Saturday 28 May 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 May 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 May 2011: "1. உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு 2. குரோவேசிய நாட்டிற்கான ப‌ய‌ண‌த்தின் போது குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோ..."

Catholic News - hottest and latest - 28 May 2011

1.    உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

2.    குரோவேசிய நாட்டிற்கான ப‌ய‌ண‌த்தின் போது குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்குத் திருத்தந்தை முக்கிய‌த்துவ‌ம்
      வ‌ழ‌ங்குவார்

3.    உலக இளையோர் தினத்தின் பலன்களை உடனே காண முடிகிறது என்கிறார் இஸ்பெயின் கர்தினால்

4.    மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்

5.    வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை இயேசு சபை குரு விடுதலை

6.    கம்யூனிச சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

7.     இவ்வுலகில் படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் - UNESCO அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1.    உரோம் நகர் வந்துள்ள கேரள ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 28, 2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள கேரளாவைச் சேர்ந்த ஐந்து ஆயர்களை இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தைஇச்சனிக்கிழமை காலை மேலும் ஐந்து இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேர‌ளாவின் கொல்லம் ஆயர் ஸ்டான்லி ரோமன், புனலூர் ஆயர் சில்வெஸ்டர் பொன்னுமுத்தன், நெய்யாற்றிங்கரா ஆயர் வின்சென்ட் சாமுவேல், ஆலப்புழா ஆயர் ஸ்டீபன் அத்திப்பொழியில், விஜயபுரம் ஆயர் செபஸ்தியான் தெக்கத்தேசேரில் ஆகியோரை குழுவாகவும், பின்னர் தனித்தனியாகவும் சந்தித்து அந்தந்த‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ள் குறித்து அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடினார் திருத்தந்தை.

2.     குரோவேசிய நாட்டிற்கான ப‌ய‌ண‌த்தின் போது குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்குத் திருத்தந்தை முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவார்

மே 28, 2011.  துன்பகரமான வேளைகளில் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றியும், திருப்பீடத்துடன் எப்போதும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியும் வந்துள்ள குரோவேசிய நாட்டிற்குத் திருத்தந்தை பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றார் திருப்பீடப்பேச்சாளர் அருட்திரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
வ‌ரும் ச‌னி ம‌ற்றும் ஞாயிறு குரோவேசியாவில் இட‌ம்பெற‌ உள்ள‌ திருத்தந்தையின் திருப்ப‌ய‌ண‌ம் குறித்து க‌ருத்துக்க‌ளை வெளியிட்ட‌ இயேசு சபை குரு லொம்பார்தி, ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நிலைக‌ளின் ச‌வால்க‌ளை எதிர்நோக்கி வ‌ரும் இந்நாட்டில், குடும்ப‌ம் ம‌ற்றும் இளையோர் பிர‌ச்னைக‌ளுக்கு தன் ப‌ய‌ண‌த்தின் போது திருத்தந்தை அதிக முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவார் என்றார்.
தனி நாடாகச் சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இவ்வாண்டில் ஐரோப்பிய ஐக்கிய அவையில் இணைய உள்ள குரோவேசியாவில்  ஜூன் 5ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தேசிய குடும்ப நாள் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள உள்ளார் திருத்தந்தை.

3.    உலக இளையோர் தினத்தின் பலன்களை உடனே காண முடிகிறது என்கிறார் இஸ்பெயின் கர்தினால்

மே 28, 2011.  வருங்கால வாழ்வனைத்தையும் தங்கள் முன்னே வைத்திருக்கும் இளையோர் அந்த வாழ்வுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதே கத்தோலிக்கத் திருச்சபையின் உலக இளையோர் தினம் என்றார் கர்தினால் அந்தோனியோ மரிய ருவோக்கோ வலேரா.
வரும் ஆகஸ்ட் மாதத்தின் உலக இளையோர் தினம் திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இஸ்பெயினின் மத்ரித் நகர் பேராயர் கர்தினால்  ருவோக்கோ வலேரா, உலக இளையோர் தினத்தின் பலன்கள் ஒவ்வொருமுறையும் குருத்துவ, துறவற மற்றும் திருமணத்திற்கான அழைப்பாக மலர்வதைக் காண முடிகிறது என்றார்.
கத்தோலிக்க இளையோர் தினக்கொண்டாட்டங்கள், சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை  இளையோர் வழி வழங்கி வருகின்றன என மேலும் கூறினார் இஸ்பெயின் கர்தினால்.

4.    மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்

மே 28, 2011.  பொது நலனுக்கான ஒத்துழைப்புக்கும் அமைதியை ஊக்குவிப்பதற்கும் உதவும் நோக்குடன் மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது மத்தியக் கிழக்கு ஆயர் பேரவையின் சிறப்பு அவை.
உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் தலைமையில் அண்மையில் கூடிய இச்சிறப்பு அவை, அனைத்து மதத்தவரின், இனத்தவரின் கலாச்சாரப் பிரிவினரின் சரிநிகர் உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என தல மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பையும் விடுத்துள்ளது.
சகிப்புத்தன்மை, ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளுதல் மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது மதங்களிடையேயான இணக்க வாழ்வே என்பதையும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதிக்கான ஆயர்களின் அடுத்த சிறப்பு அவைக்கூட்டம் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5.    வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை இயேசு சபை குரு விடுதலை

மே 28, 2011.  வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை துருப்புகளால் கைது செய்யப்பட்ட இயேசு சபை குரு ஒருவரும் ஐந்து தமிழர்களும் நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக இயேசு சபை குரு பால் சத்குணநாயகம் மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இவ்வாரமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றமற்றவர் என ஏனைய ஐந்து தமிழர்களுடன் இணைந்து விடுவிக்கப்பட்டுள்ள குரு சத்குணநாயகம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் பயின்று உளயியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று மட்டக்களப்புவின் அரசு சாரா அமைப்பின் மையத்தில் மக்களுக்கான உளவியல் ஆலோசகராகச் செயலாற்றி வருகிறார்.

6.     கம்யூனிச சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

மே 28, 2011.  சீனாவில் நாத்தீக கம்யூனிச ஆட்சி இடம்பெறுகின்ற போதிலும், அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைப் பெருகிவருவதும், சமூகத்தில் கிறிஸ்தவத்தின் தாக்கம் அதிகரித்து வருவதும் குறிப்பிடக்கூடிய ஒரு கூறாக உள்ளது என்கிறார் சீனாவின் எழுத்தாளர் ஜியாங் யுவான்லாய்.
சீனாவில் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை குறித்து தாய்வானில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய சீன கிறிஸ்தவ எழுத்தாளர் யுவான்லாய், சீனாவில் தற்போது 10 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாகவும் அதில் 1கோடி பேர் கத்தோலிக்கர்கள் எனவும் தெரிவித்தார்.

7.    இவ்வுலகில் படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் - UNESCO அறிக்கை

மே 28,2011. கல்வியின் மூலமே பெண்களுக்கு தன்னம்பிக்கையைத் தர முடியும் என்றும், பெண்களின் தன்னம்பிக்கையால் இந்த உலகம் இன்னும் பெருமளவு முன்னேறும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCOபெண்கள் கல்வியில் உலகத்தின் பங்களிப்பு என்ற கருத்தில் பாரிசில் இவ்வியாழன் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
UNESCOவின் அண்மைய கணக்கெடுப்பின்படி, இவ்வுலகில் படிப்பறிவில்லாத 79 கோடியே 60 இலட்சம் மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் என்றும், உலகின் அனைத்து நாடுகளிலும் மூன்றில் ஒரு பகுதி நாடுகளிலேயே கல்விக்கூடங்களில் ஆண் பெண் இருபாலரும் சமமான அளவு பயின்று வருகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
பள்ளிப் படிப்பு, மற்றும் அடிப்படை எழுத்தறிவு ஆகிய இரு நிலைகளிலும் பெண்கள் இணைக்கப்பட்டால், இவ்வுலகம் இன்னும் அதிக அளவில் உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பு உள்ளதென்று ஐ.நா.தலைமைச் செயலர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் மட்டும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவதோடு நில்லாமல், பல்வேறு துறைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்க  UNESCOவின் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 May 2011...

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 May 2011...: "1. அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை 2. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம் 3. ..."

Catholic News - hottest and latest - 27 May 2011

1. அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

2. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

3. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மற்றும் கேரள மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

4. பொது நிலையினர் அரசுடன் அதிகமாக ஒத்துழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் - திருத்தந்தை

5. கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் - வத்திக்கான் அறிக்கை

6. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்

7. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

மே 27,2011. கடவுளின் அன்பை ஒவ்வொரு நாளும் வாழ்வில் வெளிப்படுத்துவதன் மூலமே மனிதர்களின் அடிப்படை மாண்பை இவ்வுலகில் நிலைநிறுத்த முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த ஞாயிறு முதல் இவ்வேள்ளிவரை உரோமையில் நடைபெற்ற அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உலகப் பொதுஅவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளிலிருந்து மனித குலத்தைக் காக்க, திருத்தந்தை 12ம் பத்திநாதரால் உருவாக்கப்பட்ட காரித்தாஸ் அமைப்பு, மனித குலத்தின் மீது திருச்சபை கொண்டுள்ள அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்தியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நாட்டிலும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காரித்தாஸ் அமைப்புக்களை அருளாளர் இரண்டாம் ஜான் பால் ஒருங்கிணைத்து, அகில உலகக் காரித்தாஸ் அமைப்பை உருவாக்கியதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இறைவனின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்துவதில் இவ்வமைப்பு கொண்டுள்ள பொறுப்புக்களையும் சுட்டிக் காட்டினார்.
திருச்சபை பணிகளின் ஓர் அங்கமாக விளங்கும் காரித்தாஸ், திருச்சபையின் படிப்பினைகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் உலகில் உள்ள மற்ற சமுதாய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் வலியுறுத்தினார்.
இவ்வுலகின் துயர்களைத் துடைக்கும் பணிகளில் ஈடுபடும் அகில உலகக் காரித்தாஸ் அமைப்பு, மறு உலகைக் குறித்த விசுவாசத்தை வளர்க்கும் பணியிலும் ஆர்வமாய் ஈடுபடுவதன் மூலம், இவ்வுலகில் நிலவும் பல்வேறு கருத்துக்களுக்கு மாற்று சாட்சியாகத் திகழமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் தெளிவுபடுத்தினார்.


2. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

மே 27,2011. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை Raymond Wickramasingheயை இவ்வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்தார்.
"இலங்கையின் நமதன்னை" என்ற தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றி  வந்துள்ள புதிய ஆயர் Wickramasinghe, 1962ம் ஆண்டு இரத்னபுரா மறைமாவட்டத்தின் Uthuwankanda எனுமிடத்தில் பிறந்தவர். 1989ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டு, பங்கு குருவாகவும், Galle மறைமாவட்ட இளங்குருமட அதிபராகவும் ஆயரின் செயலராகவும், மறைமாவட்டக் காரித்தாஸ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இவர், உரோம்நகர் Alphonsianum கத்தோலிக்க நிறுவனத்தில் பயின்று, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அருள்தந்தை Wickramasinghe புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள Galle மறைமாவட்டத்தில் உள்ள 13 பங்குத்தளங்களில் 33 குருக்கள் மற்றும் 97 அருள்சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.


3. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மற்றும் கேரள மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 27,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆறு திருச்சபைத் தலைவர்கள் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் பேராயரை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தைஇவ்வெள்ளி காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேர‌ளாவின் திருவனந்தபுரம் பேராய‌ர் மரிய கல்லிஸ்ட் சூசை பாக்கியத்தை முத‌லில் த‌னியாக‌ச் சந்தித்து உரையாடிய‌ திருத்தந்தை, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஆய‌ர் இன்னையா சின்ன அட்டகட்லா, விஜயவாடா ஆய‌ர் பிரகாஷ் மல்லவரப்பு ஆகியோரையும், கேரளாவின் கொச்சின் ஆய‌ர் ஜோசப் கரியில், கன்னூர் ஆய‌ர் வர்கீஸ் சக்கலக்கல், கோட்டபுரம் ஆய‌ர் ஜோசப் கரிக்கசேரி, மற்றும் கோழிக்கோடு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி வின்சென்ட் அரக்கல் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து, அந்தந்த‌ ம‌றைமாவ‌ட்ட‌ங்க‌ள் குறித்து அவ‌ர்க‌ளுட‌ன் உரையாடினார்.


4. பொது நிலையினர் அரசுடன் அதிகமாக ஒத்துழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் - திருத்தந்தை

மே 27,2011. பொது நிலையினர் அரசுடன் இன்னும் அதிகமாக ஒத்துழைக்கவும், பொது வாழ்வில் இன்னும் முழுமையாகப் பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிப்பதில் ஆயர்கள் பொது நிலையினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலி நாடு உருவாக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டினை இறையன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கும் நோக்கத்தில், இவ்வியாழனன்று மாலை புனித மரியன்னை பசிலிக்காப் பேராலயத்தில் இத்தாலிய ஆயர்களுடன் இணைந்து, திருத்தந்தை செபமாலையை வேண்டியபோது, அவர்களுக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இத்தாலி நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனைகள் நிறைந்த வரலாற்றைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இத்தாலியின் அரசியல் விவகாரங்களில் திருச்சபை ஈடுபடுவது அதன் பணியல்ல என்பதையும் எடுத்துக் கூறினார்.
இவ்வுலகையும் தாண்டிய மறுஉலகம் உள்ளதென்றும், அவ்வுலகைச் சார்ந்த உண்மைகளை உலகின் அரசுகளுக்குச் சொல்லித் தருவதற்கு திருச்சபை கடமைப் பட்டுள்ளதென்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.


5. கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை மேம்படுத்த வேண்டும் - வத்திக்கான் அறிக்கை

மே 27,2011. கப்பல்களின் உரிமையாளர்களும், அவற்றைக் கட்டுபவர்களும் கடல் கொள்ளைக்காரர்களின் பிடியில் தங்கள் கப்பல்கள் சிக்காத வண்ணம் பாதுகாப்பு வழிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அகில உலக கடற்பகுதி அமைப்புக்கள் ஒருங்கிணைந்து கடல் பயணங்களை இன்னும் பாதுக்காப்பு கொண்டதாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கடற் கொள்ளைக் காரர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதெனவும், நடக்கும் 2011ம் ஆண்டில் மட்டும் இதுவரை 214 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்றும், இவற்றில் 26 கப்பல்கள், 522 ஊழியர்கள் இன்னும் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கடற் கொள்ளை என்ற பிரச்சனைக்கு மூலகாரணமாக இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு உலக அரசுகள் முயன்றால், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று புலம் பெயர்ந்தோர் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை வெளியிட்டுள்ள இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.


6. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்

மே 27,2011. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறை பூமியை டிராக்டர்களைக் கொண்டு தகர்த்து அந்நிலத்திற்கு உரிமைக் கொண்டாட ஒரு சில இஸ்லாமியர்கள் அண்மையில் முயன்றுள்ளனர்.
இதற்கிடையே, Afshan Sabir என்ற 29 வயதுடைய ஓர் இளம் கிறிஸ்தவத் தாயைப் போதைக்குள்ளாக்கி, ஒரு குழுவினர் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற செய்தியும் அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த வன்முறைச் செயல்களைத் தீர விசாரிக்க பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் உறுப்பினர்கள் நேரடியாக அப்பகுதியில் தகவல்கள் திரட்டச் சென்றுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
காவல் துறையினர் இந்த வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருப்பதால் தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் இதுபோன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்று பைசலாபாத் பகுதியில் பணி புரியும் அருள்தந்தை ஜோசப் ஜமில் கூறினார்.
மேலும் இச்செவ்வாயன்று இரு கிறிஸ்தவ பெண்கள் ஓர் இஸ்லாமிய வியாபாரியால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், இப்பெண்கள் இஸ்லாமியர்களாக மாறி தன்னை மணமுடிக்கும்படி இந்த வியாபாரி வற்புறுத்தி வருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.


7. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

மே 27,2011. உலகில் நிகழும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புக்களுக்கு மனிதர்களின் பேராசையே காரணம் என்று கொரியாவின் தலத்திருச்சபை கூறியுள்ளது.
வருகிற ஜூன் மாதம் 5ம் கடைபிடிக்கப்படும் உலகச் சுற்றுச் சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நுகர்வுக் கலாச்சாரத்தில் அதிகம் மூழ்கி வரும் மனித குலம் வளர்த்து வரும் பேராசைகளே பல்வேறு அழிவுகளுக்கு காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் Fukushima அணுசக்தி மையத்தில் உருவான ஆபத்துக்கள், கொரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நான்கு நதி இணைப்புத் திட்டம் ஆகியவற்றைத் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, மனிதர்களின் பேராசை மனித உயிர்கள் மீது கொண்டுள்ள மதிப்பைப் பெரிதும் பாதிக்கின்றது என்பதையும் வலியுறுத்துகிறது.
அகில உலகச் சுற்றுச் சூழல் நாளுக்கு ஒரு முன்னோடியாக இவ்வியாழனன்று கொரியாவின் Seoul நகரில் நடைபெற்ற அனைத்து கிறிஸ்தவர்கள் அமைப்பின் செபவழிபாட்டில் சுற்றுச் சூழல் மட்டில் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டிய அக்கறை வலியுறுத்தப்பட்டது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 26 May 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 26 May 2011: "1. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதிய த் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி 2. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்க ளுடன் த..."

Catholic News - hottest and latest - 26 May 2011

1. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதியத் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி

2. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

3. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபச் செய்தி

4. திருத்தந்தைக்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் பரிசாக அளித்த மகுடம்

5. இறையடியார் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன

6. ஈராக் பேராயர் Louis Sakoவுக்கு  அண்மையில் வழங்கப்பட்ட விருது

7. பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம்

8. மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் காரித்தாஸ்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதியத் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி

மே 26,2011. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவராக தக்கலை ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கி அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எர்ணாகுளம்-அங்கமலி பேராயராகவும் சீரோ மலபார் ரீதி சபையின் தலைவராகவும் செயல் பட்டு வந்த கர்தினால் வர்கி விதயத்தில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தன் 84ம் வயதில் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, கொச்சியின் காக்கநாடில் கூடிய சீரோ மலபார் ரீதி ஆயர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை ஆயர் ஆலஞ்சேரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கணாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் துருத்தி எனுமிடத்தில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 19ம்தேதி பிறந்த ஆயர் ஆலஞ்சேரி, 1972ம் ஆண்டுக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பாரீஸ் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் பயின்று மறைக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்.
1997ம் ஆண்டு ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், தக்கலை சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளார். இச்செவ்வாயன்று சீரோ மலபார் ரீதியின் தலைவராக ஆயர் ஆலஞ்சேரி தேர்ந்த்தெடுக்கப்பட்டதை இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கீகரித்தார்.


2. உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மே 26,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மாநில ஆறு ஆயர்கள் மற்றும் கேரளாவின் வேராப்பொளி பேராயரை இவ்வியாழனன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை,  இவ்வியாழன் காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேரளாவின் வேராப்பொளி பேராயர் பிரான்சிஸ் ல்லக்கல்லை முதலில் னியாகச் சந்தித்து உரையாடியதிருத்தந்தை, ஆந்திராவின் ப்பா ஆயர் பிரசாத் லேலா, ம்மம் ஆயர் பால் மைப்பான், ர்நூல் ஆயர் அந்தொனி பூலா, லகொண்டா ஆயர் ஜோஜி கோவிந்து, குண்டூர் ஆயர் பாலி காலி, நெல்லூர் ஆயர் மோசஸ் தொரபொய்னா பிரகாசம் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து, அந்தந்தறைமாவட்டங்கள் குறித்து அவர்களுடன் உரையாடினார்.


3. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை அனுப்பிய அனுதாபச் செய்தி

மே 26,2011. இவ்வாரத் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசூரிப் பகுதியில் Joplin எனும் இடத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் உயிரிழந்தவர்கள், காயப்பட்டவர்கள் மற்றும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே திருத்தந்தையின் பெயரால் இவ்வனுதாபச் செய்தியை ஒரு தந்தி மூலம் ஆயர் ஜேம்ஸ் ஜான்ஸ்டனுக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வியற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியையும், இன்னும் பல வழிகளில் பாதிக்கப்பட்டோருக்கு மன உறுதியையும் இறைவன் அளிப்பாராக என்று இத்தந்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறன்று வீசிய சூறாவளி மிக அதிக அளவு சக்தி வாய்ந்ததென்றும், இச்சூறாவளியின் பாதை ஆறு மைல் நீளமும் மூன்றேகால் மைல் அகலமும் கொண்டதென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இச்சூறாவளியின் பாதையில் 8000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும், 122 பேர் உயிரிழந்தனர், 750க்கும் அதிகமானோர் காயமுற்றனர், மற்றும் 1500 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
1953ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வீசிய சூறாவளிகளில் 519 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தபடியாக 2011ம் ஆண்டில் இதுவரை வீசிய சூறாவளிகளில் இதுவரை 500 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் மேலும் கூறுகின்றன.


4. திருத்தந்தைக்கு ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் பரிசாக அளித்த மகுடம்

மே 26,2011. ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்கள் சார்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டுக்கு இப்புதனன்று மகுடம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
இம்மகுடத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பேற்றிருந்த Dieter Philippi என்பவர் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தையிடம் இம்மகுடத்தை அளித்தார்.
14ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை திருத்தந்தையாக இருந்த அனைவரும் பதிவியேற்ற அன்று மகுடம் அணிந்து வந்தனர். 1963ம் ஆண்டு திருத்தந்தையாகப் பதவியேற்ற ஆறாம் பவுல் மகுடம் அணிந்து பதவியேற்ற கடைசித் திருத்தந்தை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான் பால் மகுடத்திற்குப் பதிலாக, கழுத்துப் பட்டை ஒன்றை அணியும் பழக்கத்தை உருவாக்கினார்.
இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகிய இரு திருத்தந்தையரும் மகுடம் அணியாமல் பதவியேற்றனர்.
எனினும் இரண்டாம் ஜான் பாலுக்கு ஹங்கேரி நாட்டு கத்தோலிக்கர்கள் 1981ம் ஆண்டு மகுடம் ஒன்றைப் பரிசளித்தனர். அம்மகுடத்தைத் தயாரித்த நிறுவனம் தற்போது 16ம் பெனடிக்டுக்கு வழங்கப்பட்ட மகுடத்தையும் தயாரித்தது என்று Dieter Philippi செய்தியாளர்களிடம் கூறினார்.


5. இறையடியார் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன

மே 26,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொலை காட்சி மற்றும் வானொலி மூலம் இறைவார்த்தையை தன் மறையுரைகளால் பரப்பி வந்த பேராயர் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன.
இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, பேராயர் Fulton Sheen குறித்த விவரங்கள் அடங்கிய கோப்பு ஒன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டிடம் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் வழங்கப்பட்டது.
1895ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த பேராயர் Sheen 1950 மற்றும் 1960களில் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வழியாக பல உயர்ந்த மறையுரைகளை வழங்கி வந்தார். 1979 ம் ஆண்டு இறந்த இவரை, புனித நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் 2002ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாகத் துவக்கப்பட்டன. பேராயர் Fulton Sheen தற்போது 'இறையடியார்' என்ற பட்டத்திற்கு உரியவர்.
பேராயர் Sheen 20ம் நூற்றாண்டின் தொடர்பு சாதனங்களைத் தன் வயப்படுத்தி, அவற்றின் வழியாக கத்தோலிக்கப் படிப்பினைகளை மிகவும் சக்தி வாய்ந்த வழிகளில் கூறியதை தான் வியந்து பாராட்டுவதாக ஆஸ்திரேலியாவின் கர்தினால் George Pell கத்தோலிக்கப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
72 வயதான ஓர் அமெரிக்கப் பெண்மணி நுரையீரல் தொடர்பான ஓர் அறுவைச் சிகிச்சையில் இன்னும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தபோது, அவரது கணவர் பேராயர் Fulton Sheenன் பரிந்துரையைத் தேடினார் என்றும், அதனால் அப்பெண்மணி நலமடைந்தார் என்றும் கூறப்படும் ஒரு புதுமையே இப்பேராயர் அருளாளராக உயர்த்தப்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.


6. ஈராக் பேராயர் Louis Sakoவுக்கு  அண்மையில் வழங்கப்பட்ட விருது

மே 26,2011. கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே உரையாடல்கள் தொடர வேண்டும் என்றும், இவ்விரு மதத்தவரிடையே அமைதிக்காக உழைக்கும் அர்ப்பணம் இன்னும் ஆழப்பட வேண்டும் என்றும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பேராயர் Louis Sako கூறினார்.
பேராயர் Louis Sako, ஈராக்கில் மனித உரிமைகள் மற்றும் மதங்களுக்கிடையே உரையாடல் ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து உழைத்து வருவதைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு அண்மையில் Frankfurt நகரில் விருது ஒன்று வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும்போது, பேராயர் Sako, கலாச்சாரங்களும், மதங்களும் ஒன்றை ஒன்று மதித்து வாழ்வதே உலகில் அமைதியை  வளர்க்கும் சிறந்த வழி என்று கூறினார்.
62 வயது நிரம்பிய Kirkuk உயர்மறைமாவட்டப் பேராயர் Louis Sako, அமைதி மற்றும் மனித உரிமைகளை வளர்க்கும் பணியில் காட்டி வரும் ஆர்வத்தை முன்னிட்டு, 2008ம் ஆண்டு Defensor Fidei என்ற விருதையும், 2010ம் ஆண்டு Pax Christi விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.


7. பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரைப் பயிற்றுவிப்பதற்காக ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம்

மே 26,2011. இந்தியாவில் ஜார்கண்ட் பகுதியில் வாழும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளையோரை இன்றையத் தொடர்பு சாதனங்களில் பயிற்றுவிப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் தொடர்பு சாதன நிலையம் ஒன்று அண்மையில் துவக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட், மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடையே 19ம் நூற்றாண்டில் உழைத்து வந்த கான்ஸ்டன்ட் லீவன்ஸ் என்ற பெல்ஜிய நாட்டு இயேசு சபைத் துறவியின் பெயரைத் தாங்கிய இத்தொடர்பு சாதன நிலையம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி என்று பல தொடர்பு சாதனங்களில் பழங்குடியினரான இளையோருக்குப் பயிற்சிகள் வழங்கும் என்று அப்பகுதியின் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை சேவியர் சொரெங் கூறினார்.
பழங்குடியினரின் எண்ணங்கள் பொதுவாக நாட்டின் பல்வேறு தொடர்பு சாதனங்களில் அதிகமாய் கேட்கப்படுவதில்லை என்றும், அக்குறையைத் தீர்க்க இந்த மையம் ஓரளவாகிலும் முயலும் என்றும் அருள்தந்தை சொரெங் மேலும் கூறினார்.
இந்தியாவில் ஏற்கனவே சேவியர் தொடர்புத் துறை மையம் என்ற பெயரில் மும்பையில் புகழ் பெற்றதொரு மையத்தின் ஒரு பகுதியாக லீவன்ஸ் தொடர்பு சாதன நிலையம் இயங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் காரித்தாஸ்

மே 26,2011. இலங்கையின் காரித்தாஸ் பொறுப்பாளர்கள் இந்தியாவில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் Chilaw மறைமாவட்டத்தில் உள்ள Kalpitiya பங்கைச் சார்ந்த ஆறு மீனவர்கள் ஓராண்டுக்கு முன் இந்திய கடற்பகுதியில் நுழைந்தததையடுத்து, இந்திய அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
இந்த ஆறு மீனவர்களையும் விடுவிக்க இலங்கையின் Chilaw பகுதி காரித்தாஸ் இயக்குனர் Abraham Barnabas, தான் இந்திய அரசுடன் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் விவரித்தார்.
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தங்கள் வரம்புகளை மீறி அடுத்த நாட்டுக் கடற்பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான மீனவர்கள் சிறைகளில் வாடுகின்றனர் என்று காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இவ்விரு நாடுகளின் கடல் பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்படாததால் இந்தப் பிரச்சனை எழுகிறதென்றும், முக்கியமாக, கடலில் புயல்கள் வீசும்போது படகுகள் திசை இழந்து செல்வதும் இப்பிரச்சனைக்கு ஒரு காரணம் என்றும் இலங்கை காரித்தாஸ் ஒருங்கிணைப்பாளர் அந்தோணிமுத்து கூறினார்.
காரித்தாஸ் அமைப்பின் சார்பில் இப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசி வருவதாகவும், இப்பிரச்சனை குறித்து மேலும் பேச தங்கள் அமைப்பின் பிரதிநிதிகளை இவ்விரு நாடுகளும் அண்மையில் அழைத்திருப்பது நம்பிக்கை தரும் ஒரு வாய்ப்பு என்றும் அந்தோணிமுத்து மேலும் கூறினார்.