Thursday 29 December 2011

robert john kennedy: Fr. Alphonse. G, of Kotter Diocese - Golden Jubile...

robert john kennedy: Fr. Alphonse. G, of Kotter Diocese - Golden Jubile...:

Fr. Alphonse. G, of Kotter Diocese - Golden Jubilee of Priestly Orsdination, at Kandanvilai on 29/12/11, at 5.30 pm. தந்தை அல்போன்ஸ் குருத்துவ பொன்விழா - வாழ்த்துக்கள்.

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 December 2...

robert john kennedy: Catholic News - hottest and latest - 28 December 2...: 1. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி 2. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந...

Catholic News - hottest and latest - 28 December 2011

1. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி

2. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ்

3. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு தலத்திருச்சபை எதிர்ப்பு

4. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும்

5. வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்கமுடியாது - பாகிஸ்தான் அமைச்சர்

6. இந்தியாவின் நாட்டுப் பண் 'ஜன கண மன'வுக்கு நூறு வயது

7. லண்டன் நகரில் கிறிஸ்மஸ் காலத்தில் வீணாக்கப்படும் காகிதங்களைக் கொண்டு 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும்

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி

டிச.28,2011. 'விடுதியில் அவர்களுக்கு இடமில்லை' என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நிலையை சந்தித்து வரும் பலர் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்; அவர்கள் மத்தியில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைத் தருவதே கிறிஸ்மஸ் பெருவிழா என்று புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் தேயோபிலஸ், இலத்தீன் ரீதி முது பெரும் தலைவர் Fouad Twal, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Anba Abraham, உட்பட 13 தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்ற கிறிஸ்மஸ் விழாவின் மையமான வார்த்தைகளை மக்களுக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ளனர்.
புனித பூமியில் பல்வேறு பிரிவினைகளால் இன்றும் தங்கள் சொந்த நாட்டிலேயே அன்னியராக நடத்தப்படும் மக்களுடன் தலத்திருச்சபைகளின் தலைவர்களாகப் பணியாற்றும் நாங்கள் அனைவரும் இணைந்து, எங்கள் செபங்களை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றோம் என்று அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
நீதி, மற்றும் ஒப்புரவு இவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் அமைதியை, தலைவர்களாகிய நாங்களும், மக்களும் தேடி வருகிறோம் என்று, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.


2. நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ்

டிச.28,2011. நேபாளத்தின் காத்மாண்டு நகரின் அன்னை மரியா பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் இணைந்து, 2000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் திருப்பலியை நிறைவேற்றியது குறித்து காத்மாண்டு ஆயர் அன்டனி ஷர்மா தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
1000 பேர் மட்டுமே அமரக்கூடிய கோவில் நிறைந்து, மற்றுமோர் 1000 பேர் வெளியிலும் நின்றதால், வன்முறைகளுக்குப்  பயந்து மூடப்பட்டிருந்த கோவிலின் கதவுகளைத் திறந்து வைத்தே திருப்பலி நிறைவேற்றியதாகவும் ஆயர் மகிழ்வுடன் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காக இருந்த அன்னை மரியா விண்ணேற்புப் பேராலயத்தில் கிறிஸ்தவர் அல்லாதோரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டது தங்கள் நாடு ஒப்புரவை நோக்கி நடைபோடுகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஆயர் ஷர்மா எடுத்துரைத்தார்.
2006ம் ஆண்டு முதல் நேபாளம் மத சார்பற்ற ஒரு நாடாக மாறியது. 2006ம் ஆண்டு 6000 பேர் என்று இருந்த கத்தோலிக்கர்கள், தற்போது 10000க்கும் அதிகமாக உள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
2008ம் ஆண்டு முதல் நேபாளத்தில் கிறிஸ்மஸ் ஓர் அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகிறது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக கிறிஸ்மஸ் விழாவையொட்டி பல்வேறு சமயங்களும் இணைந்து பொதுவிழாக்களை நடத்தி வருகின்றன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு தலத்திருச்சபை எதிர்ப்பு

டிச.28,2011. அணுசக்தி உலைகளை அமைக்கும் தென் கொரிய அரசின் தீர்மானங்களுக்கு அந்நாட்டின் தலத் திருச்சபை மீண்டும் தன் எதிர்ப்புக்களை இத்திங்களன்று அறிவித்தது.
தென் கொரியாவின் Samcheok நகரிலும் Yeongdeok-gun பகுதியிலும் அரசு அணு உலைகள் அமைக்க விருப்பதாக அண்மையில் வெளியிட்ட செய்தியை அடுத்து, Samcheok நகரில் இத்திங்களன்று எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.
Fukushima வில் நடந்த பெராபத்துக்குப் பின் நகரின் 75 விழுக்காடு மக்கள் அணு உலைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அருள்தந்தை Paul Park Hong-pyo கூறினார்.
Wonju மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவும் அரசின் இந்த முடிவுகளுக்கு தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
21 அணு உலைகள் இயங்கி வரும் தென் கொரியாவில் மேலும் 11 அணு உலைகள் கட்டும் திட்டங்களில் அரசு இறங்கியுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும்

டிச.28,2011. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும் என்று அந்நகர ஆளுநர் கூறினார்.
Kirkuk நகரின் பேராலயத்தில் கல்தேய ரீதி ஆயர் லூயிஸ் சாக்கோ நிறைவேற்றிய கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்து கொண்ட Kirkuk நகர ஆளுநர் Najim al-din Umar Karim, அங்கு கூடியிருந்த அனைவர் முன்னிலையிலும் இந்த முடிவை வெளியிட்டார்.
மேலும் கிறிஸ்மஸ் பெருவிழாவை ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கும்படி தான் ஈராக் மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவிருப்பதாகவும் நகர ஆளுநர் Karim கூறினார்.
ஈராக்கில் பல ஆண்டுகளாக நிலவி வரும் போர்ச்சூழல் நீங்கி அனைவரும் ஒற்றுமையில் வாழ்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் ஓர் அடையாளமாக, கிறிஸ்மஸ் திருநாள் அன்று Kirkuk நகர ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பேராலயத்திற்குச் சென்று ஆயர் சாக்கோவுக்கும் மக்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
பேராலயத்திற்கு வந்திருந்த மக்களுக்கு தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த நகர ஆளுநர் Karim, போர்ச்சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்பும்படி அழைப்பு விடுத்தார்.
கிர்குக் ஆயர் லூயிஸ் சாக்கோ கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே ஒப்புரவை உருவாக்க பாடுபடுவதை பாராட்டிப் பேசிய ஆளுநர், கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டிற்கு செய்து வரும் பல்வேறு முக்கியமான பணிகளையும் புகழ்ந்து பேசினார்.


5. வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்கமுடியாது - பாகிஸ்தான் அமைச்சர்

டிச.28,2011. பாகிஸ்தானில் வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறினார்.
மதங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சராக செயலாற்றும் பால் பாட்டி, அண்மையில் L'Osservatore Romano செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள ஆசியா பீபி உட்பட அனைத்து கைதிகளையும் அண்மையில் சந்தித்து உரையாடிய பால் பாட்டி, இக்கைதிகள் அனுபவித்து வரும் உடல் மற்றும் உள்ள ரீதியான வேதனைகள் பற்றி இச்செய்திதாளுக்கு எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துறையில் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhatti கிறிஸ்மஸ் காலத்தில் சிறைக் கைதிகளைச் சந்தித்ததைப்  போல், தானும் சென்று சந்தித்ததாகக் கூறிய பால் பாட்டி, மக்களிடம் உள்ள அறியாமையைப் பயன்படுத்தி அடிப்படைவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் வெறுப்பை வளர்த்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மக்கள் கல்வியில் முன்னேறி, வறுமையை ஒழிக்கும் வழிகளைக் கண்டுகொண்டால், அவர்களிடையே உள்ள அடிப்படைவாத உணர்வுகளும் நாட்டிலிருந்து நீங்கும். இதைத் தொடர்ந்து, நாட்டில் தேவநிந்தனை குறித்த சட்டத்தையும் நீக்க முடியும் என்று பால் பாட்டி நம்பிக்கை தெரிவித்தார்.


6. இந்தியாவின் நாட்டுப் பண் 'ஜன கண மன'வுக்கு நூறு வயது

டிச.28,2011. இந்தியாவின் நாட்டுப் பண்ணாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு 1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தேழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியரான மகாகவி இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இப்பண், பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு, இந்தியாவின் நாட்டுப் பண்ணாக உருவெடுத்தது. இதனை நாட்டுப் பண்ணாக ஏற்க மறுத்த பலர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் நாட்டுப் பண்ணாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனாலும், மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' நாட்டுப் பண்ணாகவும் 'வந்தே மாதரம்' நாட்டுப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்று வரலாற்று குறிப்புகள் அமைந்துள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி இந்திய நாட்டுப் பண்ணாக, தாகூர் எழுதிய ஜன கண மனஅங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன. 'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது, அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்துள்ளன.
அவ்வப்போது புதிய தலைமுறையின் இரசனைக்கு ஏற்ப, புதுப்புது இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருகின்றது. முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை வடிவத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.


7. லண்டன் நகரில் கிறிஸ்மஸ் காலத்தில் வீணாக்கப்படும் காகிதங்களைக் கொண்டு 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும்

டிச.28,2011. கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருள்கள் சுற்றப்படும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்படும் எரிசக்தியைப் பயன்படுத்தி இருதளம் கொண்ட பேருந்து ஒன்று பூமியிலிருந்து நிலவுக்கு 20 முறை பயணங்கள் மேற்கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
லண்டன் நகரில் உள்ள Imperial College என்ற கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கிறிஸ்மஸ் காலத்தில் பயன்படுத்தப்படும் காகிதங்கள் அனைத்தையும் பயோ (Bio) எரிசக்தியாக மாற்றினால் அது ஒரு மாற்று எரிசக்தியாகப் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் காலத்தில் பிரித்தானியாவில் வாழும் மக்கள் 150 கோடி வாழ்த்து அட்டைகளையும், 83 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள பரிசுப் பொருள் சுற்றும் காகிதங்களையும் பயன்படுத்தி வீசி எறிவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படும் இக்காகிதங்களை பயோ (Bio) எரிசக்தியாக மாற்றினால் 1 கோடியே 20 இலட்சம் லிட்டர் எரிசக்தியை உருவாக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


robert john kennedy: Catholic News - hottest and latest - 27 December 2...

robert john kennedy: Catholic News - hottest and latest - 27 December 2...: 1. அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்கிறார் அபுஜா பேராயர் 2. நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்ப...

Catholic News - hottest and latest - 27 December 2011

1. அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது  என்கிறார் அபுஜா பேராயர்

2. நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்

3. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையெயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன

4. அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள்

5. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ அப்பகுதி ஆயர் அழைப்பு

6. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு நடத்திவரும் மையம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்

7. இராமானுஜன் பிறந்தநாள் இந்திய தேசிய கணித தினம் : பிரதமர் அறிவிப்பு

8. 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு இந்தியா வந்துவிடும்

------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது  என்கிறார் அபுஜா பேராயர்

டிச.27,2011. அண்மை வெடிகுண்டு தாக்குதலகள், நிலையற்றதன்மைகளின் ஆபத்தை வெளிப்படுத்தி நிற்கின்ற போதிலும், அமைதியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி நிற்கின்றன என்றார் நைஜீரியாவின் அபுஜா பேராயர்.
நைஜீரியாவின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அமைதியில் ஒன்றிணைந்து வாழ ஆவல் கொண்டுள்ள வேளையில், ஒன்றிணைந்து வாழும் முயற்சிகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகின்றது என வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய அபுஜா பேராயர் John Olorunfemi Onayekan, இத்தாக்குத‌லில் சில‌ இஸ்லாமிய‌ர்க‌ளும் உயிரிழந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஒரே குடும்ப‌ உண‌ர்வுட‌ன்  கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இஸ்லாமிய‌ர்க‌ளும் ஒன்றிணைந்து வாழும் நைஜீரியாவில் இத்த‌கைய‌ தாக்குத‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள், இரு ம‌த‌த்தின‌ருக்கும் இடையேயான‌ ப‌கைமைக்கு வித்திடுமானால் அத‌ன் விளைவுக‌ள் மிகுந்த‌ தீமை நிறைந்த‌தாக‌ இருக்கும் என்ற‌ க‌வ‌லையையும் வெளியிட்டார் பேராய‌ர் Onayekan.


2. நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்

டிச.27,2011. நைஜீரியாவில் பலரின் உயிரிழப்புகளுக்கு காரணமான அபுஜா கத்தோலிக்க கோவில் வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவதாக செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அபுஜா புனித தெரேசா கோவிலில் கிறிஸ்மஸ் அன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Boko Haram தீவிரவாத அமைப்பு, நைஜீரியா முழுவதும் ஷாரியா சட்டம் நிறுவப்படுவதற்கு அழைப்பு விடுத்து வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த கிறிஸ்மஸ் நாளில் இரு கோவில்கள் தாக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்றுள்ள இக்குழு, இவ்வாண்டில் மட்டும் 504 கொலைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டும் கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையெயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன

டிச.27,2011. மதங்களிடையே பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் பங்களாதேசின் சிட்டகாங் ஆயர் மோசஸ் கோஸ்டா, அந்நகர் மேயர் மற்றும் பல்மதப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பங்களாதேசில் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய மதத்தலைவர்களுக்கும் இடையே உறவை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி உழைத்து வரும் ஆயர் கோஸ்டா, சிட்டகாங் பகுதியில் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
பல்மத பிரதிநிதிகளுடன் ஆயர் கோஸ்டா ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிட்டகாங் மேயர் Monjurul Alam பேசுகையில், அமைதியை விரும்பும் கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எப்போதும் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கொண்டாட முயல்வது அவர்களின் பரந்த மனப்பான்மையின் அடையாளம் என்றார்.
இதே விழாக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதக்குரு Moulana Iqbal Yousuf, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையேயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன என்றார்.


4. அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள்

டிச.27,2011. ஊழலை ஒழிக்க சமர்பிக்கப்பட்டிருக்கும் லோக்பால் சட்ட வரைவு குறித்து இந்திய பாராளு மன்றத்தில் விவாதங்கள் ஆரம்பித்துள்ள இச்செவ்வாயன்று, மும்பையில் அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணா நோன்பு போராட்டத்தைக் குறித்து இந்தியத் திருச்சபையில் இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற கருத்தை பரப்பி வரும் ஓர் அமைப்பினை உருவாக்கியவர்களில் ஒருவரான டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, அன்னா ஹசாரேயின் முயற்சியைப் பாராட்டி, அவர் அரசை வலியுறுத்தி வருவது ஏற்புடையதே என்று கூறினார்.
அன்னா ஹசாரே ஆரம்பித்துள்ள உண்ணா நோன்பு போராட்டத்தில் ஏறத்தாழ 60,000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கத்தோலிக்க மத சார்பற்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசப் டயஸ், மக்கள் ஆர்வமாய் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நாட்டுக்கு நல்லதோர் அடையாளம் என்று கூறினார்.
இந்திய அரசு இந்த விவாதத்தை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு உரிய நேரத்தை அரசுக்கு அளிக்காமல் அன்னா ஹசாரே உண்ணா நோன்பை மேற்கொண்டிருப்பது, மக்களின் உணர்வுகளை அதிகமாக தூண்டிவிடும் ஆபத்தான ஒரு போக்கு என்று ஆசிய ஆயர்கள் பேரவைகள் பொது நிலையினர் அமைப்பின் செயலர் Virginia Saldanha கூறினார்.
இந்த விவாதங்களுக்குப் பிறகு, அரசு நல்லதொரு முடிவை எட்டாதபோது அன்னா ஹசாரே தன் போராட்டத்தை மேற்கொள்வது இன்னும் போருளுள்ளதாக இருந்திருக்கும் என்று Saldanha சுட்டிக் காட்டினார்.
ஹசாரே எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒரு சில அடிப்படை வாத இந்துத்துவ குழுக்கள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி ஒரு சில கிறிஸ்தவ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ அப்பகுதி ஆயர் அழைப்பு

டிச.27,2011. ஹாங்காங்கில் வீடின்றி தவிக்கும் மக்களுக்கு தங்குமிடங்களை அமைக்க உதவுவதன் மூலம் அரசும், செல்வந்தர்களும், கிறிஸ்மஸ் உணர்வுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றார் ஹாங்காங் ஆயர் John Tong Hon.
ம‌க்க‌ளின் பிர‌ச்னைக‌ள் தீர்க்க‌ப்ப‌ட‌வேண்டுமெனில் முத‌லில் சுய‌ந‌ல‌ன்க‌ள் கைவிட‌ப்ப‌ட‌வேண்டும் என்றார் அவ‌ர்.
த‌ங்குவ‌த‌ற்கு வேறு இட‌ம் கிடைக்காத‌தால் மாட‌டைக்குடிலில் இயேசு பிற‌க்க‌ வேண்டியிருந்த‌தைச் சுட்டிக்காட்டிய‌ ஆய‌ர், ஹாங்காங்கிலும் இன்று ப‌ல‌ர் த‌ங்குமிட‌மின்றி த‌விப்ப‌தாக‌ க‌வ‌லையை வெளியிட்டார்.
ஒவ்வொரு குடும்ப‌த்தின் தேவையாக‌வும் உரிமையாக‌வும் இருக்கும் உறைவிட‌ம் என்ப‌து அனைவ‌ருக்கும் கிட்ட‌, அர‌சும், செல்வ‌ந்த‌ர்க‌ளும், தொழிலதிபர்க‌ளும் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அனைத்தையும் மேற்கொள்ள‌ வேண்டும் என்றார் ஆய‌ர் Tong Hon.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வ‌வேண்டும் என்ற‌ கிறிஸ்ம‌ஸ் கால‌ உண‌ர்வை  ஆண்டு முழுவ‌தும் ந‌டைமுறைப்ப‌டுத்தினால் மேலும் ந‌ல்ல‌தொரு உல‌கை ப‌டைக்க‌ ஒவ்வொருவ‌ரும் உதவ‌முடியும் என்றார் ஹாங்காங் ஆய‌ர்.


6. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு நடத்திவரும் மையம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்

டிச.27,2011. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு ஒருவரால்  இளங்குடியேற்றதாரர்களுக்கு என நடத்தப்பட்டுவரும் மையத்தின் முன்புறம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தென் இத்தாலியின் கலாபிரியா பகுதியில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பால் எவருக்கும் காயம் இல்லையெனவும், மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு Giacomo Panizzaவை அச்சுறுத்த, அக்குற்றக்கும்பலால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் ANSA செய்தி நிறுவனம் கருத்து தெரிவிக்கிறது.
இக்குண்டுவெடிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அருள் Panizza, இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மூலம் குற்றக்கும்பல்களுக்கு எதிரான தன் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.


7. இராமானுஜன் பிறந்தநாள் இந்திய தேசிய கணித தினம் : பிரதமர் அறிவிப்பு

டிச.27,2011. ஒவ்வோர் ஆண்டும் கணிதமேதை இராமானுஜன் பிறந்த நாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படும்  என, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்  நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் "இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையம்" திறந்து வைக்கப்பட்ட விழாவில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், கணித உலகில் ஈடு இணையற்று விளங்கிய சீனிவாச இராமானுஜனின் 125வது பிறந்தநாளில் மையத்தை திறப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாள், ‘தேசிய கணித தினமாககொண்டாடப்படும் மற்றும், வரும் 2012ம் ஆண்டை தேசிய கணித ஆண்டாகஅறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
பிற துறைகளில் படிப்பவர்களுக்கும் கணிதம் மிகவும் தேவை என்பதையும் எடுத்தியம்பிய மன்மோகன்சிங், ஆர்யபட்டா, பிரம்ம குப்தா, இராமானுஜன் ஆகியோரின் சிந்தனைகளை எதிர்காலத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய இந்தியர்களின் கடமைகளையும் வலியுறுத்தினார்.
இராமானுஜன் உயர் கணித ஆய்வு மையத் தவக்க விழாவிற்கு தலைமை வகித்த தமிழக ஆளுனர்  ரோசய்யா பேசுகையில், பூஜ்ஜியத்தை  உலகுக்கு அறிமுகப்படுத்திய நமது முன்னோர்களின் வழி வரும் இளம் ஆராய்ச்சியாளர்கள், இத்துறையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


8. 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு இந்தியா வந்துவிடும்

டிச.27,2011. நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியில், பிரேசில் பிரிட்டனை முந்திவிட்டது எனவும், 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு, இந்தியா வந்துவிடும் எனவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், இத்திங்களன்று வெளியிட்ட உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இதுவரை ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, பிரேசில் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 2011ம் ஆண்டில் 10வது இடத்திலுள்ள இந்தியா, 2020ல், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 விழுக்காடு மட்டுமே சுருங்கும் எனவும், பிரச்சனை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 விழுக்காடு அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.
தொடர்ந்த ஆய்வில், வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.