Thursday 30 June 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 June 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 June 2011: "1. திருத்தந்தை : பாலியம் , பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது 2 . இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள ..."

Catholic News - hottest and latest - 30 June 2011

1. திருத்தந்தை : பாலியம், பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது

2. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருது

3. லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150 வருடச் சேவைக்குத் திருத்தந்தை பாராட்டு

4. கர்தினால் Georg Sterzinsky இறைபதம் அடைந்தார்

5.உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் - திருப்பீட உயர் அதிகாரி

6. ஆசிய நாடுகளில் தேர்தல் கால ஊழல்கள் ஒழிக்கப்பட ஐ.நா.அழைப்பு

7. பாங்காக் உலக புத்தகத் தலைநகர் 2013

8. இந்தியாவில் ஏழைகள் எத்தனை கோடிப் பேர்: துவங்கியது கணக்கெடுப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

‌‌1. திருத்தந்தை : பாலியம், பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது

ஜூன் 30,2011. பேராயர்கள் அணியும் பாலியம் என்ற கழுத்துப்பட்டை, விசுவாசம், அன்பு இறைமக்களை வழிநடத்துதல் ஆகியவற்றின் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இப்புதன்கிழமையன்று பாலியம் பெற்ற நாற்பது புதிய பேராயர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஆயர்கள் என்ற முறையில் இந்தப் பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களையும் இந்தப் பாலியம் நினைவுபடுத்துகின்றது என்றார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இந்தப் புதிய பேராயர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு பல ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வுரையை வழங்கினார் திருத்தந்தை.
இந்தப் புதிய பேராயர்கள் தங்களது மேய்ப்புப்பணியைத் திறம்பட ஆற்றுவதற்கு ஊக்கமளித்ததோடு அவர்களுக்காகச் செபம் செய்வதாகவும் உறுதியளித்தார் திருத்தந்தை.

2. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருது

ஜூன் 30,2011. இறையியலில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ள மூன்று ஐரோப்பிய இறையியலாளருக்கு ஜோசப் ராட்சிங்கர் விருதை இவ்வியாழனன்று வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருமுழுக்குப் பெயரான ஜோசப் ராட்சிங்கர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விறையியல் விருதை முதன்முறையாக வழங்கி உரையாற்றிய அவர், இறையியல் என்றால் என்ன என்பதை விளக்கினார்.
வத்திக்கானில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிறிஸ்தவ வரலாற்றுப் பேராசிரியரான உரோமை நகரைச் சார்ந்த 85 வயது நிரம்பிய Manilo Simonetti, பல இறையியல் நூல்களை எழுதியுள்ள இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 76 வயது குரு Olegario Gonzalez de Cardedal, Cistersian துறவு இல்ல அதிபரும், இறையியலாலருமான 50 வயது நிரம்பிய ஜெர்மானியக் குரு Maximilian Heim ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் யூரோக்களையும் பெற்றனர்.
ஜோசப் ராட்சிங்கர் அறிவியல் கழகம் என்ற வத்திக்கான் அமைப்பு இவ்விருதை வழங்குகின்றது. இவ்வறிவியல் கழகத்தின் தலைவர் கர்தினால் கமிலோ ரூயினி  ஆவார். இறையியல் துறையை, சிறப்பாக, திருமறைநூல், திருச்சபைத் தந்தையர்கள், அறிவு மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்தும் இறையியல் ஆகிய துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

3. லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150 வருடச் சேவைக்குத் திருத்தந்தை பாராட்டு

ஜூன் 30,2011. லொசர்வாத்தோரே ரொமானோ”(L'Osservatore Romano) என்ற திருப்பீடச் சார்பு தினத்தாள், கடந்த 150 ஆண்டுகளாக உண்மையைத் தலையாய நோக்கமாகக் கொண்டு திருத்தந்தையின் மறைப்பணியோடு என்றும் ஒன்றித்துச் செயல்பட்டு வருகின்றது என்று புகழாரம் சூட்டினார்  திருத்தந்தை.
லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150ம் வருட நினைவை முன்னிட்டு அத்தினத்தாளின் இயக்குனருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, 1861ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி இத்தினத்தாளின் முதல் பிரதி வெளிவந்ததைக் குறிப்பிட்டு அதன் 150 வருடச் சேவையைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தையின் தினத்தாள் என்று வழக்கமாக இது அழைக்கப்படுகின்றது என்றும், உலகப் போர்களின் காலத்திலும் அதற்குப் பின்னானப் பனிப்போரின் போது கிறிஸ்தவருக்கு எதிரான அடக்குமுறைகளின் போதும் இத்தினத்தாள் திருத்தந்தையர் 15ம் பெனடிக்ட், 11ம் மற்றும் 12ம் பத்திநாதர் ஆகியோருக்குத் தைரியமுடன் ஆதரவு வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
2008ம் ஆண்டில் மலையாள மொழியில் வெளியானது உட்பட 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதியில் பல்வேறு மொழிகளில் இத்தினத்தாள் உலகெங்கும் விநியோகிக்கப்பட்டதையும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
தற்சமயம் இணையதளம் உட்பட நவீன தொழிட்நுட்பத்தில் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாள் கொண்டுள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி இதில் பணி செய்வோர் எல்லாருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

4. கர்தினால் Georg Sterzinsky இறைபதம் அடைந்தார்

ஜூன் 30,2011. ஜெர்மனியின் பெர்லின் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் Georg Sterzinsky இவ்வியாழன் காலை இறைபதம் அடைந்தார்.
இவ்விறப்பையொட்டி பெர்லின் உயர்மறைமாவட்டத்திற்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினால் Sterzinsky தலத்திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டியிருப்பதோடு அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1936ம் ஆண்டு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கர்தினால் Sterzinskyயின் குடும்பமும், ஜெர்மனியின் மற்ற குடும்பங்களைப் போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946ம் ஆண்டில் Thüringen என்ற ஊரில் புகலிடம் தேடியது. பின்னர் தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 1960ல் குருவானார். 1989ல் பெர்லின் ஆயரானார். 1991ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் Sterzinskyன் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 197. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.

5.உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் - திருப்பீட உயர் அதிகாரி

ஜூன் 30,2011. இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கக்கூடும் ஆனால் உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உரோமையில் நடத்தி வரும் 37 வது அமர்வில் கலந்து கொள்ளும்  FAO வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் லூயிஜி த்ரவலினோ இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
2015ம் ஆண்டுக்குள் உலகின் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கு FAO முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் இதற்கு அனைத்து நாடுகளும் பொது மக்கள் சமுதாயமும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த இலக்கை அடைய இயலும் என்றார் அவர்.
FAOவில் இடம் பெறும் கூட்டமானது இச்சனிக்கிழமை நிறைவடையும். இந்த ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடம் 1948ம் ஆண்டிலிருந்து நிரந்தரப் பார்வையாளராக இருந்து வருகிறது.

6. ஆசிய நாடுகளில் தேர்தல் கால ஊழல்கள் ஒழிக்கப்பட ஐ.நா.அழைப்பு

ஜூன் 30,2011. ஆசிய நாடுகள் தேர்தல் காலங்களில், ஊழல்கள் மற்றும் பொய்யான நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளன, எனவே தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.அறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது.
UNDP என்ற ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட அமைப்பு, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆய்வு செய்து ஆசியாவில் தேர்தல் வன்முறையைப் புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளது.
சந்தேகமும் புகார்களுமே, சனநாயகங்களில் மக்களின் நம்பிக்கைகளை இழப்பதற்குப் போதுமானவைகளாக இருக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

7. பாங்காக் உலக புத்தகத் தலைநகர் 2013

ஜூன் 30,2011. பாங்காக் நகரை உலக புத்தகத் தலைநகர் 2013 என்று ஒரு சர்வதேச குழு குறித்திருப்பதாக யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனம் அறிவித்தது.
உலக அச்சகங்கள் மற்றும் யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்ட ஒரு சர்வதேச குழு, இப்புதனன்று பாரிசில் கூட்டம் நடத்திய போது பாங்காக்கை 13வது உலக புத்தகத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது என்று யுனெஸ்கோ அறிவித்தது.
பல்வேறு புத்தகங்களைக் கொண்டு வருவதற்கு பாங்காக் இசைவு தெரிவித்ததையொட்டி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டில் இந்தியாவின் புதுடெல்லி உலக புத்தகத் தலைநகராக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

8. இந்தியாவில் ஏழைகள் எத்தனை கோடிப் பேர்: துவங்கியது கணக்கெடுப்பு

ஜூன்30,2011. இந்தியாவில் சமூக-பொருளாதரா ரீதியில் பின்தங்கியவர்கள் மற்றும் வறு‌மைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்த தேசிய அளவிலான கணக்கெடுப்புப் பணி இப்புதன்கிழமை துவங்கியது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, நாட்டில் ஏழைகள், சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை தேசிய அளவில் தகவல் சேகரிக்க மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மக்கள்‌தொகை கணக்கெடுப்புத்துறை ஆகியன இணைந்து இப்பணியை துவக்கின.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது துவங்கியுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வறுமைக்கோட்டுக்கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து, நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சி என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இக்கணக்கெடுப்பில், வாகனம், வீடு, வீட்டுத் தொலைபேசி, மீன்பிடிப்படகு வைத்திருப்போர், வருமான வரி செலுத்துவோர் உள்பட பல்வேறு தரப்பினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு 40 நாட்களில் முடிவடையும் என்றும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும் அரசின் மானியங்களை வழங்குவதற்கும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் இந்திய அரசின் பதிவாளரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான சந்திரமெளலி தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

Wednesday 29 June 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 June 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 June 2011: "1.திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது 2. கருண..."

Catholic News - hottest and latest - 29 June 2011

1.திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது 

2. கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் இஸ்பெயின் ஆயர்கள் கண்டனம்

3.ஒரே பாலினத் திருமணங்கள் சட்டத்திற்கு நியுயார்க் ஆயர்கள் எதிர்ப்பு

4.மத்திய பிரதேசத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் : அருட்பணி முட்டுங்கல்

5.எல்லைகளையல்ல, மக்களைப் பாதுகாப்பதற்கு காரித்தாஸ் அழைப்பு

6.பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை இரத்து செய்வது அடக்குமுறைகளுக்கு உதவக்கூடும், திருச்சபை கவலை

7.உலகில் கால்நடைகளைத் தாக்கிய தொற்று நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஐ.நா.அறிவிப்பு

8.ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றன, ஐ.நா. அறிவிப்பு



----------------------------------------------------------------------------------------------------------------

1.திருத்தந்தை : புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், மக்களை உண்மைக்கு வழிநடத்திச் செல்கின்றது 

ஜூன்29,2011. புனிதர்கள் பேதுரு, பவுலின் அன்பு மற்றும் விசுவாச வாழ்வின் சாட்சியம், திருச்சபையின் மேய்ப்பர்களை ஒளிர்விக்கிறது மற்றும் மக்களை உண்மைக்கு வழிநடத்தி கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதற்குப் பயிற்சியளிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரின் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு, பவுலின் பெருவிழாவான இப்புதனன்று நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த மாபெரும் இரண்டு இளவரசர்களின் விலைமதிப்பில்லாக் குருதியினால் வளமடைந்த உரோம் நகரே அகமகிழ்வாய் என்றும் கூறினார்.
குறிப்பாக, புனித பேதுரு, திருத்தூதர்கள் குழுவின் ஒன்றிப்பைக் குறித்து நிற்கின்றார் என்று சொல்லி, இதனால் வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் நடைபெற்ற இன்றையத் திருவழிபாட்டில் நாற்பது புதிய பேராயர்களுக்குப் பாலியம் என்ற கழுத்துப்பட்டை வழங்கினேன் என்றார் திருத்தந்தை.
இந்தப் பாலியமானது, இறைமக்களை மீட்பின் பாதையில் நடத்திச் செல்லும் மறைப்பணியில் உரோம் ஆயருடன் பேராயர்கள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வெளிப்பாடாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
இப்பெருவிழா நாளில் தான் தனது அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டைச் சிறப்பித்ததையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இந்த நாளில் தனக்காகச் செபித்த மற்றும் தனக்கு வாழ்த்துக் கூறிய எல்லாருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த நாளின் அர்த்தமுள்ள நிகழ்வில் கலந்து கொண்ட கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் தலைமையிலான பிரதிநிதி குழுவுக்கும், இந்நாளில் பாலியம் பெற்ற நாற்பது பேராயர்களுடன் வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் இஸ்பெயின் ஆயர்கள் கண்டனம்

ஜூன்29,2011. இஸ்பெயின் நாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, அம்மசோதாவின் தற்போதைய கூறுகள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாண்புச் சட்டத்துடன்கூடிய மரணம்என்ற தலைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்த இஸ்பெயின் ஆயர்கள், மனிதர் வாழ்வதற்கான உரிமையை சகித்துக் கொள்ளும் அல்லது அதனை மீறும் சட்டங்கள் அநீதியானவை, எனவே இவற்றுக்கு மக்கள் பணிந்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்தச் சட்டங்கள் அனைத்துச் சனநாயக வழிகளிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேசமயம் மக்களின் மனச்சான்றின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3.ஒரே பாலினத் திருமணங்கள் சட்டத்திற்கு நியுயார்க் ஆயர்கள் எதிர்ப்பு

ஜூன்29,2011. திருமணம் குறித்து மனித வரலாற்றில் காலம் காலமாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட கூறுகளை மாற்றும் மசோதாவுக்கு நியுயார்க் மாநிலம் அங்கீகாரம் அளித்திருப்பது தங்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாக அம்மாநிலத்தின் எட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறினர்.
நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன் மற்றும் பிற ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தெளிவான போதனையின்படி, ஒரே பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளை மதிக்கிறோம், அதேசமயம் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே வாழ்வு முழுவதும் ஏற்படும் பந்தம் என்பதையும் உறுதியுடன் வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும் நியுயார்க் மாநில அரசின் நடவடிக்கை, திருமணம் மற்றும் குடும்பத்தின் அடிப்படை விழுமியங்கள் குன்றிப்போகக் காரணமாக அமையும் என்று ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.

4.மத்திய பிரதேசத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் : அருட்பணி முட்டுங்கல்
           
ஜூன்29,2011. சமூகத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் வளர்ப்பதற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்துமதம் பற்றி மட்டுமல்லாமல் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய பிரதேச மாநில ஆயர் பேரவையின் பொது உறவுகளுக்கானத் தலைவர் அருட்பணி ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் Shivraj Singh Chauhan க்கு முன்வைத்த அழைப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அருட்பணி முட்டுங்கல், அம்மாநிலத்தில் அரசும் மதமும் தனித்தனியாக இயங்க வேண்டுமென்ற தனது அழைப்பு கேட்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தை வளமையான மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மாநிலத்தின் அரசியலமைப்பில் அரசும் மதமும் பிரிக்கப்படுவதற்கு முதலமைச்சர் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதி வழங்குமாறும் அருட்பணி முட்டுங்கல் கேட்டுக் கொண்டார்.
பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் Shivraj Singh Chauhan, சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை வெறுப்பூட்டும் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் அங்கீகரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

5.எல்லைகளையல்ல, மக்களைப் பாதுகாப்பதற்கு காரித்தாஸ் அழைப்பு

ஜூன்29,2011. அரபு நாடுகளின் அண்மைப் பதட்டநிலைகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்குச் சர்வதேச சமுதாயம் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்துலக கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு கேட்டுள்ளது.
நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதைவிட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் கொள்கைப்பிரிவு இயக்குனர் மார்ட்டினா லிபெஷ் வலியுறுத்தினார்.
வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட  பதட்டநிலைகளால் அண்மை மாதங்களில் லிபியாவை விட்டு ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் பேரும் சிரியாவை விட்டு பத்தாயிரம் பேரும் வெளியேறியுள்ளனர். இவ்விரு நாடுகளிலிருந்தும் பெருமளவான  அகதிகள் வெளியேறி வருவது பெருமளவான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் மற்றும் அப்பகுதிகளை மேலும் உறுதியற்ற  தன்மைக்கு இட்டுச் செல்லும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வன்முறை மற்றும் பதட்டநிலைகளால் நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகளின் எதிர்கால வாழ்வைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், அப்பகுதிகளின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வு காண்பதும் அவசியம் என்று    லிபெஷ் கூறினார்.

6.பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை இரத்து செய்வது அடக்குமுறைகளுக்கு உதவக்கூடும், திருச்சபை கவலை

ஜூன்29,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களுக்கான அமைச்சகத்தை இரத்து செய்வதற்கான அரசின் திட்டம், அந்நாட்டில் அடக்குமுறைகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதற்கு வழி அமைக்கும் என்று திருச்சபை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை மாநில வாரியாகப் பிரிப்பதற்கானப் பரிந்துரைகள் குறித்து திருச்சபை கவலை அடைந்துள்ளதாகக் கூறிய லாகூர் அருட்பணியாளர் ஒருவர், இதன்மூலம் கிறிஸ்தவர்களின் உரிமைகள் தேசிய அரசியல் திட்டத்திலிருந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இசுலாம் அடிப்படைவாதிகள் புதிய கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதற்குப் பச்சைக் கொடி காட்டுவதாகவும் இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடைசி நிமிட மாற்றங்கள் இடம் பெறவில்லையெனில் பாகிஸ்தான் அரசு இந்தத் திட்டங்களை ஜூலை ஒன்றாந்தேதியிலிருந்து செயல்படுத்த ஆரம்பித்து விடும் என்றும் அக்குரு ஃபீடெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

7.உலகில் கால்நடைகளைத் தாக்கிய தொற்று நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, ஐ.நா.அறிவிப்பு

ஜூன்29,2011. இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்புக்குக் காரணமான நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் இச்செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது, பெரியம்மைக்குப் பிறகு உலகில் ஒழிக்கப்பட்ட இரண்டாவது நோய் என்றும் முதல் கால்நடை நோய் என்றும் FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
உலகில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக 1979ம் ஆண்டு டிசம்பரில் ஒரு முக்கிய அறிவியலாளர் குழு சான்றிதழ் வழங்கியது. இதனை உலக நலவாழ்வு நிறுவனம் 1980ல் அங்கீகரித்தது.

8.ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றன, ஐ.நா. அறிவிப்பு

ஜூன்29,2011. ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் சுமார் ஒரு கோடிப் பேர் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா. அறிவித்தது.
இந்நாடுகள் கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.மனிதாபிமான அலுவலகம் அறிவித்தது.
தென் சொமாலியாவிலிருந்து எத்தியோப்பிய முகாம்களுக்கு வரும் சிறாரில் ஏறக்குறைய பாதிப்பேர் ஊட்டச்சத்துக்குறையுடன் உள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 June 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 June 2011: "தமது குருத்துவத் திருநிலைப்பாட்டு வாழ்வில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை இறைவன் தம் அருள்வரங்களால்..."

Catholic News - hottest and latest - 28 June 2011

தமது குருத்துவத் திருநிலைப்பாட்டு வாழ்வில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை இறைவன் தம் அருள்வரங்களால் மேலும் மேலும் நிறைத்தருளுமாறு செபிக்கின்றது, நெஞ்சார்ந்து வாழ்த்துகின்றது வத்திக்கான் வானொலி


1. Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் திருத்தந்தை

2. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவ திருநிலப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. இஸ்பெயின் இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கானத் திருத்தந்தையின் பயணத்திட்டம்

4. அனைத்து வத்திக்கான் செய்திகளும் ஒரே இணையதளத்தில்

5. 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக கத்தோலிக்க அருட்சகோதரி கௌரவிக்கப்பட்டுள்ளார்

6. கேரளாவின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்பட பரிந்துரை

7. ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க நிக்கரகுவா தலத்திருச்சபை அழைப்பு

8.போரினால் இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

9. கம்போடியா இனப்படுகொலை வழக்கு விசாரணைகள் அந்நாட்டில் துவக்கம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் திருத்தந்தை

ஜூன் 28, 2011. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருந்த Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தான் உயிர்த்தபின் சீடர்களை சந்தித்த இயேசு, மீட்பு நற்செய்தியின் சாட்சிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சீடர்கள் பலர் மறைசாட்சியாக உயிரிழந்தனர் என்ற திருத்தந்தை, உரோமையில் கொல்லப்பட்ட் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கல்லறைகள் விசுவாசிகளின் வணக்கத்துக்குரியதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். கத்தோலிக்கத் திருச்சபைக்கும் Ecumenical கிறிஸ்தவ சபைக்கும் இடையே இடம்பெற்றுவரும் இறையியல் பேச்சுவார்த்தைகள் ஆய்வு, சிந்தனை மற்றும் மனம் திறந்த செயல்பாட்டிற்கான அர்ப்பணத்துக்கு அழைப்பு விடுப்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார். வன்முறை, பாராமுகம், சுய‌நலப்போக்கு போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகில், நற்செய்தி உண்மைக்கான கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த சாட்சியம் மூலமே, மக்கள் உண்மையின் பாதையை கண்டுகொள்ள நாம் உதவ முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை.

2. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவ திருநிலப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஜூன் 28, 2011. இப்புதனன்று தன் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டு நினைவைச் சிறப்பிக்கின்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த நாளை பெரும் கொண்டாட்டங்களில் செலவிடாமல், நன்றியறிவிப்பிற்கான நாளாகவும், தேவ அழைத்தலுக்கான செப நாளாகவும் சிறப்பிக்கத் திருத்தந்தை விரும்புவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
குருக்களுக்கான செப நாளாக இந்நாளைச் சிறப்பிக்க அகில உலக திருச்சபையும் முடிவெடுத்துள்ள வேளை, 60 மணி நேர திருநற்கருணை ஆராதனைக்கும் அழைப்பு விடுத்துள்ளது குருக்களுக்கான திருப்பேராயம்.
செபம் மற்றும் ஐக்கியத்தின் மூலம் திருத்தந்தைக்கு இந்நாளில் நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கமுடியும் என அத்திருப்பேராயம் மேலும் தெரிவித்துள்ளது.

3. இஸ்பெயின் இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கானத் திருத்தந்தையின் பயணத்திட்டம்

ஜூன் 28, 2011. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் உலக இளையோர் தினத்தில் பங்குகொள்ளச் செல்லும் திருத்தந்தை, இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 முதல் 21 வரை மத்ரித் நகர் செல்லும் திருத்தந்தையின் பயணத்திட்டத்தில், இளைஞர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தல், அவர்களுடனானச் சிலுவைப்பாதைக்குத் தலைமை தாங்குதல், அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்குதல், இரவு திருவிழிப்புச் செப வழிபாட்டில் கலந்துகொள்ளல், சர்வதேச இளையோருக்கான திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை இடம்பெற உள்ளன. இச்சந்திப்பின்போது திருத்தந்தை, இஸ்பெயின் நாட்டு ஆயர்கள், அந்நாட்டு மன்னர், பிரதமர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடுவார் எனவும் அவரின் பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

4. அனைத்து வத்திக்கான் செய்திகளும் ஒரே இணையதளத்தில்

ஜூன் 28, 2011. பன்வலை தொடர்புசாதனத்தின் ஒரே இணையதளத்தில் பல்வேறு கத்தோலிக்கத் தளங்களின் செய்திகளை ஒன்றிணைத்துத் தரும் வகையில் புதிய சேவையை இப்புதன் முதல் துவக்குகிறது திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவை.
திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவ விழாவும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவுமான இப்புதனன்று திருத்தந்தையால் துவக்கி வைக்கப்படவுள்ள இந்தப் புதிய இணையதளம்,  'லொசொர்வாத்தோரே ரொமானோ', வத்திக்கான் வானொலி, Fides செய்தி நிறுவனம் ஆகியவைக‌ளை ஒன்றிணைத்துச் செய்திகளை வழங்குவதாக இருக்கும்.
 www.news.va என்ற பெயருடன் இப்புதன் முதல் செயல்படும் இந்த இணையதளம் முதலில் இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைக் கொண்டிருக்கும்.

5. 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக கத்தோலிக்க அருட்சகோதரி கௌரவிக்கப்பட்டுள்ளார்

ஜூன் 28, 2011. கடந்த 29 ஆண்டுகளில் 53 முறைகள் இரத்ததானம் செய்ததற்காக ஹாங்காங் கத்தோலிக்க அருட்சகோதரி ஒருவரை கௌரவித்துள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.
திரு இரத்த சபையைச் சேர்ந்த அருட்சகோதரி Anna Chinன் இந்த அரிய சேவைக்காக அவரைக் கௌரவிப்பதாக அறிவித்தது செஞ்சிலுவைச் சங்கம்.
25 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்த 1600 பேர் ஹாங்காங்கில் செஞ்சிலுவைச்சங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அருட்சகோதரி 53 முறைகள் இரத்ததானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. கேரளாவின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்பட பரிந்துரை

ஜூன் 28, 2011.   கேரள மாநிலத்தின் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் திருச்சபைக்கு எதிரான பகுதிகள் நீக்கப்படவேண்டும் என அது குறித்து ஆய்வு செய்த வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்ய அரசால் நியமிக்கப்பட்ட இருவர் அடங்கிய குழு, பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் சில பகுதிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருப்பதாகவும், அப்பகுதிகள் நீக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைச் செய்துள்ளது.

7. ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க நிக்கரகுவா தலத்திருச்சபை அழைப்பு

ஜூன் 28, 2011. நிக்கரகுவா நாட்டில் வரும் நவம்பரில் தேர்தல்கள் இடம்பெற உள்ள நிலையில், ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதி மற்றும் நிலையான தன்மைக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Leopoldo Brenes Solorzano.  தேர்தலை ஒரு போர்க்களமாக மாற்றாமல் இருக்க இப்போதிருந்தே வன்முறைகளையும் தீவிரவாதங்களையும் மக்கள் கைவிட்டு, அமைதியின் பாதையில் இப்போதே நடைபோட பழக வேண்டும் என அழைப்பு விடுத்தார் மனகுவா பேராயர்.
ஏனைய பல நாடுகளில் இடம்பெறுவதுபோல் நிக்கரகுவாவிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டு அமர்த்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் Brenes Solorzano, இது அமைதிக்கும் நிலையானத்தன்மைக்கும், ஒரு வெளிப்படையானப் போக்கிற்கும் சிறப்புப் பங்காற்றுவதாக இருக்கும் என்றார்.

8. போரினால் இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

ஜூன் 28, 2011. இலங்கை அரசு கூறுவதுபோல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை எனவும், வன்னியில் எங்கும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு, பௌத்தக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும்,போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் குறித்த உண்மை நிலையை அறிய மலேசியாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இலங்கைக்குப் பயணம் செய்து திரும்பிய ஒரு குழுவினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி விட்டோம் என இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் சொல்வதில் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது எனக்கூறும் இக்குழு, 30 ஆண்டுகாலப் போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தது.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என மேலும் கூறியது, அண்மையில் இலங்கையிலிருந்து திரும்பிய இக்குழு.

9. கம்போடியா இனப்படுகொலை வழக்கு விசாரணைகள் அந்நாட்டில் துவக்கம்
 
ஜூன் 28, 2011. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணை தலைநகர் நாம்பென்னில் ஆரம்பித்துள்ளது.
நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்களுக்காக, தற்போது உயிரோடு இருக்கும் கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த நான்கு மூத்த உறுப்பினர்கள் மீது நீதி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாலாயிரம் பேரின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்படவுள்ளன.
கம்போடியாவில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் உயிரிழந்ததற்கு, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் காரணமாக இருந்தன.
இந்தச் சிறப்பு தீர்ப்பாயம் பணியாற்றத் தொடங்கி ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில், வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைய இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.