Thursday 31 March 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 Mar 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 30 Mar 2011: "1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick 2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்க..."

Catholic News - hottest and latest - 30 Mar 2011

1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick

2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, சீன அரசு நிறைவேற்றிய மரணதண்டனை

3. மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் - அரிசோனா ஆயர்கள் அறிக்கை

4. டிவைன் தியான மையத்திற்குச் சாதகமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

5. அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள்

6. இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsம் முத்திபேறு பெற்ற கர்தினால்  Newmanம் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள்

7. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் - ஐ.நா. அறிக்கை

8. அணு உலை கதிர்வீச்சு சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மதஉரிமைகள் வழங்கப்பட வேண்டும் - கர்தினால் Theodore McCarrick

மார்ச் 30,2011. அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், சிறப்பாக இந்த உரிமை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாஷிங்க்டன் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore McCarrick கூறினார்.
"அமெரிக்க இஸ்லாமியர்களின் குடியுரிமைகளை காப்பது" குறித்து அந்நாட்டின் நீதித் துறை பலரது கருத்துக்களைக் கேட்பதில் ஒரு உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் முன் இச்செவ்வாயன்று பேசிய கர்தினால் McCarrick, இஸ்லாமியரின் மத உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டார்.
சமய உரிமை என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை இந்த உலகமும், சிறப்பாக அமெரிக்க ஐக்கிய நாடும் உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick வலியுறுத்தினார்.
ஒரு சில இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுவினரால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு குலைக்கப்பட்டாலும், இது உண்மை இஸ்லாமியக் கொள்கைகளுக்குப் பெரிதும் முரணானது என்பதை உணர வேண்டும் என்று கர்தினால் McCarrick சுட்டிக் காட்டினார்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராய் கொண்டிருக்கும் நாடுகள் அங்குள்ள சிறுபான்மையினரை சரிவர நடத்துவதற்கு தவறி வரும் இவ்வேளையில், அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியருக்கு நாம் தகுந்த பாதுகாப்பும், சம உரிமைகளும் வழங்கி இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு மாதிரிகையாக இருக்க வேண்டும் என்று கர்தினால் Theodore McCarrick  கேட்டுக் கொண்டார்.


2. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, சீன அரசு நிறைவேற்றிய மரணதண்டனை

மார்ச் 30,2011. பிலிப்பின்ஸ் ஆயர்களின் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்காமல், சீன அரசு Xiamen மற்றும் Shenzhen நகரங்களில் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இப்புதனன்று மரணதண்டனையை நிறைவேற்றியது.
2008ம் ஆண்டு போதைபொருள் கடத்தல் குற்றத்தில் பிடிபட்ட Sally Villanueva, Ramon Credo மற்றும் Elizabeth Batain ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்டது. இப்புதனன்று நச்சு மருந்து ஊசி மூலம் இம்மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இப்புதன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் என்பதால், இச்செவ்வாய் இரவு முழுவதும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செபங்களுடன் கூடிய முழு இரவு திருவிழிப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாடோடிகளுக்கான மேய்ப்புப் பணிக் குழு ஏற்பாடு செய்திருந்த இச்செப வழிபாட்டில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மரண தண்டனை பெற்ற இம்மூவரின் குடும்பத்தினரும், சில மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த சில நாட்களாய் சீன அரசுக்கு கருணை மனுக்களை அனுப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், அண்மையில் வெளியான Amnesty International அறிக்கையின் படி, சீனாவில் மட்டுமே 2010ம் ஆண்டு 1000க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.


3. மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் - அரிசோனா ஆயர்கள் அறிக்கை

மார்ச் 30,2011. நற்செய்தி படிப்பினைகளுக்கு முற்றிலும் நேர்மாறானவை என்பதால், மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் அரிசோனா ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
1989ம் ஆண்டு ஒரு கடையில் திருடியபோது இருவரைக் கொன்ற Eric John King என்பவருக்கு இச்செவ்வாயன்றும், Daniel Wayne Cook என்பவருக்கு அடுத்த வாரமும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக அரிசோனா மாநிலம் அறிவித்ததையொட்டி, ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொலை குற்றங்கள் பல்வேறு பாதிப்புக்களை கொலையுண்டவர் குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஏற்படுத்துவது உண்மையே என்றாலும், இக்குற்றங்களைச் செய்தவர்களை வேறு வழிகளில் தண்டிக்கும் முறைகளை அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
சமுதாயத்தைக் குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கு வேறு பல வழிகள் இருக்கும்போது, மரண தண்டனை மூலம் உயிர்களைப் பறிப்பது மனித மாண்புக்கும், உயிர்களின் புனிதத்திற்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் எதிரானவை என்றும், மரண தண்டனைகள் சாவுக் கலாச்சாரத்தை உலகில் இன்னும் நிலை நிறுத்தும் என்றும் அரிசோனா ஆயர்களின் அறிக்கை கூறியுள்ளது.


4. டிவைன் தியான மையத்திற்குச் சாதகமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

மார்ச் 30,2011. கேரளாவில் புகழ்பெற்ற Divine Retreat Centre குறித்து இந்தியாவின் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
டிவைன் தியான மையத்தைக் குறித்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், காவல் துறையினர் இம்மையத்தைக் குறித்து மேற்கொண்டுள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென உச்ச நீதி மன்றம் இப்புதனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவின் Muringoorல் புனித வின்சென்ட் துறவறச் சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தியான மையத்தில் ஒவ்வொரு வாரமும் 12000க்கும் அதிகமானோர் பல்வேறு மொழிகளில் தியானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மையம் தியானங்கள் மட்டுமின்றி, AIDS நோயுற்றவர்களுக்கான மையம் உட்பட இன்னும் பிற சமூகச்சேவை மையங்களையும் நடத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகள் இம்மையத்தைக் குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவ்வழக்குகளில் எந்த வித ஆதாரங்களும் இல்லாததால், அவற்றை முற்றிலும் நீக்கி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த மையத்தின் வளர்ச்சியை விரும்பாத சிலர் மேற்கொண்ட இந்த அவதூறு நடவடிக்கைகள் உலகெங்கும் இந்த மையத்தைக் குறித்து மதிப்பு கொண்டுள்ள பலருக்கு வேதனையைத் தந்துள்ளதென்றும், கடந்த சில ஆண்டுகள் இந்த மையத்தினர் அனுபவித்த வேதனைக்கு இறைவன் தகுந்த பதில் தந்துள்ளார் என்றும் இம்மையத்தின் இயக்குனர் அருள்தந்தை ஜார்ஜ் பனக்கல் (George Panackal) கூறினார்.


5. அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள்

மார்ச் 30,2011. தென் கொரியாவில் உள்ள ஒரு முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கண்காணிக்கும் உரிமையைத் தலத்திருச்சபைக்கு வழங்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தென் கொரியாவின் Kwangju உயர் மறைமாவட்டத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரியதெனக் கருதப்படும் Yonggwang அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது. 1978ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த இந்த அணுசக்தி மையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தலத் திருச்சபையையும் அரசு ஈடுபடுத்த வேண்டுமென்று அம்மறை மாவட்டத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் சார்பாக கடிதம் ஒன்று இத்திங்களன்று அந்நாட்டின் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை விபத்தைத் தொடர்ந்து தென் கொரியாவின் 12 பகுதிகளில் அணுக்கதிர்வீச்சு சக்தி வாய்ந்த அயோடின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தொடர்ந்து, Kwangju உயர் மறைமாவட்டம் இவ்விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ள தென் கொரியா, தற்போது 21 அணுசக்தி நிலையங்களை வர்த்தக ரீதியில் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


6. இயேசுசபைக் கவிஞர் Gerard Manley Hopkinsம் முத்திபேறு பெற்ற கர்தினால்  Newmanம் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள்

மார்ச் 30,2011. 19ம் நூற்றாண்டில் சமகாலத்தில் வாழ்ந்த இயேசுசபைக் கவிஞர் Gerard Manley Hopkins மற்றும் முத்திபேறு பெற்ற கர்தினால்  John Henry Newman இருவரும் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள் என்று அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் நகரில் அண்மையில் நடைபெற்ற அகில உலக Gerard Manley Hopkins கருத்தரங்கில் பேசிய Richard Austin என்ற ஆங்கிலேய நடிகர், Hopkinsன் கவிதைகள் மனதை மேலே எழுப்பும் வல்லமை பெற்றதென்றும், கடவுளை படைப்பு அனைத்திலும் காணும் ஒரு சிறந்த கண்ணோட்டத்தை கவிஞர் Hopkins  கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
1844ம் ஆண்டு ஆங்கலிக்கன் குடும்பத்தில் பிறந்த Hopkins 1866ம் ஆண்டு முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanஆல் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயேசுசபையில் 1877ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் வசந்த காலத்தை உருவாக்கியதில் முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanக்கும் இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsக்கும் பெரும் பங்கு உள்ளதென்று இயேசு சபை குருவும், பேராசிரியருமான Peter Milward கூறினார்.


7. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகள் 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் - ஐ.நா. அறிக்கை

மார்ச் 30,2011. சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால், உலகில் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 48 நாடுகளில் பாதி நாடுகளாவது 2020ம் ஆண்டுக்குள்  தங்கள் வறுமையை விட்டு வெளியேற முடியும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
மிகவும் பின்  தங்கிய நாடுகள் குறித்த அகில உலக கருத்தரங்கு வருகிற மே மாதம் இஸ்தான்புல்லில் நடக்க விருப்பதையொட்டி, இச்செவ்வாயன்று ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. வகுத்துள்ள மில்லேன்னிய வளர்ச்சி திட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தகுந்த வரி விலக்கு, வேளாண்மைப் புரட்சி மற்றும் சரியான கல்வித் திட்டங்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் வறிய நாடுகளுடன் செயல்பட்டால், மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளில் 50 விழுக்காடு நாடுகளாகிலும் வறுமையை விட்டு வெளியேற முடியும் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
1970ம் ஆண்டில் உலகில் 51 நாடுகளை மிகவும் பின் தங்கிய நாடுகளென ஐ.நா. அறிவித்தது. இவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் Botswana, Cape Verde மற்றும் Maldives ஆகிய மூன்று நாடுகளே வறுமையை விட்டு வெளியேறியுள்ளன.
உலகின் அனைத்து நாடுகளும் ஒரு உலகக் குடும்பமாக உழைத்தால் மட்டுமே இன்று மிகவும் பின் தங்கிய 48 நாடுகளை வறுமையிலிருந்து விடுவிக்க முடியும் என்று ஐ.நா. அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.


8. அணு உலை கதிர்வீச்சு சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது

மார்ச் 30,2011. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்குப் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புக்குஷிமா அணு உலை வெடித்தது. அதில் இருந்து பரவத் தொடங்கிய கதிர்வீச்சினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியது.
தென்கொரியாவை தொடர்ந்து, தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணுக் கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தக் கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 Mar 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 Mar 2011: "1. திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்தார் சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர். 2. நாத்ஸிப் படுகொலைகளுக்க..."

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 Mar 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 29 Mar 2011: "1. குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி. 2. வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அ..."

Catholic News - hottest and latest - 29 Mar 2011

1. குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி.

2. வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அழைப்பு.

3. இலங்கையில் குடிபெயர்ந்து வாழ்வோருள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்ட மன்னார் மறைமாவட்ட உதவி.

4. அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது வன்முறை பிறக்கின்றது என்கிறார் புனித பூமி பொறுப்பாளர்.

5. இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி தலைவர்.

6. இரஷ்ய பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை'  பற்றிய வகுப்புகள் இடம்பெற உள்ளன.

7. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் : உலக அளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளது

8.   குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச்செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கும் இங்கிலாந்து அரசின் செயலுக்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------

1. குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி.

மார்ச் 29, 2011.  நவீன உலகில் குடும்ப வாழ்வு குறித்து கொலம்பியாவின் பொகோட்டாவில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தலத்திருச்சபைத் தலைவர்கள் கூடி விவாதித்து வரும் கூட்டத்திற்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அதிவேகமான கலாச்சார மாற்றங்கள், சமூக நிலையற்ற தன்மை, புலம்பெயர்வு, ஏழ்மை, தவறான கல்வி திட்டங்கள், பொய்யான கொள்கைகள் இவைகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருவது குறித்து திருச்சபை மௌனம் காக்க முடியாது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மனித வாழ்வின் மாண்பைக் காக்கும் மதிப்பீடுகள் மற்றும் விசுவாசம் குறித்து வருங்காலத் தலைமுறையினருக்குப் பெற்றோர் கற்பிப்பதை தூண்ட வேண்டிய திருச்சபையின் கடமையை அதில் வலியுறுத்தியுள்ளார்.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வு வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியதற்கான சூழல்களை உருவாக்கித்தர சமூகத்திற்கு இருக்கும் கடமையும் திருத்தந்தையால் வலியுறுத்தப்பட்டுள்ள‌து அச்செய்தியில்.
குடும்பங்களுக்கான நற்செய்தி அறிவிப்பில் தங்களை ஈடுபடுத்தியுள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள், தகுந்த முறையில் அதற்கான பயிற்சிகளை பெறவேண்டிய அவசியமும் திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் திருச்சபைகளுக்கானச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2. வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அழைப்பு.

மார்ச் 29, 2011.  வட ஆப்ரிக்க பகுதியில் இடம்பெறும் வன்முறைகளுக்கு முடிவு காணும் நோக்கில், மனித மாண்பை மதிப்பதுடன் கூடிய‌ நீதியான தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி ஆயர்கள்.
ஏமன், ஜோர்தான், எகிப்து, லிபியா, மொரோக்கோ, சிரியா மற்றும் பஹ்ரைனின் பதட்ட நிலைகள் குறித்து கூடி விவாதித்த வட ஆப்ரிக்க நாடுகளான மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியாவின் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் என்பது எத்தீர்வையும் கொணராது என்பதை வலியுறுத்தியுள்ளதுடன், வன்முறைகளுக்குப் பலியாகி வரும் மக்கள் குறித்த கவலையையும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பதட்டநிலைகளில் சுதந்திரம், நீதி மற்றும் மாண்புக்கான மக்களின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் நியாயமான ஏக்கத்தைக் காணமுடிகிறது என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழைகளும் வசதிகள் அற்றோருமே எனக்கூறும் வட ஆப்ரிக்க ஆயர்களின் அறிக்கை, அப்பகுதி கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதுவரைக் கட்டிக்காப்பாற்றிய உறவுகள் இப்பதட்டநிலைகள் மற்றும் போரால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது.

3. இலங்கையில் குடிபெயர்ந்து வாழ்வோருள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்ட மன்னார் மறைமாவட்ட உதவி.

மார்ச் 29, 2011.  இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முல்லிக்குளம் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான இடங்களை வழங்கியுள்ளார் மன்னார் ஆயர்.
பாதுகாப்புக் காரணங்களுக்கென இலங்கைக் கடற்படையால் முல்லிக்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய 287 குடும்பங்களுக்கு மாற்று இடமாக காயகுளி என்ற வனக்கிராமத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 125 குடும்பங்களே இந்த மாற்று இடம்பெயர இசைவு அளித்துள்ள நிலையில், 52 தமிழ் கத்தோலிக்க குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கென தன் சொந்த இடத்தைக்கொடுத்து உதவியுள்ளது மன்னார் மறைமாவட்டம்.
காயகுளி என்ற வனக்கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் காட்டைத் திருத்தி வீடுகள் கட்டுவதற்கு அரசால் எவ்வித பொருளாதார உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கவலையை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முதன்மை குரு விக்டர் சூசை, இதனால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள் மன்னார் ஆயரிடம் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து தற்போது 52 குடும்பங்களுக்கு வீடுகட்டும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இலங்கைக்குள்ளேயே தற்போது குடிபெயர்ந்துள்ள 3 இலட்சத்து 27000 மக்களுள் ஒரு இலட்சத்து 95,000 பேர் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்பியுள்ள போதிலும், அவர்கள் இன்னும் அரசின் உதவிகளுக்கும் பாதுகாப்பிற்கும் காத்திருப்பதாக அறிவிக்கின்றன செய்தி நிறுவனங்கள்.

4. அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது வன்முறை பிறக்கின்றது என்கிறார் புனித பூமி பொறுப்பாளர்.

மார்ச் 29, 2011.  அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது, நம்பிக்கையின்மைகளும் வன்முறை மொழியும் பேச்சுவார்த்தைகளில் புகுந்து பதட்ட நிலைகளுக்குக் காரணமாகின்றன என்றார் புனித பூமியின் புனித இடங்களுக்கான பொறுப்பாளர் குரு Pierbattista Pizzaballa.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பதட்டநிலைகள் அதிகரித்து வருவது குறித்து வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய கப்புச்சின் சபை குரு Pizzaballa, அண்மைக்காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுபோல் தோன்றுவது ஆபத்தானதாக இருப்பினும், பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பதட்டநிலைகளைக் களையும் வாய்ப்பு உள்ளது என்றார்.
பழைய வன்முறைக்கு எருசலேம் பகுதி திரும்புவதாக தான் நம்பவில்லை என்று கூறிய குரு, அரசியல் தலைவர்களிடையேயான தொடர்புகளும், அரசியல் உறவுகளும் புதுப்பிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

5. இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி தலைவர்.

மார்ச் 29, 2011.  பொது வாழ்வு மற்றும் ஒத்துழைப்பின் வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இஸ்லாமியர்களுடன், நேர்மையான அதேவேளை முழு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி புதிய முதுபெரும் தலைவர் Bechara Rai.
பல மதங்களைக் கொண்டுள்ள லெபனனில் தற்போது  அரசியல் மற்றும் பிரிவினை வாதங்களினால் விசுவாசத்தின் தூய்மை மற்றும் புனிதத்தன்மையும், மதங்களின் ஆன்மீகமும் களையப்பட்டு வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் மேரோனைட் ரீதி முதுபெரும் தலைவர்.
லெபனன் நாடு என்பது ஒரு மதத்திற்கோ, கட்சிக்கோ, குழுவுக்கோ உரியதல்ல, அத்தகைய முயற்சிகள் ஏனைய மக்களைச் சிறுமைப்படுத்தவே உதவும் என்ற முதுபெரும் தலைவர் Rai, பல்வேறு மதங்களின் இருப்பிலிருந்து கிடைக்கும் வளமையிலேயே அந்நாட்டின் பெருமை அடங்கியுள்ளது என்றார்.

6. இரஷ்ய பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை'  பற்றிய வகுப்புகள் இடம்பெற உள்ளன.

மார்ச் 29, 2011.  அடுத்த ஆண்டில் இரஷ்யா முழுவதும் உள்ள பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை' பற்றிய வகுப்புகள் இடம்பெறும் என அந்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதனை ஒரு மாதிரிப் பாடமாக வைத்து வெற்றிகண்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிலிருந்து இதனை நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது இரஷ்ய அமைச்சகம்.
மதங்கள் தடைசெய்யப்பட்டிருந்த கம்யூனிச நாடான இரஷ்யாவில் இவ்வாண்டு மதப்பாடங்கள் சோதனை அளவில் பள்ளிகளில் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி அது வெற்றி பெற்றுள்ளதாக மதத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ரீதி, இஸ்லாம், யூதம், புத்தம் ஆகிய நான்கு மதங்களுள் ஏதாவது ஒன்றின் வரலாறு, அல்லது மதக்கலாச்சாரத்தின் வரலாறு அல்லது அறநெறிக்கொள்கைகளின் அடிப்படைகள் என்பது குறித்து தேர்வு செய்து கற்க தற்போது இரஷ்ய மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது அரசு.

7. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் : உலக அளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளது

மார்ச் 28,2011.  2010ம் ஆண்டில் 23 நாடுகள் மரணதண்டனை நிறைவேற்றியிருந்தாலும், இது 2009ம் ஆண்டைவிட 4 நாடுகள் அதிகமிருந்தாலும், இத்தண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை 714லிருந்து குறைந்து 527 ஆக ஆகியுள்ளது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழக ஆண்டறிக்கைக் கூறுகிறது.
2010ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு 46 பேருக்கு மரணதண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டில் ஐரோப்பாவில் இத்தண்டனை இடம் பெறாமல் இருந்தது, ஆனால் கடந்த ஆண்டில் பெலாருஸ் 2 பேருக்கு இத்தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.
கடந்த ஆண்டில் காபோன் இத்தண்டனையை இரத்து செய்தது. இத்துடன் உலகில் 139 நாடுகளில் இத்தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 2010ம் ஆண்டில் குறைந்தது 2000 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது, எனினும் இவ்வெண்ணிக்கை சுமார் எட்டாயிரமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

8.   குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச்செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கும் இங்கிலாந்து அரசின் செயலுக்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு.

மார்ச் 28, 2011.  இங்கிலாந்து அரசு, குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச் செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கிவருவது குறித்து பல தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டது இங்கிலாந்தின் கத்தோலிக்க சமூகம்.
இங்கிலாந்து அரசின் நிதி ஒதுக்கீட்டு கொள்கை குறித்து கண்டனத்தை வெளியிட்டு அண்மையில் நடத்தப்பட்ட ஊர்வத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து அரசானது இராணுவச் செலவுகளுக்கென 4,000 கோடி பவுண்டுகளை ஒதுக்கியிருக்கும் வேளை, 2,400 கோடி பவுண்டுகளையே வீட்டு வசதி வாரியத்திற்கும், 750 கோடி பவுண்டுகளையே வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒதுக்கியிருப்பது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து இவ்வூர்வலம் நடத்தப்பட்டது.