறிவைக்கொண்டு இயேசுவின் பாடுகள் நிகழக்கூடாது என்று பேதுரு சொன்னபோது அவரைச் 'சாத்தான்' என்றும் இயேசு அழைக்கிறார் என்ற தன் எண்ணங்களைக் கூறினார்.
பாறை, உறுதியான அடித்தளமாக அமைய முடியும் என்றாலும், அது நாம் இலக்கு நோக்கிச் செல்லும் பாதையின் நடுவில் கிடந்தால் நம்மைத் தடுமாறி விழச்செய்யும் தடைக்கல்லாகும் என்ற அழகிய உருவகத்தையும் தன் மறையுரையில் திருத்தந்தை பயன்படுத்தினார்.
இத்திருப்பலியில் இணைந்துள்ள பல்வேறு ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பிரதிநிதிகளைக் குறித்தும், வத்திக்கான் பாடகர் குழுவுடன் திருப்பலி பாடல்களை இணைந்து பாடும் Westminster மடத்தின் பாடகர் குழுவைக் குறித்தும் தன் மறையுரையின் துவக்கத்தில் பேசியத் திருத்தந்தை, பல்வேறு சபைகளும் இணைந்து வந்திருக்கும் இந்தப் பெருவிழாவின் புனிதர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை இன்னும் ஆழமாய் இணைக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
தன் மறையுரையின் இறுதியில், பேராயர்களுக்குத் தான் வழங்கும் 'Pallium' என்ற கழுத்துப்பட்டை, கிறிஸ்து என்ற மூலைக்கல் மீதும், பேதுரு என்ற பாறையின் மீதும் கட்டப்பட்டுள்ள திருஅவையை பேராயர்கள் கட்டிக் காக்கவேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஓர் அடையாளம் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்தை Pallium வழங்கினார்

ஜூன்,29,2012. ஜூன் 29 இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழ்ந்த ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 44 பேராயர்களுக்கு Pallium என்ற கழுத்துப் பட்டையை அணிவித்தார். இன்னும் இரு பேராயர்கள் காலம் தாழ்த்தி இதனைப் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையுடன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவுக்கு அடையாளமாய் விளங்கும் இந்தக் கழுத்துப் பட்டையைப் பெறும் பேராயர்களில் 22 பேர் அமெரிக்க நாடுகளையும், 9 பேர் ஆசியாவையும், 8 பேர் ஐரோப்பாவையும் 4 பேர் ஆப்ரிக்காவையும், 3 பேர் ஒசியானாப் பகுதியையும் சார்ந்தவர்கள்.
நாடுகள் என்ற வரிசையில், பிரேசில் நாட்டிலிருந்து 7 பேரும், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, இவ்விரு நாடுகளிலிருந்து 4 பேரும் இக்குழுவில் அடங்குவர்.
ஆசியாவின் 9 பேராயர்களில் நால்வர் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்தும், இருவர் இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தான், பங்களாதேஷ், கொரியாவிலிருந்து ஒரு பேராயரும் Pallium பெற்றனர்.
இந்தியாவின் குவஹாத்தி பேராயர் John Moolachira அவர்களும், கொல்கத்தா பேராயர் Thomas D’Souza அவர்களும் இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் கரங்களிலிருந்து Pallium என்ற கழுத்துப் பட்டைகளைப் பெற்றனர்.


3. புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய மூவேளைச் செப உரை

ஜூன்,29,2012. கலிலேயக் கடல் பகுதியில் வாழ்ந்த ஓர் எளிய மீன்பிடித் தொழிலாளரும், புறவினத்தாரின் திருத்தூதரும் உரோம் நகரின் வரலாற்றில் ஆழமாய் பதிந்த இரு பெரும் நாயகர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூன் 29, இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளைச் செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்விருப் புனிதர்களும் திருஅவையின் ஒன்றிப்புக்கு மாபெரும் அடையாளங்கள் என்று கூறினார்.
புனித பேதுருவின் தியாகத்திற்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக இப்புனித பேராலய பசிலிக்காவும், நாம் நின்றுகொண்டிருக்கும் சதுக்கமும் விளங்குகிறது, அதேபோல், புனித பவுலின் வாழ்வுக்கும், தியாகத்திற்கும் சாட்சியாக உரோம் நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்கா அமைந்துள்ளது என்பதைத் திருத்தந்தை தன் உரையில் மகிழ்வுடன் சுட்டிக்காட்டினார்.
இவ்விரு புனிதர்களின் நினைவுகள் நினைவுச் சின்னங்களில் மட்டும் இருந்துவிடாமல், நமது மனங்களிலும் நிலைத்திருக்கவேண்டும் என்றும், அவர்கள் காட்டிய நற்செய்தி வழியில் நாமும் நடக்க அவர்களின் பரிந்துரை நமக்குத் தேவை எனவும் திருத்தந்தை கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில் இப்பெருவிழாவன்று Pallium என்ற கழுத்துப்பட்டையைப் பெற்ற பேராயர்களைச் சிறப்பாக வாழ்த்திய திருத்தந்தை, இப்பேராயர்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த விசுவாசிகளையும் சிறப்பாக வாழ்த்தினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.


4. மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

ஜூன்29,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு கொடூரமாய்க் கொல்லப்பட்ட பொதுநிலை விசுவாசி தேவசகாயம்பிள்ளை உட்பட நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட.
திருஅவையில் புனிதர்கள் மற்றும் அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து, தமிழரான தேவசகாயம்பிள்ளை உள்ளிட்ட நான்கு மறைசாட்சிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Rochesterன் முன்னாள் பேராயர் ஃபுல்ட்டன் ஷீன் உட்பட 4 இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியங்கள், இன்னும், புனித டாரதி சகோதரிகள் சபையைத் தொடங்கிய இத்தாலிய மறைமாவட்ட குரு லூக்கா பாசி, பிரேசில் நாட்டு பொதுநிலை விசுவாசி பிரான்செஸ்கா தெ பவுலா தெ ஹேசுஸ் ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பித்தார். 
1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம்பிள்ளை, திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறிய தேவசகாயம்பிள்ளை, டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால் கத்தோலிக்கத்தைத் தழுவி மற்றவர்களும் திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டினார். தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் நன்றாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படிக் கைது செய்யப்பட்டு பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி 1752ம் ஆண்டு சனவரி 14 அல்லது 15ம் தேதியன்று படைவீரர்களால் 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தில் உள்ளது.  
இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.


5. மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை - அமெரிக்கப் பேராயர் William Lori

ஜூன்,29,2012. மத உரிமையைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் நலனுக்கும் அவசியம் என்றும், மதத்தின் அடிப்படையில் துன்புறுவோரைக் காப்பது திருஅவையின் கடமை என்றும் அமெரிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
மத உரிமைகளின் கண்காணிப்பு என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பின் முதல் கூட்டம் உரோமையில் இவ்வியாழனன்று நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயர் பேரவையின் மத உரிமைகள் பணிக்குழுவின் தலைவரான பேராயர் William Lori இக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அரசு தற்போது வலியுறுத்தி வரும் நலக்காப்பீட்டுத் திட்டம் மத உரிமைகளுக்கும், மனசாட்சிக்கும் எதிராக அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பேராயர் Lori, பல்வேறு நாடுகளிலும் மத உரிமைகள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்ற விருதுவாக்குடன் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசியல் சட்டங்கள் தற்போது கடவுளுக்கும், மத நம்பிக்கைக்கும் எதிராக இருப்பது நாட்டின் நலனுக்கு ஆபத்தை உருவாக்கியிருப்பதுபோல், பல நாடுகளிலும் மத உரிமைகள் மீறப்படுவது அடிப்படை மனித வாழ்வுக்கு பெரும் ஆபத்து என்பதை பேராயர் வலியுறுத்திக் கூறினார்.


6. நாட்டுக்கும் மக்களுக்கும் நற்பணியாற்றியுள்ள ஒலிம்பிக் வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது

ஜூன்,29,2012. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களில் தங்கள் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் செய்துள்ள பல்வேறு தொண்டுகளின் அடிப்படையில் அவர்களுக்குச் சிறப்புப் பரிசொன்று வழங்கப்படும் என்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வருகிற ஜூலை மாதம் இலண்டன் நகரில் ஆரம்பமாகவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்து 'தங்கத்தையும் தாண்டி' (More Than Gold) என்ற கருத்துடன் சமுதாயச் சிந்தனை மிகுந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களில் தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது ஒன்று வழங்கப்பட உள்ளது.
1924 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அப்போதைய 100 மீட்டர் பந்தயத்தின் தலைசிறந்த வீரர் Eric Liddell, அப்பந்தயம் ஞாயிறன்று நடத்தப்பட்டதால், அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, தனக்குப் பழக்கமில்லாத 400 மீட்டர் பந்தயம் மற்றொரு நாளில் நடைபெற்றதால், அதில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் பெற்றார்.
தன் மதக் கோட்பாட்டுக்காக தனக்கு கிடைக்கவிருந்த உலகப் புகழையும் பெற மறுத்த Eric Liddell நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


7. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.நா. அழைப்பு

ஜூன் 29,2012. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் சித்ரவதைத் தண்டனைகளை நிறுத்துவதற்கும்  ஐயத்திற்கு இடமளிக்காத தெளிவானத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.
மனிதத்தைச் சிதைக்கும் இந்தச் சித்ரவதையைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தம் அமலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெண்களும் ஆண்களும் சிறாரும் தங்களது மனித மாண்பை இழக்கும் சித்ரவதைகளையும் முறைகேடாக நடத்தப்படுவதையும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறார்கள் என்றும் பான் கி மூன் கூறினார்.
இந்த அனைத்துலக உடன்பாடானது 1987ம் ஆண்டு ஜூன் 26ம் நாளன்று அமலுக்கு வந்தது. 1997ம் ஆண்டில் இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. 
ஆண்டுதோறும ஜூன் 26ம் நாளன்று சித்ரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவு வழங்கும் அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.


8. உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு செயல்திட்டம் தேவை ஐ.நா.

ஜூன்29,2012. உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாடுகள் ஆர்வம் காட்டினாலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்தத் தழும்பை அழிப்பதற்குச் செயல்திட்டங்கள் அவசியம் என்று ஐ.நா.பொது அவைத் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser கூறினார்.
அரசியல்ரீதியாகக் காட்டப்படும் ஆர்வத்தின் வழியாக மட்டுமே பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி உலகைப் பயங்கரவாதம் இல்லாத இடமாக அமைக்க முடியும் என்றும் Al-Nasser கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து 2006ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொது அவை ஏற்றுக் கொண்ட யுக்திகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் உரையாற்றிய Al-Nasser இவ்வாறு கூறினார்.
 

robert john kennedy: மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்க...

robert john kennedy: மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்க...: மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார் ஜூன்29 , 2012. தமிழகத்தி...

மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

ஜூன்29,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு கொடூரமாய்க் கொல்லப்பட்ட பொதுநிலை விசுவாசி தேவசகாயம்பிள்ளை உட்பட நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட.
திருஅவையில் புனிதர்கள் மற்றும் அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து, தமிழரான தேவசகாயம்பிள்ளை உள்ளிட்ட நான்கு மறைசாட்சிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Rochesterன் முன்னாள் பேராயர் ஃபுல்ட்டன் ஷீன் உட்பட 4 இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியங்கள், இன்னும், புனித டாரதி சகோதரிகள் சபையைத் தொடங்கிய இத்தாலிய மறைமாவட்ட குரு லூக்கா பாசி, பிரேசில் நாட்டு பொதுநிலை விசுவாசி பிரான்செஸ்கா தெ பவுலா தெ ஹேசுஸ் ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பித்தார். 
1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம்பிள்ளை, திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறிய தேவசகாயம்பிள்ளை, டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால் கத்தோலிக்கத்தைத் தழுவி மற்றவர்களும் திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டினார். தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் நன்றாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படிக் கைது செய்யப்பட்டு பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி 1752ம் ஆண்டு சனவரி 14 அல்லது 15ம் தேதியன்று படைவீரர்களால் 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தில் உள்ளது.  
இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.

robert john kennedy: Catholic News in Tamil - 28/06/12

robert john kennedy: Catholic News in Tamil - 28/06/12: 1. திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார் 2. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவை...

Catholic News in Tamil - 28/06/12


1. திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார்

2. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

3. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்தார்

4. மதமாற்றத் தடைச்சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்குக் கண்டனம்

5. சிரியாவில் ஒப்புரவை உருவாக்க "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு முயற்சி

6. ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினரின் சிறப்புக் கூட்டம்

7. தினசரி 3 கப் காபி குடித்தால் ஞாபக மறதியே வராது: புதிய தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார்

ஜூன்,28,2012. Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பாடல் 34ல் காணப்படும் "என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்." என்ற வார்த்தைகளுடன் அவர்களை வரவேற்றார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் சார்பாக, பிரதிநிதிகள் அடங்கியக் குழுவொன்று வத்திக்கானுக்கு வருவது வழக்கம்.
இப்பிரதிநிதிகள் குழுவினரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவைக்கும் Constantinople சபைக்கும் விரைவில் முழுமையான ஒன்றிப்பு உருவாக வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான முதலாம் Bartholomew அவர்களுக்குத் தன் தனிப்பட்ட வணக்கங்களைத் தெரிவித்தத் திருத்தந்தை, புனிதர்கள் பேதுருவும், பவுலும் தங்கள் போதனைகளாலும், உழைப்பாலும் கட்டியெழுப்பிய விசுவாசத்தின் வேர்களில் நாம் ஒருமைப்பாட்டைக் காணமுடியும் என்று கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் கொண்டாடவிருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, இப்பொதுச்சங்கத்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஏனைய ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே உரையாடல்கள் ஆரம்பமானதைச் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். என்று திருத்தூதர் பணிகள் 4: 32ல் கூறியுள்ளதுபோல், நாம் அனைவரும் ஒரே பலிபீடத்தில் வழிபாடுகளை இணைந்து நிறைவேற்றும் காலம் விரைவில் வருவதையே தான் விழைவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்

ஜூன்,28,2012. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவும் இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை வத்திக்கான் அறிவித்துள்ளது.
1969ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அலுவலகத்தின் தலைவராக இருந்த கர்தினால் Johannes Willebrands, புனித அந்திரேயாவின் பெருவிழாவன்று Constantinopleக்குச் சென்றதைத் தொடர்ந்து, Constantinople ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உறவுப் பரிமாற்றங்கள் ஆரம்பமாயின.
ஐரோப்பிய ஒன்றிய ஆர்த்தடாக்ஸ் சபையின் இயக்குனரும், பிரான்ஸ் பெருநகர் சபைத் தலைவருமான Emmanuel Adamidis தலைமையில் வத்திக்கான் வந்திருக்கும் இப்பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களைத் திருத்தந்தை இவ்வியாழன் நண்பகல் சந்தித்து உரையாற்றினார்.
இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியின்போது, இக்குழுவினர் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறப்பு பார்வையாளர்களாக இருப்பர்.
தொடர்ந்து, இக்குழுவின் அங்கத்தினர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையுடன் உரையாடல்களை மேற்கொள்வர்.


3. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்தார்

ஜூன்,28,2012. எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதன் அடையாளங்கள் தெரிகின்றன என்று எகிப்து கத்தோலிக்கத் திருஅவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
எகிப்தின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Mohammed Morsi, இப்புதன் காலையில் கத்தோலிக்க ஆயர்களைத் தன் அரசு மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, தலத் திருஅவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Rafiq Greiche இவ்வாறு கூறினார்.
அரசுத்தலைவர் Morsi இச்செவ்வாயன்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும், இப்புதனன்று கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களைச் சந்தித்தார் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஆயர்களுடன் அரசுத்தலைவர் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில், கத்தோலிக்கத் திருஅவை எகிப்தில் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகவும், அனைத்து கிறிஸ்தவர்களும் அமைதியில் வாழும் வழிகளை அமைத்துத் தருவதாகவும் அரசுத் தலைவர் Morsi கூறினார் என்று கூறப்படுகிறது.
கத்தோலிக்க ஆயர்களுடன் அரசுத் தலைவர் மேற்கொண்ட இச்சந்திப்பு ஆயர்களால் திட்டமிடப்பட்டது அல்ல என்றும், அரசுத் தலைவரே இந்த அழைப்பை விடுத்தார் என்றும் அருள்தந்தை Greiche எடுத்துரைத்தார்.
அரசுத் தலைவர் போட்டியில் இஞ்ஞாயிறன்று 52 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற Mohammed Morsi, 'இஸ்லாமியருக்கு மட்டுமல்ல, அனைத்து எகிப்தியர்களுக்கும் அரசுத் தலைவராகப் தான் பணிபுரிவேன்' என்பதைத் தன் தேர்தல் பிரச்சாரங்களில் கூறிவந்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.


4. மதமாற்றத் தடைச்சட்டம் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்குக் கண்டனம்

ஜூன்,28,2012. மதமாற்றத் தடைச்சட்டம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகம் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அடிப்படைவாத இந்துக்கள் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் செய்துவரும் அராஜகத்தைப் போல், மணிப்பூர் மாநிலத்திலும் நடைபெறுவதை எங்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று இக்கழகத்தின் மாநிலச் செயலர் Madhu Chandra, செய்தியாளர்களிடம் கூறினார்.
மதமாற்றத் தடைச்சட்டம் தற்போது மத்தியப்பிரதேசம், ஒடிஸ்ஸா, அருணாச்சலப்பிரதேசம், குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
ஒடிஸ்ஸா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த சட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மதமாற்றத் தடைச்சட்டம் குடிமக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரான ஒரு சட்டம் என்று இந்தியாவிலும், பல நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன என்று Madhu Chandra கூறினார்.


5. சிரியாவில் ஒப்புரவை உருவாக்க "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு முயற்சி

ஜூன்,28,2012. எங்கள் நாடு தன் இரத்தத்தை வீணாக இழந்து வருகிறது. அதிலும் முக்கியமாக, இளையோரை நாங்கள் ஒவ்வோரு நாளும் இழந்து வருகிறோம். எனவே, சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை உடனே நிறுத்தவேண்டும் என்று பல்சமய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்புரவு என்ற பொருள்படும் "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு, மனித சமுதாயத்தின் அடிமட்ட மக்களின் ஆதரவுடன் தன் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இவ்வமைப்பின் தூண்டுதலால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பழங்குடி மக்கள் என்ற அனைத்துத் தரப்பைச் சார்ந்தவர்களின் குடும்பங்களும் இணைந்து வரும் முயற்சிகள் சிரியாவில் பரவி வருகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாட்டில் நடக்கும் வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 பேர் இறக்கின்றனர் என்று கூறும் இவ்வமைப்பினர், இவ்விறப்புக்களில் அதிகமானோர் இளையோர் என்பதால், தங்கள் எதிர்காலத்தை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களும், மிதவாதக் குழுக்களும் இணைந்து  வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரும் இவ்வமைப்பினர், உலக அமைதிக்கென உழைக்கும் பன்னாட்டு அமைப்புக்களின் உதவிகளையும் கோரிவருகின்றனர் என்று Fides செய்தி கூறுகிறது.


6. ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினரின் சிறப்புக் கூட்டம்

ஜூன்,28,2012. ஆப்ரிக்க நாடுகள் விரைவான பொருளாதார முன்னேற்றங்களைக் கண்டு வந்தாலும், எளிய மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் சவால்களைச் சந்தித்து வருகின்றன என்று இயேசுசபையின் சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறு முதல் வியாழன் முடிய ஆப்ரிக்காவின் நைரோபியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினர், ஆப்ரிக்க நாடுகள் கடந்து வந்துள்ள 50 ஆண்டுகளை மறுபார்வையிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆப்ரிக்க சமூகப் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Michael Lewis, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகள் அந்நிய காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் நிறைவேறும் இக்காலத்தில், அங்கு வாழும் மக்கள் இன்னும் அடிப்படைத் தேவைகளும், எதிர்காலத்தின் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆப்ரிக்க சமுதாயத்தில் இளையோரின் பங்கு, அனைத்துத் துறைகளிலும் நீதியை நிலைநிறுத்துதல் ஆகிய அம்சங்களுக்குத் தேவையான செயல்முறைத் திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. தினசரி 3 கப் காபி குடித்தால் ஞாபக மறதியே வராது: புதிய தகவல்

ஜூன்,28,2012. வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி குடித்தால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்கும், அல்சைமர்ஸ் (Alzheimer's) எனப்படும் ஞாபக மறதி நோய் வராது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஓர் ஆய்வில், டாம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்குட்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர்.
பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சைமர்ஸ் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சைமர்ஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சைமர்ஸ் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

robert john kennedy: Catholic News in Tamil - 27/06/12

robert john kennedy: Catholic News in Tamil - 27/06/12: 1. ' புறவினத்தார் முற்றம் ' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran 2. திருப்பீடக் கலாச்சார அவையும் , உயிரைப்...

Catholic News in Tamil - 27/06/12

1. 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran

2. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கியுள்ள முக்கிய நூல்

3. நைஜீரிய ஆயர்கள் - மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை

4. உண்மையையும், அன்பையும் வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் - மலேசிய ஆயர் பேரவையின் தலைவர்

5. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் - உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி

6. கடத்தலுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. உயர் அதிகாரி

7. உடல்நலத்திற்கு ஆப்பிளை விட வாழைப்பழம் சிறந்தது

------------------------------------------------------------------------------------------------------

1. 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு நடத்திவரும் கூட்டத்தில் கர்தினால் Jean-Louis Tauran

ஜூன்,27,2012. Diplomacy என்று சொல்லப்படும் பக்குவமான, பத்திரமான நடத்தையும், உண்மையும் இணைந்து போவது கடினம் என்று இவ்வுலகம் கருதும் வேளையில், இவ்விரு எண்ணங்களையும் இணைத்து நாம் சிந்திப்பது பொருத்தமானது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மற்ற மதங்களுடன் உரையாடலை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக, 'புறவினத்தார் முற்றம்' என்ற அமைப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு கருத்துக்களில் கூட்டங்கள் நடத்திவரும் இவ்வமைப்பு, தற்போது உரோம் நகரில் 'பக்குவமான நடத்தையும் உண்மையும்' ("Diplomacy and truth") என்ற தலைப்பில் நடத்திவரும் கூட்டத்தில் பேசிய மதங்களுக்கிடையேயான உரையாடல்கள் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பக்குவமான நடத்தையும், உண்மையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்று எடுத்துரைத்தார்.
அதிகார அமைப்புக்களின் தரப்பில் செயலாற்றும் பலரை நாம் Diplomat என்று அழைக்கிறோம். இவர்கள் பாதுகாப்பான, பக்குவமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், இவர்களால் உண்மையாக நடந்து கொள்ள முடியாது என்பது உலகில் பரவியுள்ள எண்ணம் என்று விளக்கிய கர்தினால் Tauran, இந்தப் பொறுப்பில் இருப்பவர்களும் உண்மையை உரைக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இரண்டாம் உலகப் போரின்போது நமக்கு வழங்கப்பட்டது என்று எடுத்துரைத்தார்.
பக்குவமான நடத்தை உண்மைக்கும், மனசாட்சிக்கும் எதிராக நடப்பது என்ற தவறான கருத்தைக் களைந்து உண்மையின் பக்கம் சார்ந்திருப்பதே அதிகார அமைப்புக்களைக் காக்கும் என்று கர்தினால் Tauran தன் உரையில் வலியுறுத்தினார்.


2. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் இணைந்து உருவாக்கியுள்ள முக்கிய நூல்

ஜூன்,27,2012. திருப்பீடக் கலாச்சார அவையும், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையும் (The Stem for Life Foundation) இணைந்து உருவாக்கியுள்ள ஒரு முக்கிய நூல் இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மனிதத் தண்டுவடத்திலிருந்து உயிரணுக்களை எடுத்து அவைகளைக் கொண்டு எவ்விதம் உயிர்களைக் காக்கமுடியும் என்ற ஆய்வில் திருப்பீடம் ஆர்வம் காட்டி வந்துள்ளது.
உயிரைப் பேணும் இந்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு வத்திக்கானில் நடத்தப்பட்ட அனைத்துலகக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட எண்ணங்கள் இந்நூலில் பதியப்பட்டுள்ளன.
மனித உடலைப் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் புற்றுநோய், Alzheimer’s எனப்படும் மூளை தொடர்பான நோய், Lou Gehrig எனப்படும் நோய், முடக்குவாதம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் தண்டுவட உயிரணு ஆய்வுகளில் தெரிய வரும் என்று இந்நூல் தெளிவாக்குகின்றது.
திருப்பீடக் கலாச்சார அவையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான பேரருள்தந்தை Tomasz Trafny, அறிவியலும் மதமும் பொருளுள்ள உரையாடலில் ஈடுபட முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.
பேரருள்தந்தை Trafnyம், உயிரைப் பேணும் தண்டுவட ஆய்வு அறக்கட்டளையின் இயக்குனர் Max Gomezம், NeoStem எனப்படும் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் Robin Smithம் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்து இந்நூலை அவரிடம் அளித்தனர்.
இந்நூல் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. நைஜீரிய ஆயர்கள் - மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை

ஜூன்,27,2012. மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதே அரசின் தலையாயக் கடமை என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
Boko Haram என்ற அடிப்படைவாதக் கும்பலால் நைஜீரியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பலியாவதை அரசும், இராணுவமும் உடனடியாக நிறுத்த தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று நைஜீரிய  ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
குண்டு வெடிப்புகளாலும், ஏனையத் தாக்குதல்களாலும் எப்பாவமும் அறியாத கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, இவ்வாறு கொல்லப்படுவதில், பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்று சுட்டிக்காட்டுகிறது.
சீரிய சிந்தனையுள்ள இஸ்லாமியத் தலைவர்களும் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது தங்களுக்கு உறுதியளிக்கிறது என்று கூறும் ஆயர்கள், வெறும் பேச்சளவில் நம் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சனைத் தீராது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
ஒப்புரவையும், அமைதியையும் தாங்கள் இந்நாட்டில் தொடர்ந்து தங்கள் மறையுரைகளில் கூறி வருகிறோம் என்றாலும், இவற்றை உறுதி செய்யும் செயல்பாடுகளை அரசு எடுக்காதபோது, நாங்கள் பேசுவது எல்லாம் பொருளற்றதாகிவிடுகிறது என்று ஆயர்கள் தங்கள் வருத்தத்தை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.


4. உண்மையையும், அன்பையும் வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் - மலேசிய ஆயர் பேரவையின் தலைவர்

ஜூன்,27,2012. மலேசியாவில் நிலவும் ஊழலையும், பாகுபாடுகள் நிறைந்த செயல்பாடுகளையும் கண்காணிக்க, அரசு உருவாக்கியுள்ள 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை தலத் திருஅவை வரவேற்றுள்ளது.
உண்மையும், அன்பும் மனிதர்களின் அடிப்படை குணங்கள். அவைகளை வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் என்று மலேசியா, சிங்கப்பூர், புருனே ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் Paul Tan Chee Ing, கூறினார்.
அரசின் நடவடிக்கைகளில் ஒளிவு  மறைவற்ற வழிமுறைகள் அமைய, மலேசிய மக்கள் அரசை வற்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற ஆண்டு 'Berish' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பினரின் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை அரசு உருவாக்கியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Berish மேற்கொண்ட முயற்சிகள் தகுந்த பலனை அளித்துள்ளது என்று இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Paul Tan, Fides நிறுவனத்திடம் கூறினார்.


5. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் - உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி

ஜூன்,27,2012. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்றாலும், இந்த நோயைக் குணப்படுத்தும்  வழிமுறைகள் பல நாடுகளில் பயன்படுத்தப் படுவதில்லை என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 26 , இச்செவ்வாயன்று போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி பேசிய WHO அதிகாரி Shekhar Saxena, 147 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையைச் செய்தியாளர்களிடம் சமர்ப்பித்தார்.
2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர், அதாவது 23 கோடி மக்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒரு முறையாகிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும், இவர்களில் 2 கோடியே 70 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது.
போதைப்பொருள் பயன்பாட்டை பல நாடுகள் ஒரு சமுதாய அவலமாகக் கருதுவதோடு நின்றுவிடுகின்றன என்றும், அந்த பழக்கத்தை ஒரு நோயாகக் கருதி, மாற்று வழிகளைத் தருவதில்லை என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.


6. கடத்தலுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. உயர் அதிகாரி

ஜூன்,27,2012. சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவது தொடர்பாக அரசுகள் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அப்படிக் கொண்டுசெல்லப்படுவோரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படும் ஆட்களின் உரிமைகள் - அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் - பாதுகாக்கப்படும் வகையில் அரசுகள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என மனிதக்கடத்தல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo, (the UN Special Rapporteur on Trafficking in Persons, especially Women and Children) Warsawவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எடுத்துரைத்தார்.
வெளிநாடுகளுக்கு ஆட்கள் முறைதவறி கடத்திச்செல்லப்படும் விடயத்தை கிரிமினல் குற்றமாக்குதல் குறித்து, தெளிவான மற்றும் முழுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், அவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் அவையில் சமர்ப்பித்த தன் ஆண்டறிக்கையில் Ezeilo கேட்டுக்கொண்டார்.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க பல நாடுகளில் சட்டங்கள் வந்துவிட்டன என்றாலும், கடத்தப்படுகின்ற ஆட்களின் உரிமைகள் மதிக்கப்படுவது தொடர்பில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் தற்போதைய சட்டங்களில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதக் கடத்தலைச் செய்பவர்களையும், மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேர்ந்தவர்களையும் சரியாக இனம் கண்டு, அவர்களை வெவ்வேறு விதமாக நடத்துவதற்குரிய வழிவகைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேருபவர்கள் விரும்பியோ, வற்புறுத்தலின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, சில குற்றங்களைப் புரியநேரிடுகிறது என்றாலும், அவர்களும் ஒரு வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், அவர்களது துன்பங்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் அவசியம் என ஐ.நா. மனித உரிமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களைக் கொண்டு மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் நஷ்டஈடும் வழங்கும் வகையில் சட்ட வழிமுறைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo தெரிவித்துள்ளார்.


7. உடல்நலத்திற்கு ஆப்பிளை விட வாழைப்பழம் சிறந்தது

ஜூன்,27,2012. எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்துத் தரப்பினரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.
ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளது.
பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.
பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது, உடலுக்கு ஊட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.
இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது.
புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடும்போது, அவர்கள் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் நிக்கோடின் என்ற நச்சுபொருளை வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் சிறிது, சிறிதாக உடலில் இருந்து அகற்றி விடும்.