Friday 30 March 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 30 மார்ச் 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 30 மார்ச் 2012: 1. மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள் 2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்கள...

கத்தோலிக்க செய்திகள்: 30 மார்ச் 2012

1. மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள்

2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையை ஊக்குவித்து வருகிறார் கர்தினால் Tauran

3. சமய வாழ்விலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது கர்தினால் டர்க்சன்

4. மரணதண்டனை ஐப்பானை அழிக்கக்கூடும் நாகசாகி பேராயர்

5. சிலுவையில் அறையும் பாவக்கழுவாய் நடவடிக்கைக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை

6. பிலிப்பீன்சில் பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆயர்கள் ஆதரவு

7. 2013ம் ஆண்டின் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும்

8. BRICS நாடுகளின் புதிய முயற்சி

-------------------------------------------------------------------------------------------

1. மதியிறுக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவளிக்க பேராயர் Zimowski வேண்டுகோள்

மார்ச்30,2012. மூளையின் சாதாரண வளர்ச்சியின்மையால் ஏற்படும் Autism நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தோழமையுணர்வு கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்குமாறு திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கேட்டுள்ளார்.
ஏப்ரல் 2ம் தேதி வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக Autism என்ற மதியிறுக்கம் நோய் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பேராயர் Zimowski, இந்நோயின் பாதிப்பால் துன்புறுவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நிலைகளை நோக்கினால் இந்நோயின் கொடுந்தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்காலத்தில் தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் Autism நோய் பரவி வருவதால், பன்னாட்டு அளவில் இதனைத் தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறும், இம்முயற்சிக்குத் திருஅவைத் தனது ஆதரவை வழங்குவதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில், ஒவ்வொரு பத்தாயிரம் சிறாருக்கு சுமார் 60 சிறார் வீதம் இந்நோயால் தாக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது.
ஒருவரின் மூளை வளர்ச்சி பாதிப்பால், அவரின் மக்கள் தொடர்புத் திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள்,  அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தை போன்றவை இயல்பிற்கு மாறாக அமைகின்றன. இத்தகைய பாதிப்பு, Autism அதாவது மதியிறுக்கம் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய், பொதுவாக குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் பாதிக்கும். இது ஒரு நோயல்ல, மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர்.

2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையை ஊக்குவித்து வருகிறார் கர்தினால் Tauran

மார்ச்30,2012. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஒருவர் ஒருவர் மீது புரிந்து கொள்ளுதலை உருவாக்கவும், அந்நாட்டைப் பாதித்துள்ள வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒருவர் ஒருவருடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் Jean-Louis Tauran.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் இடம் பெற்று வருவதை முன்னிட்டு, அந்நாட்டுக்குப் பத்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran, இவ்விரு மதத்தவருக்கும் இடையே உரையாடலை ஊக்குவித்து வருகிறார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் செய்தியையும் அந்நாட்டினருக்கு வழங்கியுள்ளார் கர்தினால் Tauran.
பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள், அமைதியுடன்கூடிய நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்குச் சகிப்புத்தன்மை என்ற பாதையில் சென்றால் மட்டுமே முடியும் என்று ஜோஸ் நகரில் நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் குறிப்பிட்டார் கர்தினால்.
மனித உறவுகள் அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
நைஜீரியாவின் Sokoto நகரில், இசுலாம் தீவிரவாதக் குழுவால் சுமார் 10 மாதங்களாகப் பிணையலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரித்தானியரும் ஓர் இத்தாலியரும் இம்மாதம் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.
  
3. சமய வாழ்விலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது கர்தினால் டர்க்சன்

மார்ச்30,2012. தங்களது மத நம்பிக்கையிலிருந்து தொழிலைப் பிரித்துப் பார்க்கும் போக்கு, இக்காலத்தில் பொதுவான நோயாக, பல மக்களை, குறிப்பாக தொழிலதிபர்களைத் தாக்கியுள்ளது என்று கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
UNIAPAC என்ற அனைத்துலக கிறிஸ்தவத் தொழிலதிபர்கள் கழகத்தின் 24 வது உலக மாநாட்டில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன், இந்நவீன காலத்தில் காணப்படும் இப்போக்கானது, வாழ்வைப் பிளவுபடுத்துகின்றது என்று கூறினார்
பிரான்சில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இரண்டாயிரம் கிறிஸ்தவத் தொழிலதிபர்களுக்கு உரையாற்றிய கர்தினால் டர்க்சன், இவர்கள் தங்களது வேலையைப் பொது மக்களுக்குப் பயன்தரும் வகையில் செய்வதற்குத் திருஅவை உதவ விரும்புகிறது என்று கூறினார்.
திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த உதவியைச் செய்ய விரும்புகின்றது என்றார் கர்தினால் டர்க்சன்.
கிறிஸ்தவச் சமூகப் போதனைகளின் ஒளியில் உலகினருக்கு உதவும் நோக்கத்தில், ஐரோப்பிய கத்தோலிக்கத் தொழிலதிபர்களால் 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்டது UNIAPAC கழகம். இதற்குத் தற்போது ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உறுப்பினர்கள் உள்ளனர். 

4. மரணதண்டனை ஐப்பானை அழிக்கக்கூடும் நாகசாகி பேராயர்

மார்ச்30,2012. ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வியாழனன்று மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, அந்நாடு மரணதண்டனை சட்டத்தை இரத்து செய்யுமாறு, ஜப்பான் ஆயர்கள் அரசைக் கேட்டுள்ளனர்.
பல கொலைகளைச் செய்த மூன்று குற்றவாளிகள் இவ்வியாழனன்று தூக்கிலிடப்பட்டதை முன்னிட்டு இவ்வாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, கொலை செய்தவர், கொலையாளியாக இருந்த போதிலும்கூட, அந்தக் கொலையாளியைக் கொலை செய்வது மற்றொரு கொலையாக இருக்கின்றது என்று கூறினார்.
80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் மரணதண்டனையை ஆதரிக்கிறார்கள் என்று அரசு அதிகாரிகள் சொல்கின்றபோதிலும், இது, சமுதாயத்தின் குருட்டுத்தன்மையைக் காட்டுகின்றது என்றும், இந்தப் போக்கு ஆன்மாவைக் கடினப்படுத்தும் எனவும் பேராயர் Takami எச்சரித்துள்ளார்.
ஜப்பானில், 2010ம் ஆண்டு ஜூலையில் இரண்டு பேருக்கு தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பின்னர், இவ்வியாழனன்று மூன்று பேர் தனிப்பட்ட அறைகளில் தூக்கிலிடப்பட்டனர். அந்நாட்டில், இன்னும் 132 தூக்குத்தண்டனை கைதிகள் உள்ளனர் என்று Kyodo செய்தி நிறுவனம் கூறியது.  

5. சிலுவையில் அறையும் பாவக்கழுவாய் நடவடிக்கைக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை

மார்ச்30,2012. பிலிப்பீன்ஸில், புனித வாரத்தில் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக தங்களைச் சிலுவையில் அறையும் கத்தோலிக்கரின் நடவடிக்கையை எச்சரித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
பிலிப்பீன்ஸில் புனித வெள்ளியன்று மக்கள் தங்களைச் சிலுவையில் அறையும் பழக்கம் பல ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறது. வருகிற புனித வெள்ளியன்று அந்நாட்டின்  Pampanga மாநிலத்தில் மரச்சிலுவைகளில் அறையப்படுவதற்கு ஏற்கனவே குறைந்தது 20 பேர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வைப் பார்ப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் Pampanga மாநிலத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். 
இந்நிகழ்வு குறித்துப் பேசிய Cebu பேராயர் Jose Palma, தங்கள் மீது வேதனைகளைச் சுமத்தும் மக்களைவிட, தங்களது விசுவாசத்தைப் புதுப்பிக்கும் மக்களையே திருஅவை விரும்புகிறது என்று கூறினார்.
சிலுவையில் அறையும் இந்தப் பழக்கம் குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தீர்ப்புக் கூறவோ அல்லது கண்டனம் செய்யவோ இல்லை, மாறாக அதனை ஊக்கப்படுத்தவில்லை என்று பேராயர் Palma கூறினார்.

6. பிலிப்பீன்சில் பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆயர்கள் ஆதரவு

மார்ச்30,2012. மார்ச் 31ம் தேதியான இச்சனிக்கிழமை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்கு ஊக்குவிக்கும் பூமி நேரத்தைபிலிப்பீன்ஸ் மக்கள் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை, அவசியமற்ற விளக்குகளை அணைக்கும் உலகினரோடு பிலிப்பீன்ஸ் நாட்டவரும் இணையுமாறு ஆயர்கள் கேட்டுள்ளனர்
மேலும், இந்தப் பூமி நேரத்தில், நமது பூமித்தாயைப் பராமரிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆயர்கள் கேட்டுள்ளதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழு செயலர் அருள்திரு Conegundo Garganta கூறினார்.
2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பூமி நேரம்முதன் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அது தற்போது அனைத்துல நிகழ்வாக மாறியுள்ளது. 2012ம் ஆண்டு பூமி நேரம், மார்ச் 31ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

7. 2013ம் ஆண்டின் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும்

மார்ச்30,2012. 2013ம் ஆண்டில் பிரேசிலின் Rio de Janeiroவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், கிறிஸ்துவின் திறந்த கரங்களின் அனுபவத்தைப் பெறுவதாக இருக்கும் என்று கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
ரியோ டி ஜெனீரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள Corcovado மீட்பராம் கிறிஸ்துவின் திருவுருவத்தை வைத்தே இந்த உலக இளையோர் தின அனுபவத்தைச் சொல்ல முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இத்தாலியின் Rocca di Papa எனுமிடத்தில், திருப்பீட பொது நிலையினர் அவை நடத்தி வரும் இந்த இளையோர் தினத் தயாரிப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் அந்த அவைத் தலைவர் கர்தினால் Rylko.
இவ்வெள்ளியன்று தொடங்கிய இக்கூட்டம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இதில், 98 நாடுகளிலிருந்து 45 சர்வதேச கத்தோலிக்க இளையோர் கழகங்களின் சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

8. BRICS நாடுகளின் புதிய முயற்சி

மார்ச்30,2012. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றோடு போட்டிப் போடக்கூடிய புதிய வங்கி ஒன்றைத் தொடங்குவதற்கு BRICS நாடுகள் திட்டமிட்டுள்ளன.
பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய வேகமாக வளரும் ஐந்து நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய BRICS என்ற அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு புதுடெல்லியில் இவ்வியாழனன்று முடிந்துள்ளது.
இம்மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக நிதியகம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புக்களில், BRICS நாடுகளின் குரல்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள BRICS அமைப்பு, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி களையப்படுவதற்குத் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. 
தற்போது உலகப் பொருளாதாரத்தில் 28 விழுக்காட்டையும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் 56 விழுக்காட்டையும் BRICS அமைப்பு கொண்டுள்ளது.
சிரியா மற்றும் இரான் குறித்த பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சமுதாய அவை கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராகவும் இவ்வமைப்பு தனது கருத்தை தெரிவித்திருக்கிறது.
இரானைப் பொறுத்தவரை, இரான் அமைதி நோக்கங்களுக்கு அணுசக்தியைப் பயன்படுத்திக்ள்வது அனுமதிக்கப்படவேண்டும் என்று BRICS கூறியுள்ளது.

 

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 29 மார்ச் 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 29 மார்ச் 2012: 1. குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் 2. உயிர்ப்புத் திருநாளுக்காக லிப...

கத்தோலிக்க செய்திகள்: 29 மார்ச் 2012

1. குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

2. உயிர்ப்புத் திருநாளுக்காக லிபியா மக்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காண முடிகிறது - அப்போஸ்தலிக்க நிர்வாகி

3. மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் - கொல்கத்தா பேராயர்

4. திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும்

5. தலத் திருஅவையின் உதவியால், எல் சால்வதோர் நாட்டில் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன

6. நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் உயர்ந்த விருதுகள்

7. இந்தியாவில் புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடு இந்த நோயின் காரணம்

------------------------------------------------------------------------------------------------------

1. குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்கவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்

மார்ச்,29,2012. இலங்கையில் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது என்றும், குழந்தைகளுக்கு இவ்வுலகில் உரிய இடத்தையும் மதிப்பையும் வழங்குவதற்கு அன்னையருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்ட வேண்டும் என்றும் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
கருவில் உருவானது முதல் அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் இரஞ்சித், தவக்காலத்தில் திரட்டப்படும் காணிக்கைகள் பிறக்காத குழந்தைகளுக்கான நிதி என்ற பெயரில் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
"குழந்தைகளின் வாழ்வுரிமையைக் காப்பதற்கு" என்ற மையக் கருத்துடன் கொழும்பு உயர் மறைமாவட்டமும், காரித்தாஸ் அமைப்பும் தவக்காலத்தில் துவங்கியுள்ள இந்த முயற்சியால் பல உயிர்கள் காக்கப்படும் என்று உயர்மறைமாவட்டத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசு கருக்கலைப்பைச் சட்டமயமாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ள இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மேற்கொண்டுள்ள எதிர்ப்பின் ஓர் அங்கமாக இந்த முயற்சியும் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2. உயிர்ப்புத் திருநாளுக்காக லிபியா மக்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காண முடிகிறது - அப்போஸ்தலிக்க நிர்வாகி

மார்ச்,29,2012. லிபியா நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்காக, தவக்காலத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் மக்கள் பெருமளவில் கோவில்களில் கூடிவந்து செபிப்பது நம்பிக்கை தரும் அடையாளமாக உள்ளது என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
42 ஆண்டுகள் நிகழ்ந்த சர்வாதிகார ஆட்சியாலும், கடந்த ஓராண்டளவாய் நிகழ்ந்துள்ள பல்வேறு போராட்டங்களாலும் மக்கள் மனம் தளர்ந்துள்ளனர் என்றாலும், உயிர்ப்புத் திருநாளுக்காக அவர்கள் நம்பிக்கையுடன் தாயரிப்பதைக் காணமுடிகிறது என்று ஆயர் Martinelli ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பிலிப்பின்ஸ் மற்றும் சகாரா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து, லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்கள், நாட்டில் உள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பெரும் தூண்டுதலாக அமைந்துள்ளனர் என்றும் ஆயர் எடுத்துரைத்தார்.
கடந்த ஓராண்டளவாய் லிபியாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு கொடுமைகளின் மத்தியில் மருத்துவமனைகள் மூலம் கிறிஸ்தவர்கள் புரிந்த சேவை, கிறிஸ்துவத்திற்குச் சரியான ஒரு சாட்சியமாக லிபியாவில் விளங்குகிறது என்பதையும் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி சுட்டிக்காட்டினார்.


3. மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் - கொல்கத்தா பேராயர்

மார்ச்,29,2012. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா கூறினார்.
Asansol, Bagdogra, Baruipur, Kolkata, Darjeeling, Jalpaiguri, Krishnagar, Raigunj ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் குருக்கள் கலந்துகொண்ட ஒரு மறைபரப்புப் பணி மாநாட்டின்போது பேராயர் டிசூசா பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
கம்யூனிசமும், கிறிஸ்தவமும் ஏழைகளுக்கு உதவுவது அவசியம் என்பதை வலியுறுத்தி வருகின்றன என்று கூறிய பேராயர் டிசூசா, ஏழைகளுக்கு உதவும் வழிகளில் கம்யூனிசக் கொள்கையாளர்கள் எடுக்கும் முடிவுகள் தற்காலத்திற்கு ஏற்றதாக அமையவில்லை என்றும் எடுத்துரைத்தார்.
மார்க்சியத் தலைவர் ஜோதி பாசுவும், அன்னை தெரேசாவும் வேறுபட்டக் கொள்கைகள் கொண்டவர்கள் ஆயினும், இருவரும் ஏழைகள் மட்டில் அக்கறை கொண்டவர்களாய் இருந்ததால், ஒருவரை ஒருவர் மதித்தனர் என்றும் பேராயர் டிசூசா சுட்டிக் காட்டினார்.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த மறைபரப்புப் பணி மாநாட்டின் இறுதித் திருப்பலியை இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Salvatore Pennachhio நிறைவேற்றினார்.


4. திருத்தந்தை ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும்

மார்ச்,29,2012. சிரியா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள் மீது திருத்தந்தை காட்டும் அன்பும், அவர்களுக்கு உதவி செய்வதற்கு Cor Unum என்ற பாப்பிறைக் கழகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் போற்றுதற்குரியன என்று தமாஸ்கு நகரின் Maronite ரீதி பேராயர் சமீர் நாசர் கூறினார்.
ஒவ்வொரு புனித வாரத்தின் வியாழன்று மாலைத் திருப்பலியைத் திருத்தந்தை, உரோம் நகரில் உள்ள புனித யோவான் லாத்தரன் பசிலிக்காவில் நிறைவேற்றுவது வழக்கம். இவ்வாண்டு அவர் அங்கு ஆற்றும் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கைத் தொகையானது சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தொருக்கென அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Cor Unum என்ற பாப்பிறைக் கழகம், இத்தொகையை சிரியாவில் உள்ள காரித்தாஸ் அமைப்பிற்கு அனுப்பி வைக்கும்.
திருத்தந்தையும், பாப்பிறைக் கழகமும் மேற்கொண்டுள்ள இந்த அன்பு முயற்சிக்குத் தன் நன்றியை கூறிய பேராயர் நாசர், துன்பத்தில் இருக்கும் விசுவாசிகளுடன் திருஅவை எப்போதும் இணைந்துள்ளது என்பதற்கு இந்த செயல்பாடு ஓர் அடையாளம் என்று கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் வன்முறைகளில் இருந்து இதுவரை 20,000க்கும் அதிகமானோர் தப்பித்து, லெபனான், இன்னும் மற்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உடலாலும், உள்ளத்தாலும் தளர்ந்துள்ள புலம்பெயர்ந்தோர் மீது திருத்தந்தை காட்டும் இந்த அக்கறை, அவர்களுக்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று லெபனான் காரித்தாஸ் அமைப்பின் தலைவரான அருள்தந்தை Simon Faddoul கூறினார்.


5. தலத் திருஅவையின் உதவியால், எல் சால்வதோர் நாட்டில் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன

மார்ச்,29,2012. எல் சால்வதோர் நாட்டில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையே ஒப்புரவு உருவாக தலத் திருஅவை பெரிதும் உதவியுள்ளது என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறினார். இந்த ஒப்புரவைத் தொடர்ந்து, நாட்டில் நடைபெறும் கொலைக் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன என்று அமைச்சர் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
எல் சால்வதோர் நாட்டில் உள்ள Mara Salvatrucha, La Mara 18 என்ற இரு வன்முறை கும்பல்களின் தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவ்விரு தலைவர்களையும் அண்மையில் சந்தித்த அந்நாட்டு ஆயர் Fabio Colindres, இவ்விரு தலைவர்களையும் ஒப்புரவாக்கியதன் மூலம் இவ்விரு கும்பல்களும் தற்போது வன்முறைகளை நிறுத்தியுள்ளன.
ஒவ்வொரு நாளும் 14 அல்லது 15 கொலைகள் நடைபெற்று வந்த எல் சால்வதோர் நாட்டில், இவ்விரு தலைவர்களின் ஒப்புரவிற்குப் பிறகு, ஒரு நாளில் அதிகப் பட்சம் 5 கொலைகளே நடைபெறுகின்றன என்று கூறிய பாதுக்காப்புத் துறை அமைச்சர் David Munguia, இந்த மாற்றத்தை உருவாக்கக் காரணமான ஆயருக்கும், தலத் திருஅவைக்கும் தன் நன்றியை எடுத்துரைத்தார்.
ஆயரின் இந்த முயற்சி நிரந்தரமான அமைதியைக் கொணர வாய்ப்பில்லை என்று ஒரு சில அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் கூறியுள்ளன.
உலகில் சராசரியாக 10,000 மக்களில் 8.8 கொலைகள் நிகழ்கின்றன என்றும், எல் சால்வதோர் நாட்டிலோ 10,000 பேருக்கு 60 கொலைகள் வீதம் நடைபெறுகின்றது என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு பங்களாதேஷ் நாட்டின் உயர்ந்த விருதுகள்

மார்ச்,29,2012. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி, பங்களாதேஷ் நாடு தன் விடுதலையை அடைவதற்கு பெரும் உதவிகள் செய்த நான்கு கத்தோலிக்க குருக்களுக்கு அந்நாட்டின் உயர்ந்த விருதுகள் இச்செவ்வாயன்று வழங்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு எதிராக, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பங்களாதேஷ் போராடியபோது, இந்தச் சுதந்திரப் போராட்டத்திற்குப் பல்வேறு வகையில் உதவியாக இருந்த 83 பேருக்கு 'பங்களாதேஷ் விடுதலைப் போர் விருதினை' அரசுத் தலைவர் Zillur Rahman வழங்கினார்.
விருது பெற்றவர்களில் அருள்தந்தையர் Richard Timm என்பவரும், Eugene Homrich என்பவரும் நேரடியாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர். மறை சாட்சிகளாக இறந்த Mario Veronesi, William Evans என்ற வேறு இரு குருக்கள் சார்பில் இந்த விருதுகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கு உதவிய பல்வேறு நாட்டைச் சேர்ந்த நண்பர்களுக்கு இந்த விருது வழங்கும் விழாவின்போது பிரதமர் Sheikh Hasina தன் நன்றியைத் தெரிவித்தார்.


7. இந்தியாவில் புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடே இந்நோயின் காரணம்

மார்ச்,29,2012. இந்தியாவில் 2010ம் ஆண்டு ஆறு இலட்சம் பேர் புற்று நோயினால் இறந்துள்ளனர் என்றும், இந்நோய் ஏழைகள் செல்வந்தர் இருவரையும் பாதிக்கின்றது என்றும் அண்மையில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
Lancet என்ற நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு, புற்றுநோயைப் பற்றி இதுவரை நடத்தப்பட்ட மற்ற ஆய்வுகளில் இருந்து வேறுபட்டிருந்தது என்று கூறப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்ற ஆய்வுகள் நகர மக்களையே அதிகம் சார்ந்திருந்தது. தற்போதைய ஆய்வு நகரங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் 10 இலட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
ஆண்கள் மத்தியில் வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் உள்ளதென்றும், பெண்கள் மத்தியில் மார்பகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் அதிகம் உள்ளது என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், மிசோராம் மாநிலத்தில் மிக அதிகமாகவும் காணப்படுவதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடே இந்நோயின் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Wednesday 28 March 2012

robert john kennedy: Sad News to all Mangaluru Seminarians and Fathers,...

robert john kennedy: Sad News to all Mangaluru Seminarians and Fathers,...: Kindly Note: All Mangaluru Seminarians and Fathers, I hope you have heard the news about the road accident and the consequential death of F...

Sad News to all Mangaluru Seminarians and Fathers,

Kindly Note: All Mangaluru Seminarians and Fathers,
I hope you have heard the news about the road accident and the consequential death of Fr. Biju Karakkad of Kannur Diocese.
He met with an accident on 25th March 2012 while returning from his home after visiting the new born nephew,
 and left this world to the eternal abode on 26th March 2012.His funeral service will be held in Kannur on 29th March at 4:00 p.m.
Let us remember him and his sorrowful family members and diocese in our prayers.
(source: Fr. Milton, Rome, Italy)

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 28 மார்ச் 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 28 மார்ச் 2012: 1. திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு 2. சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடு...

கத்தோலிக்க செய்திகள்: 28 மார்ச் 2012

1. திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு

2. சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

3. ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு சிரிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது

4. பாகிஸ்தான் அரசின் மிக உயர்ந்த விருது இரு கத்தோலிக்கத் துறவியருக்கு வழங்கப்பட்டது

5. இலங்கை அமைச்சரின் கூற்றுகள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை  - காரித்தாஸ் அதிகாரிகள்

6. தமிழகத்தில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுப்பு

மார்ச்,28,2012. வியட்நாமைச் சேர்ந்த காலம் சென்ற முன்னாள் கர்தினால் Francis Xavier Nguyen Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நாட்டிற்கு செல்லவிருந்த திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு வியட்நாம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
கர்தினால் Văn Thuận அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் அண்மையில் துவக்கப்பட்டன. இது தொடர்பாக, திருப்பீடத்தின் சார்பில் கர்தினால் Peter Turkson தலைமையில் மார்ச் மாதம் 23 முதல் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வரை அந்நாட்டில் தகவல்கள் திரட்டச் செல்லவிருந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வியட்நாம் அரசு கடவு சீட்டு தருவதற்கு அனுமதி மறுத்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை மதச் சுதந்திரத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அத்துமீறிய ஒரு முடிவு என்று வியட்நாம் கத்தோலிக்கர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களில் அங்கு ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிச இராணுவ அடக்குமுறையால் சிறைப்படுத்தப்பட்டு அடுத்த 13 ஆண்டுகள் எவ்வித விசாரணையும் இன்றி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கர்தினால் Văn Thuận, நம்பிக்கையைத் தன் ஆயர் பணியின் விருதுவாக்காகக் கொண்டிருந்ததால், அரசு உருவாக்கியுள்ள இந்தத் தடையும் நீங்கி, திருப்பீட அதிகாரிகளின் வருகை விரைவில் நடைபெறும் என்று தலத் திருஅவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


2. சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மார்ச்,28,2012. சிரியாவின் Homs நகரில் தொடரும் வன்முறைகளிலிருந்து தப்பியோடும் கிறிஸ்தவர்கள் தலத் திருஅவையின் உதவிகளைப் பெற்றுவந்த போதிலும், இன்னும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியும் இல்லாமல் வாழ்கின்றனர், அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது மிக அவசரமானத் தேவை என்று Aleppo ஆயர் Antoine Audo கூறினார்.
கடந்த ஆறு வாரங்களாக சிரியாவின் Homs நகரிலிருந்து பெருமளவில் வெளியேறிவரும் கிறிஸ்தவர்களுக்கு Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் நிதி உதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறதென்றும், இன்னும் பிற உதவிகள் அவசரகால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்றும் இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Audo எடுத்துரைத்தார்.
இதற்கிடையே சிரியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இராணுவச் சேவையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்புப் பிரதிநிதி ராதிகா கூமாரசாமி கூறியுள்ளார்.
ஐ.நா. அதிகாரியின் இந்தக் கூற்று தன்னை எவ்வகையிலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை என்று கூறிய இயேசு சபை அருள்தந்தை Paul Dall'Oglio, கடந்த ஓராண்டளவாக சிரியாவில் சிறுவர்களும், இளையோரும் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாகி இறப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதே கருத்தை இப்புதனன்று வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை, சிரியாவின் தலைவர் Bashar al-Assad மனது வைத்தால், இவ்விளையோரையும், சிறுவர்களையும் ஒரு நொடியில் விடுவிக்க முடியும் என்று கூறினார்.


3. ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு சிரிய அரசு ஒப்புதல்

மார்ச்,28,2012. சிரிய அரசுடன் முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக, ஐ.நா. தந்த அமைதி திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இச்செவ்வாயன்று சிரிய அரசு கூறியது.
சிரிய அரசின் இந்த ஒப்புதல் அந்நாட்டில் வன்முறை நீங்கி, அமைதி திரும்புவதற்கு முதல் படி என்று கூறினார் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் Kofi Annan.
சிரிய அரசுத் தலைவர் இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது நம்பிக்கை தரும் ஒரு பெரும் அடையாளம் என்று சிரியாவில் பணிபுரியும் இயேசுசபை அருள்பணியாளர் Nawras Sammour, ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஐ.நா. பரிந்துரைத்துள்ள இந்த அமைதி திட்டத்தில் வன்முறைகள் நிறுத்தப்படுதல், மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைய அனுமதி வழங்குதல், விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுதல் போன்ற ஆறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.


4. பாகிஸ்தான் அரசின் மிக உயர்ந்த விருது இரு கத்தோலிக்கத் துறவியருக்கு வழங்கப்பட்டது

மார்ச்,28,2012. பாகிஸ்தான் அரசு தன் நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த விருதுக்கு இரு கத்தோலிக்கத் துறவியரைத் தெரிவு செய்ததற்காக தலத் திருஅவை தன் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்தது.
Sitara-e-Quaid-e-Azam என்று வழங்கப்படும் இந்த உயர்ந்த விருது, இவ்வாண்டு 27 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்தந்தை Robert McCullochம், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரி John Berkmans Conwayம் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் உழைத்துவரும் அருள்தந்தை McCulloch, குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதிலும், ஏழைச் சிறுவருக்கு பள்ளியொன்றை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்.
81 வயதான அருள் சகோதரி Conway, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் கல்விப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டவர். பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான Benazir Bhutto, மற்றும் மனித உரிமை ஆர்வலர் Asma Jahangir உட்பட, பாகிஸ்தானில் உள்ள பல பெருமைக்குரியப் பெண்களுக்கு அருள்சகோதரி Conway ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.


5. இலங்கை அமைச்சரின் கூற்றுகள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை  - காரித்தாஸ் அதிகாரிகள்

மார்ச்,28,2012. இலங்கையில் பணிபுரியும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, அந்நாட்டில் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதைத் தலத் திருஅவை வன்மையாகக் கண்டித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் விவசாயிகள் மேற்கொண்ட ஒரு போராட்டத்தை நடத்த காரித்தாஸ் வாகனங்களையும், உணவையும் ஏற்பாடு செய்திருந்ததென்று இலங்கையின் நலத்துறை அமைச்சர் Maithripala Sirisena கூறினார். மேலும், காரித்தாஸ் உறுப்பினர்கள் ஜெனீவா சென்று இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினர் என்றும் இவ்வமைச்சர் கூறினார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுகள் அப்பட்டமான பொய் என்று இலங்கை ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Harold Anthony Perera எடுத்துரைத்தார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை என்று காரித்தாஸ் அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளிகளை ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது என்றும், தங்கள் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் இவ்வமைப்பின் பிரதிநிதி Nihal Winadhipathi கூறினார்.


6. தமிழகத்தில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகம்

மார்ச்,28,2012. தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், கழிவறை வசதி பெற்றிருப்போரை விட, அலைபேசி வைத்திருப்போரின் வளர்ச்சி விகிதம், பெருமளவு உயர்ந்துள்ளது. மேலும், "டிவி' மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, 15வது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, நாடு முழுவதும் நடந்தது. இப்பணிக்கு அடித்தளமாக, கடந்த 2010, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு' பணி நடந்தது. தமிழகத்தில், 1.85 கோடி வீடுகளில், இப்பணி மேற்கொள்ளப் பட்டது.
இதில், குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ரேடியோ, "டிவி', தொலைபேசி, கம்ப்யூட்டர், வாகனங்கள் தொடர்பாக, கேள்விகள் கேட்கப்பட்டன.
இவற்றுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, "வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு' என்ற நூல் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
இந்நூலில், தமிழக அளவில், பின்வரும் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:
  • தமிழகத்தில், மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை, 1.42 கோடியிலிருந்து, 1.85 கோடியாக உயர்ந்துள்ளது.
  • இவர்களில், 80 விழுக்காட்டினர், குழாய் இணைப்புகளின் மூலம், குடிநீர் வசதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 20 விழுக்காட்டினர், கிணறு, ஆழ்துளை கிணறு, ஆகியவற்றின் மூலம் குடிநீர் வசதி பெறுகின்றனர்.
  • கடந்த 2001ம் ஆண்டில், 43.7 விழுக்காடாக இருந்த, ரேடியோ மற்றும் டிரான்சிஸ்டர் பயன்பாடு தற்போது, 22.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
  • 50 விழுக்காடு வீடுகளில் தான், முறையான கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளது.