Monday 28 February 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 Feb 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 Feb 2011: "1. திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை 2. லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார..."

Catholic News - hottest and latest - 27 Feb 2011

1. திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை

2. லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார்

3. கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

4. உலகில் சமய சுதந்திரம் குறித்த EU அவையின் உறுதிமொழிக்கு ஆயர்கள் வரவேற்பு

5. மெக்சிகோவில் ஊழல் ஒழிக்கப்பட ஆயர் அழைப்பு

6. பெரு ஆயர்கள் : கருக்கலைப்பு அநீதியானது 

7. புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்குத் தபக்காலத் தியாகங்கள் செய்யப் பரிந்துரை

8. வட கொரிய மக்கள் பசிக் கொடுமையால் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடுகின்றனர்


----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கருக்கலைப்பு குறித்தத் தவறான எண்ணத்தைப் போக்குவது மருத்துவர்களின் கடமை

பிப்.26,2011. கருக்கலைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது என்று கூறி கருக்கலைப்புக்கு எதிரானத் தனது கடுமையான எதிர்ப்பை இச்சனிக்கிழமை மீண்டும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீட வாழ்வுக் கழகம் நடத்திய 17வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 250 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கருக்கலைப்பு, குழந்தையைக் கொல்லுகின்றது, பெண்ணின் வாழ்வைப் பாழடிக்கின்றது, தந்தையின் மனசாட்சியின் மீது பாரத்தைச் சுமத்துகின்றது, பல சமயங்களில் குடும்ப வாழ்வைச் சிதறடிக்கின்றது என்று தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்து கொண்டு மனத்தளவிலே குற்ற உணர்ச்சியோடு வாழ்வு முழுவதையும் கழிக்கின்ற பெண்களை ஆன்மீக மற்றும் உளவியல் ரீதியில் தேற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
கருக்கலைப்பு மிகவும் அவசியமானது, இது குழந்தைகளையும் குடும்பங்களையும், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கின்றது என்ற தவறான எண்ணம் கொண்ட அனைவரின் ஒழுக்கநெறி மனசாட்சியைக் கேள்வி கேட்டுள்ள திருத்தந்தை, வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து சமுதாயத்தினரும் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பினால் ஓர் உயிர் கொல்லப்படுகிறது, தாயின் வாழ்வு சீர்குலைக்கப்படுகிறது என்பதைப் புரிய வைக்க வேண்டியது கத்தோலிக்க மருத்துவர்களின் கடமை என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
சிலசமயங்களில், கணவன்கள் கருவுற்ற தங்களது மனைவிமாரைக் தனியாக விட்டுவிடுவது குறித்த கவலை தெரிவித்த அவர், மனைவிகளின் கர்ப்பக் காலத்தில்  அவர்களது கணவன்மார் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்

2. லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார்

பிப்.26,2011. கடும் பதட்டநிலைகள் இடம் பெற்று வரும் லிபியாவில், அந்நாட்டின் சிறுபான்மைக் கத்தோலிக்கருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு லிபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியான திரிப்போலி ஆயர் ஜொவான்னி மார்த்தினெல்லி முஸ்லீம்களிடம் கேட்டுள்ளார்.
லிபியாவை சுமார் 42 வருடங்களாக ஆட்சி செய்து வரும் முமாமர் கடாஃபிக்கு எதிராக இடம் பெற்று வரும் போராட்டங்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் கடுமையாய் இருப்பதாகவும், லிபியத் தெருக்களில் ஓடும் இரத்தம் அந்நாட்டில் பொதுவான ஒப்புரவுக்குத் தடையாக இருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி தெரிவித்தார்.
"La Stampa" என்ற இத்தாலிய செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த ஆயர்    மார்த்தினெல்லி, தற்போதைய மக்கள் புரட்சி 1968ம் ஆண்டில் இடம் பெற்ற புரட்சியை ஒத்தது என்றும், குடியிருக்க வீடின்றியும் அதனால் குடும்பங்களை அமைப்பதற்கு இளையோர் கஷ்டப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
கத்தோலிக்க ஆலயங்கள், துறவு இல்லங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு செம்பிறைச் சங்கம் மற்றும் பிற முஸ்லீம் அமைப்புக்களிடம் கேட்டிருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
2005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி லிபியாவில் சுமார் எழுபதாயிரம் கத்தோலிக்கரும் 8 குருக்களும் 30 அருட்சகோதரிகளும் உள்ளனர்.

3. கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

பிப்.26,2011. லிபியாவில் கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாகத் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் ஐ.நா.பாதுகாப்பு அவையைக் கேட்டுள்ளார்.
கடாஃபி அரசு, போராடுகிறவர்கள் மீது, இறப்பை வருவிக்கும் கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் இச்சூழல்களில் நேரத்தைக் கடத்தினால் அதிகமான மனித உயிர்களை இழக்க நேரிடும் என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவும் நோக்கத்தில் தலைநகர் திரிப்போலியில் ஆயுதக் கிடங்குகளை அமைக்கவிருப்பதாகக் கடாஃபி அறிவித்துள்ளதையொட்டி உள்நாட்டுக் கலவரம் மூளும் என்ற அச்சமும் நிலவுகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன. லிபியாவின் சுமார் 65 இலட்சம் பேரில் 20 இலட்சம் பேர் திரிப்போலியில் வாழ்கின்றனர்.
ஐ.நா.பாதுகாப்பு அவையும், லிபியாவுக்கு எதிரான ஆயுதத் தடை, போக்குவரத்துத் தடை மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கு சிந்தித்து வருகிறது.
திரிப்போலியில் இவ்வெள்ளியன்று மட்டும் ஆயிரம் பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இவ்வெள்ளியன்று கூடிய ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, லிபியத் தலைவர் கடாஃபிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இன்னும், கடாபியின் சொத்துக்களை சுவிஸ் வங்கி முடக்கியிருக்கிறது.

4. உலகில் சமய சுதந்திரம் குறித்த EU அவையின் உறுதிமொழிக்கு ஆயர்கள் வரவேற்பு

பிப்.26,2011. உலக அளவில் சமய சுதந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு ஐரோப்பிய சமுதாய அவை உறுதி அளித்திருப்பதை ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
EU என்ற ஐரோப்பிய சமுதாய அவையின் வெளியுறவு அமைச்சர்கள் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறையைக் கண்டித்துள்ளதோடு சமய சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கானத் தங்களது ஆழமான அர்ப்பணத்திற்கும் உறுதியளித்துள்ளனர்.
இவ்வறிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள EU நாடுகளின் ஆயர்களின் பிரதிநிதிகள் ஆணையப் பேச்சாளர் Johanna Touzel, இந்த அமைச்சர்கள் தங்களின் இந்த உறுதிப்பாட்டைச் செயல்படுத்துவதற்குத் திட்டவட்டமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற ஆயர்களின் நம்பிக்கையையும் தெரிவித்தார்.
அதேசமயம், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கடந்த சனவரியில் திருப்பீடத்துக்கான நாடுகளின் தூதர்களிடம் தெரிவித்த சமய சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐந்து கூறுகளை EU அவையின் வெளியுறவு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.

5. மெக்சிகோவில் ஊழல் ஒழிக்கப்பட ஆயர் அழைப்பு

பிப்.26,2011. மெக்சிகோவில் அருட்பணியாளர் Santos Sánchez Hernández கொல்லப்பட்டிருப்பதற்குத் திருட்டுக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அந்நாட்டில் ஊழலும் ஒழுக்கமின்மையும் மிகுந்திருப்பதையே இத்தகைய கொலைகள் பிரதிபலிக்கின்றன என்று மெக்சிகோ ஆயர் ஒருவர் அரசைக் குறை கூறினார்.
54 வயதாகும் அருட்பணியாளர் Sánchez, Mecapalapa பங்கில் இத்திங்கள் இரவு கொலை செய்யப்பட்டது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் ஹூவான் நவாரோ, மெக்சிகோவில் வன்முறையும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதாகத் தெரிவித்தார்.
ஒழுக்க மற்றும் சமூக ஒழுங்கு முறைகளைக் காக்க வேண்டிய நிறுவனங்களில் காணப்படும் ஊழல்,இக்குருவின் கொலையில் பிரதிபலிக்கின்றது என்றும் ஆயர் நவாரோ கூறினார்.

6. பெரு ஆயர்கள் : கருக்கலைப்பு அநீதியானது 

பிப்.26,2011. கருக்கலைப்பை அனுமதிக்கும் எந்த ஒரு சட்டமும் அநீதியானது, அது சட்டமே அல்ல என்று பெரு நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வுக்கான ஆணையம் கூறியது.
மார்ச் 25ம் தேதி கடைபிடிக்கப்படும் கருவில் வளரும் குழந்தை தினத்தை முன்னிட்டு அந்த ஆணையம் வெளியிட்ட செய்தியில், உண்மையை எதிர்க்கும் அறிவற்ற மனங்களே கருவில் வளரும் குழந்தையின் மனித இயல்பை ஏற்கத் தவறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உலகில் இன்னும் பிறக்காத குழந்தையின் வாழ்வு, தாயைப் போல முக்கியமானது அல்ல என்ற கருத்தை இந்த ஆணையம் மறுத்துள்ளது.

7. புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்குத் தபக்காலத் தியாகங்கள் செய்யப் பரிந்துரை

பிப்.26,2011. தபக்காலத்தின் 40 நாட்களும் விருப்பமான இனிப்புக்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதாக மட்டும் இருக்கக் கூடாது, மாறாக, மிகவும் உறுதியான மற்றும் நீதி நிறைந்த உலகை அமைப்பதற்கு உதவும் சில நிரந்தரத் தியாகங்கள் செய்வதாய் அமைய வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறினார்.
புவி வெப்பமடைந்து வருவதலும் வெப்பநிலை மாற்றமும், நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தைச் சார்ந்து இருக்கின்றது என்று வெப்பநிலை மாற்றம் குறித்த அமெரிக்கக் கத்தோலிக்கக் கூட்டமைப்பு இயக்குனர் Dan Misleh கூறினார்.
நம் வாழ்க்கை நிலையைப் பரிசோதிப்பதற்குத் தபக்காலம் முற்றிலும் ஏற்ற காலம் என்றும் மிஸ்லே கூறினார்.
வருகிற மார்ச் 9ம் தேதி தொடங்கும் தபக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை விசுவாசிகளுக்கு முன்வைக்கும் சிலத் தபக்காலத் தியாகங்களையும் வெளியிட்டுள்ளது இக்கத்தோலிக்கக் கூட்டமைப்பு.
மக்கள் சாமான்கள் வாங்குவதற்குத் துணிப்பைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆண்டுதோறும் விநியோகிக்கப்படும் ஏறக்குறைய 38,000 கோடி பிளாஸ்டிக் பைகளைக் குறைக்க முடியும்.
குப்பையில் போடப்படும் பேப்பர் கைக்குட்டைகள் பேப்பர் துண்டுகள் போன்றவற்றைத் தவிர்த்தல்.
இருப்பதில் நிறைவு கொள். போதுமான உணவு, வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமல் இருப்போரை நினைத்துப் பார். இவை போன்ற வசனங்களை இணையதளத்தில் வெளியிட்டு மக்களின் நுகர்வுத்தனமைக் குறைவதற்கு உதவுதல். 
இவை போன்ற இன்னும் சில பரிந்துரைகளை அவ்வமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

8. வட கொரிய மக்கள் பசிக் கொடுமையால் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடுகின்றனர்

பிப்.26,2011. வட கொரியாவில் மக்கள் காட்டுப் புற்களையும் புழுதியையும் சாப்பிடும் அளவுக்கு மிகவும் மனம் சோர்ந்து பசிச் சாவை எதிர் நோக்குகின்றனர் என்று அந்நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ள அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களின் கடும் குளிரால் அந்நாட்டில் பயிரிடப்பட்ட கோதுமை மற்றும் பார்லி விளைச்சல் 50 முதல் 80 விழுக்காடு வரை சேதமாகியுள்ளது என்று அவ்வமைப்புகள் கூறின.
வட கொரியாவின் தற்போதைய அவலம் பொது மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம் மற்றும் பெருமளவில் மக்கள் தென் கொரியாவுக்கு புலம் பெயரலாம் என்றும் அவ்வமைப்புகள் கூறின.
பெருமளவானப் புலம் பெயர்வுகள் தென் கொரியாவில் தாக்கு பிடிக்காது என்றும் அந்நாடு அவர்களைத் திருப்பி அனுப்பக்கூடும் என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

Saturday 26 February 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 25 Feb 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 25 Feb 2011: "1. வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது 2. திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் ப..."

Catholic News - hottest and latest - 25 Feb 2011

1. வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது

2. திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பணி மிகவும் சவாலானது

3. இயேசுவின் திருஇதயப் பக்தியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உலக மாநாடு

4. கிழக்கு இந்தியாவில் இன மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு அசாம் பேராயர் உதவி

5. லிபியாவில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்

6. WCC : அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் மீதான ஐ.நா.தீர்மானத்தைத் தடுத்திருப்பதில் தவறு செய்துள்ளது

7. தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

8. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய அமைப்பு

9. உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன


----------------------------------------------------------------------------------------------------------------
1. வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது

பிப்.24,2011. நீர் வளங்கள், தனிப்பட்டவரின் சொத்தாகவும் முழுவதும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலும் நிர்வகிக்கப்படக் கூடாது, மாறாக, இவை உலகளாவிய தன்மையையும் மாற்றிக் கொடுக்கப்பட முடியாத உரிமையையும் கொண்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Greenaccord என்ற இத்தாலிய அமைப்பு, எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடு என்ற தலைப்பில் உரோமையில் இவ்வியாழனன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைச் செயலர் ஆயர் மாரியோ தோசோ (Mario Toso) இவ்வாறு கூறினார்.
கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கானா போன்ற நாடுகளின் தலைநகரங்களில் தனியார் விநியோகிக்கும் தண்ணீரின் விலை, நியுயார்க், இலண்டன் போன்ற நகரங்களின் தண்ணீர் விலையைவிட மூன்று முதல் ஆறு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்ட  ஆயர் தோசோ, தண்ணீர், வியாபாரப் பொருள் அல்ல, மாறாக இது ஒவ்வொருவருக்கும் உரியது, இது உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது என்றார்.
இன்று உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது, புவி வெப்பமடைந்து வருவதால் இவ்வெண்ணிக்கை 2050ல் மேலும் 280 கோடியாக உயரும், உலக அளவில் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் தேவை 5 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதால் 2025ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர், இவர்களில் பாதிப்பேர் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்றும் ஆயர் எச்சரித்தார்.
இதனால் ஏற்படும் மோசமான சுகாதாரச் சூழல்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 18 இலட்சம் சிறார் இறக்க நேரிடும் என்றும் ஆயர் தோசோ தெரிவித்தார்.
தண்ணீர் மக்கள் நலமாக வாழ்வதற்கு வழி செய்வதால், இதற்கான உரிமை மற்ற அடிப்படை உரிமைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றது என்று கூறிய திருப்பீட அதிகாரி, நீர் வளங்கள் சரியாக நிர்வகிக்கப்படுவதற்குச் சர்வதேச சமுதாயம் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

2. திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் : மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பணி மிகவும் சவாலானது

பிப்.24,2011. மனித வாழ்வுக்கு எதிரான அச்சுறுத்தல் மிகக் கடுமையாக அதிகரித்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில், ஒருங்கிணைந்த மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணி மிகவும் சவாலானது என்று திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் ஆயர் கராஸ்கோ தெ பவுலா கூறினார்.
திருப்பீட வாழ்வுக் கழகம் இவ்வியாழனன்று வத்திக்கானில் தொடங்கிய மூன்று நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் தெ பவுலா, இக்காலத்தில் மனித வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய நமது பணியை மிக ஆழமாகத் தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
இன்றைய நிலவரத்தை நோக்கும் போது, மனித வாழ்வுக்கானத் திருப்பீட கழகத்தை மனிதனுக்கானத் திருப்பீட கழகம் என்று பெயரிடத் தோன்றுகிறது என்றும் உரைத்த ஆயர் தெ பவுலா, வருங்காலத்தைப் புதிய கண்களுடன் நோக்க வேண்டும் என்றார்.

3. இயேசுவின் திருஇதயப் பக்தியைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் உலக மாநாடு

பிப்.24,2011. குடும்பங்களிலும் சமூகங்களிலும் இறையன்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இயேசுவின் திருஇதய பக்தி தோன்றிய இடத்தில் முதன் முறையாக உலக மாநாடு ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இயேசுவின் திருஇதய பக்தி பிறந்த இடமான பிரான்ஸ் நாட்டு பார்லே மோனியால் (Paray-le-Monial) என்ற ஊரில் வருகிற அக்டோபர் 6 முதல் 11 வரை இந்த முதல் உலக மாநாடு இடம் பெறவுள்ளது.
இம்மாநாட்டை, இயேசு மற்றும் மரியின் திருஇதயங்கள் துறவு சபையினர் நடத்துகின்றனர்.
பார்லே மோனியால் என்ற ஊரிலுள்ள காட்சிகள் சிற்றாலயத்தில் அருட்திரு Mateo Crawley-Boevey என்பவர் தனது நோயிலிருந்து அற்புதமாய்க் குணமான பின்னர் இயேசுவின் திருஇதய பக்தியை உலகெங்கும் பரப்புவதற்குத் தூணடுதல் பெற்றார். 1907ம் ஆண்டில் பாப்பிறை பத்தாம் பத்திநாதர் இப்பக்தியை உலகெங்கும் பரப்புவதற்கு இக்குருவுக்கு உத்தரவு அளித்தார்.
இயேசுவின் திரு இதய நகரம் என அழைக்கப்படும் Paray-le-Monial  ல் 17ம் நூற்றாண்டில் மார்கிரேட் மேரி அலகோக் (Margherita Maria Alacoque) என்னும் இளம் அருட்சகோதரிக்கு இயேசுவின் திரு இதயம் காட்சிக் கொடுத்தது.

4. கிழக்கு இந்தியாவில் இன மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு அசாம் பேராயர் உதவி

பிப்.24,2011. கிழக்கு இந்தியாவில் அசாம் மற்றும் மெஹாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பூர்வீக இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகளுக்குத் தீர்வு காண்பதற்கு குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் உதவி செய்து வருகிறார்.
இப்பிரச்சனை தொடர்பாக பேராயர் மெனாம்பரம்பில், ராப்ஹா மற்றும் காரோ சமூகங்களுடன் அண்மையில் நடத்திய கூட்டத்தில், நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அச்சமூகங்கள் உறுதி அளித்தன.
கடந்த சனவரி தொடக்கத்தில் அசாம் மற்றும் மெஹாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் 90 கிராமங்களில் ஏறக்குறைய 1500 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
ராப்ஹா இன இளையோர், காரோ இனத் திருமண நிகழ்வு ஒன்றில் நடத்திய தாக்குதலையொட்டி இவ்வன்முறைகள் தொடங்கின.

5. லிபியாவில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்

பிப்.24,2011. லிபிய நாட்டு நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கு ஆதரவானப் படைவீரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம் பெற்று வரும் வேளை, அந்நாட்டில் கத்தோலிக்க மறைபோதகர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதிகச் சுதந்திரம் கேட்டுப் போராடும் மக்கள் மீது லிபிய அதிபர் முவாம்மர் கடாஃப்பி கடும் வன்முறை நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளை, அந்நாட்டின் கிழக்கில் பாதிப் பகுதி அதாவது பென்காசியும் மற்ற நகரங்களும் இராணுவத்தின் ஆதரவுடன் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளன.
தலைநகர் திரிப்போலியை ஆக்ரமிப்பது தொடர்பாகக் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வன்முறைகளில் ஆயிரம் முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும் என்ற அச்சமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
லிபியாவில் சரியான ஆவணங்கள் இன்றி வாழும் 500 குடியேற்றதாரர்களை வெளியேற்றுவதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை முயற்சித்து வருகிறது.
லிபியாவிலுள்ள கத்தோலிக்கர் முழுவதும் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. WCC : அமெரிக்க ஐக்கிய நாடு இஸ்ரேல் மீதான ஐ.நா.தீர்மானத்தைத் தடுத்திருப்பதில் தவறு செய்துள்ளது

பிப்.24,2011. இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதைக் கண்டிக்கும் ஐ.நா.பாதுகாப்பு அவைத் தீர்மானத்தை அமெரிக்க ஐக்கிய நாடு தடுத்து நிறுத்தியிருப்பது குறித்து WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தனது ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 18ம் தேதியன்று இடம் பெற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு இத்தீர்மானத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களில் 14ம், இன்னும் 130 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து குடியிருப்புக்களை அமைத்து வருவதற்கான நியாயத்தை அமெரிக்க ஐக்கிய நாடு ஏற்றுக் கொள்ளாது என்று 2010ம் ஆண்டு ஜூனில் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதற்கு தற்போதயை அந்நாட்டின் செயல்பாடு முரணாக இருக்கின்றது என்று WCC மன்றத்தின் மையக் குழு கூறியது.  
மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் புதிய சவாலகளைக் களைவது குறித்த சர்வதேச கருத்தரங்கை 2012ம் ஆண்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளது WCC மன்றம்.
WCC மன்றத்தில் 349 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.

7. தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

பிப்.24,2011. சி.என்.என். நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தைத் தேர்வு செய்து விருது வழங்கியது. இவ்விருதை, துணை ஜனாதிபதியிடமிருந்து கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
டில்லியில் இச்செவ்வாயன்று நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார்.

8. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய அமைப்பு

பிப்.24,2011. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் UN Women என்ற புதிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வில் உலகளாவிய அரசியல், வணிகம், பத்திரிகை, இசை, திரைப்படம் எனப் பல துறையினர்  கலந்து கொண்டனர்.
2010ம் ஆண்டு ஜூலையில் ஐ.நா.பொது அவையால் உருவாக்கப்பட்ட இப்புதிய அமைப்பில் UNIFEM என்ற பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்ட நிதி, DAW என்ற பெண்கள் முன்னேற்றப் பிரிவு, பாலின விவகாரம் குறித்த சிறப்பு ஆசலோசகர் அலுவலகம், UN-INSTRAW என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை உள்ளடங்கும்.
இப்புதிய அமைப்பு ஆண்டுக்குக் குறைந்தது 50 கோடி டாலர் செலவில் செயல்படும்.

9. உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன

பிப்.24,2011. அதிகப்படியாக மீன் பிடித்தல், கடற்கரை வளர்ச்சி, தூய்மைக் கேடு உட்பட மனிதரின் செயல்பாடுகளால் உலகின் 75 விழுக்காட்டுப் பவளப்பாறைகள் அழியும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.ஆதரவு பெற்ற அறிக்கை ஒன்று கூறுகிறது.
வெப்பநிலை மாற்றம், கடல் வெப்பமடைதல், பெருங்கடல்களின் மட்டம் அதிகரிப்பு, போன்றவையும் இதற்குக் காரணங்களாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பவளப்பாறைகள் எதிர்நோக்கும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2030ம் ஆண்டுக்குள் 90 விழுக்காட்டுப் பகுதியும் 2050க்குள் முழுவதுமாகவும் அழியும் ஆபத்தில் உள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

robert john kennedy: Catholic News - hottest and latest - 24 Feb 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 24 Feb 2011: "1. லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு 2. வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம் 3. புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலி..."

Catholic News - hottest and latest - 24 Feb 2011

1. லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

2. வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம்

3. புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் - கர்தினால் Antonios Naguib

4. நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார்

5. மத்தியப்பிரதேசத்தில் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபையின் முயற்சிகள்

6. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர்

7. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோவில்

8. லிபியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கிறிஸ்தவ அமைப்பின் அழைப்பு

9. இஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பஙகேற்கும் 300000 இளையோர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. லெபனன் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு

பிப்.24,2011. பல்வேறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்களைக் கொண்டிருக்கும் லெபனன் நாடு இத்தகைய ஓர் அமைப்பினாலே, சுதந்திரம் மற்றும் ஒருவர் ஒருவரை மதிக்கும் நல்லிணக்க வாழ்வுக்கு அப்பகுதிக்கு மட்டுமல்லாமல் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று லெபனன் அரசுத் தலைவர் மிஷேல் ஸ்லைமானை வத்திக்கானிலுள்ள தனது நூலகத்தில் முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, லெபனன் நாட்டுப் புதிய அரசு அந்நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் உறுதியான தன்மைக்கு ஆதரவாகச் செயல்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பகுதியின், குறிப்பாக, சில அரபு நாடுகளின் தற்போதைய நிலவரம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இப்பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படவும் ஒட்டுமொத்த சமூகத்தின் நல்வாழ்வுக்குக் கிறிஸ்தவர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில், லெபனன் புனிதர் மரோனின் திருவுருவத்தை இப்புதனன்று திருத்தந்தை ஆசீர்வதித்தது முதலில் இடம் பெற்றது.
மேலும், இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஸ்லைமான்.
இதற்குப் பின்னர், லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் மனைவி உட்பட 15 பேர் கொண்ட அந்நாட்டு உயர்மட்டக் குழுவும் திருத்தந்தையைச் சந்தித்தது. அரசுத் தலைவர் ஸ்லைமான் திருத்தந்தைக்கு, 17ம் நூற்றாண்டு தந்தம் மற்றும் தங்கத்தாலானத் தூப கலசத்தைப் பரிசாகக் கொடுத்தார். திருத்தந்தையும் பாப்பிறை மெடலை ஸ்லைமானுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்


2. வத்திக்கானில் லெபனன் புனிதர் மரோனின் திருவுருவம்

பிப்.24,2011. மேலும், லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவிய புனித மரோனின் திருவுருவத்தைத் திருத்தந்தை ஆசீர்வதித்த நிகழ்ச்சியிலும் லெபனன் அரசுத்தலைவர் ஸ்லைமான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய ஸ்லைமான், லெபனனில் மாரனைட் திருச்சபை ஏற்படுத்தியுள்ள அளவற்ற தாக்கத்தைப் பாராட்டினார்.
15 அடி உயரம் கொண்ட இப்புனிதரின் திருவுருவம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் வெளிப்புற மாடச் சுவரில் வைக்கப்பட்டுள்ளது. இப்புதன் பொது மறைபோதகத்திற்கு முன்னர் இடம் பெற்ற இந்நிகழ்வில் லெபனன் முதுபெரும் தந்தை நஸ்ரல்லா ஸ்ஃபயர், திருப்பீடத்துக்கானத் தூதர்கள், திருப்பீடச் செயலர், இன்னும் உரோமிலும் அதைச் சுற்றிலும் வாழும் லெபனன் விசுவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த 5ம் நூற்றாண்டு சிரியத் துறவியின் எடுத்துக்காட்டை எல்லாரும் பின்பற்றுமாறு வலியுறுத்திய திருத்தந்தை, ஒருவர் தன்னையே கொடையாக வழங்கும் அளவுக்கு நற்செய்தியைச் சோர்வின்றி அறிவிக்கும் கொடைக்காகவும் ஆண்டவரிடம் மன்றாடினார்.
லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்கத் திருச்சபை, தனது நிறுவனரான புனித மரோனின் 16வது நூற்றாண்டைச் சிறப்பித்து வருவதையொட்டி வத்திக்கானில் இந்நிகழ்வு நடைபெற்றது.


3. புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் - கர்தினால் Antonios Naguib

பிப்.24,2011. இவ்வாண்டின் புத்தாண்டு தினத்தன்று  எகிப்தின் அலெக்சாந்த்ரியாவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கக் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று காப்டிக் ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறியுள்ளார்.
30 Giorni என்று அழைக்கப்படும் ஓர் இத்தாலிய நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இக்கருத்தை வெளியிட்ட கர்தினால் Naguib, அரசுத் தலைவர் Mubarak தனது அரசைக் காக்கும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இவ்வன்முறைத் தாக்குதலைக் காரணம் காட்டியிருப்பார் என்று கூறினார்.
முபாரக்கிற்கு எதிராக எழுந்த போராட்டங்களில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் வயது வேறுபாடின்றி கலந்து கொண்ட ஒற்றுமையைத் தன் நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின் காண முடிந்ததெனும் மகிழ்வையும் கர்தினால் Naguib வெளியிட்டார்.
இதற்கிடையே, முபாரக் பதவி துறந்ததையடுத்து எகிப்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு அந்நாட்டில் நிகழ்ந்த புத்தாண்டு வன்முறை குறித்த வழக்கைத் தீர ஆராய்ந்து தீர்ப்புகள் வழங்க வேண்டுமென்று அகில உலக சமய உரிமைகளுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குழு USCIRF வலியுறுத்தி வருகிறது.


4. நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார்

பிப்.24,2011. இரண்டாம் உலகப்போரில் நாசி படையினரால் கொல்லப்பட்ட 335 இத்தாலியர்களின் நினைவுச்சின்னத்தைத் திருத்தந்தை பார்வையிடுவார் என்று வத்திக்கான் செய்தியொன்று கூறுகிறது.
உரோமை நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள Fosse Ardeatine என்ற இடத்தில் உள்ள இந்த நினைவுச்சின்னத்தை வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி திருத்தந்தை பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1944ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஜெர்மானிய காவல் படையினர் மீது இத்தாலிய தேசப்பற்று அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 ஜெர்மானியர்கள் இறந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறந்த ஒவ்வொரு ஜெர்மானிய வீரருக்கும் பத்து இத்தாலியர்கள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட வேண்டுமென ஹிட்லரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாணையைத் தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி 75 யூதர்கள் உட்பட பொதுமக்கள், சிறைக் கைதிகள் மற்றும் போர் வீரர்கள் என 335 இத்தாலியர்கள் நாசி படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்நினைவுச் சின்னத்தை மறைந்தத் திருத்தந்தையர் ஆறாம் பவுல் மற்றும் இறையடியார் இரண்டாம் ஜான் பால் ஆகியோர் முறையே, 1965 மற்றும் 1982 ஆகிய இரு ஆண்டுகள் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.


5. மத்தியப்பிரதேசத்தில் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபையின் முயற்சிகள்

பிப்.24,2011. இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வேளாண்மைப் பிரச்சனைகளால் தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்குச் சேவை செய்ய தலத்திருச்சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த இரு மாதங்களாய் நிலவும் கடுமையான பனியால் இதுவரை அம்மாநிலம் சந்தித்திராத அளவில் பயிர்கள் பெரிதும் அழிந்துள்ளன. எனவே, கடந்த 86 நாட்களில் அப்பகுதியில் 136 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அண்மையில் அறிவித்தது.
அரசின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, விவசாயிகளின் குடும்பத்திற்குத் தேவையான வாழ்வு ஆதாரங்களை போபால் உயர்மறை மாவட்டம் செய்ய முன் வந்துள்ளதென பேராயர் Leo Cornelio தெரிவித்தார்.
மனித சமுதாயத்திற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளே பட்டினியைச் சந்திக்கும் சூழ்நிலை மிகக் கொடூரமானதென்று பேராயர் Cornelio தன் கவலையை வெளியிட்டார்.


6. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர்

பிப்.24,2011. இந்தியாவின் SIGNIS அமைப்பின் தலைவராக பொது நிலையினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒரு செய்தி என்று கொல்கத்தா உயர்மறைமாவட்டப் பேராயர் Lucas Sircar கூறினார்.
ஊடகத் துறையில் பணிபுரியும் இந்திய கத்தோலிக்கர்களுக்கென உருவாகியுள்ள SIGNIS என்ற அமைப்பின் தலைவராக 44 வயதான Sunil Lucas என்ற ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்வமைப்பின் தலைவராக முதல் முறையாக ஒரு பொதுநிலையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கொல்கத்தா பேராயர், இந்தியத் திருச்சபை பொதுநிலையினருக்கு வழங்கும் முக்கியப் பொறுப்புக்கள் நல்லதொரு அடையாளம் என்று கூறினார்.
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், ஊடகக் கல்வி மற்றும் கணனிவழித் தொடர்புகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கென உருவாகியுள்ள SIGNIS அமைப்பு, உலகின் 140 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில் இவ்வமைப்பில் 300க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் உள்ளனர்.


7. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கோவில்

பிப்.24,2011. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு உள்ளான பெட்டிக்கலா (Betticala) என்ற கிராமத்தின் மக்கள் நந்தகிரி என்ற இடத்தில் மறு குடியமர்வு செய்யப்பட்டு, அங்குள்ள ஒரு கோவிலில் அண்மையில் தங்கள் முதல் திருப்பலியைக் கண்டனர்.
மூன்று ஆண்டுகளாய் தங்களுக்கென ஒரு கோவில் இல்லாமல் வருந்திய இம்மக்கள் இப்புதிய கோவிலில் அண்மையில் நிகழ்த்திய திருப்பலியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று அருள் சகோதரர் K J மார்கோஸ் கூறினார்.
கந்தமால் வன்முறைகள் தணிந்த பிறகும், தங்கள் சொந்த ஊரான பெட்டிக்கலா கிராமத்தில் மறுபடியும் குடியேற விழைந்த கிறிஸ்தவர்களை அங்குள்ள இந்துக்கள் அனுமதிக்காமல் விரட்டியதால், அம்மக்கள் தலத்திருச்சபையின் உதவியுடன் நந்தகிரியில் குடியேறியுள்ளனர் என்று அருள் சகோதரர் மார்கோஸ் விளக்கினார்.
மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உரிய நிலங்களைப் பெற்றுத் தருவதில் அரசு இன்னும் சரியான முயற்சிகள் எடுக்காததால், தற்போது தலத்திருச்சபை அம்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதென்று சகோதரர் மார்கோஸ் மேலும் கூறினார்.


8. லிபியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் - கிறிஸ்தவ அமைப்பின் அழைப்பு

பிப்.24,2011. லிபியாவில் தொடர்ந்து நிலவும் பதட்டச் சூழ்நிலையில் அந்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக, லிபியாவில் போராடும் மக்கள் மேல் அரசு மேற்கொண்டு வரும் வன்மையான அடக்கு முறைகள் குறித்து பல நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஐ.நா. பொதுச் செயலரும் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
இச்சூழலில் அந்நாட்டில் உள்ள பிற நாட்டவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடும் ஈடுபட்டுள்ளது. எனினும், எரித்ரியா, எத்தியோப்பியா, மற்றும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து லிபியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு எந்த நாடும் உதவாத நிலையில், அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று CSW என்ற அகில உலக கிறிஸ்தவ ஒன்றிணைப்பு அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
லிபியாவின் Tripoliயில் உள்ள கத்தோலிக்கக் கோவிலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்ரிக்க அகதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டுமென்று இத்தாலியில் உள்ள Habeshia என்ற அரசு சாரா அமைப்பு இத்தாலிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
அகதிகளாய் Tripoliயில் தங்கியுள்ள 40 ஆப்ரிக்கக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளதால் அகில உலக குடும்பமும், சிறப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இவ்விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டுமென்று CSW இயக்குனர் Andrew Johnston கூறினார்.


9. இஸ்பெயின் நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளில் பஙகேற்கும் 3,00,000 இளையோர்

பிப்.24,2011. வருகிற ஆகஸ்ட் மாதம் 11 முதல் 15 வரை இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் 2011ஐ முன்னிட்டு, அந்நாட்டிற்கு வருகை தரும் 3 இலட்சம் இளையோரை வரவேற்க அந்நாடு தயாராகி வருகிறது.
உலக இளையோர் மாநாட்டிற்கு முன்னதாக, இஸ்பெயினின் மறைமாவட்டங்களில் கத்தோலிக்கக் குடும்பங்கள் உலக இளையோரை வரவேற்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக  இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் Javier Igea கூறினார்.
மாநாட்டிற்கு முந்திய ஒரு சில நாட்கள் இஸ்பானிய கலாச்சாரம், அங்குள்ள கத்தோலிக்க வாழ்வு இவைகளை வெளிக்கொணரும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இளையோர் தங்கள் இல்லங்களில் தங்குவதற்கென, சிறப்பாக, ஏழை நாடுகளில் இருந்து வரும் இளையோர் எவ்வித கட்டணமும் இல்லாமல் தங்குவதற்கென பல குடும்பங்கள் முன் வந்துள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதுவரை இம்மாநாட்டில் கலந்து கொள்ள 137 நாடுகளில் இருந்து 1,50,000க்கும் அதிகமான இளையோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், இஸ்பெயினில் உள்ள 63 மறைமாவட்டங்களில் 12 மறை மாவட்டங்களின் தங்குமிடங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.