Saturday 30 July 2011

robert john kennedy: Kenny's Articles// WORDS IN DAILY LIFE

robert john kennedy: Kenny's Articles// WORDS IN DAILY LIFE: "WORDS IN DAILY LIFE 01. INTRODUCTION In the context of healing the sick at Capernaum, the centurion replied to Jesus, “For I am a man un..."

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 July 2011: "1. 2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள் 2. பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.ந..."

Catholic News - hottest and latest - 29 July 2011

1. 2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

2. பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.நா.வுக்கு நினைவுபடுத்துகிறது

3. தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கோரியப் பேரணியில் கர்தினால், ஆயர்கள்

4. மங்கோலியாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் திறப்பு

5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் போராட்டம்

6. பாகிஸ்தான் கிறிஸ்தவ சபை அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தது

7. யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள்

8. பட்டினியால் ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் சொமாலியாவில் உயிரிழக்கின்றனர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. 2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 29,2011. 2011ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம் பெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முக்கிய நிகழ்வுகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
முதல் மூன்று மாதங்களில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாக, மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை கடந்த ஜனவரி 14ம் நாள் ஏற்றுக் கொண்டதாகும் எனக் குறிப்பிட்டது திருப்பீடம்.
அதற்கு அடுத்த நாள் இடம் பெற்ற, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாய் இணைய விரும்பும் முன்னாள் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையினர்க்கென ஏற்படுத்தப்பட்ட முதல் திருஆட்சிப்பீடத்தை அடுத்த நிகழ்வாகக் குறித்துள்ளது திருப்பீடம்.
பின்னர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள், கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதி ஆயர்கள் ஆகியோரை அட் லிமினா சந்திப்பில் சந்தித்தது, பின்னர் மார்ச் 10ம் தேதி தவக்காலத்தில் திருத்தந்தையின் நாசரேத்தூர் இயேசு இரண்டாம் பாகம் நூல் வெளியிடப்பட்டது போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது திருப்பீடம்.
பிப்ரவரியில், இரஷ்ய அரசுத்தலைவர், லெபனன் அரசுத்தலைவர், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோரைத் திருத்தந்தை சந்தித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.நா.வுக்கு நினைவுபடுத்துகிறது

ஜூலை 29,2011. இளையோர் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கொள்கைகள், மனிதப் பாலியல் கூறுகள், இனவிருத்தி நலவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையை மதிப்பதாய் இருக்க வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இளையோர் குறித்த ஐ.நா.நிறுவனத்தின் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், பிள்ளைகள், ஒழுக்கநெறி சார்ந்த பொறுப்புணர்வையும் பிறரை மதிக்கும் நற்குணத்தையும் குடும்பங்களில் கற்றுக் கொள்கின்றனர் என்றார்.
வன்முறையும் பிளவுகளுமற்ற, அதேவேளை அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயச் சூழலில் ஒவ்வோர் இளைஞனும் இளைஞியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் நினைவுபடுத்தினார்.
வரும் ஆகஸ்டில் மத்ரித்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடக்கும் உலக இளையோர் தினம், மனிதன் குறித்த உண்மையில் வேரூன்றப்பட்டுள்ள ஆன்மீகக் கூறுகளின் முக்கியத்துவத்தை இளையோர் கற்றுக் கொள்ள உதவுவதாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மத்ரித்தில் நடைபெறும் 13வது உலக இளையோர் தினத்தில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கோரியப் பேரணியில் கர்தினால், ஆயர்கள்

ஜூலை 29,2011. இந்தியாவின் அரசியல் அமைப்பில் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்க்கு வழங்கப்படும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் வழங்கப்படுமாறு இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் வலியுறுத்தினார்.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சம உரிமை கோரி இவ்வியாழனன்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மும்பை கர்தினால் கிரேசியஸ், பிறமதத் தலித்துக்கள் பெறும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்படாமல் இருப்பது தெளிவான பாகுபாட்டைக் காண்பிக்கின்றது என்றார்.
இது, எல்லாருக்கும் சமத்துவத்துக்கு உறுதி அளிக்கும் இந்தியாவின் அரசியல் அமைப்பை மீறுவதாகவும் இருக்கின்றது என்றார் மும்பை கர்தினால்.
இத்திங்கள் முதல் மூன்று நாட்களுக்குத் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நான்காவது நாள் பேரணியும் இடம் பெற்றன. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும் இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையும் நடத்தின.

4. மங்கோலியாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் திறப்பு

ஜூலை 29,2011. மங்கோலிய நாட்டிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் இவ்வியாழனன்று திறக்கப்பட்டுள்ளது.
மங்கோலியத் தலைநகர் Ulaan Baatar ல், புனிதர்கள் பேதுரு பவுல் பேராலய வளாகத்திலுள்ள புனித மேரி மருந்தகத்தை, அந்நகர் ஆயர் Wenceslao Padilla திறந்து வைத்தார்.
இம்மருந்தகம் 2004ல் செயோல் உயர்மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கிள் கிம் ஜூங்-ஹோவால் முதலில் தொடங்கப்பட்டது. இங்கு 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் போராட்டம்

ஜூலை 29,2011. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் இவ்வியாழனன்று கொழும்புவில் போராட்டம் நடத்தினர்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் அனைத்து மதங்களின் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் என்று கோஷமிட்டபடி ஆயிரத்துக்கு அதிகமானோர் புகைப்படங்களையும் அட்டைகளையும் ஏந்திக் கொண்டு  சென்றதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் கறுப்பு ஜூலை தினத்தையொட்டி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

6. பாகிஸ்தான் கிறிஸ்தவ சபை அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தது

ஜூலை 29,2011. பாகிஸ்தானில் மீட்புப்படை கிறிஸ்தவ சபையும் பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பும் இணைந்து இவ்வியாழனன்று அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைப்பிடித்தன.
பஞ்சாப் மாநிலத்தின் வெஹாரியில் கடைபிடிக்கப்பட்ட இவ்வுலக தினத்தில் அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஈரலைப் பாதிக்கும் hepatitis நோய்க் கிருமிகளை ஒழிப்பதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு மருத்துவ நிபுணர்கள் இவ்வுலக நாளில் வேண்டுகோள் விடுத்தனர்.
உலகில் போதைப்பொருள்கள் எடுப்போரில் hepatitisபி நோய்க் கிருமிகளால் 13 இலட்சம் பேரும் hepatitisசி நோய்க் கிருமிகளால் ஒரு கோடிப் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7. யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள்

ஜூலை 29,2011. புருண்டி, மெக்சிகோ, காங்கோ சனநாயகக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய பகுதிகளில் இடம் பெறும் எழுத்தறிவுப் புகட்டும் திட்டங்களுக்கு இவ்வாண்டு யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள் கிடைத்துள்ளன.
வருகிற செப்டம்பரில் புதுடெல்லியில் சிறப்பிக்கப்படும் அனைத்துலக எழுத்தறிவு நாளன்று இவ்விருதுகள் வழங்கப்படும் என்று யுனெஸ்கோ அறிவித்தது.
இவ்விருதுகள் ஒவ்வொன்றும் இருபதாயிரம் டாலரைக் கொண்டுள்ளது.
இவ்விருதைப் பெறும் அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட Room to Read  அமைப்பு, இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், ஜாம்பியா, தென்னாப்ரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் உள்ளூர் மொழிகள் மூலம் பாலியல் சமத்துவம் மற்றும் கல்வியறிவை வளர்த்து வருகிறது.  

8. பட்டினியால் ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் சொமாலியாவில் உயிரிழக்கின்றனர்

ஜூலை 29,2011. ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் தினமும் 250 குழந்தைகள் வீதம் உயிரிழக்கின்றனர்' என்று கூறப்படுகின்றது.
இந்நாட்டில் பல ஆண்டுகளாக காணப்படும் பசி பட்டினி பஞ்சத்தால் அதன் தெற்குப் பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி'  என அறிவித்துள்ளது ஐ.நா.
இப்பகுதியில் ஒவ்வோர் ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது என்றும், சொமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலுள்ள மக்கள்,  நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது.
சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
 

Friday 29 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 July 2011: "1. கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு 2. பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்ப..."

Catholic News - hottest and latest - 28 July 2011

1.  கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு

2.  பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக சீனா கூறுவது பெரும்பொய் என்கிறார் கர்தினால்

3.  சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே மக்கள் எழுச்சி, என்கிறார் துனிசிய பேராயர்

4.  காம்பியா நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக மறைப்பணியாளர்கள் கவலை

5.  வட கொரிய மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை வழங்க உள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு

6.  தென்னாபிரிக்காவால் மட்டுமே இலங்கையின் நல்லிணக்கத்திற்கு உதவ முடியும்! - லூயிஸ் ஆர்பர்

----------------------------------------------------------------------------------------------------------------

1.  கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு

ஜூலை 28, 2011.   கேமரூன் நாட்டின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவையினை வழிநடத்துபவராக அந்நாட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளார் அரசுத்தலைவர் பால் பியா.
அரசு நிர்வாகங்களிடையே தொடர்புகளை உருவாக்கி உயர் அதிகாரிகளுக்கு உதவும் இம்முக்கியப் பொறுப்பு அரசுத்தலைவர் மூலம் கேமரூனின் கிரிபி ஆயர் ஜோசப் பெஃபே அதேபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செய்திகளைத் தேசியப் பத்திரிகைகளுக்கு நேர்மையாக வழங்க, குறிப்பாக வரும் அக்டோபர் அரசுத்தலைவர் தேர்தலுக்குத் தயாரிப்பாக வழங்க இத்தகையதொரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைத்துறையில் அதிக அனுபவமுடைய ஆயர் பெஃபே அதேபா, ஏற்கனவே ஆப்ரிக்க ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், தற்போது கேமரூன் ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குத் தலைவராக இருந்து பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே கேமரூன் தேர்தல் அவையின் அங்கத்தினராகப் பிறிதொரு ஆயர் Dieudonne Watio வை அரசுத்தலைவர் நியமித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

2.  பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக சீனா கூறுவது பெரும்பொய் என்கிறார் கர்தினால்

ஜூலை 28, 2011.   திருத்தந்தையின் அனுமதியின்றி சீனாவில் ஆயர்கள் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது, தலத்திருச்சபையின் இயல்பான வாழ்வுக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கும் இன்றியமையாதது என சீன அரசு அறிவித்துள்ளது ஒரு கேலிக்கூத்து என குறை கூறியுள்ளார் ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் செக்கியூன்.
தேசியத் திருச்சபை என்ற ஒன்றைத் தன் கீழ் கொண்டு கிறிஸ்தவர்களை அடக்கி ஆண்டுவரும் சீனத்திருச்சபை, தற்போது திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் மறைந்து வாழும் கிறிஸ்தவர்களையும் தன் குடையின் கீழ் கொணர முயல்வதாக குற்றஞ்சாட்டினார் கர்தினால்.
தனிமனிதர்களின் சுதந்திரத்தையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் வன்முறைகள் கொண்டு அடக்கியதுடன், திருத்தந்தையின் அதிகாரத்தையும் இரக்க உணர்வையும் மதிக்கத்தவறிய சீன அரசு, தாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக அறிவித்திருப்பது உலகின் மிகப்பெரிய பொய் என மேலும் கூறினார் கர்தினால் சென்.

3.  சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே மக்கள் எழுச்சி, என்கிறார் துனிசிய பேராயர்

ஜூலை 28, 2011.   துனிசியாவில் 23 ஆண்டு ஆட்சி செய்த அரசுத்தலைவர் நீக்கப்பட்டதற்கும், தற்போது, வரும் அக்டோபரில் தேர்தல் இடம்பெறுவதற்கும் காரணமான மக்கள் எழுச்சியானது, சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு என்றார் துனிசிய பேராயர் Maroun Lahham.
ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கும் துனிசியாவில் மிகச்சிறுபான்மையினராக வாழும் கத்தோலிக்கர்கள், எதிர்தரப்புக்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதுடன், இசுலாமிய உலகிற்கும் மேற்கிற்கும் இடையேயான பாலமாகச் செயல்பட ஆவல் கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார் பேராயர்.
ஒருபக்கம் புரட்சியையும் மறுபக்கத்தில் ஜனநாயகப் பாதைக்கான ஏக்கத்தையும் கொண்டிருக்கும் துனிசியாவில் ஒருவிதமானப் பதட்டநிலைகள் இடம்பெறுவதாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரைத்த பேராயர் Lahham, இவ்வளவு காலமும் அரசைக்கண்டு மக்கள் பயந்து வந்தனர், ஆனால் தற்போது மக்கள்சக்தியைக் கண்டு அரசு அஞ்சி வருகின்றது என மேலும் கூறினார்.
இசுலாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட துனிசியாவில் 1கோடி இசுலாமியர்களிடையே 22,000 கத்தோலிக்கர்களே வாழ்கின்றனர். இங்குள்ள 11 பங்குத்தளங்களில் 49 குருக்கள் 121 பெண்துறவிகள் பணியாற்றுவதுடன் 11 பள்ளிகளையும் நடத்துகின்றனர். இக்கத்தோலிக்கப் பள்ளிகளில் 6,000 இசுலாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

4.  காம்பியா நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக மறைப்பணியாளர்கள் கவலை

ஜூலை 28, 2011.   காம்பியா நாட்டில் தேர்தலுக்கு முன்னான அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாக பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டில் பணிபுரியும் மறைப்பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நவ‌ம்பர் தேர்தலை நோக்கி நாடுச் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல சமூக அமைப்புகளின் அங்கத்தினர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருவது குறித்து கவலையை வெளியிட்ட மறைப்பணியாளர்கள், நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்து தங்கள் குரலை எழுப்பும் எவரின் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
காம்பியாவில் வேலைவாய்ப்பின்மைகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், வட ஆப்ரிக்க நாடுகளைப்போல் இங்கு மக்கள் எழுச்சி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற அவர்கள், அரசின் அடக்குமுறைகளையும் மக்களின் அமைதி இயல்புகளையும் அதற்கு காரணமாகக் காட்டியுள்ளனர்.
14 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட காம்பியாவில் 98 விழுக்காட்டினர் இசுலாமியர்.

5.  வட கொரிய மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை வழங்க உள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு

ஜூலை 28, 2011.   வட கொரியாவில் பசியாவில் வாடும் மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை நேரடியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு.
அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் வடகொரிய அரசுக்கு எவ்வித உதவிகளையும் வழங்குதல் கூடாது என்பது உண்மையெனினும், பசியால் வாடும் மக்கள் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது என்ற காரித்தாஸ் அமைப்பு, தங்கள் உதவிகள் யாவும் மக்களை நேரடியாகச் சென்றடைவதாக இருக்கும் என்றது.
தென்கொரியா மீது வட கொரியா திடீர்த் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடகொரியாவிற்கான தென்கொரிய உதவிகள் தற்போது சிறிய அளவில் ஐந்து அரசு சாரா அமைப்புகள் மூலம் துவக்கப்பட்டுள்ளன.

6.  தென்னாபிரிக்காவால் மட்டுமே இலங்கையின் நல்லிணக்கத்திற்கு உதவ முடியும்! - லூயிஸ் ஆர்பர்

நல்லிணக்கம் தொடர்பாக தென்னாப்ரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாப்ரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகையில் கருத்து தெரிவித்த  லூயிஸ் ஆர்பர்,கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல ஆண்டுகளான உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்த நாடுகளையும் விட  தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ள நிலையில் அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், யுத்தத்தின் பின்னரான அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன எனக் கூறிய அவர், பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசானது, சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் குறைகூறினார்.

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 July 2011: "1. திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன 2. ஐரோப்பா “ இளையோர் பற்றாக்குறையால் ” துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்..."

Catholic News - hottest and latest - 27 July 2011

1. திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன

2. ஐரோப்பா இளையோர் பற்றாக்குறையால்துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்கோ

3. மெக்சிகோ நகரில் படிக்காத எழுபது இலட்சம் இளையோர் குற்றக்கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஆபத்து -  மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கவலை

4. சுவாசிலாண்ட் நாட்டில் சனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஆயர்கள் அழைப்பு

5. டிரிப்போலியில் குடிமக்கள் மீதான நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி கண்டனம்

6. ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற அரசாணை தவறானது இந்திய அரசு

7. நைஜீரியாவின் வடகிழக்கில் சகிக்க முடியாத வன்முறைச்சூழல் நிலவுகிறது - Maiduguri ஆயர்

8. இரகசிய முகாம்களில் ஐந்தாயிரம் வரையில் தமிழ் இளையோர் தடுத்துவைப்பு

9. மொகதிஷூவில் உதவி கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு ஐ.நா.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன

ஜூலை27,2011. திருப்பீடமும் மலேசியாவும் தங்களுக்கிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளும் ஆவலில் இவ்விரு தரப்பும் அரசியல் உறவை உருவாக்கத் தீர்மானித்துள்ளன என்று இப்புதனன்று அறிவிக்கப்பட்டது.
திருப்பீடத்தைப் பொறுத்தவரை அப்போஸ்தலிக்கத் தூதரகம் என்ற நிலையிலும், மலேசியாவைப் பொறுத்தவரை தூதரகம் என்ற நிலையிலும் இவ்வரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், மலேசியா, திருப்பீடத்துடன் அரசியல் உறவைக் கொண்டிருக்கும் 179வது நாடாக மாறியுள்ளது.
மலேசியப் பிரதமர் Najib Razak, இம்மாதம் 18ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்டை காஸ்தல் கந்தோல்ஃபோவில் சந்தித்துப் பேசியதற்குப் பின்னர் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 2 கோடியே 83 இலட்சத்து 6,700 மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் 60.4 விழுக்காட்டினர் இசுலாமியர். 19.2 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 9.1 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 6.3 விழுக்காட்டினர் இந்துக்கள். 2.6 விழுக்காட்டினர் சீனப் பாரம்பரிய மதத்தினர். 2.4 விழுக்காட்டினர் இயற்கையை வழிபடுபவர்கள்.
தென்கிழக்கு ஆசிய நாடாகிய மலேசியாவில் 1511ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வேரூன்றத் தொடங்கியது. இந்நாட்டின் மலாக்காவில் முதல் போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். 1545ல் தூய பிரான்சிஸ் சவேரியார் மலாக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் மலேசியாவில் 11 ஆயர்கள், 274 மறைமாவட்ட குருக்கள், 119 துறவறக் குருக்கள், 123 அருட்சகோதரர்கள், 759 அருட்சகோதரிகள் மற்றும் 8,50,720 கத்தோலிக்கர் உள்ளனர்.

2. ஐரோப்பா இளையோர் பற்றாக்குறையால்துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்கோ

ஜூலை27,2011. ஐரோப்பாவிலும் இஸ்பெயினிலும் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால் அப்பகுதி இளையோர் பற்றாக்குறையைஎதிர்கொள்கிறது என்று இஸ்பெயின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய ரோக்கோ வரெலா தெரிவித்தார்.
இஸ்பெயினின் ஹூவான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளையோர்க்கானப் பணி குறித்த கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்த மத்ரித் பேராயரான கர்தினால் ரோக்கோ,  இஸ்பெயினில் 22 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், திருச்சபையிலும் பிற பகுதிகளிலும் இறையழைத்தல்கள் மிகக் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.
வருகிற ஆகஸ்ட் 18 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், புதுப்பிக்கப்பட்ட நற்செய்திப்பணிக்கும், இறையழைத்தல் அதிகரிக்கவும், கிறிஸ்தவக் குடும்பங்கள் உறுதிப்படுத்தப்படவும் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் கர்தினால் ரோக்கோ.
திருச்சபையில் உலக இளையோர் தினம், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலால் உருவாக்கப்பட்டதையும் கர்தினால் ரோக்கோ நினைவுகூர்ந்தார்.

3. மெக்சிகோ நகரில் படிக்காத எழுபது இலட்சம் இளையோர் குற்றக்கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஆபத்து -  மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கவலை

ஜூலை27,2011. மெக்சிகோ நகரில் எழுபது இலட்சம் இளையோர் கல்வியறிவு பெறாமலும் வேலை கிடைக்காமலும் இருக்கும்வேளை, இவர்கள் குற்றக் கும்பல் அமைப்புக்களினால் பயன்படுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கூறியது.
மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் "Desde la Fe" என்ற வார இதழில் வெளியான செய்தியின்படி, மெக்சிகோவில் திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் வழங்கும் பணத்தை, தங்களது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும்கூட அதை வேலையற்ற இளையோர் பெற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை என்றும் தற்சமயம் சிறைகளில் இருப்போரில் 80 விழுக்காட்டினர் 20க்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் தெரிய வருகிறது.
வன்முறைக் குற்றவாளிகளில் பத்துக்கு ஒன்பது பேர் இளையோர் என்றும் "Desde la Fe" கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய நான்கு கோடி இளையோரின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கின்றது, ஏனெனில் இவர்களுக்குப் படிப்போ வேலையோ கிடையாது என்றும் அவ்விதழில் கூறப்பட்டுள்ளது.

4. சுவாசிலாண்ட் நாட்டில் சனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஆயர்கள் அழைப்பு

ஜூலை27,2011. சுவாசிலாண்ட் நாட்டில் வறுமையும் திறமையற்ற அரசியல் நிர்வாகமும் ஊழலும் மிகுந்து காணப்படுவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலை குறித்து கவலை தெரிவித்த தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள், சுவாசிலாண்டில் 1973ம் ஆண்டின் அவசரகாலநிலை விதிமுறையை அகற்றி, அரசியல் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடைபெறுவதற்கு வழிவகுக்குமாறு அந்நாட்டு அரசர் மூன்றாம் Mswati க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தை அங்கீகரிக்கவும், சனநாயக அரசுக்கு உறுதி வழங்கும் அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கானப் பாதையைத் திறந்து விடவும் சுவாசிலாண்ட் அரசருக்கு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.
தென்னாப்ரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகிய சுவாசிலாண்ட், உலகிலே அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்களின் ஆயுட்காலமும்  மிகக்குறைவு. அதாவது 32 ஆண்டுகள். வேலைவாய்ப்பின்மை 40 விழுக்காடாகும். அந்நாட்டின் 70 விழுக்காட்டு மக்கள் ஒரு நாளைக்கு 6 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். மேலும், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கென, அந்நாட்டில் 37 வருடங்களாக அவசரகாலநிலை அமலில் இருக்கின்றது.

5. டிரிப்போலியில் குடிமக்கள் மீதான நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி கண்டனம்

ஜூலை27,2011. லிபிய நாட்டு டிரிப்போலியில் நேட்டோப் படையினர், குடிமக்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி.
வத்திக்கான் ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த ஆயர் மர்த்தினெல்லி, உணவுக் கடைகள் போன்ற அப்பாவி குடிமக்களைப் பாதிக்கும் இடங்களை நேட்டோப் படையினர் தாக்குகின்றனர் என்று குறை கூறினார்.
தொடர் குண்டுவீச்சுக்களால் அப்பாவி மக்கள் மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆயர் மேலும் கூறினார்.

6. ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற அரசாணை தவறானது இந்திய அரசு

ஜூலை27,2011. இந்தியாவில் ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று அரசால் கொடுக்கப்பட்ட ஆணை தவறானது என்று சொல்லி அச்சகோதரி தான் விரும்பும் வரை நாட்டில் தங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
1982ம் ஆண்டு மருத்துவத் தன்னார்வப் பணியாளராக இந்தியா வந்த Montfort மறைபோதகச் சபை சகோதரி Jacqueline Jean McEwan, அன்று முதல் பெங்களூர் சுமனஹல்லி மையத்தில் தொழுநோயாளர் மத்தியில் பணி செய்து வருகிறார். இவர் 24 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் ஆணையைப் பெற்றார். எனினும் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலையீட்டால் இவ்வாணைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அம்மைய இயக்குனர் கிளேரிசியன் சபை அருள்தந்தை George Kannanthanam, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

7. நைஜீரியாவின் வடகிழக்கில் சகிக்க முடியாத வன்முறைச்சூழல் நிலவுகிறது - Maiduguri ஆயர்

ஜூலை27,2011. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் இடம் பெறும் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் வன்முறைச்சூழல், சகிக்க முடியாததாக இருக்கின்றது என்று அந்நாட்டு Maiduguri ஆயர் Oliver Dashe Doeme தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை JTF  என்ற பிரிவின் படைவீரர்கள் மக்கள் கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் குறைந்தது 23 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கழகம் வெளியிட்ட செய்தியையொட்டி இவ்வாறு ஆயர் கூறினார்.
தினமும் தாக்குதல்கள் நடக்கின்றன, ஆனால் இதற்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்படவில்லை, எனவே இராணுவத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் Maiduguri ஆயர் கூறினார்.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகத்தின் கூற்றுப்படி, இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து 250 பேர் கொல்லப்பட்டனர்.

8. இரகசிய முகாம்களில் ஐந்தாயிரம் வரையில் தமிழ் இளையோர் தடுத்துவைப்பு

ஜூலை 27,2011. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட இலங்கை தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் இரகசியமான மர்ம முகாம்களில் ஐந்தாயிரம் வரையிலான தமிழ் இளைஞர், இளைஞிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விபரங்களை நாம் சிறப்பு நடவடிக்கைகள் வழியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இச்செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில், 1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம், ஆயுதப் போராட்டம் என்று இனமுரண்பாடு தீவிரமடைந்தது என்று தெரிவித்தார்.

9. மொகதிஷூவில் உதவி கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு ஐ.நா.

ஜூலை27,2011. சொமாலியாவில் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடந்த இரண்டு மாதங்களாக உணவு, தண்ணீர், குடியிருப்பு மற்றும்பிற வசதிகளைத் தேடி அலைந்த பின்னர் தலைநகர் மொகதிஷூ வந்துள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பு இச்செவ்வாயன்று அறிவித்தது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் இவர்கள் வந்து கொண்டிருப்பதால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று UNHCR பேச்சாளர் விவியன் தான் ஜெனீவாவில் தெரிவித்தார்.
அண்மை மாதங்களில் கென்ய எல்லையிலுள்ள ததாப் முகாம்களில் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை 3,80,000 த்தை எட்டியுள்ளது. தினமும் சுமார் 1300 பேர் வீதம் அங்கு  வருவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று தான் கூறினார்.