Friday 30 September 2011

Catholic News - hottest and latest - 30 September 2011

1. புதிய தலைமுறைகளுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகளைக் கண்டுபிடிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

2. மத்திய பிரதேச தலத்திருச்சபை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது

3. வத்திக்கான் அதிகாரி : ஜப்பான் அணுக்கசிவுப் பேரிடர் உலகளாவியப் பிரச்சனையை முன்வைக்கிறது

4. கென்யாவில் அரசுத்தலைவர் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஆயர் எதிர்ப்பு

5. அக்டோபர் 9, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க பராகுவே ஆயர்கள் வேண்டுகோள்

6. அனைத்துலக முதியோர் தினம், பான் கி மூனின் செய்தி

7. கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

8. உலகளாவிய ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் குறைவு

------------------------------------------------------------------------------------------------------

1. புதிய தலைமுறைகளுக்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு வழிகளைக் கண்டுபிடிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

செப்.30,2011. ஐரோப்பிய ஆயர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியில் புதிய வழிகளைக் குறிப்பாக, புதிய தலைமுறைகளுக்கு இப்பணியைச் செய்வதில் அவர்கள் தைரியத்துடன் எடுத்து வரும் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அல்பேனியத் தலைநகர் திரானாவில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் நான்கு நாள் நிறையமர்வுக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
மேய்ப்புப் பணிகள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஆயர்கள் மத்தியில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காணப்படும் ஒத்துழைப்பு தொடரும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் எர்டோவுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
மேலும், CCEE என்ற இந்த ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையில் ருத்தேனியன் (Ruthenian) பைசான்ட்டைன் ரீதித் திருச்சபையும் தற்சமயம் புதிதாக உறுப்பினராகச் சேர்ந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது.
இந்தப் புதிய வரவுடன் CCEE அவை, 33 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாக மாறியுள்ளது.
ருத்தேனியன் பைசான்ட்டைன் ரீதித் திருச்சபை, 1646ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தது.
மேலும், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் தனது கோடை விடுமுறையை முடித்து இச்சனிக்கிழமை வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. மத்திய பிரதேச தலத்திருச்சபை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த கையேட்டை வெளியிட்டுள்ளது

செப்.30,2011. இந்திய அரசியல் அமைப்பில் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்து உறுதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளைத் தொகுத்து ஒரு கையேடாக வெளியிட்டுள்ளது மத்திய பிரதேச தலத்திருச்சபை.
இத்தலத்திருச்சபை வெளியிட்டுள்ள இக்கையேடு குறித்துப் பேசிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ,  சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு இதமான வழியில் எடுத்துச் சொல்வதற்கு உதவியாக இக்கையேடு இருக்கிறது என்று கூறினார்.
இந்தியாவில் மிகச்சிறிய குழுவாகிய கத்தோலிக்கர் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு எடுத்து வரும் முயற்சிகளை அரசு அதிகாரிகள் பாராட்ட வேண்டுமெனத் தாங்கள் விரும்புவதாகவும் கூறினார் பேராயர்  கொர்னேலியோ.
84 பக்க இக்கையேடு, நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிறுபான்மை குழுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம், 2003ம் ஆண்டிலிருந்து 100க்கு மேற்பட்ட வகுப்புவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது.


3. வத்திக்கான் அதிகாரி : ஜப்பான் அணுக்கசிவுப் பேரிடர் உலகளாவியப் பிரச்சனையை முன்வைக்கிறது

செப்.30,2011. இவ்வாண்டு ஜப்பானில் இடம் பெற்ற அணுக்கசிவுப் பேரிடர், உலகில் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இருக்கின்ற உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, அணுசக்தி விவகாரங்களுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேரருட்திரு Michael Banach, அணுக்கசிவினால் ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றி விளக்கினார்.
Fukushima-Daiichi அணுக்கசிவுப் பேரிடர் எழுப்பும் பல அடிப்படைப் பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றுரைத்த அவர், ஜப்பானின் வளமையான வேளாண் பகுதிகளில் ஒன்றான இவ்விடத்தில் ஏற்பட்ட இப்பேரிடரின் எதிர்விளைவுகள், பொருளாதார, மருத்துவ மற்றும் மறுசீரமைப்பில் பெரும் செலவை உண்டுபண்ணியுள்ளன என்று குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 24 ஆயிரம் பேர் இறந்தனர். அச்சமயம் ஏற்பட்ட அணுக்கசிவினால் காற்றும் நீரும் அசுத்தமடைந்தன. இதனால் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இது, 1945ம் ஆண்டில் அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகம் என்று சொல்லப்படுகிறது.


4. கென்யாவில் அரசுத்தலைவர் தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டத்திற்கு ஆயர் எதிர்ப்பு

செப்.30,2011. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் 2012ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத்திற்கானத் தேர்தல்களை டிசம்பர் வரைத் தள்ளி வைக்கும் திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்களைத் தள்ளி வைக்கும் திட்டம், 2010ம் ஆண்டில் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை மீறுவதாக இருக்கும் என்று கென்யாவின் Eldoret ஆயர் Cornelius Arap Korir எச்சரித்தார்.
கென்யாவின் புதிய அரசியல் அமைப்பின்படி பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நடத்தப்பட வேண்டும். ஆயினும், தேர்தல்களை டிசம்பர் 17 வரைத் தள்ளிப் போடுவதற்கு அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை முயற்சித்து வருகிறது என்று கூறப்படுகின்றது.

கென்யாவில் 2007ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய கலவரத்தில் 1200க்கும் அதிகமானோர் இறந்தனர். 6 இலட்சத்து 60 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.


5. அக்டோபர் 9, பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க பராகுவே ஆயர்கள் வேண்டுகோள்

செப்.30,2011. பராகுவே நாட்டில் இந்த அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் கத்தோலிக்கரும் அனைத்துக் குடிமக்களும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயின் அரசியல் அமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து குடிமக்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கென அந்நாட்டு உச்சநீதிமன்றம் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
வாக்களித்தல் என்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல, அது கடமையுமாகும் என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை, ஒவ்வொருவரும் பொதுநலனை மனத்திற்கொண்டு தங்கள் மனசாட்சியின்படி ஓட்டளிக்க வேண்டுமென்று கூறுகிறது.
உள்நாட்டிலும் வேறு நாடுகளிலும் வாழும் சுமார் பத்து இலட்சம் பராகுவே குடிமக்கள் இந்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
2013ம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலை மனத்தில் வைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.


6. அனைத்துலக முதியோர் தினம், பான் கி மூனின் செய்தி

செப்.30,2011. உலகின் முதியோர்களில் ஏறக்குறைய மூன்றில்  இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் வாழும்வேளை, உலகளாவிய, மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டங்களில் முதியோர் இன்றும் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் முதல் தேதி அனைத்துலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், மத்ரித் சர்வதேச மாநாட்டில் முதியோர் குறித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் அமல்படுத்தப்படுமாறு வலியுறுத்தினார்.
முதியோரின் மனித உரிமைகள் மதிக்கப்படுமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
2012ம் ஆண்டு இந்த மத்ரித் மாநாடு நடைபெற்றதன் 10ம் ஆண்டும், இந்த 2011ம் ஆண்டு, முதியோர்க்கென ஐ.நா. கொள்கைகளை வகுத்த 20ம் ஆண்டும் நிறைவுறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி முதியோர் நலனில் அக்கறை காட்டுமாறு அவர் கேட்டுள்ளார்.


7. கடற்கொள்ளையர்களால் ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

செப்.30,2011. கடற்கொள்ளையர்களால் கப்பல் தொழிலுக்கு ஏற்படும் பெரும் செலவுகள் குறித்து எச்சரித்துள்ள அதேவேளை, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஐ.நா.நிறுவனங்களும் அரசுகளும் இராணுவங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலக கடல்சார் நிறுவனப் பொது இயக்குனர் Efthimios Mitropoulos கேட்டுக் கொண்டார்.
செப்டம்பர் 29ம் தேதி உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட Mitropoulos, கடற்கொள்ளையர் பிரச்சனை கடுமையானதாக இருப்பதால் இதனை ஓர் அமைப்பால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்று கூறினார்.
2010ம் ஆண்டில் மட்டும் 4185 கடற்தொழிலாளர்கள், கடற்கொள்ளையர்களால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். 1090 பேர் பிணையக் கைதிளாக எடுத்துச் செல்லப்பட்டனர். 516 பேர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டனர். இதனால் சுமார் 488 பேர் மனத்தளவிலும் உடலளவிலும் துன்புறுகின்றனர். இந்தப் புள்ளி விபரங்களையும் அவரின் செய்தி குறிப்பிடுகிறது.
கடற்கொள்ளையர்களின் குற்றங்களுக்கு அப்பாவி கடல் தொழிலாளர்கள் பலியாகும்வேளை, இந்தக் கொள்ளையர்களால் உலகப் பொருளாதாரத்திலும் ஆண்டுக்கு 700 கோடி டாலர் முதல் 1200 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படுகின்றது என்றும் Mitropoulos தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அக்டோபர் 13, 14 தேதிகளில் உரோமையில் உலக கடல்சார் தினம் சிறப்பிக்கப்படுகின்றது.


8. உலகளாவிய ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் குறைவு

செப்.30,2011. கடந்த ஆண்டில் நாடுகள் எதிர்நோக்கிய நிதி நெருக்கடியால், அவ்வாண்டில் உலக அரசுகள் புதிய ஆயுதங்களை வாங்கிய அளவு குறைந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
2010ம் ஆண்டில் உலகளாவிய ஆயுத வியாபாரம்என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் காங்கிரஸ் அவை வெளியிட்ட ஆய்வில், இது 2009ம் ஆண்டைவிட 2010ம் ஆண்டில் 38 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டில் 6,520 கோடி டாலராக இருந்த ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் 4,040 கோடியாகக் குறைந்தது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக 28,420 கோடி ரூபாய் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தாய்வான், சவுதி அரேபியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் இரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியன முதல் 2 இடங்களில் உள்ளன.
 

Catholic News - hottest and latest - 29 September 2011

1. யூதர்களின் புத்தாண்டு பெருவிழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்து

2. 2012ம் ஆண்டு உலக சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள் அறிவிப்பு

3. கர்தினால் பெர்த்தோனே : திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை

4. ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான சவால்கள் பற்றி குவகாத்தி பேராயர் கருத்து

5. திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் அளித்துள்ள பதில்

6. சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன - WHO அறிக்கை

7. உலகின் உணவுப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காணும் கணனிவழி விளையாட்டு

8. காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு


------------------------------------------------------------------------------------------------------

யூதர்களின் புத்தாண்டு பெருவிழாவுக்குத் திருத்தந்தை வாழ்த்து

செப்.29,2011. Rosh Hashanah என்ற யூதர்களின் 5772ம் புத்தாண்டு பெருவிழாக் கொண்டாட்டங்கள் இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் நடைபெறுவதையொட்டி யூதமதத்தினருக்குத் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Rosh Ha-Shanah 5772, Yom Kippur, Sukkot ஆகிய யூதமத விழாக்களையொட்டி உரோம் யூதமதத் தலைமைக்குரு ராபி ரிக்கார்தோ தி செஞ்ஞிக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில், உண்மைக்கு உறுதியான சாட்சியங்கள் தேவைப்படும் இவ்வுலகில் நீதியையும் அமைதியையும் ஊக்குவிப்பதற்கு நல்ல மனைத இப்பெரு விழா அனைவரிலும் கொண்டு வரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன், எபிரேய சமூகத்தைப் பாதுகாக்கவும் உரோம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலுள்ள எபிரேயர்களுக்கும் நமக்கும் இடையே நல்ல நட்புறவு வளரவும் வேண்டுமென்ற ஆவலையும் இச்செய்தியில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்தப் புத்தாண்டு பெருவிழாவுக்கு 8 நாள்களுக்குப் பின்னர் Yom Kippur என்ற பாவக்கழுவாய் நிகழ்வும், இதற்கு ஐந்து நாள்களுக்குப் பின்னர் Sukkot என்ற கூடாரப் பெருவிழாவும் சிறப்பிக்கப்படுகின்றன.


2012ம் ஆண்டு உலக சமூகத் தொடர்பு நாளுக்கானக் கருப்பொருள் அறிவிப்பு

செப்.29,2011.மௌனமும் இறைவார்த்தையும் நற்செய்தி அறிவிப்புக்கான பாதை என்பதை, 2012ம் ஆண்டு மே 20ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் தலைப்பாகத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று திருப்பீட சமூகத் தொடர்பு அவை அறிவித்தது.
தேர்ந்து தெளிதல் மற்றும் சிந்தனை செய்யும் பழக்கத்திற்கு, மௌனம் எப்போதும் உதவுவதால் இது இறைவார்த்தையை ஏற்பதற்கும் உதவுகின்றது என்று அவ்வவை கூறியது.
எழுத்தாளர்களின் பாதுகாவலரான தூய பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதியன்று இவ்வுலக நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தி ஒவ்வோர் ஆண்டும்  வெளியிடப்படுகின்றது.  
பெந்தெகோஸ்தே விழாவுக்கு முந்திய ஞாயிறன்று உலக சமூகத் தொடர்பு நாள் திருச்சபையில் வழக்கமாகக் கொண்டாடப்படுகின்றது.


கர்தினால் பெர்த்தோனே : திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை  

செப்.29,2011. திருச்சபையால் கற்பிக்கப்படும் உண்மைகளை, சிறப்பாக, விசுவாசம் மற்றும் அறநெறிகள் சார்ந்த விவகாரங்களில் திருச்சபையின் ஆசிரியத்தால் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு போதிக்கப்படும் உண்மைகளைப் பிரமாணிக்கத்துடன் அறிவிக்க வேண்டியது வத்திக்கான் வானொலிப் பணியாளர்களின் கடமை என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
வத்திக்கான் வானொலியின் பாதுகாவலராகிய கபிரியேல் அதிதூதரின் விழாத் திருப்பலியை வத்திக்கான் கெபியில் வத்திக்கான் வானொலிப் பணியாளர்களுக்கு இவ்வியாழனன்று  நிகழ்த்திய கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தை மற்றும்   திருச்சபையின் உண்மையான ஆசிரியப் போதனைகளை நேயர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு இப்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த உண்மையானது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, இவர் ஒவ்வொரு மனிதனையும் சந்திக்க விரும்புகிறார், மனிதரால் அறியப்படவும் அன்புகூரப்படவும் விரும்புகிறார் என்றும் கர்தினால் உரையாற்றினார்.
பல்வேறு மொழிகளில் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுவோர் திறந்த இதயத்துடன் ஆவியானவர் வழிநடத்தும் பாதையை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும், இயேசுவைச் சந்திப்பதில் முதல் சாட்சிகளாக வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் இருக்க வேண்டும் எனவும் திருப்பீடச் செயலர் வலியுறுத்தினார்.
இந்த நம் காலத்தின் மொழியிலும் மக்களின் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கலாச்சாரங்களிலும் பல்வேறு மனநிலை கொண்டவர்களுக்கும் வழங்கும் இந்தப் பணியானது எப்போதும் எளிதாக இருக்காது என்றுரைத்த கர்தினால், இவ்வுலகோடு எப்படி உரையாடல் நடத்த வேண்டும் என்பதற்கு இவர்கள் நன்கு தயாரிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றார்.
வத்திக்கான் வானொலி இவ்வாண்டு தனது 80 வருடச் சேவையைச் சிறப்பிப்பதையொட்டி இவ்வானொலியோடு தொடர்புடைய பலரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.


ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான சவால்கள் பற்றி குவகாத்தி பேராயர் கருத்து

செப்.29,2011. உலக மயமாக்கும் போக்கு மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய இரண்டும் ஆசியாவில் மறைபரப்புப் பணிக்கு எதிரான பெரும் சவால்கள் என்று குவகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் கூறினார்.
ஆசிய ஆயர்கள் அவை பாங்காக்கில் கூடி விவாதிக்கவிருக்கும் மறைபரப்புப் பணி கருத்தரங்கைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஆசிய ஆயர்கள் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் மேனம்பரம்பில் இவ்வாறு கூறினார்.
திருவழிபாடுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டிலும் குறைந்து வருவதைக் காணும்போது, உலகமயமாகும் போக்கு பரவி வருவதையும், சிறப்பாக இந்தப் போக்கு இளையோரிடையே பரவி வருவதையும் காண முடிகிறது என்று கூறிய பேராயர் மேனம்பரம்பில், மத அடிப்படை வாதமும் உலகமயமாகும் போக்கைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது என்று கூறினார்.
இளையோரை மிக அதிக அளவில் கவர்ந்து வரும் இவ்விரு போக்குகளையும் கட்டுப்படுத்த கத்தோலிக்க மறையானது தீவிரமான கொள்கைப் பரப்புப் பணியில் ஈடுபடுவது சரியான முறை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் மேனம்பரம்பில், ஆழமான மத கோட்பாடுகளே இவ்விரு போக்குகளிலிருந்தும் இளையோரை நல்வழிப் படுத்தும் என்ற தன் கருத்தையும் வெளியிட்டார்.


திருத்தந்தை வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் அளித்துள்ள பதில்

செப்.29,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2009ம் ஆண்டு வெளியிட்ட Caritas in Veritate என்ற சுற்று மடலுக்கு பொதுநிலையினர் சிலர் தங்கள் பதிலை ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் Los Angeles நகரில் உள்ள இலத்தீனோ தலைவர்களின் கத்தோலிக்கக் குழு என்ற அமைப்பு, திருத்தந்தையின் இந்த சுற்றுமடலுக்கு அளித்துள்ள பதிலிருப்பு 28 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை திருப்பீடத்திற்கு அளிப்பதற்கென உரோம் நகர் வந்துள்ள Los Angeles பேராயர் Jose Gomez, திருத்தந்தையின் சுற்று மடலுக்கு வர்த்தக உலகில் உள்ளவர்கள் அளித்துள்ள இந்த பதில் கத்தோலிக்க விசுவாசத்தின்படி இவ்வுலகைக் காணும் ஒரு வழியைக் கூறுகிறது என்று சொன்னார்.
பொது நிலையினர் மத்தியிலிருந்து வந்துள்ள இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத் தக்கது என்று கூறிய அமைதி மற்றும் நீதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், திருத்தந்தை விடுக்கும் சுற்றுமடல்களை பொதுநிலையினர் ஆழ்ந்து படித்து பதிலிறுக்கும் முயற்சிகளைத் தான் பெரிதும் வரவேற்பதாகக் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன், உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி நிலைக்கு தகுந்த ஒரு பதிலாக திருத்தந்தையின் இந்தச் சுற்றுமடல் அமைந்திருந்ததால், அதற்கு வர்த்தக உலகின் சார்பில் தகுந்த பதில்களை கூற முயன்றுள்ளோம் என்று இந்த கழகத்தின் தலைவர் Robert Aguirre கூறினார்.


சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன - WHO அறிக்கை

செப்.29,2011. உலக நகரங்கள் அனைத்திலும் மிக அதிக அளவில் சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
கட்டுக்குட்படாத வேகத்துடன் பரவி வரும் இயந்தர மயமாக்கலின் விளைவாகவும், வாகனங்களின் பெருக்கத்தாலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் சுவாசிக்கும் காற்று மிக அதிக அளவில் மாசுபட்டுள்ளது என்று WHO நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
புது டில்லி, இஸ்லாமாபாத், பெய்ஜிங் ஆகிய நகரங்கள் அதிக மாசடைந்துள்ள நகரங்களில் முதல் 10 இடங்களில் உள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஒவ்வோர்  ஆண்டும் 13 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சார்ந்தோர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.


உலகின் உணவுப் பிரச்சனைக்குத் தீர்வுகள் காணும் கணனிவழி விளையாட்டு

செப்.29,2011. Freerice.com என்ற ஒரு கணனிவழி விளையாட்டின் மூலம் ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் ஒரு வழி பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மக்களுக்கு இப்புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
Freerice.com என்ற இவ்விளையாட்டின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் மொழியின் வார்த்தைத் திறனில் வளர முடியும். சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும்போது, உலக உணவு திட்டத்திற்கு 10 தானியங்களை விளம்பர நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் இஸ்பானியம் ஆகிய மொழிகளில் அறிமுகமான இவ்விளையாட்டுக்கள் இப்புதன் முதல் பிரெஞ்ச் மற்றும் இத்தாலியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
John Breen என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் 40,000 க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர் என்றும், இதன் பயனாக ஒருவரது சொல் திறமை வளரும் அதே நேரத்தில் உலகின் உணவுப் பிரச்சனைக்கும் சில தீர்வுகள் கிடைக்கின்றன என்றும் ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Freerice.com விளையாட்டின் மூலம் இதுவரை 10,000 கோடி உணவு தானியங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்த உணவு ஒரு நாளைக்கு 4 கோடியே 80 இலட்சம் மக்களின் பசியை போக்க வல்லது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு

செப்.29,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது தங்கள் சொந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் 2 இலட்சம் பேரை வேறொரு இடத்தில் குடியமர்த்தும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
உள்நாட்டுப் போரின்போது உருவாக்கப்பட்ட பல முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மீள் குடியமர்த்தும் இலங்கை அரசின் முயற்சிக்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசு ஏற்பாடு செய்துவரும் 600 ஏக்கர் நிலப்பரப்பில் குடிநீர், கழிநீர் வசதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்று எவ்வித வசதிகளும் இல்லை என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு கூறும் இம்மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மீன் பிடிக்கும் தொழிலில் இருந்த இம்மக்களுக்கு தற்போது அரசு ஏற்பாடு செய்து வரும் பகுதிகள் மீன்பிடிப்பிற்கு ஏற்ற பகுதிகள் அல்ல என்பதும், தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த பள்ளிகள் இல்லை என்பதும் இவர்கள் மறுப்புத் தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

 

Thursday 29 September 2011

Swiss Bank Account of Rajiv Gandhi - News : Is it trust worthy?



Swiss Bank Account of Rajiv Gandhi

Attached is a photo from a Swiss Magazine Schweizer Illustriertein
(November 1991) - it shows the top holders of Swiss bank accounts at the
time.

Rajiv appears in the august company of other dictators like Saddam
Hussein, Suharto of Indonesia, etc.

The text below Rajiv's photo reads: Rajiv Gandhi, Indian, Holds 2.5
billion Swiss Francs (eq. to 13,200 Crores in 1991).

Ocean Turtle Photos

Ocean Turtle Photos



 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

 

Click here to join nidokidos

Thanks to Sr. Gloris Francis

Catholic News - hottest and latest - 28 September 2011

1. ஜெனீவாவில் நடைபெறும் WIPO (World Intellectual Property Organization) நிறுவனத்தின் 49வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி

2. ஐ.நா.வில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட திருப்பீடம் ஆதரவு

3. கருக்கலைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது - மெக்சிகோ நாட்டு கர்தினால்

4. அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதத்தையொட்டி அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை

5. செபமாலை அன்னை திருநாளன்று அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடுவர்

6. கோவா மாநிலத்தின் சுற்றுலாத் திட்டங்களில் தலத் திருச்சபை ஈடுபாடு

7. பாகிஸ்தானில் பள்ளிச் சிறுமியின் எழுத்துப்பிழையினால் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஆபத்து

8. 37 வளரும் நாடுகளில் குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பின் முயற்சிகள்


------------------------------------------------------------------------------------------------------

1. ஜெனீவாவில் நடைபெறும் WIPO (World Intellectual Property Organization) நிறுவனத்தின் 49வது அமர்வில் பேராயர் சில்வானோ தொமாசி

செப்.28,2011. அறிவுத்திறனை ஓர் உடைமையாகப் பேணுவதில் அனைவரும் அக்கறை காட்டவேண்டும் என்பதைத் திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, WIPO (World Intellectual Property Organization) என்றழைக்கப்படும் அறிவு சார்ந்த உடைமைகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் 49வது அமர்வில் பேசியபோது இவ்வாறு கூறினார்.
அறிவு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் உடைமை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் தொமாசி, நமது அறிவுவழி கண்டுபிடிக்கப்படும் உண்மைகள் அனைத்து மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அறிவைப் பயன்படுத்தும் வழிகளை ஆராயும் ஒரு கருத்தரங்கில் ஈடுபட்டுள்ள இந்த ஐ.நா.அவை, உலகெங்கும் பார்வைத்திறன் அற்ற 284,000,000 மக்களையும் கருத்தில் கொண்டிருப்பதை பேராயர் பாராட்டினார்.
அறிவுத்திறன் உடைமைகள் என்று எண்ணும்போது, பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வழிகளில் மருத்துவத்தைப் பயன்படுத்தும் பல குழுவினரின் கண்டுபிடிப்புக்களையும் இந்த அகில உலக அவை மதிக்கவேண்டும் என்று பேராயர் தொமாசி வலியுறுத்தினார்.


2. ஐ.நா.வில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட திருப்பீடம் ஆதரவு

செப்.28,2011. புனித பூமியில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் தனது அர்ப்பணத்தை அதிகரித்து அதற்கானத் தனது முன்னெடுப்புக்களை முடுக்கி விடுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நாவைக் கேட்டுக் கொண்டார்.
நியுயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்று வரும் 66 வது பொது அவையில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மதிக்கப்படுவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பு நாடாக அங்கம் வகிப்பது குறித்துப் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas இம்மாதம் 23ம் தேதி ஐ.நா.பொது அவையில் முன்வைத்துள்ள கோரிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மம்பர்த்தி, இந்தக் கோரிக்கைக்கு, அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் தீர்வு வழங்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், தற்சமயம் நாடுகளின் குடும்பம்எதிர் நோக்கும் முக்கிய சவால்களாக, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள், உலகில் சமய சுதந்திரம் மதிக்கப்படுவதன் தேவை, உலகம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டிப் பேசினார் அவர்.
2012ம் ஆண்டு சனவரி முதல் நாள், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்கும், ஐ.நா.வின் 193 வது உறுப்பு நாடாகப் புதிதாக இப்பொது அவையில் கலந்து கொள்ளும் தென் சூடானுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் பேராயர் தொமினிக் மம்பர்த்தி.


3. கருக்கலைப்பு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது - மெக்சிகோ நாட்டு கர்தினால்

செப்.28,2011. கருக்கலைப்பு எந்த வகையிலும், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையாது என்று மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகளில் மெக்சிகோ அரசு ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இந்தப் பிரச்சனை அந்நாட்டின் உச்ச நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருவதையொட்டி தன கருத்தை வெளியிட்ட மெக்சிகோ நகரப் பேராயர் கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
பணியிடங்களிலும், குடும்பங்களிலும் கருக்கலைப்பை மேற்கொள்வதற்கு பெண்கள் கட்டாயப்படுத்தப்படும்போது, திருச்சபை அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து நல்ல முடிவுகளை எடுக்க உதவிகள் செய்து வருகிறதென்று கர்தினால் Carrera சுட்டிக்காட்டினார்.
கருவில் வளரும் உயிர்களை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் கருதும் போக்கு இவ்வுலகில் பெருகிவருவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Carrera,  ஒரு குழந்தை எப்போதும் கடவுள் வழங்கும் ஒரு கொடையே தவிர மனிதர்களின் உடமைப் பொருள் அல்ல என்று கூறினார்.


4. அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதத்தையொட்டி அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை

செப்.28,2011. வாழத் தகுதியற்றவர்கள் என்று தீர்மானித்து ஒதுக்கிவைக்கும் இவ்வுலகப் போக்கிற்கு எதிராக, முழுவாழ்வை அளிக்க வந்தேன் என்று இயேசு கூறியுள்ள உறுதிமொழி ஒலிக்கிறது என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் வாழ்வை மதிக்கும் மாதம் வருகிற வார இறுதி முதல் துவங்கவிருக்கும் சூழலில், அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வை வலியுறுத்தும் செயல்பாடுகள் குழுவின் தலைவரான கர்தினால் Daniel DiNardo ஆயர் பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கருக்கலைப்பு மற்றும் கருத்தடை ஆகியவற்றை நலக்காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்க அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வரும் வேளையில், இந்த முயற்சிகளை கத்தோலிக்கர்கள் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர் அவை வலியுறுத்தியுள்ளது.
கருவில் வளரும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோர் சமுதாயத்தின் பார்வையில் பயனற்றவர்கள் என்று கருதப்படுவது மிகவும் தவறான ஓர் எண்ணம் என்றும் கிறிஸ்து கொணர்ந்துள்ள வாழ்வை அனைவரும் முழுவதும் பெற வேண்டும் என்பதை உலகிற்கு பறை சாற்றவே இந்த வாழ்வை வலியுறுத்தும் மாதம் கடைபிடிக்கப்படுகிறது என்றும் கர்தினால் DiNardo கூறினார்.


5. செபமாலை அன்னை திருநாளன்று அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடுவர்

செப்.28,2011. வருகிற அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படும் செபமாலை அன்னை திருநாளன்று, 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் பேராலயத்தில் கூடி வந்து, மரியன்னைக்கு ஒரு தங்க ரோஜா மலரை அளிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாய் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் அகில உலக குழந்தைகளின் திருநற்கருணை நேரம் என்ற இந்த முயற்சியையொட்டி அக்டோபர் 7ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கூடி வரும் இந்த நிகழ்ச்சியை EWTN என்ற தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா அன்னையின் உலகப் பணி அமைப்பும், புனித குழந்தைப்பருவக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை New Orleans பேராயர் Gregory Aymond தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. கோவா மாநிலத்தின் சுற்றுலாத் திட்டங்களில் தலத் திருச்சபை ஈடுபாடு

செப்.28,2011. கோவா மாநிலத்தின் கலாச்சாரத்தை இன்னும் அதிகமாக பலரும் உணரும் வழிகளை தலத் திருச்சபை மேற்கொள்ளவிருக்கிறது.
செப்டம்பர் 27 இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலக சுற்றுலாப் பயண நாளையொட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கோவா தலத் திருச்சபை இவ்விதம் கூறியுள்ளது.
கோவாவில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாக்கள் கலாச்சாரக் கூறுகளைக் பொறுப்புணர்வுடன் கற்றுக் கொள்ளும் வகையில் அமைவதை தலத் திருச்சபை பெரிதும் விரும்புகிறது என்று இந்த ஊடக அறிக்கையை வெளியிட்ட கோவா காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை Maverick Fernandes கூறினார்.
பன்னாட்டுப் பயணிகளின் கவனத்தை கோவா ஈர்த்து வரும் இவ்வேளையில், இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாக்கள் தவறான வழிகளில் செல்லும் போக்கை விடுத்து, கலாச்சாரத்தை வளர்க்கும் வழிகளை மக்கள் கண்டுணரும் முறையில் அமையவேண்டும் என்று தலத்திருச்சபை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.


7. பாகிஸ்தானில் பள்ளிச் சிறுமியின் எழுத்துப்பிழையினால் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஆபத்து

செப்.28,2011. குழந்தைகள் கவனக் குறைவால் செய்யும் தவறுகளையும் பெரிதுபடுத்த எண்ணும் பாகிஸ்தான் சமுதாயத்தின் கடினமான வழிமுறைகள் கவலையைத் தருகின்றன என்று இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர் Anthony Rufin கூறினார்.
பாகிஸ்தானில் Abbottabad எனுமிடத்தில் Faryal Bhatti என்ற 10 வயது பள்ளிச் சிறுமி இறைவாக்கினர் முகம்மது பற்றி எழுதும்போது கவனக் குறைவாக புரிந்த ஓர் எழுத்துப்பிழையை அவ்வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பெரிதுபடுத்தி, அக்குழந்தையை தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அச்சிறுமி தன் கவனக் குறைவால் ஏற்பட்ட பிழையை ஏற்றுக் கொண்ட போதிலும் அவளையும், அவளது குடும்பத்தையும் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அக்குழந்தையை காவல்துறை கைது செய்யவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சிறு தவறுகளையும் பெரும் பிரச்சனைகளாக மாற்றி வரும் பாகிஸ்தான் சமுதாயம், சகிப்புத் தன்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என்று ஆயர் Anthony Rufin ஆசிய  செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.


8. குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் 37 வளரும் நாடுகளில் கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பின் முயற்சிகள்

செப்.28,2011. குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் இன்னும் 37 வளரும் நாடுகளுக்கு கிடைப்பதற்கு ஐ.நா. அமைப்பு ஆவன செய்யும் என்று இச்செவ்வாயன்று வெளியான ஓர் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, மற்றும் நிமோனியா ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் தடுப்பூசிகளை 37 நாடுகளுக்கு ஐ.நா. வழங்க உள்ளது. இந்த 37 நாடுகளில் 24 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்தவை.
ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்து இலட்சம் பேர் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்ரிக்கக் குழந்தைகள் என்றும் இந்த ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
2000மாம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா.வின் இத்திட்டத்தால் 25 கோடி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்றும், 2015ம் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக 5 கோடி குழந்தைகள் இத்திட்டங்களால் பயன்பெறுவர் என்றும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan கூறினார்.